Monday, September 7, 2009
கடவுளரின் கவனத்திற்கு - 001 - பாவம் செய்த பலியாடுகள்!
கடவுளரின் கவனத்திற்கு வராதவை!
'கடவுளரின் கவனத்திற்கு' என்ற தலைப்பில், இது ஒரு தொடர் எழுத்தாக அமையப்போகின்றது. கடவுள், மத நம்பிக்கைகள் உலகம் முழுமைக்கும், பிரதேச, சமூக எல்லைகளை கடந்து பொதுவாக, ஏதோ ஒரு வடிவில் காணப்படுவது அவதானிக்கத்தக்கது. நம்பிக்கை என்ற நடத்தை, உயிரியல் பரிணாம பாதையில், மனித இனத்துக்கு, பிழைத்துக்கொள்வதற்கான(survival) ஒரு விடயமாக வரப்பெற்றது. அதற்கு மனித மூளையின் அமைப்பு, அதன் சில பகுதிகள் பொறுப்பாக இருக்கின்றன என்பது அண்மைய விஞ்ஞான ஆராய்ச்சிகளின் கண்டுபிடிப்பு. இந்த நன்மை புரிந்த 'நம்பிக்கை (Belief)' என்ற நடத்தையின் பக்கவிளைவாகவே கடவுள், மத நம்பிக்கைகள் மனித இனத்தில் ஏற்பட்டன. எவ்வாறு இசை, சங்கீதம் போன்றவை பரிணாம வளர்ச்சியின் (Biological Evolution) அம்சமான, தொடர்பாடலுக்கு துணைபுரிந்த 'மொழி (Language)' வளர்ச்சியின் பக்கவிளைவாக அமைந்ததோ, அவ்வாறே கடவுள், மத நம்பிக்கைகளும் நம்பிக்கை என்ற நடத்தையின் பக்கவிளைவே.
ஆனால் மத, கடவுள் நம்பிக்கைகள் என்ற பெயரில் அரங்கேறும் கொடுமைகள், பொருள் வீண்விரயங்கள், ஏமாற்று நடவடிக்கைகள், பாரபட்ச நடவடிக்கைகள் என்றுமே ஏற்றுக்கொள்ளப்படமுடியாதவை. அவை சிந்திக்கத்தெரிந்த மனிதர்க்கு ஆத்திரமூட்டுபவன. அவ்வகையில், விழிப்புணர்வூட்டும் நோக்கோடு மத நம்பிக்கைகள் என்ற பெயரில் நடைபெறும் பைத்தியக்காரத்தனங்களை அவ்வப்போது வெளிப்படுத்துவதாக இத்தொடர் அமையப்போகின்றது.
பாவம் செய்த பலியாடுகள்???
இது இவ்வாண்டு (2009) சிலாபத்தில் அமைந்திருக்கின்ற முன்னேஸ்வரம் மகா பத்திரகாளி அம்மன் கோவிலில் அரங்கேறிய மகா கொடுமை. ஏறக்குறைய 200 ஆடுகள், கோயில் முன்றலில் பலநூறு மக்கள் முன்னிலையில், அக்கோயிலின் சமய சடங்கு என்ற பெயரில் வெட்டிக்கொல்லபட்டன, அதாவது பலியிடப்பட்டன. படங்களை பாருங்கள் அவையே கதை சொல்லும்.
ஒரு காலத்தில், உலகம் முழுவதும் மத சடங்குகளில் இந்த (கடவுளர்க்கு) பலியிடுதல் என்ற சடங்கு இருந்து வந்திருக்கின்றது. ஆடுகள், கோழிகள் போன்ற விலங்குகளை பலியிடுவதுடன் மட்டும் நிற்காமல், குழந்தைகள் உட்பட மனிதர்களை பலியிடும் வழக்கமும் இருந்திருக்கின்றது) ஆனால் காலப்போக்கில், இவற்றை பல மக்கள் ஏற்றுக்கொள்ளாமலும், தடைச் சட்டங்களாலும் இப்பலியிடுதல் என்பது அருகிப்போயுள்ளது.
ஆனாலும் இன்றுவரை இது எங்கோ ஒரு மூலையில் நடைபெற்றுவரும் நிகழ்வாகவே இருந்து வருகின்றது. இந்தியாவில் நகர்ப்பகுதிகளில் நடைபெறாவிட்டாலும், கிராமப்புறங்களில் அதிகமான அளவில் நடைபெறுவதாகவே அறியக்கிடைக்கின்றது.
