Wednesday, August 6, 2008

நம்பிக்கைகள் பற்றி ஒரு ஆய்வு

முற்குறிப்பு: இக்கட்டுரை, 1.கட்டுரைக்கான காரணம், 2.நம்பிக்கை என்றால் என்ன, 3.மூடநம்பிகை என்றால் என்ன என்று மூன்று பகுதிகளாக எழுதப்பட்டுள்ளது. '1.கட்டுரைக்கான காரணம்', இலங்கை, கொழும்பில் நடந்த தமிழ் நிகழ்வொன்று பற்றியது. அதுவே இக்கட்டுரையை எழுதத்தூண்டியது. நிகழ்வை தவிர்த்து, நம்பிக்கைகள், மூடநம்பிக்கைகள் பற்றிய ஆய்வை மட்டும் படிக்கவிரும்புபவர்கள் 2 ஆம் 3ஆம் பகுதிகளுக்கு தாவுங்கள்.

1. கட்டுரைக்கான காரணம்

அண்மையில் கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நிகழ்ந்த, இலங்கையின் கவிஞர், கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை மொழிபெயர்த்த அரபுக்கவிஞர் ஒமர் ஹையாமின் (உமர் கையாம்,
Omar Khayyam) கவிதைகள் பற்றிய ஒரு கலந்துரையாடலிலே, மதங்களிலுள்ள மூடநம்பிக்கைகள் பற்றியும் கருத்துக்கள் கூறவேண்டியதாயிற்று.

ஏனென்றால், ஒமர் ஹையாம், இஸ்லாம் கூறிய மதமூடநம்பிக்கைகளையும், கடவுள், சொர்க்கம் என்ற கொள்கைகளையும் சாடிய, பதினோராம் நூற்றாண்டில் அரேபியாவில் வாழ்ந்த ஒரு அரபுக்கவிஞர். அத்துடன் அவர் ஒரு, கணிதவியலாளரும், வானிலையாளரும், தத்துவஞானியும் கூட. ஆனால் அவரது சில கவிதைகளை தேசிகவிநாயகம்பிள்ளை மொழிபெயர்த்திருந்த விதமோ (ஆகக்குறைந்தது அன்றைய நிகழ்வில் பேச்சாளர் நயந்த விதமோ), இந்து மத கருத்துக்களை வலியுறுத்துவதாக, ஒமர் ஹையாமின் கருத்துக்களுக்கு முரணாக இருக்கவே, ஒமர் ஹையாமை காப்பாற்ற வேண்டியதாகி, பின்பு அது மத மூடநம்பிக்கைகள் பற்றிய கலந்துரையாடலாயிற்று. பிரதான உரையை (கவிமணியில் மொழியாக்க கவிதைகளை நயந்தவர்) வழங்கியவரோ, இலண்டனிலிருந்து வந்திருந்த, இலண்டன் தமிழ்சங்கத்தில் உறுப்பினரொருவர்.

நிகழ்வுக்கு தலைமை தாங்கியிருந்தவர் ஒரு சட்டத்தரணி. வழக்கமாக பிரதான பேச்சாளர் உரையாற்றி முடிய, அவையினர் கலந்துரையாடலுக்கான சந்தர்ப்பம் வழங்கப்படும். அவையினர் தங்கள் கருத்துக்களையும், சந்தேகங்களையும் தெரிவித்தபின்பு, இறுதியில் பிரதான பேச்சாளர் அவையினரின் கருத்துக்கள், கேள்விகள், சந்தேகங்களுக்கு பதிலளிப்பார். ஆனால் பலமுறை, அவையினரின் கேள்விகளாலும், கருத்துக்களாலும், பிரதான பேச்சாளர், அவரின் உரை மறுதலிக்கப்பட்டு, தர்மசங்கடமான நிலைக்கு உள்ளாகும்போது, அவரை காப்பாற்றிவிடுவது நிகழ்வின் தலைமையின் கடமையாக இருக்கும். இக்கட்டான இச்சந்தர்ப்பங்களில், அவையினரின் கருத்துக்களுக்கு பின்பு, பிரதான பேச்சாளரை பதிலளிக்கவிடாது, தலைவரே உரிமையெடுத்து, அவரே தனுடைய கருத்துக்களை தெரிவித்து, அவையினரை மடக்கி, பேச்சாளரை காப்பாற்றிவிடவேண்டிய பரிதாபநிலையும் ஏற்பட்டிருக்கின்றது.

