Tuesday, October 28, 2008

தேசிய கலை இலக்கியப் பேரவை - பகுதி ஒன்று

எனது கடைசி பதிவிற்கு பின்னூட்டம் போட்டவர்கள் தேசிய கலை இலக்கியப் பேரவை பற்றி விரிவான பதிவு போடும்படி கேட்டதற்கு இணங்க இப்பதிவு இடப்படுகிறது . மொத்தம் மூன்று பதிவுகளுக்கு இது நீளும்

1. வரலாற்றுப் பின்புலம்

2008இல் தேசிய கலை இலக்கியப் பேரவை தனது 35வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. மூன்றரைத் தசாப்த காலத்திற் பேரவை ஆற்றி வந்த பணிகள் காத்திரமானவை. கலை இலக்கியச் சவால்கள், நிதி நெருக்கடிகள், சமூகத் துயரங்கள், அரசியல்-யுத்தக் கொடூரங்கள், மனித அவலங்கள், வீண் உயிரிழப்புக்கள் என்பன நடுவே கடும் எதிர்நீச்சலிட்டு அது தனது பணிகளை முன்னெடுத்து வந்துள்ளது. அப் பணிகளை வெற்றிகரமாக நிறைவேற்ற உதவிய பிரதான காரணங்கள் இரண்டு. ஒன்று தேசிய கலை இலக்கியப் பேரவையின் கலை இலக்கியக் கொள்கை. மற்றது அக் கொள்கையை அமைப்பு வாயிலாக முன்னெடுத்தவர்களின் அர்ப்பணிப்பு மிக்க கடும் உழைப்புக் கொண்ட கூட்டு முயற்சி. அந்த உழைப்பு, சுயநலம், பொருள்தேடல், புகழ் நாட்டம், பட்டம் பதவி பெறல், தனிமனித வெற்றிப் புலம்பல் போன்றவற்றுக்கு அப்பால் தன்னடக்ககமும் சமூக அக்கறையும் கொண்ட கனதிமிக்க கலை இலக்கியப் பங்களிப்பாக இருந்து வந்துள்ளது. மக்கள் கலை இலக்கியக் கோட்பாட்டை உயர்த்திப் பிடித்துத் தேசிய கலை இலக்கியப் பேரவை ஆற்றிய பன்முகப் பணிகளையும் பங்களிப்புகளையும் இப்போது நினைவுபடுத்தல் அவசியமாகின்றது.

எந்தவொரு கலை இலக்கியக் கோட்பாடும் அதனை முன்னெடுக்கும் கலை இலக்கிய அமைப்பும் அதன் அரசியல் பொருளாதார சமூக கலாசார வரலாற்றுச் சூழலை உள்வாங்கியே உருவாகிறது. படைப்பாளிகளும் தத்தமது நிலைக்களங்களுக்கு ஏற்பவே செயற்படுவர். வர்க்க சமூகத்தில் இலக்கிய நோக்கும் போக்கும் ஏதோ ஒரு வர்க்க அடையாளத்துடனேயே இருக்கும். தேசிய கலை இலக்கியப் பேரவைக்கும்; ஒரு வரலாற்று அடிப்படையும், வர்க்கச் சார்பும் உண்டு.

இலங்கையில் 1940களிலும் 1950களிலும் பொதுவுடைமை இயக்கம் ஆழமான செல்வாக்கைச் செலுத்தியது. அதன் காரணமாக இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உருவானது. அதைக் கட்டியெழுப்பி அதற்குரியதொரு முற்போக்கு கலை இலக்கியக் கொள்கையை வகுத்து வழி நடத்த அவ் இயக்கத்தைச் சேர்ந்த கலை இலக்கியவாதிகள் கடுமையாக உழைத்தனர். முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஈழத்து இலக்கியப் பரப்பில் ஆற்றிய இலக்கியப் பணியாற் சமூக அக்கறையும் வர்க்க முனைப்பும் கொண்ட எழுத்தாளர்கள் பலர் உருவாகினர். ஈழத்து இலக்கியத்தின் தனித்துவத்தை அடையாளங் காட்டத் தேசிய கலை இலக்கியத்தின் முக்கியத்துவத்தை வற்புறுத்தி விதேசிய இலக்கியச் சீரழிவை எதிர்ப்பதில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட பெரும் பணியை ஆற்றியுள்ளது.

