Thursday, December 3, 2009

நானும் காரில்...




பதினாறே வயது நிரம்பிய
பருவப் பெண் நான்.
அழகான சொகுசுக் காரிலேயே
அனுதினமும் செல்கின்றேன்.

பின்னிருக்கையில் நான்,
பக்கத்திலே குழந்தை,
ஐயா காரை ஓட்டுகின்றார்,
அம்மா அவருக்கு பக்கத்தில்

ஐயாவும் அம்மாவும்
வெளிச்செல்லும் போதெல்லாம்
அவர்களுடன் நானும்
குழந்தையை கவனிப்பதற்காய்...

பதினாறே வயதான - மலையகத்துப்
பருவ மங்கை நான்
அழகான சொகுசுக்காரிலேயே
அனுதினமும் செல்கின்றேன்


(உண்மையாக கண்டகாட்சியை வைத்து எழுதியது, 2009-12-01)

Friday, November 6, 2009

அழைப்பு: தோழர் நவம் 5வது ஆண்டு நினைவும் சி.கா.செ. நேர்காணல் நூல் வெளியீடும்

நிகழ்ச்சி நிரல்

தலைமை
: சோ. தேவராஜா

நவம் நினைவுரை
: சி.கா செந்திவேல்

நூல் வெளியீடு

நூல் வெளியீட்டு உரை:
இ. தம்பையா

நன்றியுரை
: ஞா.ஸ்ரீமனோகரன்


காலம்
:
08-11-2009 ஞாயிறு
நேரம்: பி.ப 5.00 மணி
இடம்: கைலாசபதி கேட்போர் கூடம்
தேசிய கலை இலக்கியப் பேரவை,
தலைமைப் பணிமனை
571/15 காலி வீதி, வெள்ளவத்தை, கொழும்பு-06


அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

நவம் நினைவுக் குழுவும் புதியபூமி வெளியீட்டகமும்
கொழும்பு

குறிப்பு: தேசிய கலை இலக்கியப் பேரவையின் தலைமைப் பணிமனையானது Roxy திரையரங்கிற்கு முன்னால், Cherry Fish கடையை அண்டிய ஒழுங்கையினுள் அமைந்துள்ளது.

Saturday, October 24, 2009

கோவில் பிரைவட் லிமிட்டட் களும் பஞ்சாங்க சுத்துமாத்துக்களும்....



என்னுடய வீட்டிலே கடந்த சில நாட்களாக பேசப்பட்ட hot toppic சூரன் போர் 23ம் திகதியா 24ம் திகதியா என்பதுதான். இந்த திகதிகளை தீர்மானிக்கும் பஞ்சாங்கத்தில் திருக்கணிதம் வாக்கியம் என்டு இரண்டு இருக்குதாம்.வாக்கியம் 24 என்டுதாம், திருக்கணிதம் 23 என்டுதாம். புதுசா திருவிஞ்ஞான பஞ்சாங்கம் என்டு ஒன்டு வந்தாலும் ஆச்சரியப்படத்தேவையில்லை. எனக்கு கனகாலமா ஏன் இந்த பஞ்சாங்க குழப்பம் என்டு விளங்கேலை. பேமஸ் சாத்திரி மாரிட்டையும் கேட்டு பார்த்தன். ஏதோ திருக்கணிதம் வான் வெளியை ஒரு பாகை பிந்தி அளக்குது என்டு சொல்லிச்சினம். எனக்கு தெரிஞ்ச Geomatery யின் படி, ஒரு கோளத்தை எத்தினை பாகை திருப்பி வச்சு அளந்தாலும் குறிப்பிட்ட புள்ளி வாற நேரம் மாறாது. உன்மையா சாத்திரி சொல்லுறது எதுவும் எனக்கு விளங்குறேலை. வீடு, பார்வை அது இது என்டு கனக்க சொல்லுவினம். எனக்கு எதுவும் விளங்குறேலை. சூரன் எப்ப செத்தவன் என்டு அவன்ட dead certificate ஐ வாங்கிப்பாக்கலாமென்டா கச்சேரியில பழைய records ஒன்டும் இல்லயாம். சூரன் எப்ப செத்தவன் என்டு சரியா சொல்லேலாத படியால நாங்கள் ஏதாவது ஒரு பஞ்சாங்கத்தை சரி என்டு எடுப்பம். ஒன்டு சரி என்டா மற்றது பிழை தானே. அப்ப அரைவாசி கோயிலுகள் பிழையானதை தான் follow பண்ணினம் என்ன?

முதல்ல நான் நினைச்சது என்னன்டா எங்கையாவது கோஸ்டி பூசல் என்டாத்தான் புதுப் புது பிரிவினைகளும் வரும். இதுவும் எங்கட ஐயர்மாருக்கிடையிலை கோஸ்டி பூசல் அதுதான் இரண்டா பிரிஞ்சிட்டினம் என்டு நினைச்சன்.

பிறகு தான் கவனிச்சன் வீட்டில பெண்டுகள் எல்லாரும் இவிரண்டு உடுப்புகள் ready பண்ணுறதை. ஏன் என்டு கேட்டா, இன்டைக்கு இந்தக்கோவிலில சூரன் போர், நாளைக்கு அந்தக்கோவிலில சூரன் போர். இரண்டுக்கும் போக இரண்டு செட் உடுப்பு என்டு சொல்லிச்சினம். அப்பத்தான் எனக்கு ஒன்டு விளங்கிச்சுது. இந்த பஞ்சாங்க புலுடா எல்லாம் வெறும் calculation குழப்பங்களில்லை. கோவில்களின் வியாபார தந்திரங்கள் என்டு. ஒரே நாளில சூரன் போர் என்டா, வார சனம் பிரிஞ்சு பிரிஞ்சு போகும். வெவ்வேறை நாளென்டா முழுச்சனமும் இரண்டு கோவிலுக்கும் போகும்.

சரி கோட சனம் கோவிலுக்கு போறதாலை என்ன லாபம் என்டு கேக்கிறிங்களோ?

ஒரு சின்ன calculation
இந்தமுறை மயூரபதி அம்மன் கோவிலில பால் குடம் எடுத்தது 3000 பேர்.
தலைக்கு 650 ரூபா
மொத்த வருமானம் = 650 x 3000 = 1,950,000.00
ஒரே நாளில் 2 மில்லியன் ரூபா.
இதை விட, ஒவ்வொருவரும் 3 அல்லது 5 அல்லது 7 லீட்டர் பால். சராசரியா 4 லீட்டர் என்டு வச்சா மொத்தப்பால் = 3000 x 4 = 12,000
பாலுக்கு செலவான மொத்த தொகை = 12,000 x 60 = 720,000.00
இவ்வளவு பாலும் சாக்கடையில் தான் ஊத்தப்பட்டது.
So called தன்மானத்தமிழர்களின் ஒரு கூட்டம் தண்ணிக்கே கஸ்டப்பட்டு முகாம்களுக்குள் இருக்கேக்க தான் இந்த கூத்து.

இதை விட புது குடம், புது சீலை - அதுவும் யூனிபோம் மாதிரி - கோவிலிலை தான் வாங்க வேணும். ஒரு பால்குடம் எடுக்க குறைந்தது 5000 ரூபா ஆவது செலவாகும். தயவு செய்து 5000 x 3000 என்ட கணக்கை செய்து பார்க்க வேண்டாம். heart attack வந்துடும்.

Monday, September 7, 2009

கடவுளரின் கவனத்திற்கு - 001 - பாவம் செய்த பலியாடுகள்!

நண்பர்களே,

கடவுளரின் கவனத்திற்கு வராதவை!

'கடவுளரின் கவனத்திற்கு' என்ற தலைப்பில், இது ஒரு தொடர் எழுத்தாக அமையப்போகின்றது. கடவுள், மத நம்பிக்கைகள் உலகம் முழுமைக்கும், பிரதேச, சமூக எல்லைகளை கடந்து பொதுவாக, ஏதோ ஒரு வடிவில் காணப்படுவது அவதானிக்கத்தக்கது. நம்பிக்கை என்ற நடத்தை, உயிரியல் பரிணாம பாதையில், மனித இனத்துக்கு, பிழைத்துக்கொள்வதற்கான(survival) ஒரு விடயமாக வரப்பெற்றது. அதற்கு மனித மூளையின் அமைப்பு, அதன் சில பகுதிகள் பொறுப்பாக இருக்கின்றன என்பது அண்மைய விஞ்ஞான ஆராய்ச்சிகளின் கண்டுபிடிப்பு. இந்த நன்மை புரிந்த 'நம்பிக்கை (Belief)' என்ற நடத்தையின் பக்கவிளைவாகவே கடவுள், மத நம்பிக்கைகள் மனித இனத்தில் ஏற்பட்டன. எவ்வாறு இசை, சங்கீதம் போன்றவை பரிணாம வளர்ச்சியின் (Biological Evolution) அம்சமான, தொடர்பாடலுக்கு துணைபுரிந்த 'மொழி (Language)' வளர்ச்சியின் பக்கவிளைவாக அமைந்ததோ, அவ்வாறே கடவுள், மத நம்பிக்கைகளும் நம்பிக்கை என்ற நடத்தையின் பக்கவிளைவே.

ஆனால் மத, கடவுள் நம்பிக்கைகள் என்ற பெயரில் அரங்கேறும் கொடுமைகள், பொருள் வீண்விரயங்கள், ஏமாற்று நடவடிக்கைகள், பாரபட்ச நடவடிக்கைகள் என்றுமே ஏற்றுக்கொள்ளப்படமுடியாதவை. அவை சிந்திக்கத்தெரிந்த மனிதர்க்கு ஆத்திரமூட்டுபவன. அவ்வகையில், விழிப்புணர்வூட்டும் நோக்கோடு மத நம்பிக்கைகள் என்ற பெயரில் நடைபெறும் பைத்தியக்காரத்தனங்களை அவ்வப்போது வெளிப்படுத்துவதாக இத்தொடர் அமையப்போகின்றது.

பாவம் செய்த பலியாடுகள்???

இது இவ்வாண்டு (2009) சிலாபத்தில் அமைந்திருக்கின்ற முன்னேஸ்வரம் மகா பத்திரகாளி அம்மன் கோவிலில் அரங்கேறிய மகா கொடுமை. ஏறக்குறைய 200 ஆடுகள், கோயில் முன்றலில் பலநூறு மக்கள் முன்னிலையில், அக்கோயிலின் சமய சடங்கு என்ற பெயரில் வெட்டிக்கொல்லபட்டன, அதாவது பலியிடப்பட்டன. படங்களை பாருங்கள் அவையே கதை சொல்லும்.






ஒரு காலத்தில், உலகம் முழுவதும் மத சடங்குகளில் இந்த (கடவுளர்க்கு) பலியிடுதல் என்ற சடங்கு இருந்து வந்திருக்கின்றது. ஆடுகள், கோழிகள் போன்ற விலங்குகளை பலியிடுவதுடன் மட்டும் நிற்காமல், குழந்தைகள் உட்பட மனிதர்களை பலியிடும் வழக்கமும் இருந்திருக்கின்றது) ஆனால் காலப்போக்கில், இவற்றை பல மக்கள் ஏற்றுக்கொள்ளாமலும், தடைச் சட்டங்களாலும் இப்பலியிடுதல் என்பது அருகிப்போயுள்ளது.

ஆனாலும் இன்றுவரை இது எங்கோ ஒரு மூலையில் நடைபெற்றுவரும் நிகழ்வாகவே இருந்து வருகின்றது. இந்தியாவில் நகர்ப்பகுதிகளில் நடைபெறாவிட்டாலும், கிராமப்புறங்களில் அதிகமான அளவில் நடைபெறுவதாகவே அறியக்கிடைக்கின்றது.

ஆனாலும், இலங்கையிலும் இது நடைபெறுகின்றது என்பதை அறிந்தபோது மிக அதிர்ச்சியாக இருந்தது. அதுவும் ஏறக்குறைய 200 ஆடுகள், குழந்தைகள், சிறுவர்கள் முன்னிலையில், நீண்ட கூரிய வாள்களால் வெட்டிக்கொல்லப்பட்டிருக்கின்றன. இவ்வளவிற்கும் இந்நாட்டில், பொதுஇடங்களில் மிருகங்களை வெட்டிக்கொல்வதற்கு சட்டரீதியான தடை இருக்கின்றது. மதம் எல்லவற்றிலுமிருந்து தப்பிவிடுகின்றது.

எல்லா உயிர்களும் கடவுளின் படைப்பே, அவற்றிலும் கடவுள் வியாபித்திருக்கின்றார் என்று வலியுறுத்தும் இந்து மதத்தில், இக்கொலைகளை எவ்வாறு நியாயப்படுதமுடியும். அத்துடன் உயிக்கொலைகளையும், மாமிசமுண்ணலையும் இம்மதத்தில் மாபாதங்களாக குறிப்பிட்டிருக்கின்றார்கள். தங்கள் மீது கருணைகாட்டுவதாக பல்லாயிரக்கனக்கான மக்கள் நம்பும் இந்த கருணை மிக்க கடவுளர் (ஆகக்குறைந்தது நேரே பார்த்துக்கொண்டிருந்த மகா பட்திரகாளி அம்மன்) ஏன் இப்பாதகங்களை தடுக்கமுடியாமல் போனது. கடவுளரின் கவனத்திலிருந்து இவை தப்பிவிட்டனவா? அவ்வாறெனில் இதோ கடவுளரின் கவனத்துக்கு இவ்விடயம், எதிர்காலத்தில் இம்மாதிரியானவை நடைபெறாமல் தடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்போடு...

மதுவர்மன் (2009-09-06)

நன்றி
படங்கள் மற்றும் செய்தி
Public slaughter of animals http://sundaytimes.lk/image_story.htm
Sacrificial goats http://sundaytimes.lk/090906/News/nws_04.html

உசாத்துணை
Belief and the brain's 'God spot' http://www.independent.co.uk/news/science/belief-and-the-brains-god-spot-1641022.html
Functional Neuroimaging of Belief, Disbelief, and Uncertainty http://richarddawkins.net/article,1994,Functional-Neuroimaging-of-Belief-Disbelief-and-Uncertainty,Sam-Harris-Sameer-A-Sheth-Mark-S-Cohen

Animal sacrifice http://en.wikipedia.org/wiki/Animal_sacrifice

Animal sacrifice: a corrective http://www.hindu.com/op/2003/09/16/stories/2003091600290300.htm
Significance of Anuimals in Hinduism http://www.hinduwebsite.com/hinduism/essays/animals.asp
Hinduism and animals http://www.bbc.co.uk/religion/religions/hinduism/hinduethics/animal.shtml
Ban on sacrificing animals in temples lifted http://www.hindu.com/2004/02/21/stories/2004022106220400.htm

Sunday, August 30, 2009

சரளமான ஆங்கில அறிவு அவசியம், சக்தி தொலைக்காட்சி நேயராக இருப்பதற்கு - இலங்கை

ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 7:30 மணிக்கு, இலங்கை சக்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும், Zorro தொலைக்காட்சித் தொடரை என்றாவது ஒரு நாள் பார்த்தவர்களுக்கு, அல்லது சனி, ஞாயிறு தினங்களில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் Grand Master நிகழ்ச்சியை பார்த்தவர்களுக்கு புரியும், இந்தப் பதிவின் தலைப்பு ஏன் அவசியம் என்று.

Zorro தொலைக்காட்சித் தொடர் - ஞாயிறு காலை 7:30

இது முக்கியமாக சிறுவர்களை
இலக்கு வைத்து ஒளிபரப்பப்படும் தொலைக்காட்சித் தொடராக இருக்கவேண்டும், காலை நேர தொடர்கள் அநேகமாக சிறுவர்களை இலக்காக கொண்டவை.

சக்தி தொலைக்காட்சியின் இந்த தொடர் அப்படியே ஆங்கில மொழியிலேயே ஒளிபரப்பப்படுகின்றது. தமிழ் மொழியில் ஒலி மாற்றம் இலங்கையிலே பெரும்பாலும் செய்யப்படுவதில்லை என்பது காரணமாக இருக்கலாம். ஆனாலும் ஆச்சரியப்படவும், ஆதங்கப்படவும் வைக்கும் விடயம் என்னவென்றால், இத்தொடரில் உபதலைப்புக்கள் சிங்கள மொழியில் வழங்கப்படுவது, தமிழில் எதுவுமே இல்லாமை.

சக்தி தொலைக்காட்சியின் அநேக தமிழ் மொழியிலமைந்த நிகழ்ச்சிகள் சிங்கள உப தலைப்புக்களுடன் வழங்கப்படுவது வழமை, அது வரவேற்கத்தக்கதும் கூட. ஆனால், ஆங்கில மொழியிலமைந்த தொடரொன்றுக்கு, தமிழ் பேசும் மக்களை நேயர்களாக கொண்ட தொலைக்கட்சி, தமிழ் மொழியை தவிர்த்து சிங்கள மொழியில் உபதலைப்புக்களை வழங்குவது வேதனையளிக்கின்றது.

என்னுடைய நண்பர் வீடொன்றில் நடந்த சம்பவமே என்னை இதை எழுதத்தூண்டியது. மூன்று பத்து வயதிற்கு கூடாத சிறுவர்க்ள் இத்தொடரை பார்த்துக்கொண்டிருந்தபோது, நானும் அவர்களுடன் இணைந்துகொண்டேன், அப்போது அவர்களில் ஒரு சிறுவன் என்னிடம் கேட்டான் ‘மாமா, அந்த எழுத்துக்களை சிங்களத்தில போடுகினமே, தமிழில போடமாட்டினமா?’ என்று. எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அதற்கு நான், அச்சிறுவனுக்கு ‘உவங்கள் உப்பிடித்தான்’ என்று பதிலளிக்கவேண்டியதாயிற்று.

பெரியவர்களையாவது பரவாயில்லை, அச்சிறுவர்களையும் ஆங்கில தெரிந்திருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது எவ்வளவு நியாயம். தமிழ் மொழியிலான தொலைக்காட்சியான சக்தி, எம்மொழியில் முக்கியமாக இங்கு உபதலைப்புக்களை கொடுத்திருக்கவேண்டும்? அல்லது தமிழ் மொழிபெயர்த்து உபதலைப்புக்களை போடுவதற்கான வசதி சக்தி நிறுவனத்திடம் இல்லையா?

சக்தியின் Grand Master - சனி, ஞாயிறு இரவு 8 மணி

இங்கேயும் ஒரு ஆங்கில மேலாதிக்கம் நிலவுகின்றது, இந்நிகழ்ச்சியை தொடர்ச்சியாக பார்த்து வருபவர்களுக்கு இந்நிலைமை புரியும். இந்நிகழ்ச்சியை நாடாத்தும் பிரதீப் என்ற இந்தியர் ஒரு மலையாளி என்று அறியக்கிடைத்தது, ஆனாலும் அவர் தமி மொழியில் கணிசமான புலமையோடு உரையாடுகின்றார்.

அவ்வப்போது இந்நிகழ்ச்சியில் பங்குபற்றுபவர்கள் பிரதீப் கேட்கும் கேள்விகள் புரியாமல் ஆமா, இல்லையா என்று விடையளிக்க முடியாமல் சங்கடப்படுவதை கண்டிருக்கின்றேன். கேட்கப்பட்ட கேள்வி தொடர்பான விடயம் சம்பந்தமாக போதிய அறிவில்லாமை என்ற காரணம் போக, என்னை ஆத்திரப்பட வைத்த இன்னொரு காரணம் இருக்கின்றது.