ஆனாலும், இலங்கையிலும் இது நடைபெறுகின்றது என்பதை அறிந்தபோது மிக அதிர்ச்சியாக இருந்தது. அதுவும் ஏறக்குறைய 200 ஆடுகள், குழந்தைகள், சிறுவர்கள் முன்னிலையில், நீண்ட கூரிய வாள்களால் வெட்டிக்கொல்லப்பட்டிருக்கின்றன. இவ்வளவிற்கும் இந்நாட்டில், பொதுஇடங்களில் மிருகங்களை வெட்டிக்கொல்வதற்கு சட்டரீதியான தடை இருக்கின்றது. மதம் எல்லவற்றிலுமிருந்து தப்பிவிடுகின்றது.
எல்லா உயிர்களும் கடவுளின் படைப்பே, அவற்றிலும் கடவுள் வியாபித்திருக்கின்றார் என்று வலியுறுத்தும் இந்து மதத்தில், இக்கொலைகளை எவ்வாறு நியாயப்படுதமுடியும். அத்துடன் உயிக்கொலைகளையும், மாமிசமுண்ணலையும் இம்மதத்தில் மாபாதங்களாக குறிப்பிட்டிருக்கின்றார்கள். தங்கள் மீது கருணைகாட்டுவதாக பல்லாயிரக்கனக்கான மக்கள் நம்பும் இந்த கருணை மிக்க கடவுளர் (ஆகக்குறைந்தது நேரே பார்த்துக்கொண்டிருந்த மகா பட்திரகாளி அம்மன்) ஏன் இப்பாதகங்களை தடுக்கமுடியாமல் போனது. கடவுளரின் கவனத்திலிருந்து இவை தப்பிவிட்டனவா? அவ்வாறெனில் இதோ கடவுளரின் கவனத்துக்கு இவ்விடயம், எதிர்காலத்தில் இம்மாதிரியானவை நடைபெறாமல் தடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்போடு...
மதுவர்மன் (2009-09-06)
நன்றி
படங்கள் மற்றும் செய்தி
Public slaughter of animals http://sundaytimes.lk/image_story.htm
Sacrificial goats http://sundaytimes.lk/090906/News/nws_04.html
உசாத்துணை
Belief and the brain's 'God spot' http://www.independent.co.uk/news/science/belief-and-the-brains-god-spot-1641022.html
Functional Neuroimaging of Belief, Disbelief, and Uncertainty http://richarddawkins.net/article,1994,Functional-Neuroimaging-of-Belief-Disbelief-and-Uncertainty,Sam-Harris-Sameer-A-Sheth-Mark-S-Cohen
Animal sacrifice http://en.wikipedia.org/wiki/Animal_sacrifice
Animal sacrifice: a corrective http://www.hindu.com/op/2003/09/16/stories/2003091600290300.htm
Significance of Anuimals in Hinduism http://www.hinduwebsite.com/hinduism/essays/animals.asp
Hinduism and animals http://www.bbc.co.uk/religion/religions/hinduism/hinduethics/animal.shtml
Ban on sacrificing animals in temples lifted http://www.hindu.com/2004/02/21/stories/2004022106220400.htm
Tuesday, August 25, 2009
கோழியா, முட்டையா, எது முதலில் வந்தது?
|
“ …இந்த கோழி, கோழிமுட்டை பிரச்சினை தொடர்பாக எம்மவர்கள் அடிக்கடி கேட்கும் கேள்வி கூட அடிப்படையில் பிழையானது. 'கோழியிலிருந்து முட்டை வந்ததா அல்லது முட்டையிலிருந்து கோழி வந்ததா?' என்று கேட்பார்கள். கோழியிலிருந்து முட்டை வருகின்றது சரி, அதெப்படி முட்டையிலிருந்து கோழி வரமுடியும்? குழப்பமாக இருக்கின்றதா?… " |
ஆம், முட்டைக்குள் உயிர், இரசாயன மாற்றங்கள் ஏற்பட்டு அந்த முட்டை அப்படியே கோழியாக மாறுகின்றதேயொழிய, முட்டையிலிருந்து கோழி வருவதில்லை. முட்டையிலிருந்து கோழிக்குஞ்சு பொரிக்கும்போது, இப்போது முட்டை இல்லை, கோழிக்குஞ்சு மட்டும் தானே எஞ்சியுள்ளது. இது உரு மாற்றம் தானே. ஒன்று இன்னொன்றாக மாறி எஞ்சியுள்ளது ஒன்றுதானே.குறிப்பு: இக்கட்டுரை இலங்கையிலிருந்து வெளிவருகின்ற 'பயில்நிலம்' காலாண்டு சஞ்சிகையின், 2009 இன் முதல் காலாண்டு இதழில் வெளிவந்தது.
