Monday, July 28, 2008

கொசோவோவும் பிச்சை அரசியலும்

இருப்புக்காக எதையாவது சொல்லியாகவேண்டும் என்று ஆகியபிறகு எதைச்சொன்னால் என்ன. இந்த நிலையில் தான் இருக்கின்றது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. அடிக்கடி கொசோவோவை உதாரணம் காட்டி சர்வதேச சமூகம் இதே நடைமுறை மூலம் இந்தியாவின் உதவியுடன் உதவவேண்டும் என்ற ஓலம் இன்னமும் ஒய்ந்தபாடில்லை.

கொசோவோ தனிநாட்டுப் பிரகடனத்தை அறிவித்த நேரத்தில் எழுதிய ஒரு பதிவை பகிர்ந்து கொள்ள விரும்பி.....

(தனிநாட்டுப் பிரகடனம் செய்திருக்கும் கொசோவோவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது வாழ்த்துக்களை உடனேயே தெரிவித்தது. ஆனால் இந்தியா கொசோவோ தனிநாட்டுப் பிரகடனத்தை ஏற்றுக் கொள்ளாமல் எதிர்க்கும் நிலையில் இந்தியா சொன்னால் நாங்கள் சொன்ன மாதிரித் தான் என்று சொல்லும்; இந்தக் கூட்டமைப்பு செய்யப் போவதென்ன?)

கொசோவோ தனிநாட்டுப் பிரகடனத்தை வெளியிட்டவுடன் தனிநாட்டுப் பிரகடனம் செய்திருக்கும் கொசோவோவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது வாழ்த்துக்களை தெரிவித்தது. அதில்
"உயிர்களை உவப்பீகை செய்து சுதந்திரம் இறைமை உரிமைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடி விடுதலையை வென்றெடுத்துள்ள வகையில் தனிநாட்டுப் பிரகடனம் செய்திருக்கும் கொசோவோவுக்கு தமிழர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்" என்று கூறப்பட்டிருந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேண்டுமானால் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளட்டும். தமிழ் மக்களின் வாழ்த்துக்களை தெரிவிக்க இவர்கள் யார்? தமிழ் மொழியின் பெயரால் ஒரு மரபுக் கூட்டம் பிழைப்பு நடத்த தமிழ் மக்களின் பெயரால் இன்னொரு கூட்டம் அரசியல் பிழைப்பு நடத்துகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அறிக்கையில்: "ஒரு விடுதலைப் போராட்டத்தை ஏற்று அந்த மக்களுக்கு இறைமை உண்டு தன்னாட்சி உரிமை உண்டு என்று அதனை அங்கீகரித்து அதன் தனிநாட்டுப் பிரடனத்துக்கும் பாதுகாப்புக்கும் ஒத்துழைத்து செயற்படும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா ஆகியவற்றுக்கும் வாழ்த்துக்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவிக்கின்றது" என்று மேலும் கூறப்பட்டுள்ளது.

"ஒடுக்கப்பட்ட இனம் ஒன்றிற்கான தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை இறைமை என்பவற்றை கொசோவோவில் உலகப் பெரும் நாடுகள் அங்கீகரித்து தனிநாட்டுப் பிரகடனத்துக்கு ஒத்துழைக்கின்றமை தமிழினத்துக்கும் அனைத்துலகத்தின் பால் நம்பிக்கையை தோற்றுவித்துள்ளது" என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

எல்லாவற்றிற்கும் கையேந்திக் கையேந்திப் பிச்சை எடுத்துப் பழகிய கூட்டமைப்பினருக்கு செய்யக் கூடியதெல்லாம் பிச்சை இடுவார்கள் என்று அவர்கள் நம்புகிறவர்களைப் போற்றுவது மட்டுமே. இவர்களால் தமிழ் மக்களுக்கு பயனெதுவும் விளையப் போவதில்லை. அண்டிப் பிழைக்கும் அரசியலை அன்றி வேறெதையும் அறியாதவர்கள் இவ் வகையான பயனற்ற வீர வசனங்களைப் பேசி பிழைப்பு நடத்துவதை விட வேறெதைச் செய்ய முடியும்.

