Thursday, September 4, 2008

கடவுள் என்பது கற்பனையா, உண்மையா? - பரிசோதனை முடிவுகள்

புத்த மதம் சொல்கின்றது மற்ற மதங்கள் சொல்கின்ற கடவுள் என்ற விடயம் இல்லை என்று, அது ஒரு கற்பனை விடயம் என்று.

இந்து மதமும், ஏனைய மதங்களும் கடவுள் என்று பலவாறாக சொல்கின்றன. சரி விஞ்ஞான முறையில் இப்பிரச்சினையை அணுகினால் என்ன. அதற்கு ஒரே வழி பரிசோதனை செய்து பார்த்தால் தான் உண்டு.

மிக மிக அண்மைய பரிசோதனையொன்றின் முடிவுகள் இங்கே. (பதிவின் இறுதியில் முடிவுகள்)

கொழும்பு இந்து ஆலயம் மீது பௌத்த பிக்கு தலைமையிலான காடைக்கும்பல் தாக்குதல்

[வியாழக்கிழமை, 04 செப்ரெம்பர் 2008, 04:55 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்]
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு கிராண்ட்பாசில் உள்ள சிறீ முத்துமாரி அம்மன் ஆலயத்தை பௌத்த பிக்கு ஒருவர் தலைமையிலான காடைக்கும்பல் தாக்கி சேதமாக்கிள்ளது. இதில் ஆலயத்தின் முன்பக்க கோபுரமும் உட்பக்கத்தில் உள்ள விக்கிரகங்களும் சேதமடைந்துள்ளன.

இந்த இந்து ஆலயம் புனருத்தாரணம் செய்யப்பட்டு நேற்று புதன்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.
இந்நிலையில் இன்று அதிகாலை 2:00 மணியளவில் ஆலயத்துக்குச்சென்ற பௌத்த பிக்கு தலைமையிலான காடைக்கும்பல் ஆயலத்தை அடித்து நொருக்கி சேதமாக்கியுள்ளது.


இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய கிராண்ட்பாஸ் காவல்துறையினர் தாக்குதல் நடத்திய பௌத்த பிக்குவையும் மேலும் மூவரையும் கைது செய்துள்ளனர்.
கிராண்ட்பாஸ் கெமல் மாவத்தையில் அமைந்துள்ள சிறீ முத்துமாரி அம்மன் ஆலயப்பகுதியில் பெரும்பான்மையான தமிழ் மக்களே வாழ்ந்து வருகின்றனர்.


இந்த ஆலயத்துக்கு அருகில் பௌத்த கோவில் ஒன்றும் உள்ளது. இந்த பௌத்த கோவிலைச் சேர்ந்த பௌத்த பிக்குவே சிறீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பௌத்த பிக்கு சிறீ முத்துமாரி அம்மன் ஆயலத்தைச் சூழவுள்ள தமிழ் மக்களை அச்சுறுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பௌத்த பிக்கு பாலியல் வல்லுறவு உட்பட்ட வேறு பல குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக காவல்துறையினரால் விசாரணை செய்யப்பட்டு வந்ததாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

##################################################################################

எப்படியிருக்கின்றது. நாங்களெல்லாம் (என்னையும் சேர்த்துத்தான், நானும் ஒரு இந்து தான்) கடவுள் இருக்கு என்று நம்பி சிலையெல்லாம் செய்து, கோயில் கட்டி கும்பிடுறம், ஆனால் ஆருக்கு உண்மையான உண்மை தெரிஞ்சிருக்கு எண்டு பாருங்கோ. புத்த பிக்குவுக்கு தானே உண்மை தெரிஞ்சிருக்கு. ஏனெண்டால் புத்தர் அப்பிடி தானே சொல்லியிருக்கிறார். அதாலை தானே புத்த பிக்குவும், காடையர் கூட்டமும் ஒரு பயமும் இல்லாமல் வந்து உடைச்செறிஞ்சிருக்கினம்.

நாங்கள் கடவுள் உண்மை எண்டு நம்பிக்கொண்டு, அதுகளுக்கெல்லாம் எவ்வளவு பயப்பிடுறம், எவ்வளவு பணம், பொருளை அநியாயம் செய்யுறம். எவ்வளவு நேரத்தை வீணாக்கிறம்.

கடவுள் எண்டது கற்பனை எண்டதாலை தானே, சிவலிங்கம் இரண்டு துண்டாக போகும்வரைக்கும், முத்துமாரியம்மனின்ரை முகத்தை உடைக்கும் வரைக்கும், ஏன் அந்த புத்த பிக்கு பாலியல் வல்லுறவுகள் புரியும்வரைக்கும் ஒண்டுமே நடக்கேல்லை.

அதுக்குள்ளை வேற அதைத்தாறதுக்கு, இதைத்தாறதுக்கு என்டு அண்மையிலை பால்குட பவனியெல்லாம் எடுத்தவை. எங்கடை சனங்கள் எப்பதான் இப்பிடியான சம்பவங்களையெல்லாம் (மடுமாதா சொரூபம் உட்பட) தங்கடை நம்பிக்கைகளோடை தொடர்புபடுத்தி சிந்திக்கப்போகுதுகளோ!

அதுக்காக, நடந்த சம்பவம் சரியெண்டு நான் சொல்லவரவில்லை. புத்த மதத்தவர்கள் இந்து மதத்தவர்கள் மீது வெறுப்புக்கொண்டது, இந்தமாதிரி தாக்கினது பிழை. ஒருத்தரை ஒருத்தர் வெறுக்கவைக்கிறதிலை மதங்கள் பெரும் பங்காற்றுகின்றன. மதநூல்களே மற்ற மதத்தவரை 'விடாதே, பிடி, கொல்' என்று தானே சொல்கின்றன. சமூகத்தை பிளவுபடுத்துகின்றவேலைகளையும் இந்த மதங்கள் செய்கின்றன. ஆனால், இந்த மேற்படி சம்பவத்துக்கு, மதமல்லாமல், சிங்களவர்களுக்கு, இயல்பாகவே தமிழர்கள் மீதுள்ள வெறுப்பும் காரணமாகவிருக்கலாம். இனம் என்ற பரிமாணத்திலும் வைத்து சிந்திக்கவேண்டிய விடயம் இது. என்னவிருந்தாலும் கடவுள் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்காது தானே. பரிசோதனை முடிவு விளங்கினால் சரி.

உதவி:
புதினம்.

Monday, September 1, 2008

பாலியல் வன்புணர்வு, இயற்கையானது தானே!

இன்னும் பல புதிய (தேடியறிந்த) விடயங்களை உள்வாங்கி, இக்கட்டுரை மேலும், ஆதாரங்களுடன் செம்மைப்படுத்தப்படவுள்ளது. எனினும், ஒரு பொதுவான கருத்துருவைப்பெற்றுக்கொள்ள, இக்கட்டுரையை தொடர்ந்து நீங்கள் வாசிக்கலாம்.

பெரும்பாலும் பாலியல் வன்புணர்வு என்று வரும்போது, வன்புணர்வுக்கு உள்ளாகுபவர்கள் பெண்களாகவும், வன்புணர்வை மேற்கொள்பவர்கள் ஆண்களாகவும் இருப்பதை காணலாம். அதற்காக, ஒரேயடியாக, பாலியல் வன்புணர்வால் பாதிக்கப்படுபடுவது பெண்களே என்று சொல்லமுடியாது, ஏனென்றால் ஆண்களும் பெண்களால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படும் சம்பவங்களும் இடம்பெறுகின்றன, சிறிய அளவில், பெரும்பாலும் மேலை நாடுகளில். என்றாலும், பாலியல் வன்புணர்வுக்கு அதிகம் இரையாகுபவர்கள் பெண்களே.

ஒப்பீட்டளவில், பலியல் வன்புணர்வுக்கு பெண்கள் அதிகளவில் இரையாக்கபடுவதற்கு முக்கிய காரணம், ஒரு ஆணினால் ஒரு பெண்ணின்மீது நிகழ்த்தப்படும் வன்புணர்வில் கூட, அந்த பெண்ணினால் ஆணை உடல்ரீதியாக எதிர்த்துப்போரிட முடியாமையாகும். ஒரு ஆணையே எதிர்த்துப்போரிட முடியாத நிலை நிலவும்போது, ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்கள் பாலியல் வன்புணர்வில் ஈடுபடும்போது, பெண்ணொருத்தி ஒன்றுமே செய்யமுடியாதவளாகின்றாள்.