Saturday, March 7, 2009
கிரிக்கெட்+அரசியல்=பயங்கரவாதம்?
கடந்த 3 ஆம் திகதி பாகிஸ்தான் லாகூர் நகரில் இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது திட்டமிட்ட தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆயுததாரிகளான ஒரு குழுவினர் நடத்திய துப்பாக்கித் தாக்குதலில் இலங்கை அணியினர் காயங்கள் அடைந்தனர். எவ்வாறாயினும் இத்தகைய தாக்குதலை எவர் செய்திருப்பினும் வன்மையாகக் கண்டிக்கப்படவும் எதிர்க்கப்படவும் வேண்டியதாகும். தீவிரவாத ஆயுதக் குழுக்களின் பலம் ஓங்கியுள்ள பாகிஸ்தானில் இவ்வாறான தாக்குதல் முயற்சி இடம்பெறக் கூடியது என்பதை இலங்கை அரசாங்கம் எதிர்பார்த்திருக்க வேண்டியதொன்றாகும். தெற்காசிய நாடுகளில் காணப்படும் பயங்கரவாதம் பற்றியும் இலங்கையில் இருந்து வரும் பயங்கரவாதம் பற்றியும் உச்சக் குரலில் பேசி வந்த இலங்கையின் தலைவர்களுக்கு பாகிஸ்தானில் இருந்து வரும் தீவிரவாதம் அல்லது பயங்கரவாதம் பற்றிக் கணக்கிட முடியாமல் போய்விட்டமை ஏன் என்பது புரியவில்லை.
ஏற்கனவே கடந்த வருடப் பிற்கூறில் மும்பையில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் சென்று விளையாட மறுத்துவிட்டது. அங்கு தமக்குப் பாதுகாப்பு இல்லை என்ற காரணத்தையே இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தெரிவித்திருந்தது. இருப்பினும் இந்திய அணி அங்கு செல்லாது விட்டதற்கு பாகிஸ்தான் மீது இந்தியாவிற்கு ஏற்பட்ட விரோதக் கோபமே காரணமாகும். இந்தக் கோபத்தின் பின்னால் இந்திய பாகிஸ்தான் முரண்பாட்டு அரசியல் ராஜதந்திரம் இருந்தது. அது இன்று நேற்று ஏற்பட்டதொன்றல்ல. பாகிஸ்தான் உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து நீடித்து வருவதாகும். இந்நிலையில் இந்திய அணி அங்கு செல்ல மறுத்ததைப் பொருட்படுத்தாது இலங்கை அணிக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்தது. அதனை இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை ஏற்றுக்கொண்டு அங்கு சென்று விளையாட சம்மதம் தெரிவித்தது. எதிரிக்கு எதிரி நண்பன் என்ற உள்ளார்ந்த நிலையிலேயே இலங்கை அணி பாகிஸ்தான் சென்றது என்பதை இலகுவில் மறைத்துவிட முடியாது.