இனி என்ன....
இந்த வாழ்த்துச் செய்தியின் ஆங்கில மொழியாக்கம் கொழும்பில் உள்ள மேற்குலக தூதரலாயங்களுக்கு அனுப்பப் படும். தூதராலய அதிகாரிகளுடன் கூட்டங்களுக்கு செல்லும் போது இந்த வாழ்த்துச் செய்தியை கையோடு எடுத்துச் சென்று தமிழ் மக்கள் எப்போதும் உங்களுடன் தான் இருக்கிறார்கள் என தமிழ் மக்களின் பெயரால் பிச்சையெடுக்க வேண்டியதுதான்.

இதற்கிடையில் இந்தியா கொசோவோ தனிநாட்டுப் பிரகடனத்தை ஏற்றுக் கொள்ளாமல் எதிர்க்கும் பட்சத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்யப் போவதென்ன?

இந்தியா சொன்னால் நாங்கள் சொன்ன மாதிரித் தான் என்று சொல்பவர்கள் இந்த விடயத்தில் யார் பக்கம் நிற்கிறார்கள்?

கொசோவோ தனிநாட்டுப் பிரகடனத்தை வெளியிட்டு மக்கள் மகிழ்ச்சியில் திளைப்பதைப் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த எண்பது வயது மூதாட்டி சொன்னார். "1948 இல் பார்த்த மாதிரியே இருக்கு".

ஐ.நா. பாதுகாப்புச் சபையில் வீட்டோ அதிகாரம் உள்ள ரஷ்யா, சீனா ஆகியன கொசோவோ தனி நாட்டுப் பிரகடனத்தை வன்மையாகக் கண்டித்துள்ள அதே வேளை ஐ.நாவின் 1244 வது தீர்மானத்திற்கு முரணாக மேற்கொள்ளப்பட்ட செயற்பாட்டிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளன. ஸ்பெயின் கொசோவோவை அங்கீகரிக்க மறுத்ததோடு அல்லாமல் ஐரோப்பிய ஒன்றியம் இதை ஆதரிக்கக் கூடாது எனவும் கேட்டுள்ளது. கிரேக்கமும் அனேகமான கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் கொசோவோவை அங்கீகரிக்க மறுத்துள்ளன.

அந்த மூதாட்டி சொன்னது போல இன்னுமொரு இலங்கைக்கான தொடக்க விழா அரங்கேறியுள்ளது. போராடிப் பெறாத சுதந்திரத்திற்கு மாற்றாக மன்றாடிப் பெற்ற சுதந்திரம் எப்படி இருக்கும் என்பதற்கு கொசோவோ ஒரு பாடமாக அமையும்.

Tuesday, July 22, 2008

ஃபோனில் சார்ஜ் இல்லாட்டி ஜெயில் வாசம்

ஆமிக்காரன்ட செக் பொயின்ற் வருது. எல்லாரும் இறங்கி தங்கட அடையாளங்களை காட்டினம். மன்னிச்சுக்கொள்ளுங்கோ...எல்லாரும் எண்டே சொன்னனான், இல்லை இல்லை...தமிழாக்கள் மட்டும்தான்.

இப்ப மேலதிகமா ஆமிக்காரன் ஆக்களின்ட ஃபோனுகளை வாங்கி #132# எண்டு அடிச்சு கோல் பண்ணுறான். ஃபோனின்ட முகப்பில அந்த ஆளின்ட பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம் எல்லாம் விழுகுது. ஒப்பிட்டுப் பாக்குறான். விடுறான்.

தப்பித்தவறி, உங்கட ஃபோன் பற்றறியில கரண்ட் குறைவாயிருந்து #132# வேலை செய்யாட்டி 1,2,3..எண்டு கம்பி எண்ண வேண்டியதுதான்.