அதாவது, பிரதீப் அநேகமாக, அதிகமாக, வேகமாக கதைக்கும் ஆங்கிலத்தை புரிந்துகொள்ளாமல், என்ன கேட்கின்றார் என்று புரியாமல் ஆம் அல்லது இல்லை என்று ஏதோ ஒன்றை விடையளித்து தடுமாறியவர்களை கண்டிருக்கின்றேன். அந்நிலைமைகளில் பிரதீப் நிகழ்ச்சியில் பங்குபற்றுபவர்களை ஒரு ஏளனத்தனமையோடு நடத்துவதையும் அவதானிக்கலாம். நிகழ்ச்சியில் பங்குபற்றுபவர்கள் சங்கடப்பகுகின்றார்கள்.

இந்நிகழ்ச்ச்சியில் பங்குபற்றும் அனைவரும் காட்டாயம் ஆங்கிலத்தில் சிறப்பு புலமை பெற்றிருக்கவேண்டும் என்ற நிபந்தனையை சக்தி தொலைக்கட்சி விதித்திருக்கின்றதா? தமிழ் தெரிந்த பிரதீப் தமிழ் மொழி பேசுபவர்களிடம் தமிழ் மொழியில் கேள்விகளை கேட்கலாம் தானே.



இலங்கை நேயர்களை பிரதீப் இந்திய நேயர்கள் போன்று எண்ணுகின்றாரோ தெரியவில்லை. இந்திய நேயர்கள் போன்றன்று, இலங்கை நேயர்கள் மிகக்குறைந்த அளவிலேயே ஆங்கிலச் சொற்களை பாவிப்பவர்கள். மாறாக இந்தியாவில் அவர்களுக்கேயுரிய, உச்சரிப்புடன்கூடிய தமிழ் கலந்த ஆங்கிலம் பேசுவார்கள், ஆனால் இலைகையில் தமிழர்கள் பெரும்பாலும் அப்படியில்லை.

பிரதீப் அதிகம் ஆங்கிலத்தை பாவிப்பது, மேலும் பங்குபற்ற விருப்பும் நேயர்களை கொஞ்சம் பின்நிற்கச்செய்யும் என்பதை சக்தி தொலைக்கட்சி விளங்கிக்கொள்ளவேண்டும். ஏனென்றால் ஆங்கிலம் சரளமாக தெரியாவிட்டால், பிரதீப் கேட்கும் கேள்விகளை புரிந்துகொள்ள முடியாதென்ற நிலை காணப்படுகின்றது. இவற்றை கவனித்து, சக்தி நிர்வாகம் முடிந்தவரை இந்நிகழ்ச்சிகளில் தமிழ் பாவனையை ஏற்படுத்தலாம்.

’தமிழ் மொழியின் சக்தி’ என்று சொல்லிக்கொள்பவர்கள் அதற்றாற்போல் நடக்காமல், தமிழர்களை ஆங்கில மயப்படுத்தவேண்டும் என்ற குறிக்கோளோடு இயங்குகின்றார்களோ என்று எண்ணத்தோன்றுகின்றது. ஏற்கனவே சிங்கள மயமாக்கலால் தமிழ்மொழி பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கையில், இலங்கையின் பிரதான தமிழ் தொலைக்காட்சியான சக்தியில், ஆங்கிலத்தின் ஆதிக்கம் அசாதாரணமாக அதிகமாகவே காணப்படுவது கொஞ்சம் மனவேதனையளிப்பதாகவே இருக்கின்றது.

கொசுறுத்தகவல்: சக்தி தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநராக இருப்பவர் ஒரு இந்தியர்

பிரதீப் தொடர்பாக ஏனைய இடங்களில்
http://nkashokbharan.wordpress.com/2008/05/02/a-moment-with-grand-master/
http://www.thehindu.com/fr/2007/06/08/stories/2007060851630400.htm
http://www.hindu.com/mp/2006/06/05/stories/2006060500050702.htm

Saturday, August 29, 2009

அஞ்சலி: கவிஞர் மாவை வரோதயன்


கவிஞர் மாவை வரோதயன் இன்று(2009-08-29 சனிக்கிழமை) அதிகாலை யாழ்ப்பாணத்தில் காலமானார். தேசிய கலை இலக்கியப் பேரவையின் கொழும்புக் கிளையின் இலக்கியச் செயலராக மாவை வரோதயனின் பங்களிப்பு அளப்பரியது. இவரது பன்னிரு சிறுகதைகளைக் கொண்ட "வேப்பமரம்" என்ற சிறுகதை தொகுதியும் "இன்னமும் வாழ்வேன்" என்ற கவிதை தொகுதியும் வெளிவந்துள்ளன.

சிவகடாட்சம்பிள்ளை சத்தியக்குமரன் எனும் இயற்பெயரை உடைய மாவை வரோதயன் யாழ்ப்பாணத்தின் வடக்கே மாவிட்டபுரத்தின் பளை எனும் இடத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். கவிதை, சிறுகதை, நாடகம், விமர்சனம், சினிமா எனப் பல்வேறு துறைகளில் தன்னை ஈடுபடுத்தி வந்தவர். தொடக்கத்தில் கொழும்பில் பரீட்சைத் திணைக்களத்தில் இவர் பணிபுரிந்தார். பின்னர் இலங்கை சுகாதார சேவையில் சுகாதாரப் பரிசோதகராக கடமையாற்றிய இவர் சகல சமூக மக்களுடனும் மிக நெருக்கமான உறவைப் பேணியவர்.

அவரதுமறைவு நிரப்ப முடியாத இடைவெளியை ஈழத்து இலக்கிய உலகில் ஏற்படுத்தி இருக்கிறது அவரது பிரிவு தமிழ் இலக்கிய உலகிற்கும் சமூக விடுதலைச் சிந்தனையாளர்கட்கும் ஒரு பேரிழப்பாகும்.

அவரது பிரிவால் வருந்தும் அவரது மனைவியார் அவர்கட்கும் பிள்ளைகட்கும் குடும்பத்தினருக்கும் நாம் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதுடன் அவருக்கான இறுதி அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்வதில் அவருடைய நண்பர்களுடனும் உறவினர்களுடனும் இணைந்து, எமது ஆழ்ந்த துயரை அவர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

மாவை வரோதயனின் இழப்பு குறித்து

செ.பொ.கோபிநாத் வலைப்பதிவில் http://spggobi.blogspot.com/2009/08/blog-post_29.html
கானா பிரபாவின் வலைப்பதிவில்http://kanapraba.blogspot.com/2009/08/blog-post_30.html

மாவை வரோதயனின் நூலகள் நூலகம் திட்டத்தில்

Tuesday, August 25, 2009

கோழியா, முட்டையா, எது முதலில் வந்தது?

ஒருவரை பார்த்து, 'இதுவா அதுவா, எது முதலில் வந்தது அல்லது எதிலிருந்து எது வந்தது’ என்று வெளிப்படையாக விடை சொல்லமுடியாத கேள்வி'யொன்றை கேட்கின்றீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவருக்கு இதற்கான விடை உடனடியாக தெரியாதாயின், மாறாக உங்களை மடக்குவதற்காக அவர் உடனடியாக உங்களை நோக்கி ஒரு கேள்வியை எடுத்துவிடுவார். ‘கோழியிலிருந்து முட்டை வந்ததா? முட்டையிலிருந்து கோழி வந்ததா? என்று சொல்லுங்கள்' என்று உங்களை கேட்பார். நீங்களும் எது முதலில் வந்தது என்று சொல்லமுடியாது விழிப்பீர்கள். உடனே அவர் ‘அவ்வாறே உங்களுடைய முன்னைய கேள்விக்கும் விடையளிப்பது கடினம்' என்பார்'

மேற்படி சந்தர்ப்பங்கள் பலவற்றை நான் சந்தித்திருக்கின்றேன். பெரிய அறிஞர்கள் என்று மதிக்கப்படுபவர்கள் கூட இவ்வாறு நடந்ததை கண்டிருக்கின்றேன். அவ்வாறே நீங்களும் சந்தித்திருப்பீர்கள். சரி, கோழியா முட்டையா, எது முதலில் வந்தது என்பது பற்றி இங்கே இப்போது ஆராய்வோம்.
 

“ …இந்த கோழி, கோழிமுட்டை பிரச்சினை தொடர்பாக

எம்மவர்கள் அடிக்கடி கேட்கும் கேள்வி கூட

அடிப்படையில் பிழையானது. 'கோழியிலிருந்து முட்டை

வந்ததா அல்லது முட்டையிலிருந்து கோழி வந்ததா?'

என்று கேட்பார்கள். கோழியிலிருந்து முட்டை வருகின்றது

சரி, அதெப்படி முட்டையிலிருந்து கோழி வரமுடியும்?

குழப்பமாக இருக்கின்றதா?… " 


கோழியா, முட்டையா, எது முதலில் வந்தது?

கோழிக்கு முன்பே முட்டையிடக்கூடிய வேறு உயிரினங்கள் இருந்துள்ளன தானே. உதாரணத்துக்கு, உயிர்ப் பரிணாமத்தில் (Biological Evolution), நகருயிர்களின் (Reptiles) பின்பு தான், பறவைகள் உருவாகியிருந்தன. டைனசோர் போன்ற நகருயிர்கள் பறவைகள் தோன்றுவதற்கு பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்திருக்கின்றன. ஆகவே கோழியை விட, 'முட்டை' தானே முதலில் வந்திருக்கவேண்டும். இது கொஞ்சம் சுவாரசியமான விளக்கமாக இருக்கின்றது இல்லையா!

அவ்வாறல்ல, இங்கே கேள்வியிலே கொஞ்சம் குழப்பமிருக்கின்றது. கோழியா, முட்டையா என்பதற்கு பதிலாக கோழியா, கோழிமுட்டையா, என்றவாறு கேள்வி இருந்திருக்கவேண்டும். முட்டை என்று பொத்தாம் பொதுவாக குறிப்பிட்டால், அது கோழிமுட்டையல்லாத முட்டைகளையும் உள்ளடக்கி, டைனசோர்களையும் உள்ளே கொண்டுவந்துவிடும். ஆகவே கேள்வி ‘கோழியா, கோழிமுட்டையா, எது முதலில் வந்தது?' என்று அமையவேண்டும்.

இந்த கோழி, கோழிமுட்டை பிரச்சினை தொடர்பாக எம்மவர்கள் அடிக்கடி கேட்கும் கேள்வி கூட அடிப்படையில் பிழையானது. 'கோழியிலிருந்து முட்டை வந்ததா அல்லது முட்டையிலிருந்து கோழி வந்ததா?' என்று கேட்பார்கள். கோழியிலிருந்து முட்டை வருகின்றது சரி, அதெப்படி முட்டையிலிருந்து கோழி வரமுடியும்? குழப்பமாக இருக்கின்றதா?

மனிதத் தாயிலிருந்து குழந்தை வருகின்றது (பிறக்கின்றது). குழந்தை பிறந்த பின்பும், தாய் தாயாக இருக்கின்றாள், குழந்தை என்று புதிய ஒரு பொருள் வந்திருக்கின்றது. ஒன்றிலிருந்து இன்னொன்று வந்து, இப்போது இரண்டாக இருக்கின்றது.

அவ்வாறே, கோழி முட்டையிடுகின்றது. அதுவே கோழியிலிருந்து முட்டை வருகின்றது. அங்கேயும் கோழி கோழியாக இருக்கின்றது, முட்டை என்று ஒரு புதிய பொருள் வந்திருகின்றது.

இவற்றை வைத்து இப்போது சொல்லுங்கள். முட்டையிலிருந்து கோழி வருகின்றதா அல்லது முட்டையே கோழியாக மாறுகின்றதா?

ஆம், முட்டைக்குள் உயிர், இரசாயன மாற்றங்கள் ஏற்பட்டு அந்த முட்டை அப்படியே கோழியாக மாறுகின்றதேயொழிய, முட்டையிலிருந்து கோழி வருவதில்லை. முட்டையிலிருந்து கோழிக்குஞ்சு பொரிக்கும்போது, இப்போது முட்டை இல்லை, கோழிக்குஞ்சு மட்டும் தானே எஞ்சியுள்ளது. இது உரு மாற்றம் தானே. ஒன்று இன்னொன்றாக மாறி எஞ்சியுள்ளது ஒன்றுதானே.

ஆகவே, இன்னும் யாராவது உங்களை பார்த்து, கோழியிலிருந்து முட்டை வந்ததா அல்லது முட்டையிலிருந்த் கோழி வந்ததா என்று கேட்பாராயின், அவரது கேள்வியை திருத்தவேண்டியது உங்கள் பொறுப்பு. ஏனென்றால், தர்க்கரீதியாக அக்கேள்வி பிழையானது. இபோது சரியான கேள்வி ‘கோழியா (கோழி) முட்டையா, எது முதலில் வந்தது?' என்பதே. 'ஒன்றிலிருந்து மற்றது' என்ற முறையை விட்டுவிடவேண்டும், ஏனென்றால் இருவழிக்கும் அது பொருந்தவில்லை.

கோழிமுட்டை என்றால் என்ன என்று உங்களை கேட்டால் உடனே சொல்வீர்கள் ‘கோழி இட்ட முட்டை தான் கோழிமுட்டை' என்று. ஆனால், உயிரியலின்படி, அவ்வாறிருக்கவேண்டியதில்லை. கோழியல்லாத விலங்கு (பறவை) கூட கோழிமுட்டையை இடமுடியும். அதை பின்பு விளக்குகின்றேன். இலகுவாக ஒருவரியில் சொல்வதானால், குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்று சொல்வது போல தான்.

மாறாக, உயிரியலின்படி, கோழியாக மாறக்கூடிய முட்டையே கோழிமுட்டையாக இருக்கமுடியும். அதாவது, எந்த முட்டையிலிருந்து கோழிக்குஞ்சு பொரிக்கின்றதோ (முட்டை கோழியாக மாறுகின்றது) அந்த முட்டை நிச்சயமாக கோழிமுட்டையாக தானே இருக்கமுடியும்.

தாயின் கருப்பையிலிருந்து குழந்தை வெளியே வந்த கணத்திலிருந்து நாங்கள் குழந்தையின் வயதை கணிக்கத்தொடங்குகின்றோம். மாறாக, அக்கணத்துக்கு ஏறத்தாழ பத்து மாதங்களுக்கு முன்பே குழந்தையின் உருவாக்கம்(ஆரம்பம்) தொடங்கிவிட்டது என்பது தானே உண்மை. அதாவது தந்தையின் விந்துக்கலமொன்றும் (Sperm Cell), தாயின் முட்டைக்கலமொன்றும் (Ovum) கருப்பையில் இணைந்து, குழந்தையை உருவாக்கக்கூடிய முதலாவது கலம் (நுகம் - Zygote) உருவாக்கப்பட்டபோதே குழந்தையின் உருவாக்கம் தொடங்கிவிட்டது. அந்த ஒரு கலம் பின்பு பல கலங்களாக பிரிவடைந்து நேரத்துடன் முழுமையான குழந்தையாக உருமாறுகின்றது. குழந்தையின் நடத்தைகள், உடலியல்புகள் எவ்வாறு இருக்கும் என்ற விடயங்களெல்லாம், அந்த முதலாவது கலத்திலேயே, தீர்மானிக்கப்பட்டுவிடுகின்றன.

உயினமொன்றின் மொத்த இயல்புகளையும் தீர்மானிப்பது அதன் கலங்களிலுள்ள DNA யாதலால், DNA யில் ஏற்படுகின்ற மாற்றங்கள் காரணமாக, இயற்கையில், உயிரினங்கள் பரிணாமமடைகின்றன. கோழி போன்ற விலங்கினத்தில், ஆண்விலங்கின் விந்துக்கலத்திலிருந்தும் (Sperm), பெண்விலங்கின் முட்டைக்கலத்திலிருந்தும் (Ovum) (இது கோழிமுட்டையல்ல) DNA மூலக்கூறுகள் ஒன்றுசேர்ந்து, நுகம் (Zygote) - கோழிக்குஞ்சொன்றின் முதலாவது கலம், உருவாகின்றது. இந்த முதற்கலம் எண்ணுக்கணக்கற்ற தடவைகள் கலப்பிரிவுக்கு (ஒரு கலம் இரண்டாக பிரிந்து, இரு புதிய கலங்கல் உருவாதல்) உள்ளாகி, ஒரு முழுமையான விலங்குக்குரிய கலங்கள் உருவாகின்றன. எந்த ஒரு விலங்கிலும், எல்லாக் கலங்களும் ஒரே மாதிரியான DNA மூலக்கூறகளையே கொண்டிருக்கும் அந்த DNA முதலாவது கலமான நுகத்திலிருந்தே (Zygote) வருகின்றது.

ஆணினதும், பெண்ணினது DNA கலப்பினால் ஏற்பட்ட சிறிய மாற்றங்களினாலோ அல்லது, நுகத்தை (Zygote) உருவாக்கிய DNA யில் ஏற்பட்ட விகாரங்களினாலோ (Mutation) கோழியல்லாத உரிரினங்களிலிருந்து கோழிகள் பரிணாமமடைந்தன. இந்த மாற்றங்களும், விகாரங்களும் (Mutations) நுகம் (Zygote) உருவாகும் தருணத்தில் மாத்திரமே பாதிப்பை ஏற்படுத்தவல்லன. அதாவது, கோழியல்லாத இரு விலங்குகள் (இன்னும் சிறப்பாக பறவைகள்) இணைசேர்ந்தன, அவற்றினுடைய புதிய நுகத்திலிருந்த (Zygote) DNA, முதலாவது உண்மையான கோழியை உருவாக்கிய அந்த விகாரத்தை (அல்லது விகாரங்களை - mutations) கொண்டிருந்தது. அந்த ஒரு நுகக்கலம் (Zygote) கலப்பிரிவடைந்து முதலாவது உண்மையான கோழியை உருவாக்கியது

முதலாவது, உண்மையான கோழியாக உருவாகிய அந்த நுகத்துக்கு முன்பு, கோழியல்லாத விலங்குகள் மாத்திரமே இருந்தன. புதிய விலங்கொன்றை உருவாக்கக்கூடிய DNA விகாரங்கள் (mutations) ஏற்படக்கூடிய ஒரேயொரு இடம், நுகக்கலம் (Zygot) மாத்திரமே. அந்த நுகக்கலம் கோழியினுடைய முட்டையினுள்ளே கொண்டிருக்கப்பட்டுள்ளது. அதாவது, கோழி முட்டையென்பது ஒரு நுகம் - கோழியாக உருவாகப்போகின்ற அந்த உயிரினத்தின் முதலாவது கலம். ஆகவே முட்டையே முதலில் வந்திருக்கவேண்டும் என்பது, சந்தேகத்துக்கு இடமில்லாது நிரூபணமாகின்றது.

காலாகாலத்துக்கும் விஞ்ஞானிகளையும், தத்துவாசிரியர்களையும், ஏன் எங்கள் எல்லோரையுமே குழப்பத்திலாழ்த்திக்கொண்டிருந்த இந்த கேள்விக்கு, இப்போது விஞ்ஞானம் விடையளித்துள்ளது. இன்னும் இதுபற்றி (அறியாமையால்) குழம்பி/குழப்பிக்கொண்டிருப்பவர்களை தெளிவுபடுத்தவேண்டிய பொறுப்பும் இதை அறிந்தவர் கைகளிலேயே உள்ளது.