அவ்வாறே, கடந்த இந்த ஒமர் ஹையாம் பற்றிய நிகழ்விலும்கூட, மத மூடநம்பிக்கைகள் பற்றிய பேச்செழுந்த்போது, அவையினரை மடக்கவே தலைவர், ‘மூடநம்பிக்கைகள் என்று ஒன்றில்லை, அவ்வாறு சொல்வது பிழை. கண்ணதாசனே ஒரு தரம் சொல்லியிருக்கின்றார். நம்பிக்கை என்றாலே அது மூடம் தான். மூடியது. அதென்னய்யா பிறகு அதற்குள் மூட நம்பிக்கை. மூடநம்பிக்கை என்று குறிப்பிடுவது பிழையானது' என்று போட்டார் ஒரு போடு. (அத்தோடு இன்னும் பல பேசினார், ஆனாலும் நம்பிக்கை என்ற விடயம் சம்பந்தமாகவே இங்கே அலசவேண்டியிருப்பதால் நடந்த சம்பவத்தை இத்துடன் நிறுத்தி விடயத்துக்கு வருகின்றேன்) ஆகவே நம்பிக்கைகள், மூடநம்பிக்கைகள், மூடமற்ற நம்பிக்கைகள் பற்றி தெளிவுபடுத்தவேண்டிய ஒரு தேவையிருப்பதை உணர்ந்தேன். அதன் பயனாக தேடிப்படித்தறிந்த விடயங்கள் இங்கே தரப்படுகின்றன.

2. நம்பிக்கை (Belief) என்றால் என்ன?
தமிழில் வருவதுக்கு முதல், ஆங்கிலத்தில் Oxford Concise Dictionary (ஆங்கிலேயர்களுக்கென்றே வெளியிடப்படுவது) நம்பிக்கை (Belief) என்றால் எப்படி வரைவிலக்கணபடுத்துகின்றது என்று பார்ப்போம்.

Belief (n): 1. An acceptance that something exists or is true, especially one without proof.
                     * A firmly held openion or convicton
                     * A religious conviction
                 2. (belief in) trust or confidence in

Believe(v): 1. feel sure that (something) is true.
                      * accept the statement of (someone) as true.
                      * have religious faith
                   2. (believe in) Have faith in the truth or existence of
                   3. (believe in) have confidence in
                   4. think or suppose
                      * (believe in) think that (something) is right or acceptable.

ஆகவே மேற்படி ஆங்கில வரைவிலக்கணங்களிலிருந்து நம்பிக்கை என்றால் என்னவென்று பார்ப்போம்.

அதாவது, ஒரு விடயம் உண்மை என்றோ, அல்லது அது இருக்கின்றது என்றோ, நிறுவப்படாமல், ஏற்றுக்கொள்ளப்படுதல் நம்பிக்கை. இவற்றுள் மதவிசுவாசம், ஒருவரின் கருத்தை சரியென்று ஏற்றுக்கொள்ளல், ஒருவிடயம் சரியென்றோ, ஏற்றுக்கொள்ளத்தக்கதென்றோ நினைத்தல், கருதுதல், ஒருவரை, அவரின் பேச்சை, எதிகால நிகழ்வுகளை நம்புதல் என்பனவும் நம்பிக்கை என்பதற்குள் அடங்கும்.