நாங்கள் நல்லாக்கள். எதையும் தாங்குவம் எண்டு இந்த ஃபசிலிட்டியையும் அரசாங்கம் தந்திருக்குது. கீழ சிரிக்கிற பொம்பிளை எங்களைப் பாத்துதான் சிரிக்கிறா, பாருங்கோ.- மதுவதனன் மௌ. -

Monday, July 21, 2008

Yahoo Mobile இன் குரல்வழி தேடல்


சமீபத்தில் Yahoo Mobile ஆனது குரல் வழி மூலமான தேடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் உள்ள சிறப்பு அம்சம் என்னவெனில் உங்கள் தேடலை குரல் மூலமான கட்டளைகளை உங்கள் Mobileக்கு பிறப்பிப்பதன் மூலம் இலகுவாக்கிக்கொள்ளலாம். உதாரணத்துக்கு http://mobile.yahoo.com/ என்பதை உங்களின் Mobile WAP Browser தட்டச்சு செய்து tamilgarden என குரல் எழுப்பினால் போதும் தமிழ் பூங்கா சம்பந்தப்பட்ட அனைத்து தரவுகளையும் உங்கள் Browser ல் தரும்.

தகவல் தொழில் நுட்ப்பத்தின் வளர்ச்சியில் இது ஒரு முக்கிய பங்கினை வகிக்கும் என்பதில் எந்தவிதமான மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை. Google உடன் போட்டி போடுவதற்கு பல வழிகளில் Yahoo முயற்சி செய்கின்றது. அதன் ஒரு வெளிப்பாடே இந்த Yahoo One Search. எது எவ்வாறாயினும் நமக்கு நல்ல சேவை கிடைத்தால் போதும் தானே (ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் தானே :).

ஜப்பானியர்கள் நடனமாடுகின்றார்கள் - தமிழ்சினிமா பாடல்களுக்கு!

தமிழ்சினிமா பாடல்களுக்கு ஜப்பானிய இளைஞர், யுவதிகள், சிறுவர், சிறுமிகள் நடனமாடும் சில வீடியோக்களை இங்கே பாருங்கள்.

இவை, தமிழ் மொழிக்கும், ஜப்பான் மொழிக்கும் உள்ள தொடர்புகள் சம்பந்தமாக இணையத்தில் தேடி ஆராய்ந்தபோது அகப்பட்டவை. அத்தொடர்பு சம்பந்தமாக ஆராய்ச்சிகள் செய்துவந்த ஜப்பானிய பேராசிரியரொருவர் அண்மையில் காலமான செய்தி அனைவரும் அறிந்ததே.

வீடியோ 1


வீடியோ 2


வீடியோ 3


வீடியோ 4


வீடியோ 5


வீடியோ 6

Sunday, July 20, 2008

இரவில பரவாயில்லை, விடிஞ்ச பின்னாலுமா?

இன்றுடன் ஐந்து வருடங்களும் ஏழு மாதமும் ஆகிறது திருமணம் செய்து. வாய்த்த கணவரால் குறை என்று எதுவும் இல்லை. வீட்டை நான் கவனித்துக்கொள்வேன். அவர் சாப்ட்வெயர் கம்பனி ஒன்றில் கைநிறைய காசுடன்...

காலையில் எழுந்தால் எனக்கு இயலுமானவரை ஒத்தாசை செய்வார். வார இறுதிகளில் விழுந்து விழுந்து உதவிசெய்வார். பகலென்றல்ல எநத நேரமும் எனக்கு அவர் குறை வைத்தில்லை.

இன்று ஞாயிற்றுக் கிழமை, மணி ஆறரைக்கே காப்பியைக் கொண்டு பெட்ரூமிற்குச் சென்றேன். காப்பியை அருகில் வைத்துவிட்டு எழுப்பப் போனேன்.

"ஆகா, திரும்பவுமா? இரவு நடு ஜாமத்தில ஒருமுறை...இப்போ திரும்பவுமா?"

இரவு நடுஜாமம் தான் உடுப்பெல்லாம் மாத்திப்போட்டுப் படுத்தது. இப்போ என்னால மீண்டும் மாத்தமுடியாது.

விடிஞ்சு ஒரு மணியாச்சு இந்த நேரத்திலயுமா?...சலித்துக்கொண்டேன்.


"இஞ்சை ஒருக்கா வாறீங்களா...." சிறிது சத்தமாகக் கூப்பிட்டேன்.

"ஏன் என்ன நடந்தது?..." ஓடி வந்தார் கிச்சனிலிருந்து.