குறிப்பு: இக்கட்டுரை இலங்கையிலிருந்து வெளிவருகின்ற 'பயில்நிலம்' காலாண்டு சஞ்சிகையின், 2009 இன் முதல் காலாண்டு இதழில் வெளிவந்தது.


உசாத்துணை
2. Which came first, the chicken or the egg? http://science.howstuffworks.com/genetic-science/question85.htm
3. Chicken and egg debate unscrambled http://www.cnn.com/2006/TECH/science/05/26/chicken.egg/
4. Which Came First? Eggs Before Chickens, Scientists Now Say http://www.livescience.com/animals/081114-chicken-or-egg.html
5. Chicken and egg question answered http://www.guardian.co.uk/science/2006/may/26/uknews

Sunday, June 28, 2009

அஞ்சலி: மூத்த கவிஞர் இ.முருகையன்

மூத்த கவிஞர் இ.முருகையன் (23-04 -1935 - 27 -06 -2009)

தேசிய கலை இலக்கியப் பேரவையின் தலைவரும் ஈழத்தின் தலைசிறந்த கவிஞர்களுள் ஒருவருமான இ. முருகையன் அவர்களது பிரிவுச் செய்தி தேசிய கலை இலக்கியப் பேரவையைப் பெருந் துயரில் ஆழ்த்தியுள்ளது.

தேசிய கலை இலக்கியப் பேரவையின் தொடக்கத்திலிருந்து அதற்குத் துணையாயிருந்து இளம் படைப்பாளிகளை நெறிப்படுத்தி ஊக்குவித்ததில் அவரது பங்களிப்பு மிகப் பெரிது. தேசிய கலை இலக்கியப் பேரவையின் சஞ்சிகையான தாயகத்தின் ஆசிரியர் குழுவிற் பெரும் பொறுப்பேற்றுச் செயற்பட்டு வந்ததுடன் அதன் நூல் வெளியீடுகளிலும் அவர் ஆக்கபூர்வமான ஒரு வழிகாட்டியாயிருந்தார்.

மூத்த கவிஞர் முருகையன் கவிஞராக மட்டுமன்றித் தமிழறிஞராகவும் திறனாய்வாளராகவும் சீரிய முற்போக்குச் சிந்தனையாளராகவும் அறியப்பட்டவராவார். அரசகரும மொழித் திணைக்களத்தில் அவர் பணியாற்றிய காலத்தில் தமிழ்க் கலைச் சொல்லாக்கத்திற்கு அவர் ஆற்றிய சேவை முன்னோடியானதும் முற்போக்கானதுமாகும். அவர் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் உதவிப் பதிவாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

அவரது கவிதைகள் போன்று மொழி, சமுகம், அரசியல் ஆகிய துறைகளில் அவரது கட்டுரைகளும் மிகுந்த தெளிவும் ஆழமும் சமூகப் பயனுமுடையவையுமாவன. அவர், தன்னைச் சூழத் தவறுகள் நடந்த போதெல்லாம் அவற்றைக் கண்டிக்த் தயங்காது காய்தல் உவத்தலியன்றி ஆக்கமான விமர்சனங்களை முன்வைத்து வந்தவருமாவர். அவரது பிரிவு தமிழ் இலக்கிய உலகிற்கும் சமூக விடுதலைச் சிந்தனையாளர்கட்கும் தமிழ் அறிவுத் துறைக்கும் ஒரு பேரிழப்பாகும்.

அவரது பிரிவால் வருந்தும் அவரது மனைவியார் தவமணிதேவி அவர்கட்கும் பிள்ளைகட்கும் குடும்பத்தினருக்கும் தேசிய கலை இலக்கியப் பேரவை தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதுடன் அவருக்கான இறுதி அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்வதில் அவருடைய நண்பர்களுடனும் உறவினர்களுடனும் இணைந்து, தனது ஆழ்ந்த துயரை அவர்களுடன் பகிர்ந்து கொள்கிறது.


பொதுச் செயலாளர்
தேசிய கலை இலக்கியப் பேரவை

Saturday, March 7, 2009

கிரிக்கெட்+அரசியல்=பயங்கரவாதம்?

கடந்த 3 ஆம் திகதி பாகிஸ்தான் லாகூர் நகரில் இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது திட்டமிட்ட தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆயுததாரிகளான ஒரு குழுவினர் நடத்திய துப்பாக்கித் தாக்குதலில் இலங்கை அணியினர் காயங்கள் அடைந்தனர். எவ்வாறாயினும் இத்தகைய தாக்குதலை எவர் செய்திருப்பினும் வன்மையாகக் கண்டிக்கப்படவும் எதிர்க்கப்படவும் வேண்டியதாகும். தீவிரவாத ஆயுதக் குழுக்களின் பலம் ஓங்கியுள்ள பாகிஸ்தானில் இவ்வாறான தாக்குதல் முயற்சி இடம்பெறக் கூடியது என்பதை இலங்கை அரசாங்கம் எதிர்பார்த்திருக்க வேண்டியதொன்றாகும். தெற்காசிய நாடுகளில் காணப்படும் பயங்கரவாதம் பற்றியும் இலங்கையில் இருந்து வரும் பயங்கரவாதம் பற்றியும் உச்சக் குரலில் பேசி வந்த இலங்கையின் தலைவர்களுக்கு பாகிஸ்தானில் இருந்து வரும் தீவிரவாதம் அல்லது பயங்கரவாதம் பற்றிக் கணக்கிட முடியாமல் போய்விட்டமை ஏன் என்பது புரியவில்லை.

ஏற்கனவே கடந்த வருடப் பிற்கூறில் மும்பையில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் சென்று விளையாட மறுத்துவிட்டது. அங்கு தமக்குப் பாதுகாப்பு இல்லை என்ற காரணத்தையே இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தெரிவித்திருந்தது. இருப்பினும் இந்திய அணி அங்கு செல்லாது விட்டதற்கு பாகிஸ்தான் மீது இந்தியாவிற்கு ஏற்பட்ட விரோதக் கோபமே காரணமாகும். இந்தக் கோபத்தின் பின்னால் இந்திய பாகிஸ்தான் முரண்பாட்டு அரசியல் ராஜதந்திரம் இருந்தது. அது இன்று நேற்று ஏற்பட்டதொன்றல்ல. பாகிஸ்தான் உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து நீடித்து வருவதாகும். இந்நிலையில் இந்திய அணி அங்கு செல்ல மறுத்ததைப் பொருட்படுத்தாது இலங்கை அணிக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்தது. அதனை இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை ஏற்றுக்கொண்டு அங்கு சென்று விளையாட சம்மதம் தெரிவித்தது. எதிரிக்கு எதிரி நண்பன் என்ற உள்ளார்ந்த நிலையிலேயே இலங்கை அணி பாகிஸ்தான் சென்றது என்பதை இலகுவில் மறைத்துவிட முடியாது.

இந்திய பாகிஸ்தான் நாடுகளுக்கிடையிலான அரசியல் ராஜதந்திரப் பின்புலம் பார்க்கப்பட்ட அளவிற்கு இலங்கை அரசாங்கத்தால் அங்குள்ள பயங்கரவாதக் குழுக்கள் பற்றியும் அவற்றிலிருந்து இலங்கை அணியினரைப் பாதுகாக்கக் கூடிய வழிவகைகள் பற்றியும் முன்கூட்டியே சிந்திக்கப்படவில்லை. உயிர்ச்சேதம் இன்றி இலங்கை அணியினர் மீண்டு வந்தமை அரசாங்கத்திற்கு ஆறுதல் தருவதாக இருந்த போதிலும், எழக் கூடிய எதிர்ப்புகளை சமாளித்துக் கொள்ளவும் கிரிக்கெட் ரசிகர்களின் ஆதரவைப் பெறவும் ஜனாதிபதியும் அரசாங்கமும் உடனடியாகவே செயற்பட்டனர். நேபாளப் பயணத்தில் இருந்த ஜனாதிபதி தன்னுடன் இருந்த வெளியுறவு அமைச்சரை உடன் பாகிஸ்தான் அனுப்பியதுடன், தானும் ஒருநாள் முந்தியே பயணத்தை முடித்து நாடு திரும்பினார். இதனால், கிரிக்கெட் வட்டாரங்களில் ஜனாதிபதியினதும் அரசாங்கத்தினதும் பெயர்கள் பாதுகாக்கப்பட்டன. அதன் மூலம் இவர்கள் தமக்கான சக புள்ளிகளைப் பெற்றுக் கொண்டனர். இதன் மூலம் கிரிக்கெட் என்பது வெறுமனே ஒரு விளையாட்டு மட்டுமல்ல அதன் பின்னால் அரசியல் வணிகம், இலாபமீட்டல் என்பன மிகக் கெட்டியாக இருந்து வருவதையும் உறுதிப்படுத்த முடிந்துள்ளது.

இத்தாக்குதல் நடைபெற்று 5 நாட்களாகியும் உரிய ஆயுததாரிகள் எவரும் கைது செய்யப்படவில்லை. எந்தவொரு தீவிரவாத இயக்கமும் உரிமை கோரவுமில்லை. அதனால் ஊகங்களை மட்டுமே ஊடகங்களும் இணையத்தளங்களும் வெளியிட்டு வருகின்றன. அத்துடன், இலங்கை இந்திய பாகிஸ்தானிய உயர்மட்டத் தலைவர்கள் தத்தமது நிலைப்பாடுகளுக்கு ஏற்ப கருத்துகளைக் கூறியும் வருகின்றனர். தாக்குதலுக்குப் பின்பு இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கை அணி மீதான தாக்குதலைக் கண்டித்துவிட்டு பாகிஸ்தான் மீது பழி சுமத்தும் வகையில் கருத்துக் கூறிக்கொண்டார். அத்துடன் மேற்படி தாக்குதலை மும்பைத் தாக்குதலின் தொடர்ச்சி என்றும் கூறி பாகிஸ்தான் தனது நாட்டினில் இருந்து வரும் பயங்கரவாதத்தை உண்மையாகவே ஒழிக்க வேண்டும் என்றார். அதேவேளை, பாகிஸ்தானில் இருந்து வெளிவந்த கருத்துகளில் ஒன்று மும்பைத் தாக்குதலுக்குப் பழி தீர்க்கும் வகையில் இந்திய உளவு நிறுவனமான "றோ' வின் வழிகாட்டலில் நடத்தப்பட்ட தாக்குதல் என்றவாறு கூறப்பட்டது. இலங்கையின் வெளியுறவு அமைச்சர் றோகித போகொல்லாகம கூறுகையில்; புலிகள் இயக்கம் சம்பந்தப்பட்டிருப்பதை நிராகரிக்க முடியாது என்றார். ஏனென்றால், தோல்வியால் விரக்தியடைந்த புலிகள் இவ்வாறான தாக்குதல்களில் ஈடுபடவே செய்வார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். இவ்வாறு லாகூர் தாக்குதல் பல்வேறு தரப்புகளின் கருத்துகளுக்கும் கண்ணோட்டங்களுக்கும் இலக்காகி உள்ளன.

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் விரைவில் இத்தாக்குதலின் சூத்திரதாரிகளைக் கண்டுபிடித்து இதன் பின்னால் உள்ளவற்றை அம்பலப்படுத்துவோம் என்று கூறியுள்ளார். அதேவேளை, இலங்கை அரசாங்கத்திடம் வருத்தம் தெரிவித்து இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவுக்கு எவ்வித பங்கமும் ஏற்படாது என்றும் அறிவித்திருக்கிறார். மேற்படி தாக்குதலை இந்தியத் தலைவர்களும் பிரதான ஊடகங்களும் தமது பாகிஸ்தான் எதிர்ப்புப் பல்லவிக்கு ஏற்றவிதமாகச் சுருதி சேர்த்து வாசித்து வருகின்றனர். அவர்களது கருத்து நோக்கின் படி தீவிரவாதம் அல்லது பயங்கரவாதம் என்பது ஏதோ பாகிஸ்தானில் மட்டும் தான் விளைந்த வண்ணம் இருக்கிறது என்பதாகவே காட்டப்படுகிறது. இந்தியாவில் அவை இல்லை என்பது போலவும், இருந்தாலும் தமது கட்டுக்குள் இருந்து வருவதாகவும் அவை கூறி வருகின்றன. இந்தியாவில் எங்கு பயங்கரவாதத் தாக்குதல் நடந்தாலும் உடனடியாகவே பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதக் குழுக்களே காரணம் எனப் பட்டை அறைந்து கூறிவிடுவது இந்திய ஆளும் தரப்பிற்கு கைவந்த ஒன்று. மேலும் பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ. தான் பின்னிருந்து இக் குழுக்களை இயக்குவதாகப் பரப்புரை செய்வதிலும் இந்திய ஊடகங்கள் மகா கெட்டிக்காரர்கள். ஆனால் , இந்தியாவில் பல்வேறுபட்ட பயங்கரவாத அமைப்புகள் இருந்து வருவது பற்றியும் அவை நடத்தும் தாக்குதல் பற்றியும் அடக்கியே அவை வாசிக்கின்றன.

அத்துடன், இந்திய உளவு நிறுவனமான "றோ' வின் செயற்பாடுகள் பற்றி வாயே திறப்பதில்லை. முஸ்லிம் தீவிரவாதிகள் பற்றி நீட்டி முழக்கும் எவரும் இந்து தீவிரவாத அமைப்புகளான ஆர்.எஸ். எஸ். சிவசேனை போன்ற சங்கப்பரிவார அமைப்புகள் இந்துத்துவத்தின் பேரால் நடத்தும் பயங்கரவாதத் தாக்குதல்கள் பற்றிப் பேசுவது மிகக் குறைவு. இன்றைய நிலையில் தீவிரவாதம் பயங்கரவாதம் இன, மத , மொழி பிரதேச அடிப்படையில் எங்கிருந்து வந்தாலும் அது எதிர்த்து நிராகரிக்கப்பட வேண்டியதாகும். அவை பாரத புண்ணிய பூமியில் இருந்து வந்தால் புனிதமானது என்றும் பாகிஸ்தானில் இருந்து வந்தால் அழிவுகரமானது என்றும் பார்க்கும் குறுகிய பார்வைகள் அகற்றப்பட வேண்டும்.

அமெரிக்க ஏகாதிபத்தியம் சோஷலிசத்தையும் மார்க்ஸிஸத்தையும் வர்க்கப் போராட்டப் பாதையில் அமைந்த விடுதலைப் போராட்டங்களையும் முறியடிக்கவே பயங்கரவாதக் குழுக்களையும் இயக்கங்களையும் மூன்று தசாப்தங்களுக்கு முன்பு உருவாக்கி நிதி, ஆயுதம், பயிற்சி வழங்கி முன் தள்ளிவிட்டது. அதேவழியில் ஏனைய முதலாளித்துவ ஆட்சி அதிகார சக்திகளும் அத்தகைய குழுக்களை தோற்றுவித்தன. இது சிறிய நாடுகளில் பாதாள உலகக் குழுக்களை உருவாக்கி இயக்குவது வரை கொண்டு செல்லப்பட்டது. அன்று சதாம் ஹுஸனையும் , பின் லேடனையும் வளர்த்து அரங்கில் ஆடவிட்டது அமெரிக்கா என்பதை யார் தான் மறுப்பர். அதே பெயர்கள் 9/11 க்குப் பின்பு உலகின் ஈவிரக்கமற்ற உலகப் பயங்கரவாதிகளாகக் காட்டப்பட்டனர். ஈராக்கில் புகுந்து கொள்ளவும் ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருக்கவும் அதே பெயர்களைத் தான் அமெரிக்கா பயன்படுத்தியது. தமது தேவை நிறைவேறும் மட்டும் விடுதலைப் போராளிகளாகக் காட்டி அத் தேவை முடிந்ததும் பயங்கரவாதிகளாக சித்திரித்தும் ஊட்டி வளர்த்தவர்களையே உதைத்து அழிப்பதும் ஏகாதிபத்திய மேலாதிக்க சக்திகளுக்கு கைவரப் பெற்ற கலையாகும்.

இலங்கையின் தேசிய இனப் பிரச்சினைக்கான போராட்டத்திலும் அமெரிக்கா , இந்தியா என்பன நடந்து கொண்ட முறைமையை யாராவது இன்றும் விளங்கிக் கொள்ளாவிட்டால் அத்தகையோர் முட்டாள்களாக அல்லது அறிவிலிகளாக மட்டுமே இருக்க முடியும். எனவே, தீவிரவாதம் பயங்கரவாதம் வெறுமனே ஒரு கேள்வி ஒரு விடையில் விளக்கிக் கொள்ளவியலாத ஒன்றாகவே காணப்படுகிறது. அது யாரால் யாருக்காக எந்த வழிமுறையில் முன்னெடுக்கப்படுகிறது என்பதைப் பார்க்க வேண்டும். எந்தவொரு மக்கள் பிரிவினருக்கும் எதிராக ஒரு சிலரின் தேவைக்காக முன்னெடுக்கப்படும் தீவிரவாதமோ தாக்குதலோ அடிப்படையில் மக்கள் விரோதமானதாகும்.

இவ்வாறு தான் கிரிக்கெட் என்ற விளையாட்டுப் பற்றியும் நோக்க வேண்டியுள்ளது. அது நமது நாட்டின் தேசிய விளையாட்டுக்களில் ஒன்றல்ல. அது பிரித்தானியாவில் இருந்து நம்மீது திணிக்கப்பட்ட கனவான்களின் காலத்தை விரையமாக்கும் விளையாட்டு. அது இன்று சில நாடுகளால் மட்டுமே விளையாடப்படுகிறது. அவற்றில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் என்பன தெற்காசிய நாடுகளில் முக்கியமானவைகளாகும். இந்த கிரிக்கெட் விளையாட்டு வெறுமனே உடல் நலத்திற்காகவோ நட்பை விருத்தியாக்குவதற்கோ நடத்தப்படுவதில்லை. இன்று இந்த விளையாட்டு முற்றிலும் பணமும் சொத்தும் குவிக்கும் களமாகக் காணப்படுகிறது. ஏகாதிபத்திய உலகமயமாக்கல் நிகழ்ச்சி நிரலுக்கு இக் கிரிக்கெட் விளையாட்டு பக்கபலமாகிக் கொண்டது. விளையாட்டு வீரர்களின் திறமையையும் ஆற்றல்களையும் விலைகொடுத்து வாங்குவதில் பல்தேசிய நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டன. தத்தமது விளம்பரங்களுக்காக விளையாட்டு வீரர்களை பிம்பமாக்கிக் கொண்டன. கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதற்குக் கோடிக்கணக்கில் பணம் கொட்டி அனுசரணை வழங்கி வருகின்றன. இந்தப் பணத்தில் ஒரு பகுதி விளையாட்டு வீரர்களுக்கும் மறுபகுதி கிரிக்கெட் சபையினருக்கும் சென்றடைகின்றன. அதனாலேயே கிரிக்கெட் சபையின் தலைவராவதற்கும் ஏனைய பதவிகளுக்கும் கடும்போட்டி இருந்து வருகின்றதை அவதானிக்கலாம். இந்தியாவின் கிரிக்கெட் சபைத் தலைவராக வருவதற்கு மத்திய அமைச்சராக இருக்கும் சரத்பவார் எத்தனை பாடுபட்டு தலைவரானார். அங்கே மக்களுக்குச் சேவை செய்வதற்கு அல்ல. அங்கு ஓடும் பண நதியில் நீச்சல் அடிப்பதற்கேயாகும். இங்கும் பெரும் பெரும் பண முதலைகள் பெருமளவில் செலவு செய்து கிரிக்கெட் சபைத் தேர்தலில் நின்று வருவதையும் காணலாம்.