அதாவது. மத, கடவுள் நம்பிக்கைகள் மட்டுமல்ல, நம்பிக்கை என்பதில் தான் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் ஓடுகின்றது. அதாவது நாளை பற்றிய நம்பிக்கை தான், இன்றைய நாளை மகிழ்ச்சிப்படுத்துகின்றது. விஞ்ஞானம் கூட இந்த நம்பிக்கைக்கு விதிவிலக்கல்ல. விஞ்ஞானத்திலுள்ள எடுகோள்களெல்லாம் (Hypothesis) ஒருவித நம்பிக்கைகள் தாம். விஞ்ஞானிகளும் பலவிடயங்களை நம்புகின்றார்கள், நம்பிக்கை வைத்துள்ளார்கள். விஞ்ஞான எடுகோள்களென்ற அந்த நம்பிக்கைகள் நிரூபிக்கப்பட்ட ஆதாரங்களையும், உண்மைகளையும் அடிப்படையாகக்கொண்டவை. விஞ்ஞான முறையிலமைந்தவை.

எவ்வாறாகினும், நம்பிக்கை எனப்படுவது ஒரு நிரூபிக்கப்படாத விடயமென்று விளங்குகின்றது. ஒரு விடயம் நிரூபிக்கபடாது, சரியென ஏற்றுக்கொள்ளப்படும்போது அது நம்பிக்கை, அதுவே நிரூபிக்கபடும்போது (விஞ்ஞானரீதியில்) அது ஒரு 'உண்மை' ஆகின்றது. இவுண்மைகளே விஞ்ஞானத்தில் விஞ்ஞான் கண்டுபிடிப்புக்களாகின்றன. இவ்விஞ்ஞான கண்டுபிடிப்புக்களுக்கு வழிவகுப்பவை பெருமளவில் விஞ்ஞான எடுகோள்கள் தாம்.

3. மூடநம்பிகை (Superstitious Belief) என்றால் என்ன?

அப்படியானால், நம்பிக்கை என்ற விடயம் நிரூபிக்கப்படாததொன்றாக இருக்கும்போது, மூடநம்பிக்கை, மூடமற்ற நம்பிக்கை என்ற வார்த்தைப்பிரயோகங்கள் சரியானவையா. அப்படி நம்பிக்கைகளுக்குள்ளும் வகைகள் இருக்கின்றனவா?

சரி, மூடநம்பிக்கை என்றால் என்னவென்று பார்ப்பதற்கு முன்னால், மூடம் (மூடத்தனம், stupidity) என்றால் என்னவென்று பார்க்கவேண்டும். மூடத்தனம் என்றால், அறிவின்மை, அறியாமை (ignorance), முட்டாள்தனம் (foolishness) என்று பல பொருள் காணலாம். ஆகவே இதிலிருந்து மூடநம்பிக்கை என்றால் அறியாமையால் ஏற்பட்ட நம்பிக்கை அல்லது முட்டாள்தனத்த்தால் ஏற்பட்ட நம்பிக்கை என்று பொருள்கொள்ளலாம்.

அப்போ, மூடமற்ற நம்பிக்கைகள் என்றால் என்ன? இதை வரைவிலக்கணப்படுத்துவதை விட உதாரணங்களுடன் பார்ப்போம். போர்க்களத்துக்கு போரிடச்சென்ற தன்னுடைய மகன், உயிருடன் திரும்பிவருவான் என்று தாயொருத்தி நம்பிக்கை வைத்திருந்தால் அத்தாயின் நம்பிக்கையை பார்த்து அது ‘மூடநம்பிக்கை' என்று சொல்வீர்களானால், நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கைகள் அனைத்தும் .மூடநம்பிக்கைகள்' என்று அறுதியிட்டு கூறுகின்றேன். எனக்கு கீழ் வேலைசெய்பவனின் செலவு கணக்கறிக்கையை நம்புகின்றேன், அதை மூடநம்பிக்கை என்று சொல்லமுடியுமா? 'இக்கட்டுரையை வாசிக்கும் நீங்கள் ஒரு சமூக ஆர்வமுள்ளவர் என்று நான் நம்புகின்றேன். அதை மூடநம்பிக்கை என்று சொல்லமுடியுமா? இலங்கையில் தமிழர்களுக்கு ஒரு விடிவுகாலம் பிறக்கும் என்ற நம்பிக்கை ஒரு மூடநம்பிக்கையாகுமா? பூமிதவிர்ந்த கிரகங்களில் உயிர்கள் வாழலாம், இன்னும் ஐந்தாண்டுகள் கழித்தும் நான் உயிர்வாழ்வேன், என்னுடைய காதல் வெற்றிபெறும் என்றெல்லாம் நம்புவது மூடநம்பிக்கையாகாது தானே.