இந்திய பாகிஸ்தான் நாடுகளுக்கிடையிலான அரசியல் ராஜதந்திரப் பின்புலம் பார்க்கப்பட்ட அளவிற்கு இலங்கை அரசாங்கத்தால் அங்குள்ள பயங்கரவாதக் குழுக்கள் பற்றியும் அவற்றிலிருந்து இலங்கை அணியினரைப் பாதுகாக்கக் கூடிய வழிவகைகள் பற்றியும் முன்கூட்டியே சிந்திக்கப்படவில்லை. உயிர்ச்சேதம் இன்றி இலங்கை அணியினர் மீண்டு வந்தமை அரசாங்கத்திற்கு ஆறுதல் தருவதாக இருந்த போதிலும், எழக் கூடிய எதிர்ப்புகளை சமாளித்துக் கொள்ளவும் கிரிக்கெட் ரசிகர்களின் ஆதரவைப் பெறவும் ஜனாதிபதியும் அரசாங்கமும் உடனடியாகவே செயற்பட்டனர். நேபாளப் பயணத்தில் இருந்த ஜனாதிபதி தன்னுடன் இருந்த வெளியுறவு அமைச்சரை உடன் பாகிஸ்தான் அனுப்பியதுடன், தானும் ஒருநாள் முந்தியே பயணத்தை முடித்து நாடு திரும்பினார். இதனால், கிரிக்கெட் வட்டாரங்களில் ஜனாதிபதியினதும் அரசாங்கத்தினதும் பெயர்கள் பாதுகாக்கப்பட்டன. அதன் மூலம் இவர்கள் தமக்கான சக புள்ளிகளைப் பெற்றுக் கொண்டனர். இதன் மூலம் கிரிக்கெட் என்பது வெறுமனே ஒரு விளையாட்டு மட்டுமல்ல அதன் பின்னால் அரசியல் வணிகம், இலாபமீட்டல் என்பன மிகக் கெட்டியாக இருந்து வருவதையும் உறுதிப்படுத்த முடிந்துள்ளது.
இத்தாக்குதல் நடைபெற்று 5 நாட்களாகியும் உரிய ஆயுததாரிகள் எவரும் கைது செய்யப்படவில்லை. எந்தவொரு தீவிரவாத இயக்கமும் உரிமை கோரவுமில்லை. அதனால் ஊகங்களை மட்டுமே ஊடகங்களும் இணையத்தளங்களும் வெளியிட்டு வருகின்றன. அத்துடன், இலங்கை இந்திய பாகிஸ்தானிய உயர்மட்டத் தலைவர்கள் தத்தமது நிலைப்பாடுகளுக்கு ஏற்ப கருத்துகளைக் கூறியும் வருகின்றனர். தாக்குதலுக்குப் பின்பு இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கை அணி மீதான தாக்குதலைக் கண்டித்துவிட்டு பாகிஸ்தான் மீது பழி சுமத்தும் வகையில் கருத்துக் கூறிக்கொண்டார். அத்துடன் மேற்படி தாக்குதலை மும்பைத் தாக்குதலின் தொடர்ச்சி என்றும் கூறி பாகிஸ்தான் தனது நாட்டினில் இருந்து வரும் பயங்கரவாதத்தை உண்மையாகவே ஒழிக்க வேண்டும் என்றார். அதேவேளை, பாகிஸ்தானில் இருந்து வெளிவந்த கருத்துகளில் ஒன்று மும்பைத் தாக்குதலுக்குப் பழி தீர்க்கும் வகையில் இந்திய உளவு நிறுவனமான "றோ' வின் வழிகாட்டலில் நடத்தப்பட்ட தாக்குதல் என்றவாறு கூறப்பட்டது. இலங்கையின் வெளியுறவு அமைச்சர் றோகித போகொல்லாகம கூறுகையில்; புலிகள் இயக்கம் சம்பந்தப்பட்டிருப்பதை நிராகரிக்க முடியாது என்றார். ஏனென்றால், தோல்வியால் விரக்தியடைந்த புலிகள் இவ்வாறான தாக்குதல்களில் ஈடுபடவே செய்வார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். இவ்வாறு லாகூர் தாக்குதல் பல்வேறு தரப்புகளின் கருத்துகளுக்கும் கண்ணோட்டங்களுக்கும் இலக்காகி உள்ளன.