இவ்வாறு கிரிக்கெட் விளையாட்டும் வீரர்களும் கிரிக்கெட் சபையும் கோடி கோடியாகப் பணம் பண்ணிக் கொண்டிருக்க அவ் விளையாட்டை நேரிலும் தொலைக்காட்சிகளிலும் பார்த்து ரசித்து நிற்கும் மக்கள் இறுதியில் கொட்டாவி விட வேண்டியதாகவே இருந்து வருகிறது. இத்தகைய வணிகமயப்படுத்தப்பட்ட இக் கிரிக்கெட் விளையாட்டினால் பல்தேசியக் கம்பனிகள் தமது உற்பத்திகளை மக்களிடையே திணிக்க விளம்பரங்கள் மூலம் பிரசாரம் செய்கின்றன. கொக்காக்கோலா, பெப்சி முதல் எரிபொருட்கள் வரையானவற்றுக்கு கிரிக்கெட்டில் முன்னணி வகிக்கும் வீரர்களைப் பயன்படுத்திக் கொள்வதையும் காணமுடிகிறது. அவை மட்டுமன்றி அரசியல்வாதிகளுக்கும் அமைச்சர்களுக்கும் கிரிக்கெட்டின் மூலம் பன்முகப்பயன்கள் சென்றடைகின்றன. அத்துடன் ஒவ்வொரு விளையாட்டுத் தொடருக்குப்பின்பும் பாதுகாப்புக்கென்ற பெயரில் யுத்தத்திற்கும் பெரும் தொகைப் பணம் அன்பளிப்பாகிறது. அத்துடன் அரசியலிலும் இக் கிரிக்கெட் மூலம் செல்வாக்குச் செலுத்தப்படுகிறது.

ஆதலால் கடந்த 3 ஆம் திகதி லாகூரில் இடம்பெற்ற தாக்குதல் கண்டிக்கப்பட வேண்டும் என்பதில் இரு கருத்திற்கு இடமேயில்லை. ஆனால் பணம் சம்பாதிக்கும், ஒரு சிலரின் பைகளை நிரப்பும், மக்களை நுகர்வுக்குத் தூண்டும் வகைகளிலான இக் கிரிக்கெட் விளையாட்டினால் நாட்டு மக்களுக்கோ நாட்டிற்கோ எவ்வித பலாபலன்களும் கிடைக்க மாட்டாது என்பதே உண்மையாகும்.

Friday, February 27, 2009

பயில்நிலம் இதழ் வெளியீடு

பயில்நிலத்தின் இதழ் வெளியீடு கடந்த 22ம் திகதி கொழும்பு ராமகிருஷ்ண மிஷன் விரிவுரை மண்டபத்தில் நடைபெற்றது.

கருத்துரைகளை பேராசிரியர் சி. சிவசேகரம் மற்றும் மு. மயூரன் ஆகியோர் நிகழ்த்தினர்.

பின்னர் "யாரோடு நோக? யார்க்கு எடுத்துரைக்க?" என்ற தலைப்பிலான கவிதா நிகழ்வும் இடம் பெற்றது.

பயில்நிலம் தொடர்புகளுக்கு payilnilam@gmail.com




Thursday, February 26, 2009

பயில்நிலத்தின் மீள் வருகை: மீண்டும் தொடங்கும் மிடுக்கு (ஈழத்து இலக்கியச் சூழலும் இளைய தலைமுறையின் இதழ் வெளியீட்டு முயற்சிகளும்)

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பயில்நிலத்தின் மீள் வருகை மகிழ்வளிக்கிறது. 2004 முதல் 2006 வரை தொடர்ச்சியாக 12 இதழ்களை இக் குழுவினர் வெளியிட்டு உள்ளனர். 3 வருட மௌனத்தின் பின்னர் புதிய இளம் குழுவால் பயில்நிலம் புதுப் பொலிவுடன் மீண்டும் வருகிறது. இன்றைய சூழலில் கூட்டுச்செயற்பாடு என்பது எவ்வளவு கடினமானது என்பதை எல்லோரும் நன்கு அறிவோம். தனி மனித வாதமும் தனி மனித முனைப்பும் முன்னிலைப்படுத்தபடுகின்ற சூழலில் இளையோர் ஒரு இதழைக் கொண்டு வருவது மிகுந்த கவனத்துடன் செய்யப்பட வேண்டியது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவ் வகையில் பயில்நிலத்தின் மீள் வருகை எமது இளம் தலைமுறை குறித்த நம்பிக்கைகளைத் தக்க வைக்க உதவுகிறது.


இன்றைய சூழல் மிகுந்த சவால் மிக்கதாக இருக்கிறது. கூட்டுச்செயற்பாடும் தனி மனிதப் பொறுப்பும் சரியாக விளங்கிக் கொள்ளப்படவேண்டிய தேவையும் கூட்டுச்செயற்பாட்டின் அவசியமும் மிகவும் முக்கியமானது. இளைய தலைமுறையால் ஒரு தரமான இதழைக் கொண்டு வர முடியும் எனப் பயில்நிலம் தனது 12 இதழ்கள் மூலம் நிரூபித்து இருக்கிறது. இப்போது மீண்டும் வந்துள்ள பயில்நிலம் இதழும் அதன் தொடர்ச்சி என்றே கூறமுடியும்.

பயில்நிலத்தின் ஆசிரியத் தலையங்கம் இவ்வாறு சொல்கிறது. "இன்று நடைமுறையிலுள்ள கல்வி முறைமை இளைஞர்களைக் குறுகிய வட்டத்திற்குள் வரையறுத்து விடுகின்றது. இதற்குச் சமூகத்தின் திணிப்பும் காரணமாகின்றது. அத்தகைய பலவீனத்திலிருந்து வெளிவரும் நோக்கில் அவர்களது சிந்தனை, செயற்பாடு, கண்ணோட்டத்தைப் புதிய பரிமாணத்திற்கு இட்டுச் செல்லும் முயற்சியே எமது பயில்நிலம்."

குறைந்த அளவான கவிதைகள் பல வேறுபட்ட விடயப் பரப்புகளில் எழுதப்பட்ட கட்டுரைகள், சிறுகதைகள், பத்திகள், குட்டிக் கதைகள், மொழிபெயர்ப்பு ஆக்கங்கள் என பல்வேறுபட்ட புதிய பரிணாமங்களுடன் பயில்நிலம் மலர்ந்து இருக்கிறது. இவ்விடத்தில் சில முக்கியமான விடயங்களைக் கூறவேண்டும். அந்நிய மேலாதிக்கத்துக்கு எதிரான எந்தப் போராட்டத்திலும் பண்பாட்டுத் துறையில் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் முக்கியமானவை. முற்போக்குச் சிந்தனையாளர்கள் கலை இலக்கியங்கள் சமூகச்சார்பானதும் சமூக முன்னேற்றத்துக்குமான பங்களிப்பைச் செலுத்த வேண்டுமென வற்புறுத்துவர். சமூக விடுதலை இலக்குடையோர் கலை இலக்கியங்கள் அந்த இலக்கிற்குப் பணி செய்ய வேண்டுமென எதிர்பார்ப்பர். அது போலவே அடக்குமுறையாளர் தமது நோக்கங்களைக் கலை இலக்கியங்களூடு முன்னெடுக்கத் தயங்க மாட்டார்கள். அந்த அளவுக்கு, ஆனால் அந்தளவுக்கு மட்டுமே, கலை இலக்கியங்கள் பற்றிய பார்வையில் சமூக விடுதலையாளர்கட்கும் அடக்குமுறையாளர்கட்கும் ஒற்றுமை உண்டு. அதற்கப்பால் அணுகுமுறையிலும் உள்ளடக்கத்திலும் எதிர்மாறான தன்மைகளையே நாம் காணலாம்.

சமூக விடுதலையை வேண்டுவோர் கலை இலக்கியங்கள் சமூகச் சார்புடையனவாக இருப்பதை விரும்புவர். மனிதரின் உரிமைகளையும் மனிதரிடையே சமத்துவ அடிப்படையிலான ஒற்றுமையையும் நீதியையும் நியாயத்தையும் அவற்றுக்கான எழுச்சிகளையும் பேசுவதை வற்புறுத்துவர். அந்த இலக்குடைய படைப்பாளிகள் அவற்றை உணர்த்துகிற விதமாகக் கலை இலக்கியங்களை உருவாக்குவர். ஒடுக்குமுறையாளர்கள் தங்களது நோக்கங்களை அந்த விதமாக வெளிப்படுத்த இயலுமா? இயலாது. எனவே சமூக விழிப்புணர்வை வேண்டி நிற்கிற படைப்புக்களை எதிர்க்க அவர்கள் சமூக உணர்வை மழுங்கடிக்கிற விதமான படைப்புக்களை ஊக்குவிப்பர். பொது மக்களின் இரசனையையும் சிந்தனை ஆற்றலையும் வளர்த்தெடுக்கிற படைப்புகளின் இடத்தில் அவற்றைக் கீழ்த்தரமானவை ஆக்குகிற காரியங்களை அவர்கள் செயற்படுத்துவர். மனிதரைச் சமூகக் கூட்டுணர்வு உடையோராக மாற்றும் முயற்சிகட்கு மாறாகத் தனிமனிதவாதத்தையும் சுய நலப்போக்கையும் வற்புறுத்துவர்.

ஏகாதிபத்தியமோ பிற்போக்காளர்களோ கலை, இலக்கியம், பண்பாட்டுத் துறைகளிற் தங்களது மக்கள் விரோதச் செயல்களை நேரடியாகச் செய்வதில்லை. அவற்றுக்குப் பல்வேறு முகவர்களைப் பாவிப்பர். சமூக உணர்வு போதாத, ஆழமான சமூகச் சிந்தனையற்ற அல்லது சுயநலத்திற்கும் தற்பெருமைக்கும் சுயவிளம்பரத்திற்கும் ஆட்பட்ட ஆய்வறிவாளர்களும் படைப்பாளிகளும் அறிந்தோ அறியாமலோ அவ்வாறான காரியங்களைச் செய்யுங் கருவிகளாகின்றனர்.

இலங்கையில் சமூக உணர்வுள்ள இலக்கிய எழுச்சியில் மட்டுமன்றிப் பொதுவான இலக்கிய எழுச்சியிலும் இடதுசாரிகளும் பிற முற்போக்குச் சிந்தனையாளர்களும் ஒரு தலைமைப் பங்காற்றினர். அதை மறுப்பதற்கான பழமைவாதப் பிற்போக்குவாத முயற்சிகள் படுதோல்வி கண்டன. தேசியவாத இலக்கியத்தின் எழுச்சி கூட முற்போக்கு இலக்கியப் போக்கிலிருந்து எழுந்த சமூகச்சார்பான எழுத்தை உள்வாங்கியே தன்னை அடையாளப்படுத்துமளவுக்குச் சமூகச் சார்பான கலை இலக்கியங்கள் என்ற கருத்தாக்கம் நிலை கொண்டிருந்தது. தூய கலை இலக்கியம் பற்றிப் பேசி முற்போக்கு இலக்கியத்தை நிராகரித்தவர்களே தூய கலை இலக்கியக் கோட்பாட்டை மறந்து தேசியவாதக் கலை இலக்கியங்களைத் தூக்கிப் பிடித்தமை பற்றியும் இங்கு குறிப்பிடலாம். இப்போது எல்லாத் தளங்களிலும் ஏகாதிபத்தியவாதிகள் தங்களது தந்திரோபாயங்களை மாற்றிக் கொண்டுள்ளனர். அவர்களது முகவர்கள் போலி மனிதாபிமான முகத்தைக் காட்டுகின்றனர். இதன் நோக்கங்கள் எப்படியானவையோ அப்படியானவையே கலை இலக்கியத் துறைகளில் நடைபெறும் ஊடுருவல்களின் நோக்கங்களும். இவை குறித்துப் பயில்நிலம் அவதானமாக இருக்க வேண்டும்.

பயில்நிலம் இதழ் பல புதிய விடயங்களைப் பேசுகிறது. பல அறிவியல் செய்திகளைச் சொல்கிறது. விண்ணியல் பற்றி எழுதப்பட்டிருக்கும் ஒரு பத்தியும், சுய ஆளுமை பற்றி எழுதப்பட்டிருக்கும் ஒரு பத்தியும் எமது இளம் தலைமுறை புதிய ஒளியை எம் சமூகத்தில் பாய்ச்சும் என்பதற்கு கட்டியம் கூறுவது போல உள்ளது. குறிப்பாக விண்ணியல் பற்றி எழுதத் தொடங்கியிருக்கும் முயற்சி பாராட்டப்பட வேண்டியது. இது விண்ணியல் பற்றி நாம் அறியாத பல விடயங்களை அறிந்து கொள்ள உதவும் என எதிர்பார்க்கமுடியும். சுய ஆளுமை பற்றி எழுதப்பட்டிருக்கும் பத்தி சில அடிப்படையான செய்திகளைச் சொல்கிறது. குடும்பம் என்ற நிறுவனத்தின் மீது பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்ற போதும் இன்றும் மனித சமூகத்தின் முக்கிய கூறாகவும் தனிமனித வாழ்க்கையுடன் நேரடியாகத் தொடர்புடைய அலகாகவும் குடும்பம் இருக்கின்றது. இந்த ஏற்றத்தாழ்வான சமூகத்திற்கு மாறாக புதிய சமத்துவமான, சமநீதியை நிலைநாட்டக்கூடிய ஏற்றத்தாழ்வற்ற சமூகத்தைப் படைக்க வேண்டுமென்ற விருப்பம் கொண்டுள்ளவர்கள் சுய ஆளுமை தொடர்பான பிரச்சனைகள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளவற்றைத் தட்டிக்கழித்து விடமுடியாது. அவை வெறுமனே தனிப்பட்ட பிரச்சனைகளல்ல. சமூகத்தின் ஏற்றத் தாழ்வான வளர்ச்சியினால் பல்வேறு விதமான சில திட்டமிட்ட நடவடிக்கைகளினால் வளர்க்கப்பட்டுள்ள பிரச்சனைகளுமாகும். எனவே சுய ஆளுமை பற்றி எழுதப்பட்டிருக்கும் பத்தி ஒரு புதிய பார்வையை முன்வைக்கிறது.

புதிய விடயங்களை மட்டும் அல்ல பழைய விடயங்களிலும் பயில்நிலம் அக்கறையாய் இருக்கிறது என்பதை பயில்நிலம் இதழைத் திறந்த உடனேயே தெரிந்து கொண்டேன். இதழில் முதலாவதாக இருக்கும் கட்டுரை பொப்பிசைப் பாடல்கள் பற்றியது ஆகும். கட்டுரையின் முடிவில் "கள்ளுக்கடைப் பக்கம் போகாதே/ காலைப்பிடித்துக் கெஞ்சுகிறேன், கண்ணும் புகைந்திடும்/ நெஞ்சும் வரண்டிடும்/ கைகால் உலர்ந்திடும் இந்தக் கள்ளாலே, ஆச்சி எந்தன் அப்புவும் இந்தக் கடையில் தான்/ அடுத்தவீட்டு வாத்தியாரும் கடையில்தான்/ விட்டமின் பீ எண்டு வைத்தியரும் சொன்னதாலே/ விட்டேனோ கள்ளுக்குடியை நான்" என்ற நித்தி கனகரத்தினத்தின் பாடல் முழுமையாகத் தரப்பட்டுள்ளது.

ஒரு விடுதலைப் போரின் போக்கில் நடக்கும் தவறுகள் விடுதலைப் போராட்டத்துக்குக் கேடானவை. போராட்டத்தின் போக்கில் நிகழும் தவறுகள் உடனுக்குடன் திருத்தப்படாவிடின் போராட்டம் பலவீனமடையும். போராட்டம் பற்றிய விமர்சனங்களிற் சினேகமானவற்றையும் பகைமையானவற்றையும் வேறுபடுத்திக் காணும் தேவையைப் பலரும் மறந்து விடுகின்றனர். பகைமையான விமர்சனங்களிற் கூடப் பயனுள்ள அம்சங்களை எடுத்துக்கொள்ளும் மனப்பக்குவம் ஒரு விடுதலை இயக்கத்துக்கு மிக அவசியம். இது குழவாகச் செயற்படும் எல்லோருக்கும் பொருந்தும். பயில்நிலம் குழுவுக்கும் கூட நான் இதை இங்கே சொல்ல முனைவதன் நோக்கம் பயில்நிலம் குழு விமர்சனங்களைக் கவனமாக அணுகவேண்டும் என்பதாலேயே. விமர்சனம் என்பது அழகியல் சார்ந்ததாக மட்டுமே இருக்கவேண்டும் என்பது அழகியல்வாதிகளது நிலைப்பாடு. ஒரு படைப்பின் அரசியற் சமுதாய முனைப்பை விமர்சிப்பதை இவர்கள் விரும்புவதில்லை.நிறவாதத்தையோ மதவெறியையோ தூண்டும் இலக்கியத்தையோ ஆணாதிக்கத்தையோ சாதியத்தையோ நியாயப்படுத்தும் ஒரு படைப்பையோ வெறுமனே அழகியற் கண்ணோட்டத்தில் விமர்சிப்பது எவ்வகையிலும் நேர்மையான காரியமல்ல. சமூகச் சீரழிவை ஊக்குவிக்கும் படைப்புக்களை அரசியல் ரீதியாக மட்டுமே எதிர்கொள்ள முடியும். பாட்டாளி வர்க்கக் கண்ணோட்டத்திலான படைப்பக்களை ஊக்குவிப்பதும் கலை இலக்கியங்களைப் பாட்டாளி வர்க்கக் கண்ணோட்டதினின்று விமர்சிப்பதும் பாட்டாளி வர்க்கத்தின் வரலாற்றுப்பணி சார்ந்தது.

மனிதத் தேவைகளையும் உணர்வுகளையும் புறக்கணித்துக் கலை இலக்கியங்களைப் படைக்க முடியாது. இந்தத் தேவைகளையும் உணர்வுகளையும் தனிமனிதருக்கே உரியனவாக்கி மனிதரைச் சமூகத்தினின்று பிரித்துத் தனிமனிதத்துவத்தை சமுதாயத்துக்கு முரண்பட்டதாக வளர்க்கும் போக்கு மனித இருப்பின் முக்கியமான ஒரு பகுதியை மறுக்கிறது. பாட்டாளி வர்க்கப் பார்வை மனிதனது இருப்பின் சமுதாயத் தன்மையை வலியுறுத்தி மனிதரது தனித்துவத்தை அங்கீகரிக்கிறது. தனிமனிதரது தேவைகளும் உணர்வுகளும் சமுதாயத்தினின்று பிரித்துப் பார்க்கப்படாமல் உறவுபடுத்திப் பார்க்கப் படுகின்றன. ஒரு படைப்பின் தொனி அதன் படைப்பாளியின் சமுதாயச் சார்பாலும் குறிப்பாக சமுதாயச் சூழலாலும் நிர்ப்பந்திக்கப்படுகின்றன. மனித இருப்பையே நெருக்கடிக்குள்ளாக்கிவரும் ஒரு சமுதாய அமைப்பிற்கு எதிரான போராட்ட உணர்வை வலியுறுத்துவது எமது வரலாற்றுக் கடமை. இதைப் பயில்நிலம் சரியாகச் செய்யும் என எதிர்பார்க்கிறோம்.

