Showing posts with label கதை. Show all posts
Showing posts with label கதை. Show all posts

Sunday, July 20, 2008

இரவில பரவாயில்லை, விடிஞ்ச பின்னாலுமா?

இன்றுடன் ஐந்து வருடங்களும் ஏழு மாதமும் ஆகிறது திருமணம் செய்து. வாய்த்த கணவரால் குறை என்று எதுவும் இல்லை. வீட்டை நான் கவனித்துக்கொள்வேன். அவர் சாப்ட்வெயர் கம்பனி ஒன்றில் கைநிறைய காசுடன்...

காலையில் எழுந்தால் எனக்கு இயலுமானவரை ஒத்தாசை செய்வார். வார இறுதிகளில் விழுந்து விழுந்து உதவிசெய்வார். பகலென்றல்ல எநத நேரமும் எனக்கு அவர் குறை வைத்தில்லை.

இன்று ஞாயிற்றுக் கிழமை, மணி ஆறரைக்கே காப்பியைக் கொண்டு பெட்ரூமிற்குச் சென்றேன். காப்பியை அருகில் வைத்துவிட்டு எழுப்பப் போனேன்.

"ஆகா, திரும்பவுமா? இரவு நடு ஜாமத்தில ஒருமுறை...இப்போ திரும்பவுமா?"

இரவு நடுஜாமம் தான் உடுப்பெல்லாம் மாத்திப்போட்டுப் படுத்தது. இப்போ என்னால மீண்டும் மாத்தமுடியாது.

விடிஞ்சு ஒரு மணியாச்சு இந்த நேரத்திலயுமா?...சலித்துக்கொண்டேன்.


"இஞ்சை ஒருக்கா வாறீங்களா...." சிறிது சத்தமாகக் கூப்பிட்டேன்.

"ஏன் என்ன நடந்தது?..." ஓடி வந்தார் கிச்சனிலிருந்து.

"பாருங்கோ மகன் செய்திருக்கிற வேலையை, இரவுதான் எல்லாம் மாத்திப்போட்டுவிட்டது, இப்ப திரும்பவும் பெட்ல யூரின் போய்ட்டான்"

"சரி விடுங்கோ, கிச்சனில காப்பி போட்டபடி இருக்குது போய்ப் பாருங்கோ நான் இவனை எழுப்பி எல்லாம் செய்யுறன்"

இன்றுடன் ஐந்து வருடங்களும் ஏழு மாதமும் ஆகிறது திருமணம் செய்து. வாய்த்த கணவரால் குறை என்று எதுவும் இல்லை.

- மதுவதனன் மௌ. -

Friday, March 21, 2008

கிடைக்காத ஒன்று

இன்று அவனது மேற்படிப்பை முடித்துக்கொண்ட பயணம் வீடு நோக்கியதாக இருந்தது. லீவு கிடைக்காத உயர்கல்வி, ஒப்படைகள், பயிற்சிகள், பரீட்சைகள், தோல்விகள், மரணத்துடனான உறவாடல்கள்... அத்தனையும் 2004ம் ஆண்டு வீட்டை விட்டு புறப்பட்டவனை புடம் போட்டு வழியனுப்பி வைத்திருக்கின்றன. இன்று சொந்த ஊரிலேயே பணியாற்ற அடம்பிடித்து அனுமதி பெற்ற மகிழ்ச்சி அவனது முகத்தில்... நேரம் காட்ட மணிக்கூடு மறுத்த போதும், மனதில் கணக்கிட்டுக் கொண்டான் இன்னும் ஐந்தே ஐந்து நிமிடங்கள் மட்டும் போதுமாக இருந்தது நான்கு வருடமாக எட்டாத தாயன்பில் திளைப்பதற்கு...

*****

நடு நிசியில் வேட்டுச் சத்தங்களின் தொடராக எழுந்த பாரிய வெடிப்பொலி... நாய்களின் மரண ஓலங்கள்... எதுவும் புதிய நிகழ்வுகளாக இவளுக்கு தோன்றவில்லை. வழமையான காரியங்களாயினும், திடீரென முளைத்த விக்கலுக்குப் பருக நீரெடுக்கச் செல்ல பயமாகத்தான் இருந்தது.
விடிந்தது... முதல் வேலையாக வழமை போன்று ஓடிச்சென்று பேப்பர் வாங்கினாள். இன்றும் இவளது மாவட்டத்தைச் சேர்ந்த ஐவரின் விபரங்கள். ம்... தேடியதொன்று கிடைக்காத மகிழ்ச்சியில் கடவுளுக்கு நன்றி சொன்னாள்.