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் விரைவில் இத்தாக்குதலின் சூத்திரதாரிகளைக் கண்டுபிடித்து இதன் பின்னால் உள்ளவற்றை அம்பலப்படுத்துவோம் என்று கூறியுள்ளார். அதேவேளை, இலங்கை அரசாங்கத்திடம் வருத்தம் தெரிவித்து இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவுக்கு எவ்வித பங்கமும் ஏற்படாது என்றும் அறிவித்திருக்கிறார். மேற்படி தாக்குதலை இந்தியத் தலைவர்களும் பிரதான ஊடகங்களும் தமது பாகிஸ்தான் எதிர்ப்புப் பல்லவிக்கு ஏற்றவிதமாகச் சுருதி சேர்த்து வாசித்து வருகின்றனர். அவர்களது கருத்து நோக்கின் படி தீவிரவாதம் அல்லது பயங்கரவாதம் என்பது ஏதோ பாகிஸ்தானில் மட்டும் தான் விளைந்த வண்ணம் இருக்கிறது என்பதாகவே காட்டப்படுகிறது. இந்தியாவில் அவை இல்லை என்பது போலவும், இருந்தாலும் தமது கட்டுக்குள் இருந்து வருவதாகவும் அவை கூறி வருகின்றன. இந்தியாவில் எங்கு பயங்கரவாதத் தாக்குதல் நடந்தாலும் உடனடியாகவே பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதக் குழுக்களே காரணம் எனப் பட்டை அறைந்து கூறிவிடுவது இந்திய ஆளும் தரப்பிற்கு கைவந்த ஒன்று. மேலும் பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ. தான் பின்னிருந்து இக் குழுக்களை இயக்குவதாகப் பரப்புரை செய்வதிலும் இந்திய ஊடகங்கள் மகா கெட்டிக்காரர்கள். ஆனால் , இந்தியாவில் பல்வேறுபட்ட பயங்கரவாத அமைப்புகள் இருந்து வருவது பற்றியும் அவை நடத்தும் தாக்குதல் பற்றியும் அடக்கியே அவை வாசிக்கின்றன.
அத்துடன், இந்திய உளவு நிறுவனமான "றோ' வின் செயற்பாடுகள் பற்றி வாயே திறப்பதில்லை. முஸ்லிம் தீவிரவாதிகள் பற்றி நீட்டி முழக்கும் எவரும் இந்து தீவிரவாத அமைப்புகளான ஆர்.எஸ். எஸ். சிவசேனை போன்ற சங்கப்பரிவார அமைப்புகள் இந்துத்துவத்தின் பேரால் நடத்தும் பயங்கரவாதத் தாக்குதல்கள் பற்றிப் பேசுவது மிகக் குறைவு. இன்றைய நிலையில் தீவிரவாதம் பயங்கரவாதம் இன, மத , மொழி பிரதேச அடிப்படையில் எங்கிருந்து வந்தாலும் அது எதிர்த்து நிராகரிக்கப்பட வேண்டியதாகும். அவை பாரத புண்ணிய பூமியில் இருந்து வந்தால் புனிதமானது என்றும் பாகிஸ்தானில் இருந்து வந்தால் அழிவுகரமானது என்றும் பார்க்கும் குறுகிய பார்வைகள் அகற்றப்பட வேண்டும்.
அமெரிக்க ஏகாதிபத்தியம் சோஷலிசத்தையும் மார்க்ஸிஸத்தையும் வர்க்கப் போராட்டப் பாதையில் அமைந்த விடுதலைப் போராட்டங்களையும் முறியடிக்கவே பயங்கரவாதக் குழுக்களையும் இயக்கங்களையும் மூன்று தசாப்தங்களுக்கு முன்பு உருவாக்கி நிதி, ஆயுதம், பயிற்சி வழங்கி முன் தள்ளிவிட்டது. அதேவழியில் ஏனைய முதலாளித்துவ ஆட்சி அதிகார சக்திகளும் அத்தகைய குழுக்களை தோற்றுவித்தன. இது சிறிய நாடுகளில் பாதாள உலகக் குழுக்களை உருவாக்கி இயக்குவது வரை கொண்டு செல்லப்பட்டது. அன்று சதாம் ஹுஸனையும் , பின் லேடனையும் வளர்த்து அரங்கில் ஆடவிட்டது அமெரிக்கா என்பதை யார் தான் மறுப்பர். அதே பெயர்கள் 9/11 க்குப் பின்பு உலகின் ஈவிரக்கமற்ற உலகப் பயங்கரவாதிகளாகக் காட்டப்பட்டனர். ஈராக்கில் புகுந்து கொள்ளவும் ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருக்கவும் அதே பெயர்களைத் தான் அமெரிக்கா பயன்படுத்தியது. தமது தேவை நிறைவேறும் மட்டும் விடுதலைப் போராளிகளாகக் காட்டி அத் தேவை முடிந்ததும் பயங்கரவாதிகளாக சித்திரித்தும் ஊட்டி வளர்த்தவர்களையே உதைத்து அழிப்பதும் ஏகாதிபத்திய மேலாதிக்க சக்திகளுக்கு கைவரப் பெற்ற கலையாகும்.