"பாருங்கோ மகன் செய்திருக்கிற வேலையை, இரவுதான் எல்லாம் மாத்திப்போட்டுவிட்டது, இப்ப திரும்பவும் பெட்ல யூரின் போய்ட்டான்"

"சரி விடுங்கோ, கிச்சனில காப்பி போட்டபடி இருக்குது போய்ப் பாருங்கோ நான் இவனை எழுப்பி எல்லாம் செய்யுறன்"

இன்றுடன் ஐந்து வருடங்களும் ஏழு மாதமும் ஆகிறது திருமணம் செய்து. வாய்த்த கணவரால் குறை என்று எதுவும் இல்லை.

- மதுவதனன் மௌ. -

Saturday, July 19, 2008

டபிள் ஏ (அடல்ஸ ஒன்லி இல்லைங்க)

வீடியோ சாமாச்சாரம்தான் ஆனா அடல்ஸ் ஒன்லி இல்லைங்க. இது எனக்கும் எனக்கு நெருக்கமான காகிதம் பற்றியதுமான ஒரு சிலாகிப்பு. டபிள் ஏ காகிதத்தின் மேல் எனக்கு ஏதோவொரு ஈடுபாடு. இந்த சலனப்படங்களைப் பார்த்து வந்ததல்ல அதன் முன்னமே வந்தது. அதன் மேலுறையின் வடிவமும் உள்ளே பால்வெண்மையும் எழுதினா அதன்மேல்தான் எழுதுவேன் என்று பல்கலைக்கழக காலம் முழுவதும் பந்தாவில பணத்தைச் செலவழிச்சது கூட அதன் மேலான கவர்ச்சிதான்.

கீழே இருக்கிற வீடியோக்களைப் பாருங்கோ. சூழலும் வருகின்றவர்களும் கூட டபிள் ஏ யின் வண்ணங்களுடன் சம்பந்தமாகத்தான் வருகிறார்கள்.

வீடியோ ஒன்று.



வீடியோ இரண்டு



வீடியோ ஒன்றைப் பார்த்து மீளப் பார்க்க விரும்புகிறவர்கள் இதைப்பார்க்கலாம்.விடயம் ஒன்றுதான் ஆட்கள் வேற. :-)



இல்ல அதே விடயம் இன்னும் வேற ஆட்களோட பாக்கவேணும் என்றவர்கள் இந்த யூடியூப் சுட்டிக்குப் போங்கோ.

- மதுவதனன் மௌ. -

Thursday, July 17, 2008

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே...........

1995 ஆம் ஆண்டு துரதிஸ்டவசமாக யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற வேண்டி வந்துட்டுது:(. அதுக்கு பிறகு சுமார் 13 வருடங்களாக சந்தர்ப்பம் சூழ்நிலையால் யாழ்பாணம் பக்கம் போக முடியாமல் போய்விட்டது என்பதை நினைக்கும் போது கவலையாத்தான் இருக்கு. எனியும் போக முடியுமோ என்பது சந்தேகமே. யாழ்ப்பாணத்தில் என்னுடைய சிறுவயதில் நிகழ்ந்த சம்பவங்களை அசைபோடும் போது ஏற்படும் சுகமே அலாதி தான். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுவோம் என்ற நோக்கமே இந்த இடுகை

மு.கு:- இதில் நான் குறிப்பிடப்போகும் அனைத்தும் 1995 ஆம் ஆண்டளவில் யாழ்ப்பாணம் என்னுடைய பார்வையில். அதற்க்கு பின்னர் யாழ்ப்பாணம் என்ன நிறத்தில் இருக்கு என்று எனக்கு தெரியாது. மற்றும் சிலருக்கு இந்த இடுகை சுவாரசியம் குறைந்ததாக இருக்கும். காரணம் பல வட்டார வழக்கங்களை நான் பாவிக்க முற்படுகிறேன். அது உங்களுக்கு விளங்காமல் இருந்தால் தயவு செய்து மன்னிச்சு கொள்ளுங்கோ.

1995 இல் யாழ்ப்பாணம் என்னுடைய பார்வையில்.................