அத்துடன், சமூகரீதியாக, ஆண்களோடு ஒப்பிடுகையில், போரிடும் திறன்குறைந்தவர்களாகவும், கபடபுத்தி குறைந்தவர்களாகவும் வளர்க்கப்படுவதும் இன்னொரு காரணம். ஏனெனில் அநேக வன்புணர்வுகளில், ஆண்களால் பெண்கள் கபடத்தனமாக ஏமாற்றப்பட்டே வன்புணர்விற்கு உள்ளாக்கப்படுகின்றார்கள். அத்துடன், உயிரியல் பரிணாம (Biological Evolution) மாற்றத்தில் (இயற்கைத்தேர்வு - Natural Selection மூலம்) அடைந்துகொண்ட ஆண்பெண் உடல்ரீதியான வேறுபாடுகள் (இயல்பாக ஆணின் உடலமைப்பு, பெண்ணைவிட பலம்பொருந்தியதாக இருத்தல், உடலுறவில் பெண்கள் பெற்றுக்கொள்ளும் அந்தத்தில் (Receiving End) இருத்தல், பாலுறுப்புக்களின் அமைப்பு என்பன) ஆணினால் பெண்மீதான வன்புணர்வுகளை அதிகமாக்கியிருகின்றது.

சரி, இத்தகைய, பாரிய சமூககுற்றமாக கருதப்படுகின்ற, பாதிக்கப்படுபவருக்கு உடல்ரீதியாகவும், உளரீதியாகவும் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்ற, குற்றம் புரிந்தவரை சிறைக்குள் தள்ளக்கூடிய இந்த பாலியல் வன்புணர்வு என்ற நடத்தை இயற்கையானதா, அல்லது மனிதனால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்ற ஒரு நடவடிக்கையா?

இலகுவாக சொல்லப்போனால், மனிதனை மறந்துவிட்டு மற்ற விலங்கினங்களை அவதானித்துப்பருங்கள். பெரும்பாலும் அவை பாலியல் வன்புணர்விலேயே ஈடுபடுகின்றன. அதாவது ஆண்விலங்கு, பெண்விலங்கை வலிந்தே உடலுறவு கொள்கின்றது. உதாரணத்துக்கு, நாம் அன்றாடம் அவதானிக்கக்கூடிய, நாய்கள், கோழிகள், மாடுகள், ஆடுகள், பூனைகள் போன்ற விலங்குகளை பார்த்தீர்களானால், வன்புணர்வே இடம்பெறுவதை அவதானிக்கலாம். அங்கே பெண்விலங்கு முடிந்தவரை உடலுறவை தவிர்க்கவே முயற்சிக்கும், ஆனாலும் ஆண்விலங்கின் ஆதிக்கத்தால் இறுதியில் வன்புணர்வுக்கு உள்ளாகின்றது. ஆடு, மாடு, நாய், கோழி, பூனை போன்ற விலங்குகள் மட்டுமல்ல, அநேகமாக எல்லாவிலங்குகளிலுமே இந்த உடலுறவுக்கு முந்திய போராட்டம் நிகழ்வதை காணலாம்.

கலாச்சார மாற்றத்தில், சொத்துடைமை என்ற கண்ணோட்டத்தில், ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற வரையறையை மனிதன் என்ற விலங்கு ஏற்படுதிக்கொண்டது. ஆனால் இந்நிலைமை மற்ற விலங்கினங்களில் காணப்படுவதில்லை. பெரும்பாலும் ஒரு பெண்விலங்குடன் எந்த ஆண்விலங்கு உடலுறவு கொள்வதென்பதில், ஆண்விலங்குகளிற்கிடையில் ஒரு பெரும் போட்டியே (சண்டையே) இடம்பெறும். நாய்களிலும், பூனைகளிலும் இந்த போட்டி உச்சக்கட்டமாக இருக்கும். அந்த போட்டியில் முன்னிற்கும் ஆண்விலங்கு, பின்னர் பெண்விலங்கை அடக்கி வன்புணர்வை மேற்கொள்ளும். ஆனாலும் எல்லாநேரத்திலும் ஆண்விலங்கே உடலுறவை தீர்மானிப்பதில்லை. ஆகக்குறைந்தது எந்த ஆண்விலங்குகளுடன் உடலுறவு கொள்ளக்கூடாது என்பதை பெண்விலங்குகளும் தீர்மானிக்கின்றன தான். அதாவது, பாலியல் உறவுக்கான ஜோடியை தெரிவுசெய்தல் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானதாகவே இருக்கின்றது. ஏனென்றால், பெண்நாய்கள், சில ஆண்நாய்களை முற்றுமுழுதாக எதிர்ப்பதையும், சில ஆண்நாய்களுக்கு ஓரளவு இடம்விட்டுக்கொடுப்பதையும், சில ஆண்நாய்களுக்கு எந்தவித எதிர்ப்பை காட்டாதிருப்பதையும் அவதானித்தால், இந்நிலைமை புலப்படும்.

அதிலும், சில சமூக விலங்குகளில் (Social Animals) நிலைமை கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். கூட்டம் கூட்டமாக அவை வாழ்வதால், பெரும்பாலும் வலிமையுள்ள ஒரு ஆண்விலங்கு கூட்டத்துக்கு தலைமை தாங்குவதை காணலாம். கூட்டத்திலுள்ள பெரும்பாலான பெண்விலங்குகளுடன் உடலுறவு கொள்வது இந்த தலைமை தாங்கும் ஆணாகத்தான் இருக்கும். அதுவும் வன்புணர்வாக தான் இருக்கும். ஏனைய ஆண்விலங்குகள், பெரும்பாலும் அந்த கூட்டத்துக்கு பணிபுரிபவையாகவே இருக்கும். இந்த சமூக கட்டமைப்புகளுக்கிடையில் சிறிது சிறிது மாற்றங்கள் காணப்படலாம். எவ்வாறாக இருந்தாலும், இறுதியாக பெண்விலங்கு மீது புரியப்படுவது, வன்புணர்வாகவே இருக்கும். இந்த சமூக கட்டமைப்புக்களை பல்வேறு குரங்கு வகைகள், சிங்கம், புலி போன்ற விலங்குகளில் அவதானிக்கலாம்.

மனித இனத்தின் ஆரம்பகட்ட வளர்ச்சியில்கூட (உதாரணத்துக்கு எமது மூதாதை மனித இனங்கள்) இந்த மேற்படி அடிப்படை சமூகக்கட்டமைப்பே காணப்பட்டது. அப்போதும் ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற முறை இருக்கவில்லை. வலிமையுள்ள ஆண், தனக்கு பிடித்த பெண்ணுடன் உடலுறவு கொள்ளும் நிலைமையே காணப்பட்டது. அந்த உடலுறவை தீர்மானிப்பது ஆணாகவே பெரும்பாலும் இருக்கும். அதாவது ஒரு வன்புணர்வு நிலையே காணப்பட்டது.

மனிதனைப்போலன்றி ஏனைய விலங்குகளில், பாலியல் வேட்கையென்பது சிந்தித்து வருவதல்ல, முற்றுமுழுதாக ஓமோன்களில் (Hormones) ஆதிக்கத்தாலேயே அவ்விலங்குகளில் பாலியல் நடத்தை என்பது கட்டுப்படுத்தப்படுகின்றது. காலநிலை மாற்றங்கள் போல, ஆண்டின் சில பகுதிகளிலேயே விலங்குகள் பெரும்பாலும் உடலுறவு கொள்கின்றன. ஆண்விலங்கும், பெண்விலங்கும் இனப்பெருக்க உடலுறவில் ஈடுபடுவதற்கான ஒரு காலப்பகுதி இருக்கும், அக்காலப்பகுதியில் அவற்றில் உடல்ரீதியான(அக, புற) மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஆணிற்கு வேட்கையேற்படும்போது, பெண்விலங்குமீது வன்புணர்விலீடுபடுகின்றது. ஏனென்றால் அவ்விலங்குகள், சிந்தித்து, ஒன்றையொன்று புரிந்து, புரிந்துணர்வினடிப்படையில் புணர்ச்சியிலீடுபடுவதில்லை. உடலுறவை, மனிதனைபோல (டொல்பினயும் சேர்த்து) கிளர்ச்சியூட்டம் விடயமாக அவை புரிவதில்லை. மாறாக அவற்றின் உடலுறவு நடத்தை ஓமோன்களாலேயே கட்டுப்படுத்தப்படுகின்றன.

மனிதனிலோ, நினைத்தவுடன் உடலுறவு கொள்ளக்கூடிய தன்மை காணபடும். பகுத்தறிவு, சிந்தித்து செயலாற்றல் என்ற பண்புகளால் இது சாத்தியமாகின்றது. அதை பெரும் கிளர்ச்சியூட்டும் விடயமாகவும் மனிதன் பார்க்கின்றான். டொல்பின்களும் இவ்வாறே நடந்துகொள்கின்றன என்று ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன.

விலங்கு இராச்சியத்தை பார்த்தால், ஆணாதிக்க நிலைமையையே எங்கும் காணலாம். அதனால் தான், மனித இனத்தில் கூட, அண்மைக்காலம்வரை, ஆணாதிக்கம் அதிகமாகவே காணபட்டது. இற்றைக்கு இருநூறு முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு, பெண்கள் எவ்வளவுக்கு ஆண்களால் அடக்கியொடுக்கபட்டார்கள், எவ்வளவுக்கு உரிமைகள் மறுக்கபட்டார்கள் என்பது வரலாற்று நிகழ்வுகளையும், நூல்களையும் அறிந்தவர்களுக்கு புரியும். விலங்குகளில் காணப்படும் இந்த ஆணாதிக்கநிலைமை கூட, பரிணாம வளர்ச்சியில் பெற்றுக்கொண்ட ஒரு நடத்தையோ என்று எண்ணத்தோன்றுகின்றது.