இலங்கையின் தேசிய இனப் பிரச்சினைக்கான போராட்டத்திலும் அமெரிக்கா , இந்தியா என்பன நடந்து கொண்ட முறைமையை யாராவது இன்றும் விளங்கிக் கொள்ளாவிட்டால் அத்தகையோர் முட்டாள்களாக அல்லது அறிவிலிகளாக மட்டுமே இருக்க முடியும். எனவே, தீவிரவாதம் பயங்கரவாதம் வெறுமனே ஒரு கேள்வி ஒரு விடையில் விளக்கிக் கொள்ளவியலாத ஒன்றாகவே காணப்படுகிறது. அது யாரால் யாருக்காக எந்த வழிமுறையில் முன்னெடுக்கப்படுகிறது என்பதைப் பார்க்க வேண்டும். எந்தவொரு மக்கள் பிரிவினருக்கும் எதிராக ஒரு சிலரின் தேவைக்காக முன்னெடுக்கப்படும் தீவிரவாதமோ தாக்குதலோ அடிப்படையில் மக்கள் விரோதமானதாகும்.
இவ்வாறு தான் கிரிக்கெட் என்ற விளையாட்டுப் பற்றியும் நோக்க வேண்டியுள்ளது. அது நமது நாட்டின் தேசிய விளையாட்டுக்களில் ஒன்றல்ல. அது பிரித்தானியாவில் இருந்து நம்மீது திணிக்கப்பட்ட கனவான்களின் காலத்தை விரையமாக்கும் விளையாட்டு. அது இன்று சில நாடுகளால் மட்டுமே விளையாடப்படுகிறது. அவற்றில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் என்பன தெற்காசிய நாடுகளில் முக்கியமானவைகளாகும். இந்த கிரிக்கெட் விளையாட்டு வெறுமனே உடல் நலத்திற்காகவோ நட்பை விருத்தியாக்குவதற்கோ நடத்தப்படுவதில்லை. இன்று இந்த விளையாட்டு முற்றிலும் பணமும் சொத்தும் குவிக்கும் களமாகக் காணப்படுகிறது. ஏகாதிபத்திய உலகமயமாக்கல் நிகழ்ச்சி நிரலுக்கு இக் கிரிக்கெட் விளையாட்டு பக்கபலமாகிக் கொண்டது. விளையாட்டு வீரர்களின் திறமையையும் ஆற்றல்களையும் விலைகொடுத்து வாங்குவதில் பல்தேசிய நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டன. தத்தமது விளம்பரங்களுக்காக விளையாட்டு வீரர்களை பிம்பமாக்கிக் கொண்டன. கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதற்குக் கோடிக்கணக்கில் பணம் கொட்டி அனுசரணை வழங்கி வருகின்றன. இந்தப் பணத்தில் ஒரு பகுதி விளையாட்டு வீரர்களுக்கும் மறுபகுதி கிரிக்கெட் சபையினருக்கும் சென்றடைகின்றன. அதனாலேயே கிரிக்கெட் சபையின் தலைவராவதற்கும் ஏனைய பதவிகளுக்கும் கடும்போட்டி இருந்து வருகின்றதை அவதானிக்கலாம். இந்தியாவின் கிரிக்கெட் சபைத் தலைவராக வருவதற்கு மத்திய அமைச்சராக இருக்கும் சரத்பவார் எத்தனை பாடுபட்டு தலைவரானார். அங்கே மக்களுக்குச் சேவை செய்வதற்கு அல்ல. அங்கு ஓடும் பண நதியில் நீச்சல் அடிப்பதற்கேயாகும். இங்கும் பெரும் பெரும் பண முதலைகள் பெருமளவில் செலவு செய்து கிரிக்கெட் சபைத் தேர்தலில் நின்று வருவதையும் காணலாம்.