அது என்னுடைய சிறுபராயமாக இருந்தாலும் நிகழ்ச்சிகள் எல்லாம் பசுமரத்து ஆணிபோல மனசுல பதிந்துள்ளது. எங்கட lane இரண்டு கோயில்களுக்கு மத்தியில் இருக்கு. So நான் கோயில் வீதிகளில் தான் என்னுடைய பெரும்பாலான பொழுதை களித்தேன். ஒரு அரைகால்சட்டை மேலே கஞ்சி போட்டு துவைத்த shirt போட்டுக்கொண்டு பொடியலோட பிள்ளையார் கோயில் வீதியில் விண் கட்டிய 8 மூலை பட்டம் விட்டது galle face beach இல் யாரோ பட்டம் விடுவதை பார்த்து ரசிப்பத்ற்க்கு இணையாகுமா???? நல்லூர் கந்தன் கோயில் வருடாந்த உற்சவத்துக்கு போய் கந்தனைத்தரிசிக்காமல் லிங்கம் cool bar ல ice cream குடிக்கிறது queens cafe ல submarine சாப்பிட்டுட்டு உப்புக்கு சப்பையா எதோ ice cream குடிக்கனும் என்று குடிக்கிறதுக்கு ஈடு இணையாகுமா?????

அந்தநேரத்தில் தான் காதலன் படம் release. so பிரபுதேவா தான் அண்ணாமர்களின் role model.பெரிய பெரிய துளைகள் போட்ட உள்பனியன் வெளியில்தெரியத்தக்க கண்ணறயான மார்டின் shirt, பின் pocket ல கிளியின் உருவம் அல்லது இதயத்துக்குள்ளால அம்பு பாயும் உருவம் போட்ட baggy jeans,சோலாபுரி செருப்பு இவைதான் பெரும்பாலான இளைஞர்களின் costume ஆக இருந்துச்சு(நாங்களும் பெரிய ஆள வந்த பேந்து இப்படி எல்லாம் வெளிக்கிடனும் என்டு கனவுவெல்லாம் கண்டது வேறகதை:)). அண்ணாமார் சைக்கிள்ல doubles போடுற அழகே தனிதான்.doubles என்டா என்ன என்டு நீங்க கேக்குறது விளங்குது. doubles போடுறது என்றால் சைக்கிள்ல இருவர் போகும் போது முன்னால் இருப்பவர் சைக்கிள் ஒடுபவருக்கு உறுதுனையாக சைக்கிளின் இடப்பக்க பெடலை இருவரும் சேர்ந்து மிதிப்பது.அப்படி மிதிக்கும் போது செருப்பின் அரைவாசிக்கும் மேல் காலுக்கு வெளியே இருக்கும் வண்ணம் மிதிக்கும் அழகே அழகுதான்:)

புதுவருடப்பிறப்புக்கு சீன வெடி எல்லாம் அப்ப கிடையாது. நம்மட ஆக்கள் தானே புத்திசாலிகளுக்கு பிறந்த அதி புத்திசாலிகள்.so நம்மட ஆக்கள் கண்டு பிடிச்ச ஒரு வெடி இருந்துச்சு. சைக்கிள் ரிங் கம்பியின் நுனியில் உள்ள துவாரத்துக்குள் தீக்குச்சி மருந்தை உட்செலுத்தி தரையில் பலமாக அடிக்க பெருசா வெடிக்கும். அந்த நேரத்தில் அது தான் எங்கட சீன வெடி.

இப்படி கனக்க விசயங்கள் கிடக்கு பாருங்கோ. tution center ல அண்ணாமார் அடிக்கிற லூட்டிய பற்றி எல்லாம் பேந்து ஒரு நாளைக்கு சாகவாசமா சொல்லுறன். project வேலையா கொஞ்சம் busya இருக்கிறன்.இப்ப போய்ட்டு வராட்டா...........

அடுத்த பதிவில சந்திப்போம்........

நீங்கள் தமிழ்மணத்துக்கு ஆதரவா? எதிரா?

கீழே இருக்கிற படத்தைச் சொடுக்கிப் பாருங்கோ. எந்தெந்தப் பதிவர்கள் தமிழ்மணத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் இருக்கிறார்கள் என ஊகிக்கமுடியும். பதிவுகளின் தலைப்பையும் உள்ளடக்கங்களையும் வடிவா வாசியுங்கோ.