ஆனால் அச் சங்கம் அறுபதுகளின் முற்கூறுடன் திசைமாறத் தொடங்கி விரைவில் முற்று முழுதாகச் சீரழிந்தது. இலங்கையின் பொதுவுடைமை இயக்கத்தில் அக் காலத்தில் ஆழமான அரசியல் தத்துவார்த்த விவாதங்கள் இடம்பெற்றுப் பொதுவுடைமை இயக்கம் 1964ல் பிளவடைந்தது. அப் பிளவும் அணி பிரிதலும் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை இயங்காமலாக்கின. தலைமைப் பொறுப்பில் இருந்த சிலர் அவ் அரசியல் தத்துவார்த்த பிளவின் போது சமாதானப் பாராளுமன்றப் பாதையைத் தேர்ந்தோர் பக்கம் தம்மை நிறுத்திக் கொண்டனர். மாறாகக் கவிஞர் பசுபதி, பேராசிரியர் கைலாசபதி, சுபைர் இளங்கீரன், என்.கே. ரகுநாதன், கே. டானியல், எச்.எம்.பி. முகைதீன், சில்லையூர் செல்வராசன், செ. கணேசலிங்கன், நீர்வைப் பொன்னையன், கவிஞர் சுபத்திரன்;, இளைய பத்மநாதன், இ. சிவானந்தன், கே. தங்கவடிவேல், இ. முருகையன் போன்றோர் உட்பட்ட பெரும்பா லானோர் புரட்சிகர வர்க்கப் போராட்டத்தை வலியுறுத்திய அணியில் இணைந்து தமது கலை இலக்கியப் பணிகளை ஆற்றினர்.

1964-1972 காலகட்டம் தேசிய அளவிலும் சர்வதேசிய அளவிலும் சகலவகையான ஒடுக்கு முறைகட்கும் எதிரான எழுச்சிகளும் போராட்டங்களும் இடம்பெற்ற ஒரு புரட்சிகர காலப்பகுதியாகும். இலங்கையின் பல பகுதிகளிற் பல வகைப்பட்ட போராட்டங்கள் எழுவதற்கான சூழல்கள் தோன்றின. 1965ல் ஐக்கிய தேசியக் கட்சி - தமிழரசு - தமிழ்க் காங்கிரஸ் கட்சிகளுடனும் ஏனைய சிங்கள இனவாதக் கட்சிகளுடனும் வர்க்க ரீதியில் இணைந்து இன மொழி வேறுபாடு கடந்த வலதுசாரி ஆட்சியைத் தேசிய அரசாங்கம் என்னும் பெயரில் அமைத்துக் கொண்டது. அதேவேளை பாராளுமன்றச் சந்தர்ப்பவாத அரசியலிற் தம்மை இழந்த இடதுசாரிகள் சிறீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து சந்தர்ப்பவாத அரசியலில் இறங்கினர். புரட்சிகரக் கோட்பாட்டை ஏற்றவர்கள் தோழர் நா. சண்முகதாசன் தலைமையில் பொதுவுடைமைக் கட்சியின் வழிகாட்டலில் நடைமுறைப் போராட்டங்கள் ஊடாகத் தமது அரசியல், தத்துவார்த்தக் கொள்கைகளை விருத்தி செய்ய முற்பட்டனர். அம் முயற்சிகள் கலை இலக்கியப் பரப்பிலும் பல்வேறு தாக்கங்களை உருவாக்கின.

கலை இலக்கியத் துறைக்குரிய முயற்சிகள் பற்றிய சிந்தனைகள் எழுந்தன. அதன் விளைவாக 'வசந்தம்' எனும் கலை இலக்கிய சஞ்சிகையை வெளியிட முடிவானது. 1964ன் பிற்கூற்றிலே 'வசந்தம்' தொடக்கப்பட்டது. அதை வெளிக் கொணர்வதில் அன்றைய இளம் வளர் நிலைப் படைப்பாளிகளான செ. யோகநாதன், இ.செ. கந்தசாமி, நீர்வைப் பொன்னையன், யோ. பெனடிக்ற் பாலன், ச. முத்துலிங்கம், செல்வ. பத்மநாதன், அ. கந்தசாமி போன்றோர் முன்னின்று செயற்பட்டனர். அவர்களது முயற்சிக்கும் வசந்தத்தின் இலக்கியத் தரத்திற்கும் ஆதரவாக ஏற்கனவே குறிப்பிட்ட நாடறிந்த எழுத்தாளர்கள் தமது ஆக்கங்களை வழங்கிப் பக்கபலமாக நின்றனர். ஒரு வருடம் மட்டுமே இலக்கியப் பணி ஆற்றிய வசந்தம் நிதி வளம் இன்மையால் நின்று போனாலும் அது தோற்றுவித்த இலக்கியத் தாகமும் காட்டிய திசையும் எழுத்தாளர்களுக்கு ஒரு உந்து விசையாக அமைந்தது. எனினும் எவ்வித கலை இலக்கிய அமைப்பையும் தோற்றுவிக்காமலே கலை இலக்கிய முயற்சிகளை நாடு பூராவும் இருந்த எழுத்தாளர்கள் முன்னெடுத்தனர்.