இவ்வாறு கிரிக்கெட் விளையாட்டும் வீரர்களும் கிரிக்கெட் சபையும் கோடி கோடியாகப் பணம் பண்ணிக் கொண்டிருக்க அவ் விளையாட்டை நேரிலும் தொலைக்காட்சிகளிலும் பார்த்து ரசித்து நிற்கும் மக்கள் இறுதியில் கொட்டாவி விட வேண்டியதாகவே இருந்து வருகிறது. இத்தகைய வணிகமயப்படுத்தப்பட்ட இக் கிரிக்கெட் விளையாட்டினால் பல்தேசியக் கம்பனிகள் தமது உற்பத்திகளை மக்களிடையே திணிக்க விளம்பரங்கள் மூலம் பிரசாரம் செய்கின்றன. கொக்காக்கோலா, பெப்சி முதல் எரிபொருட்கள் வரையானவற்றுக்கு கிரிக்கெட்டில் முன்னணி வகிக்கும் வீரர்களைப் பயன்படுத்திக் கொள்வதையும் காணமுடிகிறது. அவை மட்டுமன்றி அரசியல்வாதிகளுக்கும் அமைச்சர்களுக்கும் கிரிக்கெட்டின் மூலம் பன்முகப்பயன்கள் சென்றடைகின்றன. அத்துடன் ஒவ்வொரு விளையாட்டுத் தொடருக்குப்பின்பும் பாதுகாப்புக்கென்ற பெயரில் யுத்தத்திற்கும் பெரும் தொகைப் பணம் அன்பளிப்பாகிறது. அத்துடன் அரசியலிலும் இக் கிரிக்கெட் மூலம் செல்வாக்குச் செலுத்தப்படுகிறது.
ஆதலால் கடந்த 3 ஆம் திகதி லாகூரில் இடம்பெற்ற தாக்குதல் கண்டிக்கப்பட வேண்டும் என்பதில் இரு கருத்திற்கு இடமேயில்லை. ஆனால் பணம் சம்பாதிக்கும், ஒரு சிலரின் பைகளை நிரப்பும், மக்களை நுகர்வுக்குத் தூண்டும் வகைகளிலான இக் கிரிக்கெட் விளையாட்டினால் நாட்டு மக்களுக்கோ நாட்டிற்கோ எவ்வித பலாபலன்களும் கிடைக்க மாட்டாது என்பதே உண்மையாகும்.
Thursday, February 26, 2009
பயில்நிலத்தின் மீள் வருகை: மீண்டும் தொடங்கும் மிடுக்கு (ஈழத்து இலக்கியச் சூழலும் இளைய தலைமுறையின் இதழ் வெளியீட்டு முயற்சிகளும்)

இலங்கையில் சமூக உணர்வுள்ள இலக்கிய எழுச்சியில் மட்டுமன்றிப் பொதுவான இலக்கிய எழுச்சியிலும் இடதுசாரிகளும் பிற முற்போக்குச் சிந்தனையாளர்களும் ஒரு தலைமைப் பங்காற்றினர். அதை மறுப்பதற்கான பழமைவாதப் பிற்போக்குவாத முயற்சிகள் படுதோல்வி கண்டன. தேசியவாத இலக்கியத்தின் எழுச்சி கூட முற்போக்கு இலக்கியப் போக்கிலிருந்து எழுந்த சமூகச்சார்பான எழுத்தை உள்வாங்கியே தன்னை அடையாளப்படுத்துமளவுக்குச் சமூகச் சார்பான கலை இலக்கியங்கள் என்ற கருத்தாக்கம் நிலை கொண்டிருந்தது. தூய கலை இலக்கியம் பற்றிப் பேசி முற்போக்கு இலக்கியத்தை நிராகரித்தவர்களே தூய கலை இலக்கியக் கோட்பாட்டை மறந்து தேசியவாதக் கலை இலக்கியங்களைத் தூக்கிப் பிடித்தமை பற்றியும் இங்கு குறிப்பிடலாம். இப்போது எல்லாத் தளங்களிலும் ஏகாதிபத்தியவாதிகள் தங்களது தந்திரோபாயங்களை மாற்றிக் கொண்டுள்ளனர். அவர்களது முகவர்கள் போலி மனிதாபிமான முகத்தைக் காட்டுகின்றனர். இதன் நோக்கங்கள் எப்படியானவையோ அப்படியானவையே கலை இலக்கியத் துறைகளில் நடைபெறும் ஊடுருவல்களின் நோக்கங்களும். இவை குறித்துப் பயில்நிலம் அவதானமாக இருக்க வேண்டும்.