இந்த இடத்தில் நவீன உலகின் நாடகமேதைகளுள் ஒருவராகக் கருதப்படும் ஹென்றிக் இப்சன் எழுதிய மக்களின் எதிரி" என்ற நோர்வீஜிய நாடகத்தின் கதை நினைவுக்கு வருகிறது. ஒரு விஞ்ஞானி மனிதருக்குத் தீங்கான ஒன்றைக் கண்டறிகிறார். அதை உலகறியச் செய்வதன் மூலம் தான் மனித இனத்திற்கு நன்மை செய்வதாகவும் அதற்காகத் தனக்கு நன்றியாவது கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கிறார். மாறாக, ஊரில் உள்ள சிலரது நலன்கட்கு அந்த உண்மை பாதகமாக உள்ளதன் விளைவாகத் தனது கண்டுபிடிப்பைத் ‘திருத்தி’ எழுதுமாறு விஞ்ஞானி கட்டாயப்படுத்தப்படுகிறார். அதை அவர் ஏற்க மறுத்து அதன் விளைவுகளை எதிர்கொள்கிறார். இதன் மூலம் வலியுறுத்தப்படுவன இரு விடயங்கள்: உண்மைகள் பங்கப்படுத்தக் கூடாதன. உண்மையைத் திரிப்பதற்கு முற்படுகிறவர்கள் தவிர்க்க இயலாமல் வக்கிர நடத்தை உள்ளவர்களாகிச் சீரழிகின்றனர்.

உண்மை என்பது பெரும்பான்மை வலிமையால் நிறுவப்படுவதல்ல என நாம் அறிவோம். எந்தச் சரியான கருத்தும் முதலில் சிறுபான்மைக் கருத்தாகவே தொடங்கிக் காலப்போக்கில் பெரும்பான்மையினரைத் தன் வசமாக்குகிறது. இதற்கு மனித இன வரலாற்றில் நிறைய ஆதாரங்களைக் காட்டலாம். இதைத் தனிநபர்வாத நியாயங்களுடன் நாம் குழம்பிக் கொள்ள அவசியமில்லை. எந்த ஒரு உண்மையின் பெறுமதியும் அதன் சமூகச் சார்பாகவே தீர்மானிக்கப்படுகிறது என்பது சமூகத்தின் உடனடியான அங்கீகாரத்தை ஒரு உண்மையினதோ அதன் பெறுமதியினதோ அளவுகோலாக்கி விடாது. இதுவும் பயில்நிலம் விளங்கி கொள்ள வேண்டிய ஒன்று. "போர் எங்களை முகத்தில் உற்றுநோக்கியவாறு இருக்கையில், ஆக்கங்களில் அதன் முகமே அதிகம் வரையப்படுவது இயல்பானதே. எனினும் இளம் படைப்பாளிகள் சோர்ந்துவிடக்கூடாது. ஒடுக்குமுறைப்போருக்கு எதிரானதும் நியாயத்திற்கானதுமான குரலாகவே படைப்புக்கள் ஒலிக்க வேண்டும் என்பது எம் எண்ணம்." என்று பயில்நிலத்தின் ஆசிரியத் தலையங்கம் சொல்கிறது.

இந்தப் பயில்நிலம் இதழின் முக்கியமான ஒரு அம்சம் என்னவென்றால் மிகக் குறைவான கவிதைகளே இடம் பெற்று இருக்கின்றன. மற்ற எல்லா இலக்கிய வடிவங்களையும் போலன்றி நீண்டகால மரபு (முறிவுகளுடன் தான்) உள்ள தமிழ்க் கவிதையின் பின்னணியில் அதிகமாக எதிர்பார்க்க எல்லாரையும் போல் எனக்கும் உரிமை உண்டு. இன்று கவிதைத் துறையில் பலரும் புதுக்கவிதையை ஒரு இலகுவான மார்க்கமாகப் பயன்படுத்த முனைந்துள்ளார்களே ஒழிய மரபின் குறைபாடுகட்கு ஈடுகட்டும் ஒரு வலிய ஆயுதமாகப் பயன்படுத்தவில்லையோ என்ற கேள்வி சில சமயம் பயனுள்ள பதில்களைத் தரலாம். ஆனால் இதற்கான பதிலைப் பயில்நிலம் குழுவினரே தரவேண்டும். அதேவேளை இலங்கைத் தமிழ்க் கவிதை பற்றி எனக்குச் சில அச்சங்களும் ஐயங்களும் இருக்கின்றன. கவிதையின் பல்வேறு பரிமாணங்களையும் சாத்தியக் கூறுகளையும் துணிவுடன் அலசி ஆராய்வதில் உள்ள போதாமை, 'சாதனைகள்” பற்றிய சுயதிருப்தி, விமர்சனங்களை ஏற்பதில் தயக்கம், பரஸ்பரம் புகழ்மாலை சூட்டும் குறுகிய வட்டங்கள், எல்லா இலக்கியத் துறைகளையுமே பாதிக்கும். கிணற்றுத் தவளை மனோபாவம் போன்ற பலவற்றை என்னால் உணரமுடிகிறது. இடதுசாரி அரசியல் கோஷங்களையே கவிதையாக்கும் பலவீனத்தை எளிதாகக் கண்டு கொள்ளும் பலரால் சிந்தனைத் தேக்கத்தை அடையாளங் கண்டுகொள்ள முடிவதில்லை.

அலங்கார வார்த்தைகளையும், படிமங்களையும், குறியீடுகளையும் கொண்டு சிந்தனைத் தேக்கத்தை யாருக்கும் தெரியாமல் மூடுவதில் ஒருவரது கவிதை வெற்றி காணலாம். ஆனால் கவிதையின் வளர்ச்சியைச் சிந்தனையின் வளர்ச்சியினின்று பிரிக்க முடியாது. முடங்கிய சிந்தனைச் சூழலில் கவிதையும் முடங்கியே போகும். அவ்வாறு முடங்கிய சிந்தனையின் வழிப்பட்ட கவிதைகளை பிரசுரிப்பதை விட பிரசுரிக்காமல் விடுவது மேல்.

பேசக்கூடாத, பேசப்படாத விடயமாக இருக்கும் பல விடயங்களைப் பேசவே 'பேசப்படாதவை” என்ற பத்தி தொடங்கப்பட்டு இருக்கிறது. அதில் இம்முறை கோழியா முட்டையா எது முதலில் வந்தது? என்ற கேள்விக்கான விஞ்ஞான பூர்வமான பதில் முன்வைக்கப்பட்டு இருக்கிறது. இது வாசித்துப் பார்க்க வேண்டிய ஒன்று. இதே போல அறிவியல் நோக்கில் இரு கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. ஒன்று நனோ தொழில்நுட்பம் மற்றையது பிறப்புரிமைசார் ஆலோசனைகள். இரண்டும் பல புதிய உயிரியல் தொழில்நுட்ப வளர்ச்சி பற்றிய பல பயனுள்ள தகவல்களைத் தருகிறது.

கலப்பு என்ற தலைப்பில் உள்ள லாங்ஸ்டன் ஹியூசின் கவிதை பல கேள்விகளை என்னுள் எழுப்பியது. இன உணர்வு பற்றி யாருமே அதிகம் கூச்சப்படுவதில்லை. சில சமயம் பெருமைப்பட்டுக் கொள்ளக் கூடிய விஷயமாகவே இன உணர்வு இருந்துள்ளது. என்னளவில் இன உணர்வு என்பது ஆழ்ந்த நோக்கில் அர்த்தமற்ற ஒன்று. ஆயினும் சமுதாயத்தில் இனவேறுபாடுகள் உள்ளபோது அவ்வவ்வேறுபாடுகள் வாழ்வின் வெவ்வேறு துறைகளைப் பாதிக்கும்போது அந்த உணர்வைப் பெரும்பாலானோரால் தவிர்க்க முடிவதில்லை.

இன உணர்வு என்பது ஒரு மனிதனது தன்னடையாளங்களில் ஒன்றாகச் செயற்படுகிறது. அது மொழி, மதம், கலாசாரம் போன்ற பல்வேறு வகையில் வெளிப்படும். அது முற்றாகப் புறக்கணிக்கக்கூடிய ஒன்றல்ல. மனித சமுதாயமும் சிந்தனையும் மேலும் வளர்ச்சியடையும்போது இன உணர்வுகள் சற்றே ஒதுங்கி வழிவிடவே செய்யும். ஆயினும் மனிதனை அவன் உள்ளவாறே ஏற்றுக்கொள்ளும் எந்தச் சிந்தனையும் இன உணர்வுகளை மதியாமல் இருக்கமுடியாது. இன்றைய சூழ்நிலையில் இன உணர்வு என்பது இயல்பான ஒன்று என்ற அளவில் மதிக்கப்படவேண்டிய ஒன்றாக உள்ளது. இதைக் கடப்பவர்கள் குறுகிய சுயநலனுக்காக கடப்பவர்களாக இருக்கலாம் அல்லது பரந்துபட்ட மனித இன முழுமையினது நலன் நாடுபவர்களாக இருக்கலாம். எனவே இன உணர்வு இல்லாமை என்பது மட்டும் முற்போக்கான ஒன்றாகிவிடாது. அதன் இடத்தில் பரந்துபட்ட மானுட உணர்வு உள்ளதா அல்லது வெறும் சுயநலமோ சுரண்டும் வர்க்க நலமோ உள்ளதா என்பதையொட்டியே இன உணர்வு இல்லாமையை மதிப்பிட முடியும்.

மனிதர் மத்தியில் இன உணர்வுகள் வேறுபடும் அளவுகளில் இருக்கலாம். தன் இனத்தின் நலனை மற்ற இனங்களின் நலன்கட்கு முரணானதாகக் காணவும் காட்டவும் முனையும் போதும் தன் இனத்தின் இயல்புகளை இன்னொரு இனத்தினதும் மேலான ஒன்றாகக் காட்ட முனையும் போதும் இன உணர்வு இனவாதமாகிறது. இது மற்ற இனங்கள் பற்றிய இழிவான மதிப்பீடு, கலாசார வேறுபாடுகளை ஏற்றத்தாழ்வுகளாகத் தரம் பிரித்தல், பிரச்சினைகளை இனமொன்றின் கண்ணோட்டத்தில் மட்டுமே தனிமைப்படுத்திக் காண முனைதல் போன்று தன்னை வெவ்வேறு விதங்களில் வெளிப்படுத்திக் கொள்கிறது. இன உணர்வு இனவாதமாகும்போது முரண்பாடுகள் பகைமைத் தன்மை பெற ஆரம்பிக்கின்றன. பகைமை உணர்வுகள் வளர்ந்து சகிப்புத் தன்மையின் எல்லை மீறப்படும்போது இனவாதம் இன வெறியாகிறது.

ஒரு சமுதாயம் முன்னேறிய “நாகரிக” சமுதாயம் என்பதால் அங்கே இனவாதமும் இனவெறியும் இல்லை என்றாகாது. ஐக்கிய அமெரிக்காவில் நீக்கிரோக்களுக்கு எதிரான இனவெறி, தென்னாப்பிரிக்க வெள்ளை இனவெறி, ஹிட்லரின் ஜேர்மனியில் ஆரிய இனவெறி இவையெல்லாம் பின்தங்கிய சமுதாயங்கட்குரியவல்ல. இனவாதமும் இனவெறியும் தொற்று நோய்களைப் போல் பரவுகின்றன. ஒரு இனத்தின் இனவாதமும் இனவெறியும் மற்ற இனங்களிடையே இனவாதத்தையும் இனவெறியையும் தூண்டி வளர்த்து, அதன் மூலம் தம்மையும் வளர்த்துக் கொள்கின்றன. இன்றைய காலகட்டத்தில் தேசியவாதத்தின் அடிப்படையையும் அதன் வளர்ச்சிப் போக்கினையும் மக்கள் விளங்கிக்கொள்ளும் தேவை அதிகரித்துள்ளது. குறிப்பாகத் தேசியவாதத்தினுள் அடங்கியிருக்கும் சாதக-பாதக அம்சங்களைப் பகுத்தறிந்து கொள்வது அவசியமாகிறது. தேசியவாதத்தின் எல்லைகளையும் அதனால் எவ்வளவு தூரம் சாதகமான பாதையில் பயணிக்க முடியும், அதற்கு அப்பால் அது ஏற்படுத்தக் கூடிய ஆக்கபூர்வமற்ற அழிவுகளின் தன்மை எத்தகையவை என்பதைத் தூரநோக்குடன் கண்டறிதல் தேவையாகிறது.

படைப்புக்கும், படைப்பாளிகளுக்குமான உறவும் உருவாக்கமும் முக்கியமானது. அடுத்து படைப்புக்கும் வாசகனுக்குமான உறவும், உரையாடலும் முக்கியத்துவம் பெறுகிறது. இவை அனைத்தையும் சாத்தியமாக்கப் பயில்நிலம் முனைய வேண்டும் என்பதே என் வேண்டுகோள்.
எல்லாவித அதிகாரங்களுக்கும் வாய்பேசா மௌனியாக இருந்துவிட்டு அதிகாரம் தமது இருப்பை அசைக்கின்றபோது கிணற்றுக்குள் இருந்து வெளியில் வந்த மனிதனைப் போல் சமூகத்தை எதிர்கொள்கிற மனநிலையிலிருந்து புதிய இளம் தலைமுறை வெளியேற வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் மாற்றங்களை வேண்டிப் பயணிக்கும் பயில்நிலம் தடைகளைக் கடந்து பயணிக்கும் என்ற நம்பிக்கையில்......
இது தொடர்பான மயூரனின் பதிவு: http://mauran.blogspot.com/2009/02/blog-post.html

Friday, February 13, 2009

நேபாள மக்கள் போராட்டத்தின் 13வது ஆண்டு நிறைவு: நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள்

நேபாள மாஓவாதிகள் தங்களது மக்கள் போராட்டங்களை தொடங்கி இன்றுடன் 13 வருடங்கள் ( 1996 பெப்ரவரி 13) முடிவடைன்றன. நேபாள மக்களாலும் மாஓவாதிகளாலும் பத்து வருட இடைவிடாத மக்கள் போராட்டத்தின் விளைவாக மிகப் பெரிய மாற்றத்தை நேபாளத்தில் கொண்டு வர முடிந்து இருக்கிறது. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் இன்று ஒரு மிக முக்கியமான சந்தியில் நிற்கிறது. நேபாள மக்கள் போராட்டத்தின் 13வது ஆண்டு நிறைவின் நினைவாக இக் கட்டுரை எழுதப்படுகிறது.

நேபாளம் தென்னாசியாவின் மிகப் பின்தங்கிய நிலையில் உள்ள நாடாயிருப்பதற்கான காரணங்கள் பல. அவற்றுள் நிலவுடைமைச் சமூகத்திற்குப் பாதுகாவலாய் இருந்த முடியாட்சியினது பங்கு பெரியது. நேபாளத்தில் மன்னராட்சியின் வரலாறு முடிவுக்கு வந்தது மக்கள் போராட்டத்தின் விளைவாலேயே. அந்த முடியாட்சி ஒரு பயங்கரமான கொடுங்கோன்மையாக நடந்து கொண்டபோது கூட அதை ஆதரித்து வந்தவர்கள் இருக்கிறார்கள். மன்னராட்சினின்று நேபாளத்தின் விடுதலையின் பயனை மக்கள் அனுபவிக்காமல் தடுப்பதற்கு அமெரிக்காவும் இந்தியாவும் மும்முரமாயிருந்தன. அமெரிக்கா வெளிவெளியாகவே மன்னராட்சியை ஆதரித்தது. மன்னராட்சி தடுமாறித் தத்தளித்த நிலையில் றிச்சட் பௌச்சர் என்கிற அமெரிக்காவின் தென்னாசிய அலுவற் பொறுப்பாளர் நேபாள ராணுவத் தலைமையுடன் கலந்தாலோசனைகளை நடத்தினார். ஆனால் நேபாள மக்களின் போராட்டம் இதை எல்லாம் தாண்டி வெற்றி பெற்றது.

இந்தியா மன்னராட்சிக்கு மிகவும் உடந்தையாயிருந்தது. பழைய மன்னரது குடும்பத்தின் படுகொலையிலும் இந்தியாவின் பங்கு பற்றிப் பேசப்பட்டமை நினைவிலிருத்தத்தக்கது. முழு அதிகாரங்களையும் மன்னர் க்யானேந்திரர 1-2-2005 அன்று தனதாக்கிய பின்பும் இந்தியா அவருக்கு ஆதரவாயிருந்தது. மன்னராட்சிக்கு எதிரான வெகுசன இயக்கம் வலுவடைந்த பின்பும் மன்னராட்சியின் கீழான பாராளுமன்ற சனநாயகம் என்ற நிலைப்பாட்டையே இந்தியா ஆதரித்தது. மன்னராட்சி பாராளுமன்ற சனநாயகத்தை மீட்க மறுத்தால் மாஓவாதிகள் தலைமையிலான ஒரு மக்கள் குடியரசு உருவாகும் என்ற ஒரு சூழ்நிலையிலேயே இந்திய ஆளும் நிறுவனம் மாற்று வழிகளைத் தேடியது.

சீன, வியற்நாமிய, பிலிப்பினிய கம்யூனிஸ்றுக்கள் உட்பட்ட மாக்ஸிய லெனினியர்கள் யாவரும் எல்லாக் காலத்திலும் அமைதியான முறையில் நியாயமான தீர்வுகளைப் பேச்சுவார்த்தைகள் மூலம் பெற ஆயத்தமாகவே இருந்துள்ளனர். வீணான உயிரிழப்புக்களைத்
தவிர்ப்பதில் மிக அக்கறையுடன் இருந்து வந்துள்ளனர். போராட்டம் என்பதை அவர்கள் பல வேறு தளங்களிலும் நிகழ்த்துவதற்கு ஆயத்தமாயிருந்துள்ளனர். அமைதியாக வென்றெடுப்பதை எதிரி குழப்புவான் என்று அறிந்து எச்சரிக்கையுடன் செயற்படுவதும் குழப்புகிற சூழ்நிலையில் தேவைக்கேற்ப ஆயுதம் ஏந்தியோ ஏந்தாமலோ போரிடுவதும் தான் மாக்ஸிய லெனினிய போராட்ட அணுகுமுறை.

க்யானேந்திராவை எதிர்க்கத் திராணியில்லாது, 1-2-2005க்குப் பின்பும் மன்னருடன் சமரசம் செய்தவை தான் நேபாள பாராளுமன்றக் கட்சிகள். இதில் நேபாள ஐக்கிய மா. லெ கம்யூனிஸ்ற் கட்சியும் குற்றவாளியே. இப்படிப்பட்ட கட்சிகளால் எதுவுமே இயலாத நிலையில் மாஓவாதிகளது போராட்டம் நேபாள அரசாங்கத்தை விரும்பிய போது செயலற்றதாக்கக் கூடியதாக வலிமை பெற்று வந்தது. நம்பிக்கைத் துரோகியான க்யானேந்திராவை எதிர்த்து முறியடிக்கும் வலிமை பாராளுமன்றக் கட்சிகட்கு இருக்கவில்லை. ஏழுகட்சிகள் ஒரு கூட்டணி அமைத்துப் போராடினாலும் மன்னராட்சியை அவர்களால் எதுவும் செய்ய இயலவில்லை. 2005 நவெம்பர் மாதம் மாஓவாதிகளுடன் ஒரு உடன்படிக்கை செய்த பின்னரே அவர்களால் மன்னருக்கு எதிராகத் தைரியமாகப் போராட முடிந்தது.