ஏனென்றால், பரிணாம வளர்ச்சிக்கு உடலுறவு என்பதே அடிப்படை. ஆண் பெண் உடலுறவினூடாகவே பரிணாமம் என்ற மாற்றம் நிகழ்ந்துகொண்டிருக்கின்றது. நான், நீங்கள், நாய், பூனை, மரம், செடி என்பனவெல்லாம் இந்த ஆண்-பெண் உறவின்மூலமே உருவாகியிருக்கின்றன. ஆகவே இந்த ஆண்-பெண் உடலுறவை நிச்சயப்படுத்திகொள்ள, ஒருசாரார் (ஆண்) ஆதிக்கசக்தியாக உருப்பெறவேண்டிய தேவையேற்பட்டிருக்கின்றது. அதாவது ஒரு செயல் நடைபெறுவதை உறுதிப்படுத்திக்கொள்ள ஆதிக்கம் ஒரு ஆயுதமாக பாவிக்கப்பட்டிருக்கின்றது. ஏனென்றால், சிந்தித்து செயலாற்றல், பகுத்தறிவு என்பவையெல்லாம், பரிணாமத்தின் மிக மிக பிற்பட்ட காலப்பகுதியிலேயே ஏற்பட்டவை. அதனால் தான், மனித இனத்துக்கு மட்டும் இந்த ஆதிக்கம் (ஆணாதிக்கம்) இறுதியில் ஒரு பெரும் பிரச்சினையாகிவிட்டது.

ஆதிக்கம் செலுத்தி, வன்புணர்வில் ஈடுபடக்கூடிய ஆண்விலங்கே, தன்னுடைய சந்ததியை உருவாக்கிக்கொள்ள அதிக சாத்தியக்கூறுகள் காணப்பட்டது. அடுத்து உருவாகும் சந்ததிகூட ஆதிக்கம்செலுத்திய ஆண்விலங்கினதும், அடங்கிப்போன பெண்விலங்கினதும் இயல்புகளைக்கொண்டதாகவே இருக்கும். அவ்வகையில் அடுத்து வரும் சந்ததியிலுள்ள ஆண்விலங்குகள், இன்னும் ஆதிக்க தன்மையுடையவைகளாக இருக்கும். இவ்வாறே ஆண்விலங்குகள், ஆதிக்கத்துக்கான உடற்கூறுகளை பெற்றுகொண்டன என்று எண்ணத்தோன்றுகின்றது. பரிணாமத்தின் அடிப்படையான ‘தக்கன பிழைத்தல், இயற்கை தேர்வு' என்பது இந்த ஆண்பெண் வேறுபாடுகளுக்கு வழிசமைத்தது.

ஆகவே பாலியல் வன்புணர்வு என்பது, அடிப்படையில் மிக மிக இயற்கையான ஒரு நடத்தை. விலங்கினங்களின் பரிணாம வளர்ச்சிப்பாதையில் இந்நடத்தை ஒரு அவசியமான நடத்தையாகவும் இருக்கின்றது. பாலியல் வன்புணர்வு, மனிதனை தவிர ஏனைய விலங்கினங்களில் ஒரு குற்றமாகவோ, பிரச்சினையாகவோ நோக்கப்படுவதில்லை. அவைக்கு அது ஒரு பிரச்சினையான விடயமுமல்ல.

நாகரிகத்தில் வளர்ச்சியடைந்துவிட்ட மனிதர்கள் நாம், பாலியல் வன்புணர்வை ஒரு பாரிய குற்றமாகவே சடடப்புத்தகங்களில் கூட எழுதிவைத்துவிட்டோம். ஆண்-பெண் சம்த்துவம் என்பது நாகரிக நிலையில் நல்ல நிலையை அடைந்துகொண்டே வந்திருக்கின்றது. இன்னும் முழுமையான ஆண்-பெண் சமத்துவத்தை காண்முடியவில்லை தான். ஆண்-பெண் சமத்துவம் மிக மோசமாக உள்ள நாடுகளில், பெண்களுக்கெதிரான பாலியல் வன்புணர்வு அதிக அளவில் இடம்பெறுவதை அவதானிக்கலாம். அதாவது ஆணாதிக்கம் அதிகமாகவுள்ள சமுதாயங்களில் பெண்களுக்கெதிரான பாலியல் வன்புணர்வுகள் அதிகமாக இருக்கும்.

ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற முறைமைகள் ஏற்படுத்தப்பட்டு, திருமண முறைகளை ஏற்படுத்திய பின்பு, சந்ததியை பெருக்க்கிக்கொள்ள பாலியல் வன்புணர்வு என்ற நடத்தைக்குரிய தேவை இல்லாமலேயே போய்விட்டது. மனித இனத்தில், புரிந்துணர்வினடிப்படையிலான உறவுமுறைகள் என்றானபின்பு, வன்புணர்வுக்கு வேலையில்லாமல் போய்விட்டது தான். ஆனாலும் அடிமனதிலுள்ள வன்புணர்வு என்னும் அபரிமித இச்சை இன்னும் பலரை விட்டு போய்விடவில்லை.

சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம், பெண்களுக்கெதிரான பாலியல் வன்புணர்வுகள் இடம்பெற்றுகொண்டிருக்கின்றன. முக்கியமாக, பாதுகாப்பற்ற சூழ்நிலைகளில் பெண்கள் அகப்படும்போது ஆண்களால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள். அத்த்துடன், உலகெங்கும் மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைகளில், பெண்களுக்கெதிரான ஒரு வன்முறை ஆயுதமாக, ஒரு இன அழிப்பு ஆயுதமாக இராணுவ வீரர்களால் பெண்கள்மீது பாலியல் வல்லுறவுகள் நிகழ்த்தப்படுகின்றன. இத்தகையதொரு நிலைமையை இலங்கையிலும் காணலாம். இலங்கையில் நடைபெறும் பாலியல் வல்லுறவுக்குற்றங்களில் அதிகமானவை ஆயுதம் தாங்கியவர்களாலேயே (இராணுவம், பொலிஸ், ஆயுதக்குழுக்கள்) நிகழ்த்தப்படுகின்றன.

அறிமுகமில்லாதா ஆணினாலோ/ஆண்களினாலோ பெண்களின்மீது புரியப்படும் உடலுறவு மட்டுமல்ல பாலியல் வன்புணர்வு. கட்டிய கணவனால் கூட எத்தனையோ மனைவிகள் (பெண்கள்) பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள். அதாவது, கணவன் மனைவியாக இருந்தால் கூட, பெண்ணின் விருப்பத்திற்கெதிராக ஆண் உடலுறவிலீடுபடுவானாயின் அதுவும் பெண்ணின்மீது புரியப்படும் பாலியல் வல்லுறவு தான், குற்றம்தான். இத்தகைய குற்றங்களுக்கும் நீதிபெற்றுக்கொள்ள சட்டத்தில் இடமிருக்கின்றது.

மனித சமுதாயம் இன்னுமே ஆணாதிக்க சமூகக்கட்டமைப்பிலிருந்து விடுபடுவதாயில்லை. அதனால் தான், இன்று எண்ணுக்கணக்கற்ற பெண்கள், தங்கள் கட்டிய கணவனாலேயே வல்லுறவுக்குட்படுத்தப்படுகின்றார்கள். இன்று எத்தனை ஆண்கள், தங்களுடைய மனைவிக்கு, கட்டிலிலாவது சமபங்கு வகிக்கும் உரிமையை வழங்கக்கூடிய புரிந்துணர்விலிருக்கின்றார்கள். அல்லது அத்தகை உரிமையை எடுத்துக்கொள்ள எத்தனை பெண்கள் துணிவுடன் தயாராயிருக்கின்றார்கள். கட்டிலிலும் ஆணாதிக்கத்தின் அரசாட்சி தான். ஆணாதிக்க சமுதாயத்தில் வாழ்ந்து பழகிவிட்ட ஆண்களும், அதே சமுதாயத்தில் வாழ்ந்து பழகிவிட்ட பெண்களுமே இந்நிலைமைகளுக்கு காரணம். ஆகக்குறைந்தது கட்டிய கணவனால் பெண்கள் வல்லுறவுக்குள்ளாக்கப்படுவதேனும் இல்லாமல் செய்யப்படலாமே.