பி.கு: இத்தால் சகலருக்கும் அறியத்தருவது யாதெனின் இதுவொன்றும் மொக்கையேயன்றி வேறொன்றிலாத செயல்.
தசாவதார வாரம் போல இந்தவாரம் தமிழ்மண வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டிப்பதாக இவ்வார பதிவுகளின் வாயிலாக அப்பதிவுகளுக்கான பின்னூட்டங்களின் சாரமாக அறிந்துகொண்டேன்.
இவ்வாரத்திற்கான அடியேனின் சிறு பங்களிப்பே இது.

- மதுவதனன் மௌ. -

Wednesday, July 16, 2008

"சீரியல்" அலை

மதி தோன்றும் மலை உச்சி!!
மதி மயங்கி மேகங்கள் உரச
மதி தயங்கி.. விதி குழம்பி
அவள் மட்டும் தனியே
நின்றாள்..

மான்விழி ஓரத்தில்
நீர்த்துளி புரள..
மனத்திரை முழுதும்
போராட்டம் உருள..
எங்கும் மயான அமைதி

சட்டென்று அவள் நகர
பட்டென்று "தொடரும்.." தோன்ற
பதறினர்..
எம் தொடர் ரசிகர்கள்..
எம் தொலைகாட்சி கைதிகள்..
கருகியது காலம்
கத்தரி குழம்போடு சேர்த்து..

அருமையான நேரம்
வெறுமையாக ஓடுகிறது..
சிந்தனை அலையை தவிர்த்து
"சீரியல்" அலையில் மூழ்கின்றனர்..
தொடரின்
சதி கற்பனையால்..
தெளிந்த குட்டையும்
சகதியாகிறது..

என்செய்வது..
நம்மவருக்கு கிடைத்த ஒரே அமைதியும்
இதுவல்லோ!!!

Monday, July 14, 2008

பத்திரிகையில் வந்ததொரு அப்பட்டமான பொய்ச்செய்தி?

இது இலங்கையிலையிருந்து வெளிவாற பேப்பர், தினக்குரலிலை 2008-07-13 ஞாயிற்றுக்கிழமை வெளிவந்த செய்தியொண்டு. அதென்னெண்டால், இங்கை தலைநகர் கொழும்பிலை நடந்த ஒரு தாலியறுப்பு பற்றினது. இதை வாசிச்ச உடனை எனக்கெண்டால் நம்ப ஏலாமல் போயிட்டுது.

இதை வாசிச்ச உடனை என்ரை மனசிலை எழும்பின கேள்வி என்னெண்டால், வேறையாருக்கெண்டாலும் பரவாயில்லை, என்ன இந்த பத்திரிகையாசிரியர்களுக்கும் மண்டைக்குள்ளை ஒண்டும் இல்லாமல் போயிட்டுதே எண்டுதான்.

சரி, நான் சொல்லிறதை நம்ப ஏலாட்டில், நீங்களும் ஒருக்கால் அதை வாசிச்சு பாருங்கோ கீழை. அதுவும் பட்டப்பகலிலை, இப்பிடியொண்டு நடக்கமுடியுமா என்று..



அதுவும், கடவுள்(?) கருமாரியம்மனை கும்பிட்டுக்கொண்டிருந்த பொம்பிளையொண்டின்ரை கழுத்திலையிருந்த தாலிக்கொடியை ஆட்டோவிலை வந்த மூண்டுபேர் அறுத்துக்கொண்டு ஓடுறது எண்டால் அதென்ன நடக்கக்கூடிய காரியமே? கருமாரியம்மனுக்கு என்ன கண்தெரியாதே? அப்பிடி நடந்திருந்தால், கருமாரியம்மன் அந்தநேரம் என்ன செய்துகொண்டிருந்தவா?

அவ கடவுளெல்லே! கையிலை சூலம், கத்தி, பொல்லு எண்டு கனக்க ஆயுதம் வச்சிருகிறதையும் கண்டனான். (இலங்கையிலை கடவுள்மாரெல்லாம் கனரக துவக்குகள், பீரங்கிகள் வச்சிருந்தாலும் ஆச்சரியமில்லை தான் ஏனெண்டால், இலங்கையிலை சும்மா கண்டவன் நிண்டவன் எல்லாமெல்லோ துவக்கு வச்சிருக்கிறாங்கள்). அப்ப அப்பிடி இருக்கேக்கை, கருமாரியம்மன், ஆயுதங்களை பாவிச்சு காப்பாத்தியிருக்கவேண்டாமே?

