Friday, February 29, 2008

சுஜாதா...என்றும் தமிழோடு.

இருக்கும்வரை அருமை தெரிவதில்லை இறந்தவுடன்தான் இழப்பை உணர்கின்றோம். அல்லது இருக்கும்போது அருமை பெருமைகளைப் பேசி புகழ்மாலை சூட்டும் வழமை தமிழனிடம் இல்லை. உண்மையில் சுஜாதா, வாழ்நாட்சாதனையாளன் விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டிருக்க வேண்டிய ஒரு எழுத்தாளன்.

தனது கடைசிக் காலம்வரை எழுதிக்கொணடேயிருந்த ஒரு வெற்றி எழுத்தாளன். எனக்குத் தெரிந்தவரை இன்றுவரை தமிழில் விஞ்ஞானச் சிறுகதைகளுக்காக ஒரு எழுத்தாளன் சஜாதாவேதான். அவரது என் இனிய இயந்திரா மற்றும் மீண்டும் ஜீனோ என்னும் நாவல்கள் ஒரு சிறிய இயந்திர நாய்க்குட்டிக்கு மனிதர்கள்போல உணர்ச்சிகள் வருவதுபற்றிய ஒரு அருமையான விஞ்ஞானப் புனைகதை (Science Fiction) கள். இது ஒரு உதாரணமே. அவரது ஒவ்வொரு படைப்புக்களும் தனித்துநின்று வாழக்கூடியவை.

இங்கே ஆனந்தவிகடனில் மிகவும் வெற்றிபெற்ற தொடராக வந்த அவரது கற்றதும் பெற்றதும் இனைப் பற்றிக் கூறியாகவேண்டும். கற்றதும் பெற்றதும் தமிழுக்குப் புதிது. அது கட்டுரையல்ல, கவிதையல்ல, விமர்சனமுமல்ல. அது ஒரு புதுமாதிரியான ஒரு எழுத்துநடை. வாசித்து மட்டுமே அனுபவிக்கக்கூடிய படைப்பு.

அவர் தனது எண்ணங்களையும் எழுத்துக்களையும் குறிப்பிட்ட வகைகளுக்குள் மட்டும் மட்டுப்படுத்திக் கொண்டவரல்லர். விஞ்ஞானம், வாழ்க்கை, ஆன்மீகம் (அவரது சில ஆன்மீக்க கட்டுரைகளுடன் எனக்கு உடன்பாடில்லை), தமிழிலக்கண இலக்கியம், கவிதை, விமர்சனம் மற்றும் சினிமா என எல்லாத்துறைப் படைப்புக்களிலும் வெற்றியீட்டிய ஒரு படைப்பாளி.

தமிழில் எழுத்துச் சீர்திருத்தங்கள் மற்றும் மொழி ஆராச்சிகளில் சிறந்த முடிவுகளையும் விமர்சனங்களையும் தந்தவர்.

மொத்தத்தில் எழுத்துத்துறைக்கும் தமிழுக்கும் அவரது மறைவு (27. 02 2007 அன்று) ஒரு ஈடுசெய்யமுடியாத இழப்பு.

தமிழ்ப்பூங்கா சார்பாக எமது அஞ்சலிகளை அவருக்குக் காணிக்கையாக்குகிறோம்.
____________________________________________________

சுஜாதா எங்கோவொருமுறை எழுதியது: தமிழ்ப் புணர்ச்சி விதிகளில் எனக்கு இன்னமும் புரியாதவொன்று,

தங்கம் + காசு = தங்கக்காசு (திரிதல் விகாரம்)

சங்கம் + காலம் = சங்ககாலம் (கெடுதல் விகாரம்)

சங்கக்காலம் எனப்படவேண்டியது ஏதோவொரு காரணத்தால் சங்ககாலம் எனப்படுகிறது
____________________________________________________

சுஜாதாவின் 'கடவுள்' கட்டுரை தொகுப்பிலிருந்து,

மனிதனைப்
பொறுத்தவரை உயிர் என்பது உடல் இயக்கமா ? அவன் நினைவுகளா ?........
உயிர்
என்பது என்ன அன்று ஆதாரமாக சிந்திக்கும் பொழுது, நம் ஞாபகங்கள் தான் உயிர்...



4 பின்னூட்டங்கள்:

எவனோ ஒருவன் said...

ரங்ராஜனின் மறைவு அவரின் குடும்பத்துக்கு இழப்பாக இருக்காலாம்.ஆனால் சுஜதா அவர்கள் அவரின் படைப்புக்கள் மூலம் நம்முடன் தான் இருக்கின்றார்

Anonymous said...

எவனோ ஒருவன் அவர்களே,

உண்மைதான், அவரது படைப்புக்களினூடாக அவர் என்றும் நம்மோடு வாழ்ந்துகொண்டிருப்பார்.

மதுவர்மன் said...

சுஜாதா தமிழிலக்கியம் கண்ட ஒரு வித்தியாசமான மனிதர் தான். தமிழில் படைப்புக்களை நவீனத்துவப் படுத்தியதில் அவரின் பங்குளப்பரியது தான்.

ஆனாலும், பார்ப்பனிய சிந்தனையிலிருந்து அவர் இறுதிவரை விடுபடவில்லையே.

சுஜாதாவை வெறுப்பவர்கள், அவரை வெறுப்பதற்கு அவரது பார்ப்பனீய சிந்தனையே முதற்காரணம்.

Anonymous said...

மதுவர்மன் அவர்களே,
உண்மை உண்மை. அவரை வெறுப்பவர்கள் கூறுவது அதைத்தான்.

நான் தமிழைப்பற்றிக் கதைக்கும்போது அவரை விரும்புகிறேன்; அவரது எழுத்துநடைக்கு மயங்குகிறேன்.

சமூகம் சம்மந்தமான நோக்கில் அவரை வெறுக்கிறேன். அவரது ஆன்மீகம் சம்பந்தமான சில கருத்துக்களுடனும் சமூகத்தின்மீதான் அவரது பார்வையையும் எதிர்க்கிறேன்.

ஒருவரை நாங்கள் பின்பற்றப்போகின்றோம் எனில்தான் அவர் நல்லவரா, கெட்டவரா மற்றும் அவரது நடத்தைகள் பற்றி ஆராயவேண்டும்.

Post a Comment

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம். அனைவரும் இந்த வலைப்பூவை வாசிப்பார்கள். எனவே நல்ல வார்த்தைப் பிரயோகங்களைப் பாவியுங்கள். அத்துடன் இடுகையின் மேற்புறத்தில் உங்கள் நட்சத்திர வாக்கையும் இட்டுவிட்டு செல்லுங்கள்.
நன்றி