இந்திய ஆளும் வர்க்கத்தில் ஒரு பகுதியினர் ஏழு கட்சிக்கூட்டணிக்கும் மாஓவாதிகட்குமிடையிலான உடன்படிக்கைக்கு ஒத்துழைத்தனர். அதன் மூலம் மாஓவாதிகளைச் 'சனநாயக நீரோட்டத்திற்கு" கொண்டுவரலாம் என்பதும் பாராளுமன்ற அரச அதிகாரத்தில் அவர்கள் பங்காளிகளான பின்பு அவர்களை வளைத்துப் போடலாம் என்பதும் ஒரு பகுதியினரது கணிப்பு. இன்னொரு பகுதியினர் மாஓவாதிகளைப் பாவித்து பாராளுமன்ற ஆட்சியை நிறுவிய பின்பு மாஓவாதிகளை ஓரங்கட்டலாம் என்பதாகும். அதைவிட ஏழுகட்சிக் கூட்டணி மாஓவாதிகளுடன் ஒத்துழைப்பதை இந்திய அரசாங்கம் விரும்பவில்லை. அந்த ஒத்துழைப்பை முறியடிக்கத் தமது கையாளான கொய்ராலாவைப் பாவித்தார்கள். எதிர்பார்த்ததை விட வேகமாகவே நேபாள அரசர் பின்வாங்க நேரிட்டது. அந்த நிலையில் அவர்கள் அடுத்த ஆண்டு தேர்தல்களை நடத்துவது, உடனேயே தேர்தல் என்று பேரம்பேசி எதுவும் எடுபடாமல் பழைய பாராளுமன்றத்தைக் கூட்டுவது என்று சொன்னவுடனேயே அதை ஏற்குமாறு கொய்ராலாவையும் ஏழுகட்சிக் கூட்டணியையும் இந்தியா வற்புறுத்தியது. அவர்கள் அதற்கு உடன்பட்டனர். அதையே இறுதித் தீர்வாக்கி, மன்னராட்சிக்குக் கீழ்ப்பட்ட பாராளுமன்ற சனநாயகத்தை நிறுவுவதற்கு இந்தியா சொன்னபடி நடக்க கொய்ராலா ஆயத்தமானார். இதற்கு எதிராக மாஓவாதிகள் எச்சரித்துக் கடுங் கண்டனம் தெரிவித்தனர்.

மாஓவாதிகள் 2005 யூன் மாதத் தொடக்கத்தில் இரண்டு லட்சம் மக்களை நேபாளத்தின் தலை நகரத்தில் அணிதிரட்டி ஒரு மாபெருங் ஆர்ப்பாட்டக் கூட்டத்தை நடாத்தினர். தமது
மாபெரும் மக்கள் பொதுக்கூட்டத்தின் மூலம் முடியாட்சியைப் படியிறங்கச் செய்தது யாருடைய வலிமை என்பதை மாஓவாதிகள் உலகிற்குத் தெளிவாக்கியுள்ளனர்.

புதிய அரசியல் யாப்பை வரையவும் மக்கள் தீர்ப்புக்கமைய ஒரு புதிய ஆட்சி முறையையும் பல கட்சிச் சனநாயகத்தையும் உருவாக்குவதற்கான அரசியல்யாப்பு அவை ஒன்றைத் தெரிவுசெய்து உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை அவர்கள் வற்புறுத்தினர். அதை ஏற்பதற்குத் தயங்குகிறவர்கள் மக்களை ஏமாற்றத் தயங்கமாட்டார்கள் என்று அறிந்த மாஓவாதிகள் 2005 யூன் மாதத் தொடக்கத்தில் இரண்டு லட்சம் மக்களை நேபாளத்தின் தலை நகரத்தில் அணிதிரட்டி ஒரு மாபெருங் ஆர்ப்பாட்டக் கூட்டத்தை நடாத்தினர். மன்னருக்கெதிரான போராட்டத்தின் எக் காலகட்டத்திலும் திரண்டதை விடப் பல மடங்கான மாபெரும் மக்கள் திரட்சியின் பின்பு ஏழு கட்சிகள் கூட்டணியினர் மாஓவாதிகளுடன் பேசி ஒரு புதிய அரசியல் யாப்புக்கான நடவடிக்கைகள் பற்றி உடன்பாடு கண்டுள்ளனர். மாஓவாதிகள் தமது மாபெரும் மக்கள் பொதுக்கூட்டத்தின் மூலம் முடியாட்சியைப் படியிறங்கச் செய்தது யாருடைய வலிமை என்பதை உலகிற்குத் தெளிவாக்கியுள்ளனர்.

இப்போது மாஓவாதிகளை மெச்சிப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துகிற முயற்சியில் பலர் இறங்கியுள்ளனர். மாஓவாதிகள் என்ன அடிப்படைகளின் கீழ் பாராளுமன்ற முறையை ஏற்க முன்வந்தனர் என்றோ அவர்கள் உருவாக்க முயலுகிற பாராளுமன்ற முறை எப்படியிருக்கும் என்றோ இதுவரை சாதித்த சமூக விடுதலைகளின் எதிர்காலம் என்ன என்றோ இவர்களுக்கு அக்கறையில்லை. ஆயுதப் போராட்டப் பாதையை மறுத்தால் அதுவே போதுமானது.

இதில் இன்னொரு விடயமும் முக்கியமானது. மாஓவாதிகள் வெறுமனே ஆயுதப் போராட்டம் மட்டும் நடத்தவில்லை. அவர்கள் காணிச் சீர்திருத்தம் பெண்ணுரிமை, சாதிய ஒழிப்பு, இன சமத்துவம் போன்ற பல வேறு நடவடிக்கைகளையும் மக்களின் கூட்டு முற்சியால் ஒரு நெடுஞ்சாலை உட்பட்ட நிர்மாண வேலைகளையும் முன்னெடுத்துள்ளனர். இவை பற்றிப் பேசாமல் விடுவதன் மூலம் மாஓவாதிகளது செல்வாக்கு அவர்களது கைகளிலிருக்கிற துப்பாக்கியிலேயே தங்கியுள்ளது என்ற பொய்யான பிரசாரம் வலுப்பெறுகிறது.

சீன, வியற்நாமிய, பிலிப்பினிய கம்யூனிஸ்றுக்கள் உட்பட்ட மாக்ஸிய லெனினியர்கள் யாவரும் எல்லாக் காலத்திலும் அமைதியான முறையில் நியாயமான தீர்வுகளைப் பேச்சுவார்த்தைகள் மூலம் பெற ஆயத்தமாகவே இருந்துள்ளனர். வீணான உயிரிழப்புக்களைத் தவிர்ப்பதில் மிக அக்கறையுடன் இருந்து வந்துள்ளனர். போராட்டம் என்பதை அவர்கள் பல வேறு தளங்களிலும் நிகழ்த்துவதற்கு ஆயத்தமாயிருந்துள்ளனர். அமைதியாக வென்றெடுப்பதை அமைதியாக வென்றெடுப்பதும் அதை எதிரி குழப்புவான் என்று அறிந்து எச்சரிக்கையுடன் செயற்படுவதும் குழப்புகிற சூழ்நிலையில் தேவைக்கேற்ப ஆயுதம் ஏந்தியோ ஏந்தாமலோ போரிடுவதும் தான் மாக்ஸிய லெனினிய போராட்ட அணுகுமுறை.
மாஓவாதிகள் வெறுமனே ஆயுதப் போராட்டம் மட்டும் நடத்தவில்லை. அவர்கள் காணிச் சீர்திருத்தம் பெண்ணுரிமை, சாதிய ஒழிப்பு, இன சமத்துவம் போன்ற பல வேறு நடவடிக்கைகளையும் மக்களின் கூட்டு முற்சியால் ஒரு நெடுஞ்சாலை உட்பட்ட நிர்மாண வேலைகளையும் முன்னெடுத்துள்ளனர். இவை பற்றிப் பேசாமல் விடுவதன் மூலம் மாஓவாதிகளது செல்வாக்கு அவர்களது கைகளிலிருக்கிற துப்பாக்கியிலேயே தங்கியுள்ளது என்ற பொய்யான பிரசாரம் வலுப்பெறுகிறது.
மாஓவாதிகளின் ஆயுதங்களைக் கீழே போடச் சொல்லுகிற திரிபுவாதிகள் அவர்கள் எந்தச் சமூக நீதிக்காக ஆயுதம் ஏந்தினார்களோ அந்தச் சமூக நீதியை மக்களுக்குக் கிடைக்கச் செய்கிற சூழ்நிலை உண்டு என்று சொல்வார்களா? அதற்கான உத்தரவாதம் அவர்களிடம் உண்டா? திரிபுவாதிகள் பெரிதும் அஞ்சுவது மாஓவாதிகளது ஆயுதப் போராட்டத்துக்கல்ல. அவர்களது போராட்ட வெற்றிகள் மக்களை ஒரு மாபெரும் போராட்டச் சக்தியாக மாற்றிவிடும் என்பதையிட்டே அவர்கள் அஞ்சுகிறார்கள்.

2008 மார்ச் மாதம் 10ம் திகதி நேபாளத்தில் நடந்த பொதுத் தேர்தல் பாராளுமன்றத்திற்கான ஒன்று அல்ல. அரசியல் அமைப்பு ஒன்றினை வரைவதற்கான அரசியல் நிர்ணய சபையைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலாகும். இவ்வாறு ஒரு தேர்தல் இடம் பெறுவதை நேபாளத்தின் மன்னராட்சி ஆதரவாளர்களும் நிலப்பிரபுத்துவ முதலாளித்துவ பிற்போக்கு சக்திகளும் விரும்பவில்லை. அவ்வாறே இந்திய அமெரிக்க மேலாதிக்க சக்திகளும் தேர்தலை ஒத்திப் போடவே முயன்றன. ஏற்கனவே இரு தடவைகள் அவ்வாறு பின் போடப் பட்டது. ஆனால் மாஓவாத கம்யூனிஸ்ட் கட்சியினதும் ஏனைய ஜனநாயக சக்திகளதும் வெகுஜனப் போராட்ட வற்புறுத்தலின் விளைவாகவே தேர்தல் இடம் பெற்றது.

இத் தேர்தலில் மாஓவாத கம்யூனிஸ்ட் கட்சி தனிப் பலமுடைய கட்சியாக வெற்றி பெற்றிருக்கிறது. அது ஏனைய மாக்சிச, ஜனநாயக, தேசிய இனக் கட்சிகளுடன் இணைந்து அரசியல் நிர்ணய சபையின் பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் சுமார் இரண்டரை நூற்றாண்டு கால மன்னராட்சிக்கு முடிவு கட்டி விட வாய்ப்பு உருவாகி உள்ளது. மக்கள் ஜனநாயகம் தோற்றுவிக்கப்பட்டுப் புதிய ஜனநாயகத்தின் ஊடாக சோ~லிசத்தை நோக்கி வீறு நடைபோடக் கூடிய ஆரம்ப வெற்றி இத் தேர்தலில் மூலம் கிடைத்திருக்கிறது.

நேபாள மாஓவாத கம்யூனிஸ்ட் கட்சியின் வெற்றி குறுக்கு வழிகளில் பெறப்பட்ட ஒன்று அல்ல. பன்னிரண்டு ஆண்டுகளாக அக் கட்சி திட்டவட்டமான தொலை நோக்குத் தெளிவுடன் கூடிய கொள்கைத் திட்டத்தை முன் வைத்து நடாத்தி வந்த மக்கள் யுத்தப் பாதையிலான ஆயுதப் போராட்டத்தின் பின்பாகப் பெறப்பட்ட தேர்தல் வெற்றியாகும். அங்கு ஆயுதப் போராட்டம் என்பது வெறும் கண்மூடித்தனமான வழிகளில் முன்னெடுக்கப் படவில்லை. வர்க்கப் போராட்டப் பாதையில் வழிநடந்து விவசாயிகள், தொழிலாளர்கள், நிலமற்றோர், தாழ்த்தப்பட்டோர், பழங் குடியினர், ஒடுக்கப் படும் தேசிய இனத்தவர், பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், புத்திஜீவிகள், மற்றும் தேசப் பற்று மிக்கோர் எனப் பலதரப்பட்ட மக்களையும் கொள்கை வேலைத்திட்ட அடிப்படையில் அணி திரட்டிய போராட்டமாகவே முன்னெடுக்கப் பட்டது. கட்சியின் உறுதியான தலைமைத்துவத்தின் கீழ் வெகுஜன அமைப்புகள் மக்கள் மத்தியில் அர்ப்பணிப்பு மிக்க வேலை முறைகளை முன்னெடுத்தன. அதே வேளை மாஓசேதுங் சிந்தனை அடிப்படையில் மக்கள் படை தோற்றுவிக்கப் பட்டு மக்கள் யுத்தத்தின் பன்முகப் போர்த் தந்திரங்களும் பயன்படுத்தப் பட்டன. கிராமப்புறத் தளப் பிரதேசங்கள் தோற்றுவிக்கப் பட்டன. கெரில்லா யுத்த வழி முறைகள் பின்பற்றப்பட்டன.

நிலப் பிரபுத்துவத்தின் கீழ் ஒடுக்கப்பட்டிருந்த விவசாயிகள் போராட்டத்தில் முக்கிய பாத்திரம் வகித்தனர். ஏனைய ஒடுக்கப்பட்ட பிரிவு மக்களும் பெண்களும் இளந் தலைமுறையினரும் போராட்டக்களத்தில் முன்னின்றனர். ஒரு முழுமையான விடுதலைப் போராட்டமாக விருத்தி பெற்றுக் கொண்டமையைப் பொறுக்க முடியாத அமெரிக்கா, நேபாள மாஓவாத கம்யூனிஸ்ட் கட்சியை தனது பயங்கரவாதப் பட்டியலில் பதிவு செய்து கொண்டது.

இத்தகைய நேபாள மக்களின் போராட்டத்தால் பல பிரதேசங்கள் கட்சியினதும் படைகளினதும் கட்டுப்பாட்டின் கீழ் வந்தன. அவ்வாறு அமைந்த பிரதேசங்களில் நிலச் சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டு விவசாயிகளுக்கும் நிலமற்றோருக்கும் நிலம் பகிர்ந்தளிக்கப்பட்டது. விடுதலைப் பிரதேசங்களின் அபிவிருத்தி குறிப்பிட்டளவு ஏற்படுத்தப்பட்டதுடன் கல்வி சுகாதாரம் உட்பட சமூக பண்பாட்டு அம்சங்கள் திட்டமிட்ட புதிய வழிகளில் மேற்கொள்ளப் பட்டன. குறிப்பாக சாதிய ஏற்றத் தாழ்வுகள் நிராகரிக்கப்பட்டுச் சமத்துவ நிலை வலியுறுத்தப்பட்டது. தேசிய இனங்களின் தனித்துவங்கள் பேணப்பட்டன.

மேலும் பெண்கள் மீதான அடக்கு முறைகள் பல நிலைகளிலும் ஒழிக்கப் படுவதற்கான முன் முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டன. பெண் விடுதலைக்கான ஆரம்பச் செயற்பாடுகள் திட்டமிட்டுச் செயல் வடிவம் பெற்றன. இவை யாவும் சுமார் பத்தாண்டுக் கால விடுதலைப் போராட்டச் சூழலில் மேற்கொள்ளப்பட்டவையாகும். ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான விடுதலைப் போராட்டத்தில் பின் பற்ற வேண்டிய வழிமுறைகள் யாவும் நேபாளத்தின் விசேட நிலைமைகளுக்கு ஏற்றவாறு முன்னெடுக்கப்பட்டன. மன்னராட்சியை வீழ்த்தி ஒழிப்பது என்பது குறிக்கோளாக்கப்பட்டு அதற்கான ஆயுதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட அதே வேளை நிலப் பிரபுத்துவத்தின் சகல பழைமைவாதப் பிற்போக்குக் கருத்தியல்களும் சிந்தனை செயல் முறைகளும் மக்களுக்கு எடுத்து விளக்கி நிராகரிக்க வைக்கப்பட்டன. ஆயுதங்களைக் காட்டி அச்சுறுத்தி பயத்தின் காரணமாகக் காரியங்கள் முன்னெடுக்கப்படுவது தவிர்க்கப்பட்டு அறிவியல் பூர்வமாகவும் அரசியல் ரீதியாகவும் மக்கள் அறிவூட்டப்பட்னர். இதனை வெகுஜன அரசியல் மயப்படுத்தல் மூலமே சாத்தியமாக்கினர். ஒரு நிலவுடைமை மன்னராட்சியில் இந்து ராச்சியம் என்ற பெயரில் நிலவுடைமைக் காலக் கருத்தியல் சிந்தனை இறுக்கத்தின் கீழ் நேபாளக் கம்யூனிஸ்ட்டுக்களின் வேலை முறையானது மக்களை வென்றெடுக்கத்தக்க வகையில் கடுமையான வேலை முறைகளினால் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். அவர்களது வேலை முறை தென்னாசியச் சூழலில் உள்ள நாடுகளின் போராட்ட சக்திகளால் படிக்கப்பட வேண்டியதாகும்.
ஆயுதங்களைக் காட்டி அச்சுறுத்தி பயத்தின் காரணமாகக் காரியங்கள் முன்னெடுக்கப்படுவது தவிர்க்கப்பட்டு அறிவியல் பூர்வமாகவும் அரசியல் ரீதியாகவும் மக்கள் அறிவூட்டப்பட்னர். இதனை வெகுஜன அரசியல் மயப்படுத்தல் மூலமே சாத்தியமாக்கினர். ஒரு நிலவுடைமை மன்னராட்சியில் இந்து ராச்சியம் என்ற பெயரில் நிலவுடைமைக் காலக்கருத்தியல் சிந்தனை இறுக்கத்தின் கீழ் நேபாளக் கம்யூனிஸ்ட்டுக்களின் வேலை முறையானது மக்களை வென்றெடுக்கத்தக்க வகையில் கடுமையான வேலை முறைகளினால் அமைந்திருந்தமை
குறிப்பிடத்தக்கதாகும்.

அதே வேளை மன்னராட்சியையும் நேபாள முதலாளித்துவ பிற்போக்கு சக்திகளையும் பாதுகாத்து நிலை நிறுத்த இந்திய அமெரிக்க ஆளும் வர்க்கங்கள் சதா முயன்று வந்துள்ளன. அமெரிக்காவின் 'சி.ஐ.ஏ." இந்தியாவின் 'றோ" போன்ற உளவு அமைப்புகள் நேபாளத்தில் தமது கைவரிசைகளைக் காட்டியே வருகின்றன. அவற்றை எல்லாம் முறியடிக்கும் வகையில் கம்யூனிஸ்ட்டுக்களின் தலைமையிலான வெகுஜன அரசியல் மார்க்கம் உறுதியானதாக இருந்து வருகின்றது.