1964க்குப் பின்பு வடக்கிலும் தெற்கிலும் மலையகத்திலும் அரசியல் தொழிற்சங்க வெகுஜனப் போராட்டங்கள் வேகமடைந்தன. தெற்கிலே தொழிற்சங்க வேலை நிறுத்தப் போராட்டங்கள் தனியே பொருளாதாரக் கோரிக்கைகளை மட்டுமன்றி அரசியல் கோரிக்கைகளையும் முன்னெடுத்தன.

வடக்கில் 1966ம் ஆண்டு ஒக்டோபர் 21 எழுச்சி சாதிய-தீண்டாமை அமைப்புக்கு எதிரான புரட்சிகரப் போராட்டக் களத்தை திறந்து வைத்து ஒரு வரலாற்றுத் திருப்பு முனையை ஏற்படுத்தியது. போராட்டங்கள் பல்வேறு களங்களில் முன்னேறிய அக் காலப்பகுதியில் வட பகுதியில் தொழிற்சங்க வேலை நிறுத்தப் போராட்டங்கள் பல இடம்பெற்றன. அத்துடன் அரசாங்கத்தின் மக்கள் விரோத நிலைப்பாடுகட்கு எதிராகவும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும் இயக்கங்கள் முன்னெடுக்கப்பட்டன.

மலையகம் முன் கண்டிராதவாறான தொழிற்சங்கப் போராட்டங்கள் வர்க்க உணர்வின் உச்ச நிலையிற் பற்றிப் பரவின. பல்வேறு வேலைநிறுத்தப் போராட்டங்களில் தோட்டத் தொழிலாளர்கள் ஆண்களும் பெண்களுமாகத் தமது வர்க்க உணர்வுகளை வெளிப்படுத்தினர்.

மேற்கூறிய இயக்கங்களும் போராட்டங்களும் சமூக மாற்றத்தை வேண்டி நின்ற கலை இலக்கியவாதிகளுக்கு மக்கள் கலை இலக்கியக் கோட்பாட்டு அடிப்படையில் புதிய புதிய அனுபவங்களை வழங்கின. அவற்றின் செழுமையான பின்புலத்தில் வளமிக்க ஆக்க இலக்கியங்கள் எழுந்தன. கவிதைகள், பாடல்கள், சிறுகதைகள், நாவல்கள் என்பனவற்றுடன் நாடக வடிவங்கள் புதிய புதிய பரிசோதனைகளில் வெற்றி பெற்றன.

“எச்சாமம் வந்து எதிரி நுழைந்தாலும் / நிச்சாமக் கண்கள் நெருப்பெறிந்து நீறாக்கும் / குச்சுக் குடிசைக்குள் கொலுவிருக்கும் கோபத்தை / மெச்சுகிறேன்" “பாளையைச் சீவிடும் கைகளைப் புதுப் பணி / பார்த்துக் கிடக்குதடா" என்று கவிஞர் சுபத்திரனும், “ஆற்றல் மிகு கரங்களிலே ஆயுதங்கள் ஏந்துவதே / மாற்றத்திற்கான வழி, மாற்றுவழி ஏதுமில்லை" எனக் கவிஞர் கணேசவேலும், “மாவிட்டபுரத்திலோர் மந்தி / மடைச் சேட்டை புரியுது / வாசலில் குந்தி" எனக் கவிஞர் வில்வராசனும் பாடியவை மக்கள் போராட்டக் களத்திற்குப் புதிய வேகத்தை அளித்தன. மேலும் சி. மௌனகுரு, சில்லையூர் செல்வராசன், சாருமதி, சிவானந்தன், புதுவை இரத்தினதுரை, முருகையன், முருகு கந்தராசா, முருகு இரத்தினம், தில்லை முகிலன், பூமகன் ஆகியோரது கவிதைகள் வீச்சுடன் பிறந்தன. அக் காலகட்டத்தில் மலையக மக்களது வர்க்க உணர்வுகளைக் கூறுங் கவிதைகள் படைக்கப்பட்டன. பாடல்கள் போராட்டத் தீ - 1, போராட்டத் தீ - 2 என நூல் உருப் பெற்றன. மலையகக் கவிஞர்கள் எம். முத்துவேல், பி. மரியதாஸ், ஆர். இராமலிங்கம் போன்றவர்கள் கனதி மிக்க கவிதைகள் படைத்தனர்.