பரிணாம வளர்ச்சியில் மனித இனம் தோன்றாதவரை [சிந்தித்து செயலாற்றும் தன்மை (Rationality, Setting up goals and working towards them) அமையப்பெறாதவரை], பாலியல் வன்புணர்வு ஒரு இயற்கையான, அவசியமான நடத்தை தான். இருப்புக்கு இன்றியமையாததொன்றாக அது இருந்தது, ஆனால், இன்று மனித இனத்துக்கு அது தேவையில்லாததொன்று, பிரச்சினையானதொன்று. ஆண்-பெண் சமத்துவம் பேணப்படவேண்டிய தேவையிருக்கின்றது. பெண்ணினதும், ஆணினதும் உரிமைகள், உணர்வுகள் சமமாக மதிக்கப்படவேண்டிய தேவையிருக்கின்றது. பெண்ணை ஆணின் அரைவாசியென்றும், தரம் குறைந்தவளென்றும், ஆணிற்கு அடங்கிநடக்கவேண்டுமென்றும், பெண்களின் குரல்வளையை நசுக்கிய மதநூல்களை ஒருபுறம் தூக்கிப்போட்டுவிட்டு, எது நீதி, எது சரி என்று ஆராய்ந்தொழுகவேண்டிய காலமிது. பாலியல் வன்புணர்வின்மூலம் இனத்தை பெருக்கவேண்டிய தேவை மனித இனத்துக்கு என்றோ இல்லாமல் போய்விட்டது. அதற்கான உரிய சமூகக்கட்டமைப்புக்களை நாங்கள் வளர்த்தெடுத்துவிட்டோம். பாலியல் வன்புணர்வு, மனித இனத்தில் அடக்குமுறையின் சின்னமாக மாறிவிட்டது. வெட்கக்கேடான விடயமாக மாறிவிட்டது. ஆகவே இந்த பாலியல் வன்புணர்வு என்ற துர்நடத்தையை, குற்றத்தை மனித இனத்திலிருந்து முற்றுமுழுதாக அகற்றுவதற்கு, ஆண், பெண் வேறுபாடின்றி அனைவருமே பாடுபடவேண்டிய தேவையிருக்கின்றது.

Sunday, August 17, 2008

எனது சமூகத்தின் ஒரு கோரப்பக்கம்

உலக மதங்களில் இந்து மதம் மட்டுமே வலியுறுத்துகின்ற சமத்துவமின்மையை வெளிச்சம் போட்டுக்காட்டுகின்ற ஆவணப்படம் இது. இந்து மதத்தின் சாதி முறைமையின் (சதுர் வர்ணம்) கோரமுகத்தை வெளிப்படுத்துகின்ற படம். இதை இந்து மதத்தின் ஒரு கோரப்பக்கம் என்றே சொல்லவேண்டியிருக்கின்றது ஏனென்றால், இந்த சாதியமைப்பு முறையென்பது, நாளாந்தம் (முக்கியமாக இந்தியாவில்) பல கோர சம்பவங்களுக்கு முற்றுமுழுதான காரணமாக அமைகின்றது.

இதை எனது சமூகத்தின் ஒரு கோரப்பக்கம் என்று தலைப்பிடவேண்டியதாயிற்று. ஏனென்றால், நான் பிறந்து வளர்ந்த மதமும் இந்த மதம் தான். என்னுடைய, பெற்றோர், சகோதரர்கள், நண்பர்கள், உறவினர்கள் பலர் பின்பற்றும் மதமும் இதுதான்.



வெறும் மூடநம்பிக்கைகள், ஒரு கூட்டத்தார் இன்னொரு கூட்டத்தாரை அடக்கியாள உருவாக்கப்பட்ட வரைமுறைகள், எவ்வளவு கோரத்தாண்டவமாடுகின்றது என்பதற்கு இப்படம் சாட்சி.

நானறிந்தவரையில், வேறு எந்தமதமும் சமமின்மையை வலியுறுத்திச்செல்லவில்லை. வேறு எந்த மதமும், பிறப்பால் ஒரு கூட்டத்தாரை உயர்ந்தவர்களென்றும், இன்னொரு கூட்டத்தாரை தாழ்ந்தவர்களென்றும் சொல்லுவதை காணமுடியவில்லை.

கடவுள் இல்லை என்பதற்கு உள்ள ஏனைய ஆதாரங்களுடன், கடவுளின் மதம் என்று சொல்லப்படுகின்ற இந்த இந்து மதத்திலுள்ள கேவலம் இன்னொரு உறுதியான ஆதாரமாகும். இன்னும் தன்னை ஒரு இந்து என்று சொல்லிக்கொள்கின்ற ஒவ்வொருவனும் வெட்கப்படவேண்டும்.

அடிமைக்குணமும், அறியாமையாலும் ஆட்கொள்ளப்பட்டிருக்கின்ற நம்மவர்களில் பலர், இன்னும் இந்து மதம், உயரிய பண்புகளை வலியுறுத்துகின்றமதம், உலகின் தலை சிறந்த மதம் என்று பெருமையடித்துக்கொள்வதில் ஒன்றும் ஆச்சரியமில்லை தான்.

பாரபட்சமும், கொடுமைகளும், பாலியல் வக்கிரங்களும், ஏமாற்று வித்தைகளும் நிறையப்பெற்றதே இந்த இந்து மதம். இன்றைக்கும், பல பிழைக்கவழியில்லாத மனிதர்கள் (சாயி பாபா, அம்மா, கல்கி பகவான், மேல்மருவத்தூர் அம்மா, அமிர்தானந்த மயி, இன்னும் பலர்) பலர், பல ஏமாற்று வித்தைகளை புரிந்து, மக்களை மயக்கி, தம்மை கடவுள்கள் என்று சொல்லி, ஏமாற்றுகின்றார்களென்றால், அதுவும் இந்து மதத்தில் காணக்கூடிய ஒரு சிறப்பே.

உதவி.
http://sinnakuddy1.blogspot.com/2008/07/blog-post_9318.html

Saturday, August 16, 2008

எனக்குள் எழும் கேள்விகள்

வணக்கம்! எப்படி இருக்கிறியள்...?

என்னுடைய பிரார்த்தனையும் எல்லோரும் சுகமாக இருக்க வேணுமென்றுதான். சுகம் விசாரிக்கின்ற இவன் யாரென்று நீங்கள் கேட்டீர்கள் என்றால், என்னுடைய அனுமானமும் சரியாகவே இருக்கின்றது என்று அர்த்தம் பாருங்கோ...

நான் ஒன்றும் வெளியூர்க்காரனல்ல. இப்ப எல்லாம் போறாங்களே சந்திரன், செவ்வாய், வியாழனென்று... அங்க இருந்து வரவில்லை. ஏன் அமெரிக்கா என்ன நிறமென்று கூட எனக்கு சத்தியமாக தெரியாது பாருங்கோ. உங்களில் ஒருத்தனாக உங்களில் இருந்தே வருகின்றேன்.

எனக்கு சில விசயங்களை நீங்கள் 'கிளியர்' பண்ண வேண்டும். இல்லாட்டில் தலை வெடித்துவிடும் போல இருக்கு. அதுதான் நீங்கள் மணித்தியாலக்கணக்காக தூங்கிக் கொண்டிருக்கும் தொ(ல்)லைக்காட்சி நாடகங்களில் வந்து கேட்பம் என்றால், என்னுடைய முகத்துக்கு அது 'கொஞ்சம்' ஓவராம்! அதுதான் இந்த புளொக்கில தரிசனம் தாறன்.

சரி, என்ர டவுட்டுக்களை சொல்லிறன். தெரிஞ்சால் 'கொமென்ட்' அடிச்சு பதில் தாங்கோ... அதி கூடின smsகளை அனுப்பி அதிபெறுமதியான பரிசில்களை வெல்லுங்கள். மன்னிக்கவும்... வானொலி கேட்கிற பழக்கம் தன்னாலே வந்திட்டுது...

மைக்கல் பெல்ப்ஸ், இவரை உங்கள் எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கும் என்று நம்புறன். அதுதான் அவருடைய நண்பரே அவருக்கு 'உன்னுடைய கேவலமான முகத்தை எத்தனை தடவையடா ரி.வியில பார்க்கிறது' என்று sms அனுப்பியும் திருந்தாத ஜென்மம். அவர் இன்றைக்கு எத்தனை தங்கத்துக்கு சொந்தம் சொல்லுங்கோ. ஒன்று..? இரண்டு..? இல்லை எட்டுக்கு குறி வைத்திருக்கிறார். நல்லதுதான். வாழ்த்துக்கள். ஆனால், எங்கட பள்ளிக்கூடத்தில படிக்கும்போது ஒருத்தர் மூன்று போட்டிக்கு மேல் பங்குபற்றமுடியாது என்று எழுதப்படாத சட்டமொன்று இருக்கல்லோ..? அப்படியிருக்கும்போது, ஒலிம்பிக்கில் எப்படி ஒருத்தரால் இத்தனை போட்டிகளில் பங்குபற்ற முடியும்? அமெரிக்க ஜனநாயகப் பத்திரிகைகளே... சீனாவின் ஒலிம்பிக்கில் நடைபெறும் இந்த தில்லுமுல்லுகளையும் வெளிக்கொணர்வீர்களாக. ஓ... மறந்திட்டேனே....
மைக்கல் பெல்ப்ஸ் அமெரிக்கனா..? அதுதானே மெளனம்!