அந்தப் பொம்பிளை, அப்ப ஏன் அந்த ஒண்டுக்கும் உதவாத கடவுள் கருமாரியம்மனை கும்பிட்டதோ தெரியாது. நீங்கள் சொல்லுங்கோ, உங்களுக்கு முன்னாலை, அப்பிடியொரு வழிப்பறி நடந்திருந்தா, அதை தடுக்கிறதுக்கு ஏதாவது முயற்சி செய்திருப்பீங்களோ இல்லையோ? அப்ப, உங்களாலை முடிஞ்சதை, ஏன் அந்த, சர்வ வல்லமை பொருந்திய, ஆயுதம் தரித்த கடவுளாலை செய்ய முடியாமல் போனது?

சும்மா, கல்லையும், பொல்லையும் காட்டி, இதுதான் கருமாரி, அதுதான் மொள்ளமாறி, உதுதான் பேமானி எண்டு ஆரும் சுடலைச்சாம்பல் பூசினதுகள், நூல் கட்டினதுகள் சொன்னால், அதை நம்பி, தங்களிலை நம்பிக்கை வைக்காமல், கடைசியிலை உள்ளது எல்லாத்தையும் இழந்தாலும், எங்கடை பேக்குஞ்சுச் சனங்களுக்கு புத்தி வருமே? வராது, ஒரு நாளும் வராது

சரி பகிடியை விட்டுட்டு, கொஞ்சம் பகுத்தறிவா ஆராய்ஞ்சு பார்ப்பம்.

அப்ப, இப்பிடியொரு சம்பவம் நடந்திருக்கெண்டால், காரணம் கீழை வாறதிலை ஒண்டாகத்தான் இருக்கவேணும். ஒண்டொண்டாய் பாருங்கோ.

1. கருமாரியம்மன் அந்தநேரம் கவனிக்காமல் விட்டிருப்பா. அவ எத்தினை பேரையெண்டுதான் கவனிக்கிறது. வயசுபோன நேரம் எல்லாரும்போய் அவவிட்டை அதைச்செய், இதைச்செய், அதைத்தா, இதைத்தா எண்டு அரியண்டம்பிடிச்சால் (லஞ்சம் கூட குடுபினம் பலர்) அந்த மனிசி என்ன செய்யிறது. பாவம்.

2. கருமாரியம்மன் கவனிச்சிருந்தாலும், தாலியறுத்தவங்கள் துவக்கோடை வந்திருப்பாங்கள். அம்மனிட்டை இருந்த பெரிய ஆயுதமெண்டால், சூலம் மட்டும்தான், அதை வச்சுக்கொண்டு ஒண்டுமே செய்யேலாது எண்டதாலை, கண்டும் காணாத மாதிரி இருந்திருப்பா, பாவம். இனியாவது இலங்கையிலை, கடவுள் சிலை செய்யேக்கை, கைகளிலை துவக்கு இருக்கிறமாதிரி செய்தால், கொஞ்சம் நல்லது.

3. ஏதோ விதி எண்டு சொல்லுவாங்கள், அந்த பொம்பிளைக்கு அண்டைக்கு தாலியறுக்கிறது எண்டு விதியாக இருந்திருக்கவேணும். அப்பிடியெண்டால் என்னசெய்யிறது, அனுபவிச்சுத்தான் ஆகவேணும்.

4. பக்தர்களை கடவுள் சோதிக்கிற பல சம்பவங்களும், காலங்காலமாய் நடந்திருக்கு. அதிலையொண்டாய் இதுவும் இருக்கலாம். அப்பிடியெண்டு சொன்னால், அந்த பொம்பிளைக்கு சொல்லவேணும், பொறுமையாய் இருந்து, விடாமல் கருமாரியம்மனை கும்பிட்டுக்கொண்டே இருக்கச்சொல்லி. கடவுள் சோதிக்கிறதெல்லாம், பிறகு கூரையை பிச்சுக்கொண்டு குடுக்கிறதுக்கு தான். அந்த பொம்பிளையை கவனமா கூரையை பாத்துக்கொண்டு இருக்கச்சொல்லுங்கோ. திடீரெண்டு கூரையை பிச்சுக்கொண்டு ஒண்டில்லை, ஒன்பது தாலிக்கொடியும் விழக்கூடும்.