அவ்வாறே கருத்தாழமும் கலையுணர்வும் மிக்க சிறுகதைகளை என்.கே. ரகுநாதன், கே. டானியல், பெனடிக்ற் பாலன், செ. யோகநாதன், நா. யோகேந்திரநாதன், நந்தினி சேவியர், இராஜா தருமராஜா போன்றோர் படைத்தனர். இளங்கீரனின் “நீதியே நீ கேள்", கணேசலிங்கனின் “செவ்வானம் " பெனடிக்ற் பாலனின் மலையகப் பின்னணியிலான “சொந்தக்காரன்" போன்ற நாவல்கள் குறிப்பிட வேண்டியன. டானியலின் “பஞ்சமர்" நாவல் கடும் விமர்சனங்களை எதிர்நோக்கிய போதும் சாதிய ஒடுக்குமுறையின் பல்வேறு அம்சங்களை வெளிக் கொணர்ந்த முக்கியமான ஆக்கமாகும்.

மேற்கூறிய ஆக்கங்கள் மக்களது அன்றைய வர்க்க, சமூகப் பிரச்சினைகளையும் போராட்ட நியாயங்களையும் ஆற்றல்களையும் பிரதிபலித்ததுடன் மக்கள் இலக்கியத்திற்குரிய வலுவான அடிப்படைகளையுங் கொண்டிருந்தன. அவை பற்றிய பன்முக நோக்கும் ஆயு;வுகளும் விமர்சனங்களும் ஏற்கனவே வெளிவந்துள்ளன. அவற்றின் வரலாற்று முக்கியத்துவங் கருதி அவை தொடர்ந்தும் ஆக்கபூர்வமாக ஆராயப்பட வேண்டும்.

ஆக்க இலக்கியங்கள் போன்று விமர்சனமும் கலை இலக்கியத் துறையின் கவனத்திற்குரிய ஒரு துறையாக அன்று செழுமை பெற்றது. விமர்சனத் துறையின் கவனத்தைக் க. கைலாசபதி பெரிதும் ஈர்த்தார்.

அப்போது எழுதி மேடையேற்றிய நாடகங்களை மக்கள் பெரிதும் வரவேற்றனர். மக்கள் கலை இலக்கிய கோட்பாட்டு வழி நின்று தரம் மிக்க நாடகங்களை உருவாக்க முடியும் என அவை உணர்த்தின. முதல் நாடகமாக மட்டக்களப்பு நாடகசபா தயாரித்து, சி. மௌனகுருவின் நெறியாள்கையில், 1969ம் ஆண்டில் வடமோடி தென்மோடிக் கூத்து வகைகள் இணைந்த “சங்காரம்" எனும் நாடகம் மேடையேறிப் பெரு வரவேற்பைப் பெற்றது.

அடுத்து என்.கே. ரகுநாதன் எழுதிய “கந்தன் கருணை" நாடகப் பிரதி அம்பலத்தாடிகளினால் காத்தவராயன் கூத்துப் பாணியில் இளைய பத்மநாதனின் நெறியாள்கையில் வட பகுதியில் மேடையேறியது. 1969-1974 காலப்பகுதியில் “கந்தன் கருணை" கொழும்பிலும் வடபகுதியிலும் ஐம்பது முறைகட்கும் மேல் மேடையேறியது. அந் நாடகத்தின் வெற்றி இளைய பத்மநாதன் சுட்டிக் காட்டியது போல ஒரு கூட்டு முயற்சியின் வெற்றியாகும். அந் நாடகம் சாதிய அமைப்பை அம்பலமாக்கி ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டத்தின் நியாயங்களை வலியுறுத்திய மக்கள் கலை வடிவமெனலாம். அவ்வாறே மட்டுவில் மோகனதாஸ் கலைக்கழகம் தயாரித்த “குடி நிலம்" “புதிய வாழ்வு" முருகையனின் “கடூழியம்" பண்டத்தரிப்பு காலையடி மறுமலர்ச்சி மன்றம் தயாரித்த “காகிதப் புலிகள்" மாவை நித்தியானந்தனின் “ஐயா எலக்சன் கேட்கிறார்" போன்ற நாடகங்கள் மக்கள் மத்தியில் ஆழமான கருத்துக்களை எடுத்துச் சென்றன. “கந்தன் கருணை" பின்னர் புதிய வகை உத்தி முறைகளைப் பயன்படுத்தி வெவ்வேறு நாடக அமைப்புக்களால் நடிக்கப் பெற்றது. புதிய உத்திமுறைகளைப் பயன்படுத்துவதில் சி. மௌனகுரு, இளைய பத்மநாதன், தாசீசியஸ், முருகையன் போன்றோர் தத்தமது ஆற்றல்களை ஏனையோருடன் பகிர்ந்தமை முக்கியமான விடயமாகும்.