அடுத்த டவுட்டு என்னென்றால், அந்த நாரதரைப்பற்றினது. விளங்கியிருக்கும் என்று நினைக்கின்றேன். நடந்து வந்த பாதை தன்னை திரும்பியும் பார்க்காதவர்... ஆயிரக்கணக்கில் பாதுகாப்புக்கு வருவம் என்டினம்... கடலில் பீரங்கிக்கப்பல் நிற்கும் என்டினம்... மாநாட்டுக்கு முதல் வந்து பாதுகாப்பை ஒழுங்கு பண்ணினவரே காற்று வாங்க ஒய்யாரமாக நடக்கும் போது...................

போன வெள்ளிக்கிழமை இந்தியாவின் சுதந்திர தினமாம். ஒருத்தர் சொன்னார் இந்தியாவையும் அகிம்சையையும் பிரிக்க முடியாதாம். எனக்கு ஏனென்று இன்னும் விளங்கவில்லை. நான் நினைக்கின்ற இந்தியாவும் அவர் சொன்ன இந்தியாவும் வேறுவேறாக இருக்குமோ? எங்களிட்ட சாப்பாட்டுப் பொட்டலங்களுடன் வந்து... பிறகு தில்லுமுல்லு செய்து... நல்லூரில் நடந்த நீராகாரமின்றிய உண்ணாநோன்புப் போராட்டத்திலேயும், மட்டு-மாமாங்கத்தில் நடந்த அகிம்சைப் போராட்டத்திலேயும் தோற்று... பின்னர் கந்தகப் பலப்பரீட்சையில் சொந்த நாடு திரும்பின இந்தியாவைத்தான் நான் நினைக்கின்றேன். அவர் யாரை நினைக்கின்றார்..?

உங்களில் யாருக்கும் தமிழ்நாட்டுடன் 'கனெக்சன்' இருக்கா? இருந்தால் தயவுசெய்து இப்ப தமிழ் பேப்பரில வருகுதே... வன்னியில் எங்கட பிஞ்சுகள் பசிக்கொடுமையால் துடிக்கிற படங்கள்... அதைக் கத்தரிச்சு நெடுமாறன் ஐயாவுக்கும் மாண்புமிகு முதல்வர் கருணாநிதி ஐயாவுக்கும் அனுப்பிவையுங்கோ. முதலாமவர் உணவு சேகரிப்பார்... இரண்டாமவர் அதை தடுத்து விட்டு நல்லதொரு கவிதை சமைப்பார்....

அப்ப நான் போய் வரட்டா..........................?

Friday, August 8, 2008

சுத்தமான குடிதண்ணீர், தாகம்தீர்க்க மட்டும்தானா?

தாகம்தணிக்க சுத்தமான குடிநீரை அருந்தும் நாங்கள், எங்களுக்கு தெரியாமல், வேறெந்த வழிகளில் அசுத்தமான நீரை உள்ளெடுக்கின்றோம் என்பது பற்றி இங்கே ஆராயப்படுகின்றது.

இப்போதெல்லாம் குடிப்பதற்கான தண்ணீர், சுத்தமாக, கிருமிகளற்று இருக்கவேண்டுமென்பதில் பரவலான விழிப்புணர்வு இருப்பது மனதுக்கு ஆறுதலளிக்கும் விடயம். குடிக்கின்ற தண்ணீரில் கவனமெடுப்பதன்மூலம், எத்தனையோவிதமான நோய்களின் தொற்றுக்களுக்கு ஆளாவதிலிருந்து எம்மை தவிர்த்துக்கொள்ளலாம். ஆனால் நான் இங்கு சொல்லவருவது என்னவென்றால், சுத்தமான குடிநீரை, குடிப்பதற்கு மட்டுமே பாவிப்பது சரியா என்பது பற்றி.

குடிக்கின்ற தண்ணீர் சுத்தமாக இருக்கவேண்டுமென்பதற்காக, குழாய் நீரை, கிணற்று நீரையோ கொதித்தாறிய நீராகவோ, இன்னும் வடிகட்டும் சாதனங்கள்மூலம் வடிகட்டியோ பருகுவதுண்டு. அதைவிடவும் இப்போது, பரவலாக போத்தல்களில் அடைத்துவிற்கப்படும் நீரை வாங்கி குடிப்பதற்கு பாவிக்கும் வழக்கமும் உண்டு. எதை செய்வதென்பது, அவரவர் பொருளாதார நிலையை பொறுத்தது. இன்னுமே குழாய்நீரையோ, கிணற்று நீரையோ அப்படியே குடிதண்ணீராக அருந்துபவர்களும் உண்டு. கிணற்று நீரையோ, குழாய் நீரையோ, அல்லது இயற்கையில் எவ்வழியிலாவது கிடைக்கும் நீரை அப்படியே அருந்தும்போது நோய்க்கிருமிகளின் தொற்றுக்களுக்கு ஆளாகநேரிடுவதோடு, அசுத்தநீரினால் மேலும்பல பிரச்சினைகள் ஏற்பட வழியுண்டு.

சரி, சுத்தமான, கிருமிகளற்ற குடிநீரை அருந்துகின்றோமென்றால், அதில் எங்கள் நோக்கம், நாங்கள் உள்ளெடுக்கும் நீருடன் அசுத்தப் பொருட்களோ, நோய்க்கிருமிகளோ உடலினுட்சென்று, நோயேற்படக்கூடாது என்பதுவே. அருந்தும் நீரில் மட்டுமல்ல, உண்ணும் எத்தகைய உணவிலும் இந்தக் கவனம் இருக்கவேண்டிய தேவையிருக்கின்றது.

ஆனால், சிலவிடயங்களில் எவ்வளவுதான் நாம் கவனமாக இருந்தாலும், மேலும் சிலவிடயங்களில் முட்டாள்தனமாக நடந்துகொள்வதால், முன்னையதுகூட பயனற்றுப்போய்விடுகின்றது.

தாகத்துக்கு குடிப்பதற்கு சுத்தமான தண்ணீரருந்தும் நாம், வாய் கொப்பளிப்பதற்கு, உணவு உண்ணமுன் வாய்கழுவுவதற்கு சுத்தமான குடிநீரை பாவிக்கின்றோமா? கைகளால் உணவுண்ணுபவர்கள் உணவுண்ணமுன் கைகளை கழுவுவதற்கு சுத்தமான குடிநீரை பாவித்து கைகழுவுகின்றார்களா? அல்லது உணவுண்ணும் பாத்திரங்களை கழுவும்போதுதான் சுத்தமான குடிநீரை பாவிக்கின்றோமா? இன்னும், அப்பிள், திராட்சை போன்ற பழங்களை உண்ணமுன் சுத்தமான நீரில் கழுவுகின்றோமா?இல்லை.

குடிப்பதற்கு உகந்ததல்ல என்று நீங்கள் ஒதுக்கிய குழாய்வழிவரும் நீரில்தானே மேற்படி வேலைகளையெல்லாம் செய்கின்றீர்கள். வாய்கொப்பளித்தபின்பு உங்கள் வாய்க்குள் இருக்கப்போவது சுத்தமற்ற குழாய்வழி தண்ணீர்தானே. கைகளை கழுவிவிட்டு உணவுண்ணுகின்றீர்களென்றால், கைகளிலிருந்து உங்கள் உணவுடன் சேரப்போவதும் அதே அசுத்த குழாய்நீர்தானே. அப்பிள், திராட்சை பழங்களை கழுவிவிட்டு உண்ணும்போது, அதே குழாய் நீரைத்தானே உள்ளெடுக்கின்றீர்கள்.

உங்களையே கேட்டுப்பாருங்கள். இவையனைத்தையும், எப்போதாவது நீங்கள் நினைத்துப்பார்த்ததுண்டா? இவைகளிலும் கவனமாக இருப்பதன்மூலம், இன்னும் உங்களுக்கு ஏற்படக்கூடிய, நீர்மூலம் பரம்பலடையக்கூடிய தைபோயிட்டு, கொலரா போன்ற இன்னும் பல நோய்களையும் தடுக்கலாமல்லவா.

குடிப்பதற்கே, சுத்தமான தண்ணிரை பெற்றுக்கொள்வதற்கு படாதபாடுபடும்போது, கைகழுவுவதற்கும், பாத்திரம் கழுவுவதற்கும், பழங்களை கழுவுவதற்கும் சுட்டாறிய, வடிகட்டிய தண்ணீருக்கு எங்கேயையா போவது, என்று நீங்கள் கேள்வியெழுப்பக்கூடும். ஏற்றுக்கொள்கின்றேன், நடைமுறைச்சிக்கல்கள் நிறைய இருக்கின்றன தான். ஆனாலும், வசதியுடையவர்கள், வீட்டிலிருப்பவர்கள், முடிந்தவரை முயற்சிக்கலாமே. ஆகக்குறைந்தது வாய் கொப்பளிப்பதற்கு, வய்கழுவுவதற்கேனும் சுத்தமான குடிதண்ணீரையே பாவியுங்கள். ஆகக்குறைந்தது வாய்வரையாவது சுத்தத்தை பேணலாமே. அதனால் உங்களுக்கு விளையப்போவது நன்மை தானே!