5. இல்லாட்டி, தாலியறுத்தவங்கள் புத்தமதத்து ஆக்களாய்*** இருக்கவேணும். அவங்களுக்கு கடவுள், கிடவுள் எண்டு ஒரு மசிர், மண்ணாங்கட்டியும் இல்லை எண்டு வடிவாய் தெரிஞ்சிருக்கவேணும் (புத்தமதம் அப்பிடி தானே சொல்லுது) . பயப்பிடாமல் அறுத்துக்கொண்டு போயிருப்பாங்கள்.

சரி இனி இதிலை ஆர் புத்திசாலியெண்டு பார்ப்பம். எனக்கெண்டால், இதிலை புத்திசாலியான ஆக்கள் எண்டால், கருமாரியம்மனும் இல்லை, அந்த எங்கடை தமிழ்ப் பொம்பிளையுமில்லை, ஆட்டோவிலை வந்த மூண்டு தாலியறுத்தவங்கள் எண்டு தான் படுது. உங்களுக்கு.....?


*** புத்தமதத்து ஆக்களெல்லாரும் கடவுளை நம்புறேல்லை எண்டு இல்லை. இந்து மதம், சும்மாயில்லை, பவர்ஃபுல்லான மதமெல்லோ! அதாலை இலங்கயிலை புத்தமதத்திலை கொஞ்சப்பேர், இந்துமதக்கடவுள்களை, அவையின்ரை பவர் தெரிஞ்சு, கடத்திக்கொண்டுபோய் புத்தகோயிலுகளுக்குள்ளை அடைச்சு வச்சு, தங்களுக்கு தேவையானதுகளை பெற்றுக்கொள்ளினம். ஆனாலும் புத்தரின்ரை உண்மையான போதனைகளை, உண்மையா பின்பற்றுறாக்களும் இங்கை புத்தமதத்திலை இருக்கினம். இங்கையிருந்து விமானமேறி, இந்தியாவிலை திருப்பதிகோவிலிலை கும்பிடுற புத்தமதத்து ஆக்களும் இருக்கினம். தெரியாட்டில், இலங்கை இந்திய பேப்பருகளை நீங்கள் பாக்கிறேலை எண்டு தான் அர்த்தமாகும். படம்போட்டெல்லாம் என்னாலை விளங்கப்படுத்தமுடியாது.

ஆதாரம்:
தினக்குரலில் வந்த செய்தி

Saturday, July 12, 2008

பசுமை வெளியில் ஒரு பட்ட மரம்

மனிதனை மனிதனாக
மதிக்கும்
மாண்புமிகு நாட்டில் வேலை..
சீக்கிரம் செல்!
சகதியில் நின்றபடி அன்னை...

கடமையை மறவாதே!
கடந்த பாதையில்
கயர் படிந்த கல்லுகளின்
காயங்களை மற!
கலங்கரையாக நின்றபடி தந்தை...

எதிர் நீச்சல் செய்!
எதிரே ஓங்கிய மதில் தோன்றின்
ஏறிப்பாய ஏணியாய் என்னை அழை!
எதிர்கால நினைவுகளுடன் சக உதிரங்கள்...

சாதிக்க..
சிந்திக்க தொடங்கியவன்..
சாகசங்கள் படைக்க
நினைத்தவன்..
இன்று
கசப்பான அனுபவங்களால்
கடல் கடக்கிறான்..

பசுமையான இனம்
சுமையான மனம்..
பிறர் ரசிக்கும் வனம்
பிரிவால் தவிக்கும் மனம்..
நாழிகை முன்னே நகர.. நினைவுகள் பின்னே நகர..
பசுமை வெளியில் ஒரு பட்ட மரமாக நின்றான்

சிந்தித்தான்..
ஒடுங்கியிருக்க பிறந்தவனல்ல
பிடுங்கியெறிந்தான் களையெனும் வடுக்களை!!
ஊன்றினான் முயற்சி விதைகளை!!
பட்ட மரம் துளிர்த்தது
பசுமை வெளியில்...