இவை அனைத்தினதும் ஒட்டுமொத்த வெற்றியைத் தான் அண்மைய தேர்தல் வெற்றி எடுத்துக் காட்டுகிறது. அமெரிக்க மேற்குலகு சாராது இந்தியாவின் ஆதரவு இன்றி சீனாவின் அரவணைப்புப் பெறாது முற்றிலும் நேபாள மக்களின் மீது நம்பிக்கை வைத்தே அங்கு விடுதலைப் போராட்டம் முன்னெடுக்கப் பட்டது. சோவியத் யூனியனிலும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் சோசலிசம் வீழ்ச்சி கண்ட சூழலில், சீனாவில் சோ~லிசப் பாதையில் விலகல் ஏற்பட்ட நிலையில், மாக்சிசமும் சோ~லிசமும் மரித்துவிட்டதாக ஊடகங்கள் ஊளையிட்டு வந்த சூழலிலேயே இமயமலை உச்சியில் செங்கொடி பட்டொளி வீசிப் பறக்க விடப் பட்டுள்ளது. தென்னாசியக் கம்யூனிஸ்டுக்களும் புரட்சிகர மக்களும் விடுதலைக்காக முயன்று வரும் மக்களும் நேபாளத்தின் செங்கொடிகளால் உற்சாகமும் உறுதியும் பெற்று நிற்கின்றனர். பல ஆயிரம் கம்யூனிஸ்ட்டுக்களாலும் போராடிய மக்களாலும் அர்ப்பணிக்கப்பட்ட உயிர்த் தியாகத்தால் அங்கு செங்கொடிகள் உயர்ந்து நிற்கின்றன. நேபாளத்தின் விடுதலைப் போராட்டம் சமகால விடுதலைப் போராட்டங்களுக்கு முன்னுதாரணம் காட்டி நிற்கின்றது. இருபத்தியோராம் நூற்றாண்டிற்கான புதிய ஜனநாயகத்திற்கும் சோசலிசத்திற்குமான போராட்டப் பாதையில் நேபாளத்திலிருந்து படிக்க நிறையவே உண்டு.

இருப்பினும் இதுவரையான நேபாள மாஓவாத கம்யூனிஸ்ட் கட்சியின் வெற்றிகரமான புரட்சிகரப் பாதையைத் திசை திருப்பிக் கொள்ள உள் நாட்டிலும் உலக அளவிலும் பல்வேறு பிற்போக்கு சக்திகள் கடும் முயற்சிகள் மேற்கொள்வார்கள். அதே வேளை பல்வேறு சவால்கள் சோதனைகள் தடைகள் என்பனவற்றை எதிர் கொண்டு சரியான புரட்சிகர நிலைப்பாட்டில் நேபாள மாஓவாத கம்யூனிஸ்ட் கட்சி வீறு நடைபோட வேண்டும் என்பதே உலக மக்கள் அனைவரினதும் பெரு விருப்பாகும்.

நேபாள மாஓவாத கம்யூனிஸ்ட் கட்சியானது நேபாளத்தின் விசேட நிலைமைகளுக்கு ஏற்பவும் மாக்சிச லெனினிசக் கோட்பாட்டு நிலையிலும் கொள்கைகளை முன்னெடுக்கும் வழிமுறைகளிலும் பயணிக்க வேண்டிய இமாலயப் பொறுப்பைச் சுமந்து நிற்கிறது. ஏனெனில் வீழ்த்தப்படும் நிலப்பிரபுத்துவ முதலாளித்துவ சக்திகள் அமெரிக்க இந்திய ஆளும் வர்க்க சக்திகளுடன் இணைந்து சும்மா இருக்கப் போவதில்லை. இந்திய மக்கள் உள்ளிட்ட தென்னாசிய மக்களும் உலக மக்களும் நேபாளத்தின் வென்றெடுக்கப்பட்டு வரும் மக்கள் சக்திக்கு உறுதுணையாக இருப்பது அவசியமாகிறது.

இந்த இடத்தில் நேபாள மாஓவாதி மையக் குழு உறுப்பினர் தோழர் கஜுரேல் சொல்லிய ஒரு விடயத்தை இங்கு நினைவூட்டல் பொருத்தம்.

"எங்களுடைய மக்கள் விடுதலை இராணுவம் 20,000 வீரர்களைக் கொண்டிருக்கிற வலிமையான இராணுவம். ஐ.நா. படைகளை விட இரு மடங்கு பெரிய இராணுவம். இதைக் கண்டு அமெரிக்க ஏகாதிபத்தியமே அஞ்சக் கூடிய நிலை இங்கிருக்கிறது. அந்த இராணுவம் முகாம்களிலே அடைக்கப் பட்டிருக்கிறது. எங்களுடைய ஆயுதங்கள் பெட்டகங்களிலே வைத்து பூட்டப் பட்டிருக்கின்றன. சில புரட்சியாளர்கள் நாங்கள் எங்களுடைய ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு விட்டோம். ஆயுதங்களைக் கையளித்து விட்டோம் என்று கருதிக் கொண்டு குழப்பம் அடைந்திருக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல.

பத்தாண்டுக் காலம் நடந்து வந்திருக்கிற மக்கள் போர் அங்கே இன்றைக்கு இருக்கிற அரசியல் சூழலைத் தோற்றுவித்து இருக்கிறது. அந்த ஆயுதப் போராட்டம் தோற்றுவித்த அரசியல் சூழல் எத்தகையது என்றால் ஆயுதமேந்தி நாங்கள் அடையக் கூடிய நோக்கத்தை அமைதியான முறையிலே அடைகிற வாய்ப்பை அது ஏற்படுத்தி இக்கிறது. எனவே தான் நாங்கள் ஆயுதப் போராட்டத்தை நிறுத்தி வைத்திருக்கிறோம். தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறோமே தவிர ஆயுதப் போராட்டத்தை ஒரேயடியாக கைவிட்டு விடவில்லை என்பதைத் தெளிவாக்க விரும்புகிறேன்.

எங்களுடைய நண்பர்களும் தோழர்களும் கவலைப் படுகிறார்கள். எங்களுடைய மக்கள் விடுதலைப் படை பாசறைகளுக்குள்ளே அடைபட்டு இருக்கிறனவே ஆயுதங்கள் பெட்டகங்களிலே பூட்டி வைக்கப்பட்டு இருக்கின்றனவே என்று அவர்கள் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். நான் அவர்களுக்குச் சொல்கிறேன். கவலைப்பட வேண்டாம். பெட்டகங்களைப் பூட்டி அதனுடைய சாவி எங்களுடைய படைத் தளபதியின் கையிலேதான் இருக்கிறது. எப்போது தேவை என்றாலும் திறந்து எடுத்துக் கொள்ள முடியும் என்று தெரியப்படுத்த விரும்புகிறேன்.

மறு தரப்பிலேயே வேறு சிலர் இருக்கிறார்கள். ஊதாரணமாக, அமெரிக்க ஏகாதிபத்தியம் மாஓவாதிகள் மாறிவிட வில்லை என்று சொல்கிறது. மாஓவாதிகள் தங்கள் கருத்தை மாற்றிக் கொள்ளவில்லை என்று பிற்போக்காளர்கள் சொல்கிறார்கள். மாஓவாதிகள் மாறாவில்லை. அவர்களை மாற்ற வேண்டும் என்று இந்திய அரசும் அப்படித்தான் சொல்கிறது. நேபாளத்திலே இருக்கிற பிற்போக்கு அமைப்புகள் சொல்கின்றன. நேபாள காங்கிரஸ் நேபாள (ஐக்கிய மார்க்சிய-லெனினிய) கம்யூனிஸ்ட் கட்சி போன்ற அமைப்புகளெல்லாம் சொல்கிறார்கள். மாஓவாதிகள் மாறவில்லை என்று நான் அவர்களுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் நாங்கள் வந்திருப்பது எங்களை மாற்றிக் கொள்வதற்காக அல்ல. உங்கள் மாற்றுவதற்காகவே நாங்கள் வந்திருக்கிறோம்.

எங்கெல்லாம் தேசிய ஒடுக்குமுறை நிலவினாலும் அதை எதிர்த்து விடுதலைக்காகப் போராடுகிற உரிமை மக்களுக்கு உண்டு. நேபாளத்திலேயே சின்னஞ சிறு தேசிய இனங்கள் சில இருக்கின்றன. அந்த தேசிய இனங்கள் தங்கள் விடுதலைக்காகப் போராடுகின்றன. ஏனென்றால் அவை தேசிய ஒடுக்கு முறைக்கு உள்ளாகியிருக்கின்றன. அந்த தேசிய இனங்களின் போராட்டத்தை எங்கள் கட்சி தான் தலைமை ஏற்று நடத்துகிறது. தேசிய விடுதலைக்காக நாங்கள் போராடுகிறோம். உலகெங்கும் தேசிய விடுதலை இயக்கங்களை நாங்கள் ஆதரிக்கிறோம்."

நேபாள மக்கள் போராட்டம் நமக்கு சொல்லும் பாடங்கள் பல. வெறுமனே ராணுவப் பதிலடிகள் மூலம் தமிழ் மக்களின் இருப்பைப் பாதுகாக்க இயலாது. இது இன்று வரையிலான போராட்ட அனுபவம். மக்களின் பாதுகாப்பையும் நலன்களையும் முதன்மைப்படுத்துகிற விதமாகக் காரியங்கள் மேற்கொள்ளப்பட்ட காலங்கள் இருந்துள்ளன. ஆனாலும் அவை மக்களை முதன்மைப்படுத்துகிற முறையில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூற இயலாது. தமிழ்; மக்களுக்குத் துரோகமாக நடக்கிறவர்கள் எனக் கருதப்படும் எல்லாரையும் அழித்தும் விடுதலையை வெல்ல இயலாது. மனிதர்களது தவறுகளை அவர்களது சூழ்நிலைகளில் வைத்துப் பார்ப்பதும் அவர்களை விடுதலைப் போராட்டத்தின் தரப்பிற்கு வென்றெடுப்பதும் ஒரு விடுதலைப் போராட்டத்தின் முக்கியமான தேவை. இவ் விடயத்தில் தமிழ் மக்களின் நலனும் பாதுகாப்பும் பற்றி அக்கறையுள்ள அனைவருமே கவனங் காட்டவேண்டும். தவறினாற் போரை யார் வென்றாலும் வெல்லாவிட்டாலும் மிக அதிகம் இழப்போர் தமிழ் மக்களாகவே இருப்பர்.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் இன்று தவிர்க்க இயலாத ஒரு வரலாற்றுத் தேவை. ஆனால் அது ஆயுதம் தாங்கிய போர் என்ற ஒற்றைப் பரிமாணத்திலிருந்து விடுபட வேண்டும். அதைப் பரந்துபட்ட மக்கள் போராட்டங்களாகவும் மக்கள் யுத்தமாகவும் வெகுசன அரசியல் இயக்கமாகவும் விரிவுபடுத்துவதற்கான வழிகள் தேடப்பட வேண்டும். அதன் மூலமே தமிழ்மக்களிடையே அதிக பட்ச போராட்ட ஒற்றுமையையும் பங்குபற்றலையும் பெற இயலும்.

இலங்கையின் பொருளாதாரம் பூரணமாகவே சீரழிந்தாலும் பரவாயில்லை, இலங்கை முழுவதும் அந்நியரது ஆதிக்கத்துக்குட்பட்டுப் போனாலும் பரவாயில்லை, ஒரு தேசிய இனமாகத் தமிழ் மக்களின் இருப்பையும் அவர்களது சமத்துவத்தையும் அடிப்படை உரிமைகளையும் ஏற்க மாட்டோம் என்ற நோக்குடனேயே இன்று ஆட்சியிலுள்ள பேரினவாதிகள் செயற்படுகின்றனர். எதிர்க் கட்சிப் பேரினவாதிகளிற் சிலருக்கு அது போதாததாயுள்ளது. வேறு சிலருக்கு அது பற்றிய அக்கறை இல்லை. இதை விடத் திறமையாகப் போரை நடத்தக் கூடியவர்களையே யூ.என்.பி. தேடுகிறது. பேரினவாதப் பாராளுமன்றக் கட்சிகளையும் தலைவர்களையும் பாராளுமன்ற அரசியலையும் நம்பி ஏமாற இனியும் இயலாது.

ஏகாதிபத்திய 'சர்வதேச சமூகத்தின்" ஆசிகளுடன் பேரினவாதம் தமிழ் மக்களை ஒடுக்குகிற காரியத்தில் முனைப்பாக இயங்குகிறது. எனவே அதில் எப் பகுதியினதும் நல்லெண்ணத்தை நம்பித் தமிழ் மக்கள் ஏமாற இயலாது. ஆனால் தனது அடக்குமுறையைத் தமிழ் மக்களுடன் நிறுத்திக் கொள்ள இயலாமல் பேரினவாத அதிகார பீடம் தடுமாறுகிறது. சிங்கள மக்கள் எதிர் நோக்குகிற பொருளாதாரப் பிரச்சனைகள் புதிய எதிர்ப்புச் சக்திகளைக் கிளறிவிடுகிற அபாயம் பற்றி அது அறியும். எனவே சிங்களப் புலிகள், தொழிற்சங்கப் புலிகள், ஊடகப் புலிகள் என்று முத்திரை குத்தி அந்த எதிர்ப்பின் விதைகளை முளை விடாமலே சாகடிக்க முயல்கிறது. இதைத் தமிழ்த் தலைமைகள் என்றுமே உணருமா என்பது பற்றி மிகுந்த ஐயத்துக்கு இடமுண்டு.

எனவே தான், மூன்றாவது சக்தி ஒன்று எழுச்சி பெறுவதற்கான தேவையை மட்டுமில்லாமல் அதற்கான வாய்ப்பையுங் கொண்டதாக இன்றைய காலகட்டம் அமைந்துள்ளது. இடதுசாரித் தோழர்களும், சமூக அக்கறையும் துணிவுமுள்ள பத்திரிகையாளர்களும் தொழிற்சங்கவாதிகளும் கடத்தப்படுவது பொது எதிரியின் வலிமையின் அடையாளமல்ல. அவை எதிரியின் இயலாமையின் வெளிப்பாடுகள். அதைக் கண்டு நாட்டின் சனநாயக முற்போக்கு இடதுசாரிகள் தயங்கி நின்றால் நாடு ஃபாஸிஸத்தை நோக்கித் தள்ளப்படும். மாறாக அவற்றை எதிர்த்து நிற்கப் புதிய தந்திரோபாயங்களையும் புதிய வகையிலான வெகுசனப் போராட்டங்களையும் வகுத்து முன்னேற முயல்வார்களாயின் பொது எதிரியின் பலவீனங்கள் வேகமாகவே அம்பலமாகி நாட்டின் மக்கள் புது நம்பிக்கை பெறுவர்.

இது சோதனை மிகுந்த காலமாகத் தோன்றலாம். ஆனால் இதுவே எதிர்காலத்தின் வெற்றிகட்கான உறுதியான அத்திவாரங்களை இடுவதற்கான காலமுமாகும். நேபாள மக்கள் போராட்டம் சொல்லும் முக்கியமான செய்தியும் அதுதான்.



Friday, January 23, 2009

நாயின் பதிலடி

நான் ஒரு பிச்சைக்காரனை போல கந்தை உடுத்து குறுகிய ஒழுங்கை வழியாக நடந்துசெல்ல கனவு கண்டேன்
நாய் ஒன்று எனக்குப்பின்னால் நின்று குலைக்கத்தொடங்கியது. நான் வெறுப்புடன் திரும்பிப் பார்த்து “ஏய் எச்சில் நக்கும் ஜென்மமே வாயை மூடு” என்று கத்தினேன். அது தனக்குள்ளேயே சிரித்தது.
ஓ இல்லை இந்த விசயத்தில் நான் மனிதனை போல் இல்லையே.
“என்ன!” கோபம் பொங்க அதனை இழைக்கப்பட்ட பெரிய அவமதிப்பாக கருதினேன்.
“எனக்கு கூற வெட்கமாக இருக்கிறது செப்பிற்கும் வெள்ளிக்கும் பேதம் காணவோ, பட்டுக்கும் பருத்திக்கும் இடையே வேற்றுமை காணவோ, அதிகாரவர்க்கத்தையும் பாமர மக்களையும் வித்தியாசம் காணவோ எசமானர்களையும் அடிமைகளையும் வேறுபடுத்திக்காணவோ எனக்கு தெரியவில்லையே….”
நான் திரும்பி ஓட்டம் பிடித்தேன்.
கொஞ்சம் பொறு நாமிருவரும் இன்னும் கொஞ்சம் பேசுவோமே என்று உரத்த குரலில் என்னை நிற்கும்படி கூறியது.
ஆனால் எவ்வளவு வேகமாக ஒடமுடியுமோ அவ்வளவு வேகமாக ஓடி எனது கனவிலிருந்து வெளிவந்து எனது கட்டிலில் சாய்ந்தேன்.
தமிழாக்கம் நடனசபாபதி, லூ ஷுன் போர்க்காலச்சிந்தனைகள், தேசிய கலை இலக்கியப்பேரவை

Wednesday, January 7, 2009

மத நம்பிக்கையின் ஏமாற்றமும் மூடநம்பிக்கைகளின் சோகமும்

இந்திய ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூரில் 15ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சாடுந்தாதேவி கோவிலில் நவராத்திரி தினத்தன்று 150 பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். இப்படியான கோவில் உயிரிழப்புக்கள் அங்கு இது தான் முதல் தடவையல்ல. இந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் இமாச்சல் பிரதேசத்தில் உள்ள நைனா தேவி கோவிலில் பாறைச் சரிவு என்ற வதந்தி ஏற்பட்டு நெரிசலில் 162 பேர் பலியாகினர். 2005 ஆண்டு ஜனவரி மாதத்தில் மகாராஷ்ராட்டிரத்தின் மந்திராதேவி கோவிலில் 340 பேர் பலியாகினர். இவை நூற்றுக்கு மேற்பட்டோர் பலியாகிய சம்பவங்களாகும். ஆனால் அடிக்கடி பல பத்துப் பேர் வரை முக்கிய கோவில்களில் உயிரிழந்த வண்ணமே உள்ளனர்.

பழைமையின் பேரால் அற்புதங்கள் என்ற கட்டுக் கதைகளால்
அறியாமையும் வறுமையும் கொண்ட மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள்.


இவ் உயிர் இழப்புகளை எந்தத் தீவிரவாதப் பட்டியலில் சேர்ப்பது?
மத மூட நம்பிக்கைத் தீவிரவாதம் என்று கூறினால் ஏற்றுக் கொள்ளப்படுமா? இவ்வாறு உயிரிழப்போர் சாதாரண உழைக்கும் மக்களாவர். ஏனெனில் இந்தியக் கோவில்களில் வசதி வாய்ப்புப் பெற்ற பெரும் பணக்காரர்கள் முதலாளிகள் பெரும் அரசியல் புள்ளிகள் கடவுளின் இருப்பிடத்திற்கு அண்மையாகச் சென்று அருள் வாங்கிச் செல்ல உரிய ஏற்பாடுகள் தாராளமாக உண்டு. அதற்குரிய தொகைகளும் பெரியனவாக இருக்கும்.

ஆனால் சாதாரண பக்தர்கள் சிறிய தொகை செலுத்திப் பெரிய அளவில் அருள் வாங்க முண்டியடித்து நெரிசல் பட்டு உயிர் இழக்கின்றனர். இவை எதனைக் காட்டுகின்றன? கோவில்களும் கடவுளர்களும் வர்க்கம் சாதி பதவி அந்தஸ்துப் பார்த்தே 'அருள் புரிகிறார்கள்" என்பது தான்.