பிற்குறிப்பு: மூன்றாமுலக நாடுகளுக்கு பயணம்செய்யும் மேற்குலகநாட்டவருக்கு வழங்கப்படும் பயண அறிவுரைகளில் முக்கியமான ஒன்று, இந்த அருந்தும் நீரின் சுத்தம் பற்றி. போத்தலில் அடைக்கப்பட்ட அல்லது கொதித்தாறிய நீரையே அருந்தும்படி அவர்கள் கேட்கப்படுகின்றார்கள்.

அத்துடன், வாய்கொப்பளிப்பதற்கும், கைகழுவுவதற்கும் அதே நீரையே பயன்படுத்துமாறும் கேட்கப்படுகின்றார்கள். ஏனென்றால், இத்தகைய மூன்றாமுலக நாடுகளில், நீர்மூலம் தொற்றுநோய்கள் பரவக்கூடிய சாத்தியப்பாடுகள் அதிகம்.

Wednesday, August 6, 2008

நம்பிக்கைகள் பற்றி ஒரு ஆய்வு

முற்குறிப்பு: இக்கட்டுரை, 1.கட்டுரைக்கான காரணம், 2.நம்பிக்கை என்றால் என்ன, 3.மூடநம்பிகை என்றால் என்ன என்று மூன்று பகுதிகளாக எழுதப்பட்டுள்ளது. '1.கட்டுரைக்கான காரணம்', இலங்கை, கொழும்பில் நடந்த தமிழ் நிகழ்வொன்று பற்றியது. அதுவே இக்கட்டுரையை எழுதத்தூண்டியது. நிகழ்வை தவிர்த்து, நம்பிக்கைகள், மூடநம்பிக்கைகள் பற்றிய ஆய்வை மட்டும் படிக்கவிரும்புபவர்கள் 2 ஆம் 3ஆம் பகுதிகளுக்கு தாவுங்கள்.

1. கட்டுரைக்கான காரணம்

அண்மையில் கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நிகழ்ந்த, இலங்கையின் கவிஞர், கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை மொழிபெயர்த்த அரபுக்கவிஞர் ஒமர் ஹையாமின் (உமர் கையாம்,
Omar Khayyam) கவிதைகள் பற்றிய ஒரு கலந்துரையாடலிலே, மதங்களிலுள்ள மூடநம்பிக்கைகள் பற்றியும் கருத்துக்கள் கூறவேண்டியதாயிற்று.

ஏனென்றால், ஒமர் ஹையாம், இஸ்லாம் கூறிய மதமூடநம்பிக்கைகளையும், கடவுள், சொர்க்கம் என்ற கொள்கைகளையும் சாடிய, பதினோராம் நூற்றாண்டில் அரேபியாவில் வாழ்ந்த ஒரு அரபுக்கவிஞர். அத்துடன் அவர் ஒரு, கணிதவியலாளரும், வானிலையாளரும், தத்துவஞானியும் கூட. ஆனால் அவரது சில கவிதைகளை தேசிகவிநாயகம்பிள்ளை மொழிபெயர்த்திருந்த விதமோ (ஆகக்குறைந்தது அன்றைய நிகழ்வில் பேச்சாளர் நயந்த விதமோ), இந்து மத கருத்துக்களை வலியுறுத்துவதாக, ஒமர் ஹையாமின் கருத்துக்களுக்கு முரணாக இருக்கவே, ஒமர் ஹையாமை காப்பாற்ற வேண்டியதாகி, பின்பு அது மத மூடநம்பிக்கைகள் பற்றிய கலந்துரையாடலாயிற்று. பிரதான உரையை (கவிமணியில் மொழியாக்க கவிதைகளை நயந்தவர்) வழங்கியவரோ, இலண்டனிலிருந்து வந்திருந்த, இலண்டன் தமிழ்சங்கத்தில் உறுப்பினரொருவர்.

நிகழ்வுக்கு தலைமை தாங்கியிருந்தவர் ஒரு சட்டத்தரணி. வழக்கமாக பிரதான பேச்சாளர் உரையாற்றி முடிய, அவையினர் கலந்துரையாடலுக்கான சந்தர்ப்பம் வழங்கப்படும். அவையினர் தங்கள் கருத்துக்களையும், சந்தேகங்களையும் தெரிவித்தபின்பு, இறுதியில் பிரதான பேச்சாளர் அவையினரின் கருத்துக்கள், கேள்விகள், சந்தேகங்களுக்கு பதிலளிப்பார். ஆனால் பலமுறை, அவையினரின் கேள்விகளாலும், கருத்துக்களாலும், பிரதான பேச்சாளர், அவரின் உரை மறுதலிக்கப்பட்டு, தர்மசங்கடமான நிலைக்கு உள்ளாகும்போது, அவரை காப்பாற்றிவிடுவது நிகழ்வின் தலைமையின் கடமையாக இருக்கும். இக்கட்டான இச்சந்தர்ப்பங்களில், அவையினரின் கருத்துக்களுக்கு பின்பு, பிரதான பேச்சாளரை பதிலளிக்கவிடாது, தலைவரே உரிமையெடுத்து, அவரே தனுடைய கருத்துக்களை தெரிவித்து, அவையினரை மடக்கி, பேச்சாளரை காப்பாற்றிவிடவேண்டிய பரிதாபநிலையும் ஏற்பட்டிருக்கின்றது.

அவ்வாறே, கடந்த இந்த ஒமர் ஹையாம் பற்றிய நிகழ்விலும்கூட, மத மூடநம்பிக்கைகள் பற்றிய பேச்செழுந்த்போது, அவையினரை மடக்கவே தலைவர், ‘மூடநம்பிக்கைகள் என்று ஒன்றில்லை, அவ்வாறு சொல்வது பிழை. கண்ணதாசனே ஒரு தரம் சொல்லியிருக்கின்றார். நம்பிக்கை என்றாலே அது மூடம் தான். மூடியது. அதென்னய்யா பிறகு அதற்குள் மூட நம்பிக்கை. மூடநம்பிக்கை என்று குறிப்பிடுவது பிழையானது' என்று போட்டார் ஒரு போடு. (அத்தோடு இன்னும் பல பேசினார், ஆனாலும் நம்பிக்கை என்ற விடயம் சம்பந்தமாகவே இங்கே அலசவேண்டியிருப்பதால் நடந்த சம்பவத்தை இத்துடன் நிறுத்தி விடயத்துக்கு வருகின்றேன்) ஆகவே நம்பிக்கைகள், மூடநம்பிக்கைகள், மூடமற்ற நம்பிக்கைகள் பற்றி தெளிவுபடுத்தவேண்டிய ஒரு தேவையிருப்பதை உணர்ந்தேன். அதன் பயனாக தேடிப்படித்தறிந்த விடயங்கள் இங்கே தரப்படுகின்றன.

2. நம்பிக்கை (Belief) என்றால் என்ன?
தமிழில் வருவதுக்கு முதல், ஆங்கிலத்தில் Oxford Concise Dictionary (ஆங்கிலேயர்களுக்கென்றே வெளியிடப்படுவது) நம்பிக்கை (Belief) என்றால் எப்படி வரைவிலக்கணபடுத்துகின்றது என்று பார்ப்போம்.

Belief (n): 1. An acceptance that something exists or is true, especially one without proof.
                     * A firmly held openion or convicton
                     * A religious conviction
                 2. (belief in) trust or confidence in

Believe(v): 1. feel sure that (something) is true.
                      * accept the statement of (someone) as true.
                      * have religious faith
                   2. (believe in) Have faith in the truth or existence of
                   3. (believe in) have confidence in
                   4. think or suppose
                      * (believe in) think that (something) is right or acceptable.

ஆகவே மேற்படி ஆங்கில வரைவிலக்கணங்களிலிருந்து நம்பிக்கை என்றால் என்னவென்று பார்ப்போம்.

அதாவது, ஒரு விடயம் உண்மை என்றோ, அல்லது அது இருக்கின்றது என்றோ, நிறுவப்படாமல், ஏற்றுக்கொள்ளப்படுதல் நம்பிக்கை. இவற்றுள் மதவிசுவாசம், ஒருவரின் கருத்தை சரியென்று ஏற்றுக்கொள்ளல், ஒருவிடயம் சரியென்றோ, ஏற்றுக்கொள்ளத்தக்கதென்றோ நினைத்தல், கருதுதல், ஒருவரை, அவரின் பேச்சை, எதிகால நிகழ்வுகளை நம்புதல் என்பனவும் நம்பிக்கை என்பதற்குள் அடங்கும்.