சித்திர ஓவிய முயற்சிகளும் மேற் கொள்ளப்பட்டன. தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்க மாநாட்டிற்கான சித்திரக் கண்காட்சி குறிப்பிட வேண்டியதாகும். அன்றுவரை சாதிய ஒடுக்கு முறைக்கு உள்ளான சாதிய-தீண்டாமைக் கொடுமைகளை உயிர்ப்புடன் சித்தரிக்கும் சித்திரங்களும் ஓவியங்களும் சேகரிக்கப்பட்டுக் கண்காட்சியில் வைக்கப்பட்டன. 1969ல் வடக்கின் பல பகுதிகளிலும் நடாத்தப்பட்ட இக் கண்காட்சி பின்னர் கொழும்பிற் பலரது கவனத்தை ஈர்த்தது. மறைந்த பேராசிரியர் சரச்சந்திர கண்காட்சியைத் திறந்து வைத்தார். பெருந்தொகையான தென் இலங்கை மக்கள் தமது உணர்வுளை வெளிப்படுத்திப் பார்வையிட்டனர். அதனால் கண்காட்சியை மேலும் இரண்டு தினங்கள் நீடிக்க வேண்டியதாயிற்று. கண்காட்சியை நடாத்துவதிற் பேராசிரியர் க. கைலாசபதி முன்னின்று உழைத்தார். கண்காட்சிக்கான சித்திரங்கள் வரைவதிலும் ஏனையோரிடம் பெறுவதிலும் என். கே. ரகுநாதன், கே. தங்கவடிவேல் கே. டானியல் போன்றோர் ஆர்வத்துடன் செயற்பட்டனர்.

இவ்வாறு 1964-1972 கால கட்டகத்தில் நடைபெற்ற மக்கள் போராட்டங்களும் அவற்றின் வளமான அனுபவங்களும் ஒரு பரந்த மக்கள் இலக்கியக் கோட்பாட்டுத் தளத்தை விரிவுபடுத்தி செழுமையாக்கின. மாறாக, முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை நெருங்கி நின்ற இலக்கியவாதிகளின் அரசியல் நிலைப்பாடு மக்கள் இலக்கியக் கோட்பாட்டுக்கு முரணாக அமைந்தது. எல்லா விடயங்களிலும் சமரச மார்க்கத்தைப் பின் பற்றிய இவர்கள் அரசியலிலும் இலக்கியத்திலும் வெகுஜன மார்க்கப் பாதையை நிராகரித்து மக்கள் இலக்கியக் கோட்பாட்டிலிருந்து விலகி நின்றனர். 1970ல் ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் வரவும் 1971 ஏப்பிரல் கிளர்ச்சியும் அதனையொட்டிய அரசாங்க அடக்குமுறை நடவடிக்கைகளும் புரட்சிகர இயக்கத்திற்குக் கடுமையான பின்னடைவுகளை ஏற்படுத்தின. இத் தேக்க நிலையிலிருந்து மீள இரண்டு மூன்று ஆண்டுகள் சென்றன. இச் சூழலில் தம்மை மீள அமைத்துக் கொள்ள முயன்ற முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நாட்டின் யதார்த்த சூழலுக்கு ஏற்ற கலை இலக்கியக் கோட்பாட்டை நிலை நிறுத்தத் தவறியது. ஆளும் ஐக்கிய முன்னணி அரசாங்கத்தை ஆதரிப்பதற்கு அப்பாற், கலை இலக்கியத் துறையில் அவர்களுக்கு எதுவும் இயலவில்லை.

1 பின்னூட்டங்கள்:

Anonymous said...

நன்று

Post a Comment

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம். அனைவரும் இந்த வலைப்பூவை வாசிப்பார்கள். எனவே நல்ல வார்த்தைப் பிரயோகங்களைப் பாவியுங்கள். அத்துடன் இடுகையின் மேற்புறத்தில் உங்கள் நட்சத்திர வாக்கையும் இட்டுவிட்டு செல்லுங்கள்.
நன்றி