Thursday, October 30, 2008

போராட்டங்களில் நாடக அரங்கத்தின் வகிபாகம்

ஒரு புலக்காட்சி ஊடகம் என்ற வகையில், எழுத்தறிவற்ற பாமரமக்களையும் சென்றடையக்கூடியது அரக்காற்றுகையாகும். மக்கள்நிலைப்பட்ட அல்லது மக்களால் முன்னெடுக்கப்படுகின்ற போராட்டங்களின் பிரதான பிரசார ஊடகமாக நாடகங்களே திகழ்ந்து வந்திருக்கின்றன. மக்கள் போராட்டங்களைப்பொறுத்தவரையில் அதன் பெருவாரியான பிரதிநிதிகள் உழைக்கும் மக்களைச்சேர்ந்த பாமர மக்களே. போராட்டங்களை முன்னேடுக்கும் மக்கள் சார்பு சக்தியானது பலவகையான ஊடகங்களை மக்களை அறிவூட்டவும் எழுச்சியூட்டவும் பயன்படுத்துவது வழமை.

பெரும்பாலன மக்கள் போராட்டங்கள் இடம்பெறும் பிரதேசங்களில் இலத்திரனியல் ஊடகங்கள் எல்லாம் அடக்கியாழும் வர்க்கத்தின் கைக்கூலிகளாகவே செயற்பட்டு வருகின்றன. இதனால் அவை புரட்ட்சியின் போராட்டத்தின் எதிர் ஊக்கிகளாகவே நோக்கப்படவேண்டியன. மேலும் அச்சு ஊடகங்களும், அடக்கியாழும் சக்திகளின் வண்ணமயமான அச்சு ஊடகங்களுடன் போட்டியிட்டு மக்களை சென்றடய வேண்டியவையாகவுள்ளன. அத்துடன் பாமர மக்களின் எழுத்தறிவு மட்டமானது அவ்வடைவுக்கு பெரும் தடையாகவே அமைந்துவிடுகிறது. ஆக பாமர மக்களை வெற்றிகரமாக சென்றடையக்கூடியதும், இலகுவாக கருத்துக்களை புகுத்தி எழுச்சிகொள்ளச்செய்யக்கூடியதுமான ஊடகம் புலக்காட்சி ஊடகம் ஒன்றாகும். சினிமா என்பது நேர, பண விரயம்மிக்கதும் காட்சிப்படுத்துவதற்கு திரையரங்குகளின் தேவையுடையதுமான ஊடகமாகும்.போராட்ட சக்திகளின் அக புற சூழ்நிலைகள் சினிமாவை பிரசார ஊடகமாக கைக்கொள்ள ஏதுவாக அமைவதில்லை. இதனால் போராட்டங்களில் சினிமாவின் பங்கு மட்டுப்படுத்தப்பட்டதாகவே உள்ளது. (ஆனாலும சில போராட்டங்களில் சினிமா பிரச்சார ஊடமாக பயன்பட்டுள்ளது) எனவே செலவு குறைந்த செயற்றிறன் மிக்க ஊடகமாக நாடகத்தையே கொள்ளலாம். அதுவும் முக்கியமாக வீதி நாடகங்களே போராட்டங்களுக்கு மிகச்சிறந்த ஊடகமாக அமையக்கூடியன.

அநேகமாக அதிகார வர்க்கத்தினால் நடமாட்டத்துக்கு தடைவிதிக்கப்பட்டிருக்கும் போராட்ட சக்திகள் திடீர் திடீரென மக்கள் கூடுமிடங்களில் ஒன்றுசேர்ந்து வீதி நாடகம் ஒன்றை நிகழ்த்திக்காட்டிவிட்டு மறைவதில் உள்ள இலகுத்தன்மை மற்றய புலக்காட்சி ஊடகங்களில் இல்லை.மக்களுக்கும் பிரச்சினைலளை வெறும் சொற்ற்களால் விளங்கிக்கொள்வதைவிட தமது பிரச்சினைகளை மூன்றாம் நபராக நின்று பார்த்து உணர்ச்சிபெறுவதென்பது இலகுவானதொன்றாகும். தமது அவலங்கள் தம்முன்னே நிகழ்த்திக்காட்டப்படும்போது அவ்வவலம் பலமடங்காகி மக்களின் நெஞ்சை சுடும். அடக்கப்பட்ட வாழ்வினால் ஏற்படும் துலங்களின்மை அல்லது மரத்துப்போதல் (insensitiveness ), தினமும் நடக்கும் அவலங்கள் மக்களின் உள்ளுணர்வை தொடாத்தன்மை என்பன அதிகரித்தே காணப்படும். அதையும் மீறி மகளின் மனதை தொட்டு அவலங்களின் உண்மைக்கோலத்தை உணரச்செய்வதில் நாடகங்களே மிகச்சிறந்த கருவியாகும்.

தலைவிதியை நொந்துகண்டிருக்கும் மக்களுக்கு இவ் அவலஙகள் தீர்க்கப்படலாம், அதிகாரத்தை மக்கள் கேள்வி கேட்களாம் , மக்கள் எழுச்சியின் முன் எவ்வாறான அதிகாரமும் செல்லாக்காசே என மக்களின் பலத்தை மக்களுக்கு உணர்த்துவதற்கு நாடகத்தாலேயே முடியும். அவலங்களை அநுபவிக்கும் நாடக கதைமாந்தரின் எழுச்சியானது அவர்களின் மீட்சிக்கு வழிகோலுவதாக காட்டப்படுவதும், எழுச்சியினதும் போராட்டத்தினதும் மாட்சிமை விளக்கப்படுவதுமே போராட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துவோரின் மிகச்சிறந்த நாடக உத்தியாக அமையும். நம்பிக்கையீனச்சகதியில் கிடந்துழலும் மக்களுக்கு நம்பிக்கையளித்து எழுச்சிகொள்ளச்செய்வதும் எழுச்சிகொண்ட மக்களின் போராட்டத்தை ஆற்றுப்படுத்துவதிலும் நாடகக் கலையால் மிகச்சிறந்த பங்கொன்றை ஆற்றமுடியும் . எனினும் பிரச்சார ஊடகமாக நாடகத்தின் வெற்றியானது ஏனய ஊடகங்களை அதுவும் வண்ணமயமான மயக்கும் போதைதரும் இலத்திரனியல், சினிமா ஊடகங்களை வென்று மக்களிடத்தே சென்றடைவதிலும் அதன் பின் மக்களை அவ்வூடகங்களின் மலிவான போதையூட்டலிலிருந்து மீட்டு நாடகத்தைநோக்கி கொண்டுவருவதிலுமே தங்கியுள்ளது.

அடுத்த பதிவில் போராட்டங்களின் வெற்றிக்கு காரணமாக நாடகங்கள் அமைந்த சில சந்தர்ப்பங்களான "கந்தன் கருணை" "மண் சுமந்த மேனியர்" மற்றும் நேபாள மாவோயிஸ்டுகளின் போராட்டங்களில் நாடகங்களின் பங்கு என்பனபற்றி பார்க்கலாம்.

0 பின்னூட்டங்கள்:

Post a Comment

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம். அனைவரும் இந்த வலைப்பூவை வாசிப்பார்கள். எனவே நல்ல வார்த்தைப் பிரயோகங்களைப் பாவியுங்கள். அத்துடன் இடுகையின் மேற்புறத்தில் உங்கள் நட்சத்திர வாக்கையும் இட்டுவிட்டு செல்லுங்கள்.
நன்றி