Sunday, June 28, 2009

அஞ்சலி: மூத்த கவிஞர் இ.முருகையன்

மூத்த கவிஞர் இ.முருகையன் (23-04 -1935 - 27 -06 -2009)

தேசிய கலை இலக்கியப் பேரவையின் தலைவரும் ஈழத்தின் தலைசிறந்த கவிஞர்களுள் ஒருவருமான இ. முருகையன் அவர்களது பிரிவுச் செய்தி தேசிய கலை இலக்கியப் பேரவையைப் பெருந் துயரில் ஆழ்த்தியுள்ளது.

தேசிய கலை இலக்கியப் பேரவையின் தொடக்கத்திலிருந்து அதற்குத் துணையாயிருந்து இளம் படைப்பாளிகளை நெறிப்படுத்தி ஊக்குவித்ததில் அவரது பங்களிப்பு மிகப் பெரிது. தேசிய கலை இலக்கியப் பேரவையின் சஞ்சிகையான தாயகத்தின் ஆசிரியர் குழுவிற் பெரும் பொறுப்பேற்றுச் செயற்பட்டு வந்ததுடன் அதன் நூல் வெளியீடுகளிலும் அவர் ஆக்கபூர்வமான ஒரு வழிகாட்டியாயிருந்தார்.

மூத்த கவிஞர் முருகையன் கவிஞராக மட்டுமன்றித் தமிழறிஞராகவும் திறனாய்வாளராகவும் சீரிய முற்போக்குச் சிந்தனையாளராகவும் அறியப்பட்டவராவார். அரசகரும மொழித் திணைக்களத்தில் அவர் பணியாற்றிய காலத்தில் தமிழ்க் கலைச் சொல்லாக்கத்திற்கு அவர் ஆற்றிய சேவை முன்னோடியானதும் முற்போக்கானதுமாகும். அவர் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் உதவிப் பதிவாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

அவரது கவிதைகள் போன்று மொழி, சமுகம், அரசியல் ஆகிய துறைகளில் அவரது கட்டுரைகளும் மிகுந்த தெளிவும் ஆழமும் சமூகப் பயனுமுடையவையுமாவன. அவர், தன்னைச் சூழத் தவறுகள் நடந்த போதெல்லாம் அவற்றைக் கண்டிக்த் தயங்காது காய்தல் உவத்தலியன்றி ஆக்கமான விமர்சனங்களை முன்வைத்து வந்தவருமாவர். அவரது பிரிவு தமிழ் இலக்கிய உலகிற்கும் சமூக விடுதலைச் சிந்தனையாளர்கட்கும் தமிழ் அறிவுத் துறைக்கும் ஒரு பேரிழப்பாகும்.

அவரது பிரிவால் வருந்தும் அவரது மனைவியார் தவமணிதேவி அவர்கட்கும் பிள்ளைகட்கும் குடும்பத்தினருக்கும் தேசிய கலை இலக்கியப் பேரவை தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதுடன் அவருக்கான இறுதி அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்வதில் அவருடைய நண்பர்களுடனும் உறவினர்களுடனும் இணைந்து, தனது ஆழ்ந்த துயரை அவர்களுடன் பகிர்ந்து கொள்கிறது.


பொதுச் செயலாளர்
தேசிய கலை இலக்கியப் பேரவை

5 பின்னூட்டங்கள்:

கானா பிரபா said...

அன்னாரின் ஆத்மா சாந்திடையட்டும், இவர் குறித்த பகிர்வுக்கு உங்கள் தளத்தில் இருக்கும் படத்தை நன்றியோடு பகிர்கின்றேன்.

ஒரு அகதியின் நாட்குறிப்பு !!! said...

இலக்கிய உலகில் தன்னரும் கவிகளால் மனித நேயத்தையும்,சமூக மேம்பாட்டையும் வளர்த்தெடுத்த ஆளுமைக்கவிஞர், அரும்பெரும் கவிஞர் முருகையன் அவர்களது இழப்பு ஈடுசெய்ய முடியாதது.அவரது கவிதைகள் போன்று மொழி, சமுகம், அரசியல் ஆகிய துறைகளில் அவரது கட்டுரைகளும் மிகுந்த தெளிவும் ஆழமும் சமூகப் பயனும் பெறுமதியும் வாய்ந்தவை. அன்னாரின் இழப்பை மனம் ஏற்க மறுக்கிறது.எனினும் அன்னாரின் தடம் பற்றி அவர் வழியில் மனுக்குல விடியலுக்காய் குரல் கொடுப்போம்.
"கவிஞர் சித்திவினாயகம்"

Shan Nalliah / GANDHIYIST said...

Sympathies to his family and friends/fans!

ilangan said...

தங்களுடைய புதிய பதிவுகளை எதிர்பார்த்தவண்ணம்
ilangan.blogspot.com

மதுவர்மன் said...

இலங்கன்,

உங்களின் ஆதங்கம் புரிகின்றது. தமிழ் பூங்காவை புதுப்பொலிவோடு விரைவில் எதிர்பாருங்கள்.

Post a Comment

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம். அனைவரும் இந்த வலைப்பூவை வாசிப்பார்கள். எனவே நல்ல வார்த்தைப் பிரயோகங்களைப் பாவியுங்கள். அத்துடன் இடுகையின் மேற்புறத்தில் உங்கள் நட்சத்திர வாக்கையும் இட்டுவிட்டு செல்லுங்கள்.
நன்றி