அதாவது. மத, கடவுள் நம்பிக்கைகள் மட்டுமல்ல, நம்பிக்கை என்பதில் தான் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் ஓடுகின்றது. அதாவது நாளை பற்றிய நம்பிக்கை தான், இன்றைய நாளை மகிழ்ச்சிப்படுத்துகின்றது. விஞ்ஞானம் கூட இந்த நம்பிக்கைக்கு விதிவிலக்கல்ல. விஞ்ஞானத்திலுள்ள எடுகோள்களெல்லாம் (Hypothesis) ஒருவித நம்பிக்கைகள் தாம். விஞ்ஞானிகளும் பலவிடயங்களை நம்புகின்றார்கள், நம்பிக்கை வைத்துள்ளார்கள். விஞ்ஞான எடுகோள்களென்ற அந்த நம்பிக்கைகள் நிரூபிக்கப்பட்ட ஆதாரங்களையும், உண்மைகளையும் அடிப்படையாகக்கொண்டவை. விஞ்ஞான முறையிலமைந்தவை.

எவ்வாறாகினும், நம்பிக்கை எனப்படுவது ஒரு நிரூபிக்கப்படாத விடயமென்று விளங்குகின்றது. ஒரு விடயம் நிரூபிக்கபடாது, சரியென ஏற்றுக்கொள்ளப்படும்போது அது நம்பிக்கை, அதுவே நிரூபிக்கபடும்போது (விஞ்ஞானரீதியில்) அது ஒரு 'உண்மை' ஆகின்றது. இவுண்மைகளே விஞ்ஞானத்தில் விஞ்ஞான் கண்டுபிடிப்புக்களாகின்றன. இவ்விஞ்ஞான கண்டுபிடிப்புக்களுக்கு வழிவகுப்பவை பெருமளவில் விஞ்ஞான எடுகோள்கள் தாம்.

3. மூடநம்பிகை (Superstitious Belief) என்றால் என்ன?

அப்படியானால், நம்பிக்கை என்ற விடயம் நிரூபிக்கப்படாததொன்றாக இருக்கும்போது, மூடநம்பிக்கை, மூடமற்ற நம்பிக்கை என்ற வார்த்தைப்பிரயோகங்கள் சரியானவையா. அப்படி நம்பிக்கைகளுக்குள்ளும் வகைகள் இருக்கின்றனவா?

சரி, மூடநம்பிக்கை என்றால் என்னவென்று பார்ப்பதற்கு முன்னால், மூடம் (மூடத்தனம், stupidity) என்றால் என்னவென்று பார்க்கவேண்டும். மூடத்தனம் என்றால், அறிவின்மை, அறியாமை (ignorance), முட்டாள்தனம் (foolishness) என்று பல பொருள் காணலாம். ஆகவே இதிலிருந்து மூடநம்பிக்கை என்றால் அறியாமையால் ஏற்பட்ட நம்பிக்கை அல்லது முட்டாள்தனத்த்தால் ஏற்பட்ட நம்பிக்கை என்று பொருள்கொள்ளலாம்.

அப்போ, மூடமற்ற நம்பிக்கைகள் என்றால் என்ன? இதை வரைவிலக்கணப்படுத்துவதை விட உதாரணங்களுடன் பார்ப்போம். போர்க்களத்துக்கு போரிடச்சென்ற தன்னுடைய மகன், உயிருடன் திரும்பிவருவான் என்று தாயொருத்தி நம்பிக்கை வைத்திருந்தால் அத்தாயின் நம்பிக்கையை பார்த்து அது ‘மூடநம்பிக்கை' என்று சொல்வீர்களானால், நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கைகள் அனைத்தும் .மூடநம்பிக்கைகள்' என்று அறுதியிட்டு கூறுகின்றேன். எனக்கு கீழ் வேலைசெய்பவனின் செலவு கணக்கறிக்கையை நம்புகின்றேன், அதை மூடநம்பிக்கை என்று சொல்லமுடியுமா? 'இக்கட்டுரையை வாசிக்கும் நீங்கள் ஒரு சமூக ஆர்வமுள்ளவர் என்று நான் நம்புகின்றேன். அதை மூடநம்பிக்கை என்று சொல்லமுடியுமா? இலங்கையில் தமிழர்களுக்கு ஒரு விடிவுகாலம் பிறக்கும் என்ற நம்பிக்கை ஒரு மூடநம்பிக்கையாகுமா? பூமிதவிர்ந்த கிரகங்களில் உயிர்கள் வாழலாம், இன்னும் ஐந்தாண்டுகள் கழித்தும் நான் உயிர்வாழ்வேன், என்னுடைய காதல் வெற்றிபெறும் என்றெல்லாம் நம்புவது மூடநம்பிக்கையாகாது தானே.

ஆகவே இப்போது உங்களுக்கு விளங்கியிருக்கும். எப்படியான நம்பிக்கைகள் மூடநம்பிக்கைகள், எப்படியான நம்பிக்கைகள் மூடமற்ற நம்பிக்கைகள் என்று. பூமிதோன்றி 4.5 பில்லியன் ஆண்டுகள், பிரபஞ்சம் உருவாகி 14.5 பில்லியன் ஆண்டுகள் என்று விஞ்ஞான முறையில் நிறுவியபிறகும், இல்லையில்லை கிறிஸ்தவ பைபிளின்படி, இந்த பூமியும், பிரபஞ்சமும் உருவாக்கப்பட்டு 6000 ஆண்டுகள் தான் என்று நம்புவது அறியாமையால் விளைந்த நம்பிக்கையல்லவா. அது மூடநம்பிக்கையல்லவா. ஆணின் விந்தணுவும், பெண்ணின் முட்டையும் உடலுறவின் மூலம் சேர்ந்துதான் குழந்தை உருவாகமுடியும் என்றானபின்பு, அவ்வாறுதான் இயற்கைமுறையில் கருத்தரிக்கமுடியாவிட்டாலும், இன்று விஞ்ஞான் மருத்துவமுறைகளில் எப்படியாவது குழந்தைப்பேறை அடைந்துகொள்ளலாம் என்றானபின்பும், அறியாமையால், சில ஏமாற்றுக்காரரின் சொல்கேட்டு, விரதமிருந்து, விக்கிரகங்களை வழிபட்டால் தான் குழந்தை கிடைக்கும் என்று நம்பினால், அதை மூடநம்பிக்கை என்று சொல்லாமல் வேறு என்னவென்பது.

(விஞ்ஞானத்தை துணைக்கழைத்தால்) ஈர்ப்புவிசைதான் காரணமென்றால், நீ அன்றாடம் கடந்துசெல்லும் ஒவ்வொரு மாடிக்கட்டடமும் உன்மீது ஏற்படுத்தும் ஈர்ப்புவிசையுடன் ஒப்பிடும்போது, புறக்கணிக்கத்தக்க, மிக மிக தூரத்திலுள்ள கோள்கள் உன்மீது ஏற்படுத்தும் தாக்கத்தால் உனது வாழ்க்கை நிர்ணயிக்கப்படுகின்றதென்றால் இதைவிடவுமா மூடநம்பிகை வேண்டும். அதற்குள் பௌர்ணமி தினத்தில் பைத்தியம் கூடுகின்றது என்ற மூடநம்பிக்கை வேறு.

சூரியன் ஒரு கிரகமல்ல, அது ஒரு நட்சத்திரம், சந்திரனும் ஏனைய கிரகங்கள் போல ஒரு கிரகமல்ல, அது பூமியின் உபகோள் என்று நிறுவியபின்பும், இல்லையில்லை அவையிரண்டும் நவக்கிரகங்களும் அடங்கும் என்று நீ நம்புவாயானால், அது அறியாமையால் ஏற்பட்ட மூடநம்பிக்கை.

பூமி கோளவடிவானது, பூமியும் ஏனைய கோள்களும் சூரியனேயே சுற்றிவருகின்றன, நாமிருக்கும் இந்த சூரியத்தொகுதி அகண்ட பிரபஞ்சத்தின் சிறியதொரு பகுதி என்று நிரூபணமானபின்பும், இல்லையில்லை பூமி தட்டையானது, சூரியனும், சந்திரனும் பூமியையே சுற்றிவருகின்றன, பிரபஞ்சத்தின் மையம் பூமியே என்று, மதநூல்கள் சொல்வதுபோல் நம்புவாயானால் அது அறியாமையால் வரும் நம்பிக்கை, மூடநம்பிக்கை.

அகவே இப்போது சொல்லுங்கள், நம்பிக்கைகளில், மூடநம்பிக்கைகள், மூடமற்றநம்பிக்கைகள் என்று உள்ளன தானே! ஒரு நம்பிக்கை அறிவுபூர்வமாக ஏற்பட்டால் அது மூடத்தனமற்ற நம்பிக்கை, அதுவே அறியாமையால் ஏற்பட்டால் அது மூடநம்பிக்கை. விஞ்ஞான எடுகோள்கள் (Hypothesis) அறிவுபூர்வமான நம்பிக்கைகள். உதாரணத்துக்கு, பூமிதவிர்ந்த அண்டத்தின் மற்றைய பகுதிகளிலும் உயிரினங்கள் வாழலாம் என்ற எடுகோள் (நம்பிக்கை) பூமியில் எப்படி உயிரினங்கள் தோன்றின, பரிணாமமடைந்தன என்பன பற்றிய ஆராய்ச்சிகளில் முடிவிலும், அண்டம் பற்றிய ஆராய்ச்சியின் முடிவிலும் ஆதாரங்களின்மேலும் எடுக்கப்பட்ட எடுகோள். அவற்றை உண்மையென்று நிரூபிப்பதற்கான ஆராய்ச்சிகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுகின்றன.