ஆகவே இப்போது உங்களுக்கு விளங்கியிருக்கும். எப்படியான நம்பிக்கைகள் மூடநம்பிக்கைகள், எப்படியான நம்பிக்கைகள் மூடமற்ற நம்பிக்கைகள் என்று. பூமிதோன்றி 4.5 பில்லியன் ஆண்டுகள், பிரபஞ்சம் உருவாகி 14.5 பில்லியன் ஆண்டுகள் என்று விஞ்ஞான முறையில் நிறுவியபிறகும், இல்லையில்லை கிறிஸ்தவ பைபிளின்படி, இந்த பூமியும், பிரபஞ்சமும் உருவாக்கப்பட்டு 6000 ஆண்டுகள் தான் என்று நம்புவது அறியாமையால் விளைந்த நம்பிக்கையல்லவா. அது மூடநம்பிக்கையல்லவா. ஆணின் விந்தணுவும், பெண்ணின் முட்டையும் உடலுறவின் மூலம் சேர்ந்துதான் குழந்தை உருவாகமுடியும் என்றானபின்பு, அவ்வாறுதான் இயற்கைமுறையில் கருத்தரிக்கமுடியாவிட்டாலும், இன்று விஞ்ஞான் மருத்துவமுறைகளில் எப்படியாவது குழந்தைப்பேறை அடைந்துகொள்ளலாம் என்றானபின்பும், அறியாமையால், சில ஏமாற்றுக்காரரின் சொல்கேட்டு, விரதமிருந்து, விக்கிரகங்களை வழிபட்டால் தான் குழந்தை கிடைக்கும் என்று நம்பினால், அதை மூடநம்பிக்கை என்று சொல்லாமல் வேறு என்னவென்பது.

(விஞ்ஞானத்தை துணைக்கழைத்தால்) ஈர்ப்புவிசைதான் காரணமென்றால், நீ அன்றாடம் கடந்துசெல்லும் ஒவ்வொரு மாடிக்கட்டடமும் உன்மீது ஏற்படுத்தும் ஈர்ப்புவிசையுடன் ஒப்பிடும்போது, புறக்கணிக்கத்தக்க, மிக மிக தூரத்திலுள்ள கோள்கள் உன்மீது ஏற்படுத்தும் தாக்கத்தால் உனது வாழ்க்கை நிர்ணயிக்கப்படுகின்றதென்றால் இதைவிடவுமா மூடநம்பிகை வேண்டும். அதற்குள் பௌர்ணமி தினத்தில் பைத்தியம் கூடுகின்றது என்ற மூடநம்பிக்கை வேறு.

சூரியன் ஒரு கிரகமல்ல, அது ஒரு நட்சத்திரம், சந்திரனும் ஏனைய கிரகங்கள் போல ஒரு கிரகமல்ல, அது பூமியின் உபகோள் என்று நிறுவியபின்பும், இல்லையில்லை அவையிரண்டும் நவக்கிரகங்களும் அடங்கும் என்று நீ நம்புவாயானால், அது அறியாமையால் ஏற்பட்ட மூடநம்பிக்கை.