இந்தியா சாதிகளின் நாடு மட்டுமன்றி மதங்களினதும் மூடநம்பிக்கைகளினதும் நாடுமாகும். பழைமையின் பேரால் அற்புதங்கள் என்ற கட்டுக் கதைகளால் அறியாமையும் வறுமையும் கொண்ட மக்கள் ஏமாற்றப் படுகிறார்கள். தமது வறுமை, வேலையின்மை, நோய்கள், அன்றாடப் வாழ்க்கைப் பிரச்சினைகள் போன்றவற்றுக்குத் தீர்வு இல்லாத சூழலில் மக்கள் மீண்டும் மீண்டும் கோவில்கள் நோக்கியே தள்ளப்படுகிறார்கள்.

மூட நம்பிக்கைக்குள் மேன்மேலும் அமிழ்த்தப்படுகிறார்கள். புதிய புதிய கோவில்களும் கடவுள்களின் புதிய அவதாரங்களும் தோன்றி மக்களை திசை திருப்பிய வண்ணமே உள்ளனர்.

பிராமணியக் கோவில்களுக்கு அப்பால், ஒவ்வொரு சாதியிலும் நவீன அவதாரங்கள் ஆச்சிரமங்களும் கோவில்களும் அமைத்து அவற்றை வணிக மையங்களாக்கிக் கொள்கின்றன. இந்த அவதாரங்கள், தொடுகை செய்தும், கட்டிப்பிடித்தும், கைகள் உயர்த்திப் பொருட்களை வரவழைத்தும் பிள்ளைவரம், அற்புதங்கள் என்ற பெயரில் மக்களை மயக்கி வருகின்றனர்.

இதன் மூலம் சமூக நெருக்கடிகள் அரசியல் பிரச்சனைகள் அவற்றுக்கான காரணங்கள் பற்றி அறியவோ அணிதிரளவோ தமக்குரிய போராட்டங்களைத் தாமே நடத்தவோ முன்வராதவர்களாக மக்கள் ஆக்கப்படுகின்றனர்.

இந் நிலை இந்தியாவில் மட்டுமன்றி இலங்கையில் இன்றைய யுத்த நெருக்கடியின் மத்தியிலும் இந்த வகை ஏமாற்றுக்குள் தொடர்கின்றன.

தமது வாழ்க்கைப் பிரச்சினைகட்குத் தீர்வு இல்லாத சூழலில் மக்கள் கோவில்கள் நோக்கித் தள்ளப் படுகிறார்கள். மூட நம்பிக்கைக்குள் அமிழ்த்தப் படுகிறார்கள். புதிய புதிய கோவில்களும் அவதாரங்களும் தோன்றி மக்களை திசை திருப்பிய வண்ணம் உள்ளன.

புதிய புதிய கோவில்கள் பெரியளவில் கட்டியெழுப்பப்பட்டு அவற்றுக்குப் தங்கம் வெண்கலம் வெள்ளி போன்றவற்றால் அலங்கரிப்புகள் செய்து 'புனிதங்கள்" ஏற்றப்படுகின்றன. அண்மையில் ஆடி மாதப் பாற்குடப் பவனி கொழும்பில் பல கோவில்களில் நடாத்தப்பட்டது. வெள்ளவத்தையில் உள்ள ஒரு கோவிலில் இருந்து இரண்டாயிரம் பெண்கள் பாற் குடம் தலையில் வைத்து ஒரே நிறச் சேலைகள் பாவாடைகள் அணிந்தவாறு பிரதான வீதிகளில் பக்தியைக் காட்டி ஊர்வலம் வந்தனர். ஒரு குடத்திற்குக் கோவில் நிர்வாகம் ஐயாயிரம் ரூபா வசூலித்ததாகவும் அறிய முடிகிறது. ஒரு குடத்தில் இரண்டு லீற்றர் பால் இருந்தது. அவ்வாறு சுமார் நாலாயிரம் லீற்றர் பால் ஊர்வல முடிவில் அம்மனுக்கு ஊற்றப்பட்டு கழிவு நீர் வாய்க்காலில் ஓட விடப்பட்டதாம்.

இதனைப் பக்தி என்பதா காசு மிஞ்சிய கொழுப்புத்தனம் என்பதா மூட நம்பிக்கை கொண்ட பக்தி என்பதா எனப் புரியவில்லை.

இது போன்ற கொழும்பின் பெரிய கோவில்களின் நிகழ்வுகள் ஆடம்பரமாகவும் அசத்தல்களாகவும் இடம் பெறுவது இன்றைய யுத்த சூழலில் வழமையாகி விட்டது.

வன்னியில் குழந்தைகளுக்குப் பால் மா கிடைக்கவில்லை. நோயாளர்களுக்கு மருந்து இல்லை. மக்களுக்கு உணவு பெற முடியவில்லை. ஆனால் தலைநகரில் திருவிழாக்களும் வீதிவலங்களும் பெருவிழாக்களும் ஆடம்பரமாக நடாத்தப்படுகின்றன. விலை உயர்ந்த பட்டாடைகள் கழுத்துக் கைகால்களில் தங்க நகைகள் தத்தமது அந்தஸ்தை வெளிக்காட்டி நிற்கின்றவாறு பெண்களும் ஆண்களும் நடந்து கொள்கின்றனர்.

இவர்களையும் இந் நிகழ்வுகளையும் பார்க்கும் பேரினவாதிகள் 'தமிழர்களுக்கு எங்கு என்ன பிரச்சினை இருக்கிறது? சுதந்திரமாகவும் செழிப்பாகவும் தானே இருக்கிறார்கள்" எனக் கூறிச் சோற்றுப்பதம் காட்ட நிற்கிறார்கள். இவற்றை ஒரு கணம் இன்றைய வடக்கு கிழக்கின் அவல வாழ்வுடன் இணைத்துப் பார்க்கும் போது தான் பிரச்சினைகளின் உள்ளார்த்தத்தைப் புரிந்து கொள்ள இயலுமாகிறது.

Tuesday, January 6, 2009

நினைவூட்ட வேண்டியவை பற்றி

இந்தியா பற்றிய மயக்கங்கள் நம்மிடைய கலையவிடாமல் தடுப்பதில் நமது அரசியல் தலைவர்கள் முதலாக அறிஞர் பெருமக்கள் எனப்படுவாரும் பத்திரிகைகளில் அரசியல் ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வருகிறவர்களும்வரை பலரும் தீவிரமாகவே உள்ளனர்.

எனவேதான் சில விடயங்களைப் பற்றித் திரும்பத் திரும்ப நினைவூட்ட வேண்டிய தேவை நம்மிற் சிலருக்கேனும் உள்ளது. இந்தியக் குறுக்கீட்டை எதிர்க்கிற எவரும் சீன ஆதரவாளராகவோ பாகிஸ்தானின் நண்பராகவோ வேறெந்த நாட்டினதும் நலனை வலியுறுத்தும் ஒருவராகவோ இருக்க வேண்டியதில்லை. இந்தியக் குறுக்கீட்டை எதிர்க்கிற எவரும் எல்லா அந்நிய நாடுகளினதுங் குறுக்கீட்டையும் எதிர்க்கிறவராக இல்லாது போனால் இந்தியக் குறுக்கீடு பற்றிய அவரது நிலைப்பாடு நியாயமற்றதாகிவிடும்.

இவ்விடயத்தில் இந்தியாவை விமர்சித்துக் கொண்ட இந்தியாவின் தவறான அணுகுமுறையைச் சீனாவினதும் பாகிஸ் தானினதும் நோக்கங்கள் எனக் கூறப்படுகிறவற்றின் அடிப்படையில் விளக்கவும் நியாயப்படுத்தவும் சிலர் வெகுவாக முயல்வதைக் காணலாம். இது முன்கூறிய நோயின் இன்னொரு வகை.

கம்யூனிஸ்ற்றுக்கான ரஷ்ய முகவர்கள் என்றும் சீன முகவர்கள் என்றும் வசைபாடிய காலம் கடந்துவிட்டது. எனினும், எந்தவொரு கம்யூனிஸ்ற்றும் இந்த நாட்டின் எந்தப் பிரச்சினையையும் தீர்க்க ரஷ்யா குறுக்கிட வேண்டுமென்றோ சீனா குறுக்கிடவேண்டும் என்றோ சொன்னதில்லை.

அப்படிச் சொல்லியிருப்பார்களானால் அது அவர்கள் இந்த நாட்டின் மக்களுக்குக் கேடு நினைத்தவர்களாயிருப்பர். ஒவ்வொரு சமூக விடுதலை எழுச்சியினின்றும் கற்க வேண்டும் என்றும் வெற்றி பெற்ற எழுச்சிகளையடுத்துச் சமூக நிதியை நிலைநாட்டிய நாடுகளினின்று கற்க வேண்டும் என்றும் பயனுள்ள நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் சொல்வது சரியானதும் தவையானதுமாகும்.

யாரிடமும் இருந்து கற்க மாட்டாம் என்று சொல்கிற மூடர்கள் இருக்கிறார்கள். அவர்களால் மக்களுக்கோ நாட்டுக்கோ ஒரு நன்மையும் இல்லை.

இந்தியக் குறுக்கீடு என்று சொல்லுகிற போது நம் மனதில் இருப்பது இந்திய அரசின் குறுக்கீடுதான். அது இந்தியாவில் ஆட்சிப் பொறுப்பில் இருப்பது எந்தக் கட்சி என்றோ என்னவிதமான கூட்டணியா என்பது பற்றியதல்ல. இந்திய அரசு என்பது இந்தியாவின் பெரும் முதலாளிகளுடைய நலன்களையும் பெருங் காணிச் சொந்தக்காரர்களுடைய நலன்களையும் பணி நிற்கிற ஒரு சமூக அமைப்பின் காவலனாகச் செயற்படுகிற ஒரு நிறுவனம். பொலிஸ், நீதிமன்றம், இராணுவம், அரச நிறுவன அமைப்புகளும் பல்வறு அதிகாரிகளும் ஆலாசகர்களும் அதன் பகுதிகள். அங்க ஒவ்வொருவரும் தனி மனிதர்களாகத் தாற்றமளித்தாலும் அவர்களால் தனிமனிதர் களாகச் சிறு எல்லைகட்கு உட்பட்ட செயற்பட இயலும். அவ்வாறு செயற்பட்டுச் சில சீர்திருத்தங்கட்கு உதவியவர்கள் உள்ளனர்அவர்கள் நல்லவர்கள் அதற் கப்பால் அடிப்படையான சமூக அமைப்பை மாற்ற அவர்களுக்கு வலிமை இல்லை.

சமூகத்திலிருந்து எழும் நெருக்கு வாரங்களே அப்படிப்பட்ட சீர்திருத்தங் களுக்கான தவையையும் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்பை யும் வழங்குகின்றன. சில சமயங்களில் செல்வாக்குள்ள சிறுபான்மையினரால் சமூக நீதிக்கான சீர்திருத்த நடவடிக்கைகளை நிறைவற்றாமற் தடுக்க இயலும். உதாரணமாக, பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு பற்றி மண்டல் ஆணைக் குழு முன்வைத்த பரிந்துரைகள் உயர் சாதியினராலும் வசதிபடைத்த வர்க்கத்தினராலும் எதிர்க்கப்பண்ண ஒருவர் தீங்கிழைத்ததையடுத்து அப்படித்தான் கிடப்பில் போடப்பட்டன. ஒவ்வாத அதிகாரத்தில் உள்ளவர்களால் சட்டத்திற்கு உட்பட்டும் வேண்டிய போது சட்டத்தை மீறியும் தமது நலன்களைப் பாதுகாப்பதற்கான வல்லமை இருந்து வந்துள்ளது.

எனவதான், சமூக நீதிக்காகப் போராடுகின்றவர்கள் இருக்கிற சமூக அமைப்பின் சட்டங்கட்கு உட்பட்டு வெல்லக்கூடியவை எவை என்பது பற்றித் தெளிவாக இருக்க வேண்டும். அவ்வாறு வெல்ல இயலாதவற்றைச் சட்ட ரீதியான பாராட்டங்கள் மூலம் புதிய சட்டங்களை ஆக்கி வெல்ல இயலுமா என்று ஆராய வேண்டும். அதன் பாக்கில் சட்டத்திற்கு வெளிய நின்று போராடவேண்டியவை எவை என்று விளங்கும். இருக்கிற ஆட்சி அமைப்பைத் தூக்கி எறியாமல் இந்தியாவின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிர்காலம் இல்லை என்ற உண்மை அப்பாது தெளிவாகும். அதைச் செய்யப் போராடுகிறவர்கள் பயங்கரவாதிகளாக்கப்படுகின்றனர். சட்டத்தை மீறாமல் சமூக ரீதியை வென்றெடுக்க இயலாது என்ற நிலையிலய மக்கள் சட்டவிராதமாகப் பாராடுகின்றனர். அப்பாது அரசு வன்முறையைப் பாவிக்கிறது. அதிகார வர்க்கமும் வன்முறையைப் பாவிக்கிறது. எனவ, உரிமைப் போராட்டமும் வன்முறையைப் பாவிக்க நேருகிறது.

பல சமயங்களில் ஒடுக்குமுறையாளர்கள் தாக்கும் வரை மக்கள் காத்திருக்க இயலாது. அவர்கள் எதற்கும் ஆயத்தமாக இருக்க வண்டியுள்ளது. அதைக் காரணங்காட்டியும் அரச வன்முறைக்கு எதிரான பதிலடிகளைக் காரணங்காட்டியும் எல்லாவிதமான எதிர்ப்புகளையும் அரசு பயங்கரவாதம் என்று முத்திரை குத்த இயலும். என்றாலும் எல்லாவிதமான வன்முறைகளும் பயங்கரவாதமாகக் கொள்ளப்படுவதில்லை. பொலிஸ், இராணுவ வன்முறைகள் மட்டுமன்றி இந்துத்துவ வன்முறை இதுவரை பயங்கரவாதமாக அறிவிக்கப்படவில்லை. ஆகமிஞ்சித் தனிமனிதர்கள் தண்டிக்கப்படுகின்றனர ஒழிய அவர்களுக்குப் பின்னாலுள்ள பயங்கரவாத மதவெறி அமைப்புகளில் எதுவும பயங்கரவாத அமைப்பு என்று தடைசெய்யப்படவில்லை. இந்தப் பின்னணியிலய இந்திய அரசு பயங்கரவாத அமைப்புகள் என்று தடைசெய்துள்ள அமைப்புகளைக் கருத வேண்டியுள்ளது.

அவை ஏன் அவ்வாறு தடைசெய்யப்பட்டுள்ளன என்று கவனிக்க வேண்டியுள்ளது. சத்திஸ்கார் மாநிலத்தில் பழங்குடியினரிடைய மாஓவாதிகள் செல்வாக்கு வளர்ந்து வருவதைத் தடுக்க 2004 முதல் ஸல்வா ஜுடும் என்கிற பயங்கரவாத அமைப்பு இந்திய அரசால் ஊட்டி வளர்க்கப்பட்டுள்ளது.

பொதுவாக,அபிவிருத்தி என்ற பேரால் பழங்குடியினரின் பொருளாதாரமும் சமூக இருப்பும் பெரும் மிரட்டலுக்கும் அழிவுக்கும் முகங்கொடுக்க நேர்ந்துள்ளது. அதன் பயனாக மற்கு வங்காளக் கிராமங்களை அந்நியருக்கு வழங்குகிற முயற்சியை (நந்தி கிராமம்) எதிர்த்து மக்கள் போராடியுள்ளனர்.

இந்தியப் பெரு முதலாளி டாட்டாவை நுழையவிடாது (சிங்கூர்)மக்கள் போராடி யிருக்கிறார்கள். போராடி வென்றிருக்கிறார்கள். அவர்களது போராட்டங் கேட்கும் பயங்கரவாத முத் திரை குத்தப்பட்டது. மிக அண்மையில் அத மாநிலத்தில் ஒரு பழங்குடிப் பிரதேசத்தில் (லால்கர்ஹ்) இந்தியப் பொலிஸையும் "அபிவிருத்திக்காரர்களையும்' நுழையவிடாமல் மக்கள் தடைசெய்துள்ளார்கள். இது ஒரு புதிய போராட்டமுறை. இந்த மக்கள் இயக்கத்திற்கும் மாஓவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டுள்ளது. பொலிஸார் விசாரித்த பாது ஒரு பழங்குடிப் பெண்மணி "அப்படியானால் நாங்கள் எல்லாரும மாஓவாதிகள் தான்' என்று பதில் கூறியிருக்கிறார்.

எல்லா ஆயுதப் போராட்டங்களும் புரட்சிகரமானவை அல்ல. பயங்கரவாதம் கணிசமாகவ உள்ள போராட்டங்கள் உள்ளன. அடிப்படையிலய பயங்கரவாத முறையிலான போராட்டங்கள் உள்ளன. இவ்வாறான போராட்ட அமைப்புகள் பலவற்றுக்கு வெகுசன ஆதரவு இல்லை. மும்பைப் பயங்கரவாதத்தை இந்தியாவில் உள்ள முஸ்லிம்களா மாஓவாதிகள் எவருமா அங்கீகரிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

அதை விடுதலைப் புலிகளுடன் உறவுபடுத்துகிற இலங்கை அரசுசார்ந்த முயற்சிகட்கு ஒத்தூதிய இந்திய அதிகாரிகளும் உள்ளனர். இங்கெல்லாம் பயங்கரவாத்ததை முறியடிக்க அரசு தனது பங்கரவாதத்தையும் அடக்குமுறையையுங் கட்டவிழ்த்து விடுகிறதயொழிய அவ்வாறான பயங்கரவாதத்தின் விளைநிலம் எது என்று தடி அறியவா அதற்கான விஷ வித்துகள் எவை என்று விசனித்து அவற்றைக் களையவா முயல்வதில்லை. ஏனெனில், தீரவிசாரித்தால் விளைநிலங்கட்கும் வித்துகட்கும் அரச ஒடுக்குமுறைய காரணமாக இருப்பது தெரியவரும்.

எனவதான் எளிமையான ஆக்கபூர்வமான தீர்வான சமூக நீதிக்குப் பதிலாக பயங்கரவாத ஒழிப்பு என்கிற அழிவுமிக்க சிக்கலான தீர்வு நாடப்படுகிறது.

அமெரிக்காவின் உலகப் பயங்கரவாத ஒழிப்பின் பாடங்களை இந்திய ஆட்சியாளர்கள் கற்க ஆயத்தமாக இல்லை. இந்தப் பின்னணியிலய இந் தியாவில் தடைசெய்யப்பட்ட இயக்கங்கட்கு ஆதரவாகப் பசுவார் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற காரிக்கைகளை நாக்க வண்டும். இவை சனநாயக விராதமானவை, கருத்துச் சுதந்திரத்தை மறுப்பவை.

தடைசெய்யப்பட்ட ஒரு அமைப்பிற் செயற்படுவாரைச் சட்டம் தண்டிக்கிறது ஒரு விடயம். தடைசெய்யப்பட்ட அமைப்பின் நியாயத்தை எடுத்துச் சொல்வதையும் தடையை நீக்கக் கோருவதையும் தண்டனைக்குரியதாக்குவது இன்று ஒருசில அமைப்புகளைப் பாதிக்கலாம். நாளை அதுவ இன்று கடும் நடவடிக்கை கோருவோரைத் தண்டனைக்குரியாராக்கலாம்.

ஞாயிறு தினக்குரலில் கோகர்ணன் எழுதிய "மறுபக்கம்" பத்தியிலிருந்து.....