ஆகவே மூடநம்பிக்கைகள் கட்டிக்காக்கப்படுவதற்கும், கட்டியெழுப்பப்படுவதுக்கும் காரணம் மனிதர்களின் அறியாமையே. மக்களை அறிவுடையவர்களக்குவதன்மூலம் மூடநம்பிக்கைகள் இலகுவில் ஒழிக்கப்படலாம். முடிந்தவரை, ஒவ்வொருவரும் உங்கள் அருகிலிருப்பவர்களின் அறியாமைகளை நீக்கி நல்லதொரு, மூடநம்பிக்கைகளற்ற, மூடநம்பிக்கைகள் குறைந்த, ஆரோக்கியமான சமுதாயத்தை கட்டியெழுப்புவோம்.

பிற்குறிப்பு
மூடநம்பிக்கை என்பதற்கு தமிழ் அகராதியொன்றில் கிடத்த வரைவிலக்கணம்.

மூடநம்பிக்கை: அறிவுக்கு பொருந்தாத, பழக்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்து அல்லது கோட்பாடு. Superstitious belief, widly held but unjustified belief about man and nature.

Pals Tamil e-Dictionary

உதவி
1. Concise Oxfor Dictionary.
2. Pals Tamil e-Dictionary
3.
Omar Khayyám on Wikipedia
4. Rubaiyat of Omar Khayyam
5. http://en.wikipedia.org/wiki/Universe
6. http://en.wikipedia.org/wiki/Earth
7. http://en.wiktionary.org/wiki/hypothesis
8. http://www.merriam-webster.com/dictionary/hypothesis
9.Young Earth creationism
10. Lunar Effect 
11. Planets in Astrology 
12. Flat Earth

Tuesday, August 5, 2008

நாராயணனும் நாரதரும் விக்கிரமாதித்தனும்...

பத்திரிகைகளில்> சஞ்சிகைகளில் என ஏராளமான பத்தி எழுத்துக்களை வாசிக்கக் கிடைக்கிறது. குறிப்பாக ஈழத்தில் தமிழில் வருகிற பத்தி எழுத்துக்கள் பல> பலவீனமானவை. அண்மைய சில அரசியல் நிகழ்வுகள் எனக்கு கடந்தாண்டு வாசித்த ஒரு பத்தியை நினைவுபடுத்தின. அப்பத்தியின் எள்ளல் தொனியும் நகைச்சுவையுமே அப்பத்தி என் மனதில் நிற்கக் காரணம். வாசித்துப் பாருங்கள்:

"வழக்கமாக நாராயணன் என்ற பேரைக் கேட்டால் எனக்கு நாரதர் தான் நினைவுக்கு வருவார். ஏனென்றால் நான் பார்த்த சினிமாப் படங்களிலெல்லாம் நாரதர் வரும் போது "நாராயணா" என்று சொல்லிக் கொண்டுதான் வருவார். இந்த முறை நாராயணனே திருவாய் மலர்ந்தருளியுள்ளார். ஆனாலும் அவர் பேச்சு நாரதருக்குத் தான் கூடப் பொருந்தும். இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் இலங்கைக்கு வழங்கியுள்ள பாதுகாப்பு ஆலோசனை என்னவென்றால் இலங்கை தனது பாதுகாப்புத் தேவையான ஆயுதங்களைச் சீனாவிடமிருந்தோ பாகிஸ்தானிடமிருந்தோ பெறக்கூடாது. மாறாக இந்தியாவிடமிருந்தே பெற வேண்டும் என்பதுதான். அது ஆலோசனையோ ஆணையோ எனக்குத் தெரியாது. ஏனென்றால் இலங்கையில் தீக்ஷித் முதலாக நிருபம் சென் உட்பட நிருபமா ராய் வரை இந்தியத் தூதுவர்களே கொலனி யுகத்தின் வைஸ்ராய் தோரணையிலேயே பேசி வந்திருந்த போது நாராயணன் மட்டும் ஏன் வேறு விதமாகப் பேச வேண்டும்? அவர் இந்திய அரசாங்கத்தின் சார்பாகத் தான் பேசினாரா? அதற்கான அதிகாரத்தை யார் அவருக்கு வழங்கினார்கள்? அப்படி அவர் தனக்கு இல்லாத ஒரு அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியிருந்தால் உடனேயே அதை மறுத்து இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சரோ வெளிவிவகார அமைச்சரோ ஒரு அறிக்கை விடுத்திருக்கலாம் அல்லவா! ஆனால் ஆகாசவாணியின் செய்தி ஒலிபரப்பு அந்த அறிவுரைக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறதே! எனவே அந்த ஆலோசனையையோ ஆணையையோ நாம் லேசாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

நாராயணன் ஒரு நிபந்தனையுமல்லவா போட்டிருக்கிறார். ஆயுதங்கள் தற்காப்புக்கானவையாக இருக்க வேண்டும். இங்கே எனக்கு வேறு சந்தேகங்களும் எழுகின்றன. தற்காப்புக்கான ஆயுதம் எது? கத்தி, வாள், துவக்கு? எனக்குத் தெரியக் கேடயம் ஒன்று தான் தற்காப்புக்கான கருவி. அது ஆயுதமாகுமா? மகாபாரதத்தில் நிராயுதபாணியாக்கப்பட்ட அபிமன்யுவின் கையில் அகப்பட்ட தேர்ச்சில்லும் ஒரு ஆயுதமாகச் செயற்பட்டதாம். அப்படியானால் எவையெவை தற்காப்புக்கான ஆயுதங்கள் என்று ஒரு பட்டியலிட்டால் உதவியாக இருக்கும். இஸ்ரேலின் பாதுகாப்புக்காக அமெரிக்கா வழங்குகிற ஆயுதங்களும் போர் விமானங்களும் எந்த வகையில் அடங்கும்? ஒரு வகையிற் பார்த்தால் எதிரியிடம் உள்ள எந்த ஆயுதத்தையும் முறியடிக்கக் கூடிய வேறெந்த ஆயுதமும் தற்காப்புக்கானது தான். அந்த அடிப்படையில் இன்று ஒவ்வொரு அமெரிக்கக் குடிமகனும் கையில் வைத்திருக்கும் உரிமையைக் கொண்ட பலவாறான துப்பாக்கிகள் முதலாக அமெரிக்காவின் அனைத்து அணு ஆயுதங்களும் அவற்றைக் காவிச் செல்ல வல்ல விமானங்களும் நீர் மூழ்கிக் கப்பல்களும் ஏவுகணைகளும் தற்காப்புக்கானவையே. நச்சு வாயுவும் இரசாயன ஆயுதங்களும் உயிரியல் ஆயுதங்களும் கூட அமெரிக்காவிடம் இருந்தால் தற்காப்புக்கானவையே.

எப்படியிருந்தாலும், இந்தியாவின் எஜமானர்களிடம் எந்தெந்த ஆயுதங்கள் தற்காப்புக்கானவை என்றும் எந்தெந்த ஆயுதங்கள் தாக்குதலுக்கானவை என்றும் ஒரு தெளிவான வரையறுப்பு இருக்கக்கூடும். அதன் அடிப்படையில் இந்தியா தனது காந்திய நெறிப்படி அதை நீங்கள் இந்திரா காந்திய, ராஜீவ் காந்திய, சோனியா காந்திய, ராகுல் காந்திய என்று எப்படி வைத்துக் கொண்டாலும், அந்த நெறிப்படியே, பாதுகாப்புக்கான ஆயுதங்களை மட்டுமே இலங்கைக்கு விற்கும் அல்லது விலைக்கு வழங்கி உதவும். சீனாவோ பாகிஸ்தானோ அத்தகைய ஆயுதங்களை இலங்கைக்கு விற்றால் இந்தியா யாரைத் தண்டிக்கும்? சீனாவையா? பாகிஸ்தானையா? இலங்கை அரசையா? விடுதலைப் புலிகளையா? இந்த மாதிரிக் கேள்வி ஒன்றை வேதாளம் விக்கிரமாதித்தனிடம் முதலிலேயே கேட்டிருந்தால் ஆறுதலாகத் தனது முருங்க மரத்தில் அலுப்பில்லாமல் சீவித்திருக்கலாம். விக்கிரமாதித்தனுக்குக் கதை சொல்ல ஒரு காட்டேரியோ கொள்ளிவாய்ப் பிசாசோ அகப்படாமலா போயிருக்கும்!"

ஞாயிறு தினக்குரலில் கோகர்ணன் எழுதிய "மறுபக்கம்" பத்தியிலிருந்து…..