பூமி கோளவடிவானது, பூமியும் ஏனைய கோள்களும் சூரியனேயே சுற்றிவருகின்றன, நாமிருக்கும் இந்த சூரியத்தொகுதி அகண்ட பிரபஞ்சத்தின் சிறியதொரு பகுதி என்று நிரூபணமானபின்பும், இல்லையில்லை பூமி தட்டையானது, சூரியனும், சந்திரனும் பூமியையே சுற்றிவருகின்றன, பிரபஞ்சத்தின் மையம் பூமியே என்று, மதநூல்கள் சொல்வதுபோல் நம்புவாயானால் அது அறியாமையால் வரும் நம்பிக்கை, மூடநம்பிக்கை.

அகவே இப்போது சொல்லுங்கள், நம்பிக்கைகளில், மூடநம்பிக்கைகள், மூடமற்றநம்பிக்கைகள் என்று உள்ளன தானே! ஒரு நம்பிக்கை அறிவுபூர்வமாக ஏற்பட்டால் அது மூடத்தனமற்ற நம்பிக்கை, அதுவே அறியாமையால் ஏற்பட்டால் அது மூடநம்பிக்கை. விஞ்ஞான எடுகோள்கள் (Hypothesis) அறிவுபூர்வமான நம்பிக்கைகள். உதாரணத்துக்கு, பூமிதவிர்ந்த அண்டத்தின் மற்றைய பகுதிகளிலும் உயிரினங்கள் வாழலாம் என்ற எடுகோள் (நம்பிக்கை) பூமியில் எப்படி உயிரினங்கள் தோன்றின, பரிணாமமடைந்தன என்பன பற்றிய ஆராய்ச்சிகளில் முடிவிலும், அண்டம் பற்றிய ஆராய்ச்சியின் முடிவிலும் ஆதாரங்களின்மேலும் எடுக்கப்பட்ட எடுகோள். அவற்றை உண்மையென்று நிரூபிப்பதற்கான ஆராய்ச்சிகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுகின்றன.

ஆகவே மூடநம்பிக்கைகள் கட்டிக்காக்கப்படுவதற்கும், கட்டியெழுப்பப்படுவதுக்கும் காரணம் மனிதர்களின் அறியாமையே. மக்களை அறிவுடையவர்களக்குவதன்மூலம் மூடநம்பிக்கைகள் இலகுவில் ஒழிக்கப்படலாம். முடிந்தவரை, ஒவ்வொருவரும் உங்கள் அருகிலிருப்பவர்களின் அறியாமைகளை நீக்கி நல்லதொரு, மூடநம்பிக்கைகளற்ற, மூடநம்பிக்கைகள் குறைந்த, ஆரோக்கியமான சமுதாயத்தை கட்டியெழுப்புவோம்.

பிற்குறிப்பு
மூடநம்பிக்கை என்பதற்கு தமிழ் அகராதியொன்றில் கிடத்த வரைவிலக்கணம்.

மூடநம்பிக்கை: அறிவுக்கு பொருந்தாத, பழக்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்து அல்லது கோட்பாடு. Superstitious belief, widly held but unjustified belief about man and nature.

Pals Tamil e-Dictionary

உதவி
1. Concise Oxfor Dictionary.
2. Pals Tamil e-Dictionary
3.
Omar Khayyám on Wikipedia
4. Rubaiyat of Omar Khayyam
5. http://en.wikipedia.org/wiki/Universe
6. http://en.wikipedia.org/wiki/Earth
7. http://en.wiktionary.org/wiki/hypothesis
8. http://www.merriam-webster.com/dictionary/hypothesis
9.Young Earth creationism
10. Lunar Effect 
11. Planets in Astrology 
12. Flat Earth

0 பின்னூட்டங்கள்:

Post a Comment

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம். அனைவரும் இந்த வலைப்பூவை வாசிப்பார்கள். எனவே நல்ல வார்த்தைப் பிரயோகங்களைப் பாவியுங்கள். அத்துடன் இடுகையின் மேற்புறத்தில் உங்கள் நட்சத்திர வாக்கையும் இட்டுவிட்டு செல்லுங்கள்.
நன்றி