மனிதத் தேவைகளையும் உணர்வுகளையும் புறக்கணித்துக் கலை இலக்கியங்களைப் படைக்க முடியாது. இந்தத் தேவைகளையும் உணர்வுகளையும் தனிமனிதருக்கே உரியனவாக்கி மனிதரைச் சமூகத்தினின்று பிரித்துத் தனிமனிதத்துவத்தை சமுதாயத்துக்கு முரண்பட்டதாக வளர்க்கும் போக்கு மனித இருப்பின் முக்கியமான ஒரு பகுதியை மறுக்கிறது. பாட்டாளி வர்க்கப் பார்வை மனிதனது இருப்பின் சமுதாயத் தன்மையை வலியுறுத்தி மனிதரது தனித்துவத்தை அங்கீகரிக்கிறது. தனிமனிதரது தேவைகளும் உணர்வுகளும் சமுதாயத்தினின்று பிரித்துப் பார்க்கப்படாமல் உறவுபடுத்திப் பார்க்கப் படுகின்றன. ஒரு படைப்பின் தொனி அதன் படைப்பாளியின் சமுதாயச் சார்பாலும் குறிப்பாக சமுதாயச் சூழலாலும் நிர்ப்பந்திக்கப்படுகின்றன. மனித இருப்பையே நெருக்கடிக்குள்ளாக்கிவரும் ஒரு சமுதாய அமைப்பிற்கு எதிரான போராட்ட உணர்வை வலியுறுத்துவது எமது வரலாற்றுக் கடமை. இதைப் பயில்நிலம் சரியாகச் செய்யும் என எதிர்பார்க்கிறோம்.
கலப்பு என்ற தலைப்பில் உள்ள லாங்ஸ்டன் ஹியூசின் கவிதை பல கேள்விகளை என்னுள் எழுப்பியது. இன உணர்வு பற்றி யாருமே அதிகம் கூச்சப்படுவதில்லை. சில சமயம் பெருமைப்பட்டுக் கொள்ளக் கூடிய விஷயமாகவே இன உணர்வு இருந்துள்ளது. என்னளவில் இன உணர்வு என்பது ஆழ்ந்த நோக்கில் அர்த்தமற்ற ஒன்று. ஆயினும் சமுதாயத்தில் இனவேறுபாடுகள் உள்ளபோது அவ்வவ்வேறுபாடுகள் வாழ்வின் வெவ்வேறு துறைகளைப் பாதிக்கும்போது அந்த உணர்வைப் பெரும்பாலானோரால் தவிர்க்க முடிவதில்லை.
ஒரு சமுதாயம் முன்னேறிய “நாகரிக” சமுதாயம் என்பதால் அங்கே இனவாதமும் இனவெறியும் இல்லை என்றாகாது. ஐக்கிய அமெரிக்காவில் நீக்கிரோக்களுக்கு எதிரான இனவெறி, தென்னாப்பிரிக்க வெள்ளை இனவெறி, ஹிட்லரின் ஜேர்மனியில் ஆரிய இனவெறி இவையெல்லாம் பின்தங்கிய சமுதாயங்கட்குரியவல்ல. இனவாதமும் இனவெறியும் தொற்று நோய்களைப் போல் பரவுகின்றன. ஒரு இனத்தின் இனவாதமும் இனவெறியும் மற்ற இனங்களிடையே இனவாதத்தையும் இனவெறியையும் தூண்டி வளர்த்து, அதன் மூலம் தம்மையும் வளர்த்துக் கொள்கின்றன. இன்றைய காலகட்டத்தில் தேசியவாதத்தின் அடிப்படையையும் அதன் வளர்ச்சிப் போக்கினையும் மக்கள் விளங்கிக்கொள்ளும் தேவை அதிகரித்துள்ளது. குறிப்பாகத் தேசியவாதத்தினுள் அடங்கியிருக்கும் சாதக-பாதக அம்சங்களைப் பகுத்தறிந்து கொள்வது அவசியமாகிறது. தேசியவாதத்தின் எல்லைகளையும் அதனால் எவ்வளவு தூரம் சாதகமான பாதையில் பயணிக்க முடியும், அதற்கு அப்பால் அது ஏற்படுத்தக் கூடிய ஆக்கபூர்வமற்ற அழிவுகளின் தன்மை எத்தகையவை என்பதைத் தூரநோக்குடன் கண்டறிதல் தேவையாகிறது.
படைப்புக்கும், படைப்பாளிகளுக்குமான உறவும் உருவாக்கமும் முக்கியமானது. அடுத்து படைப்புக்கும் வாசகனுக்குமான உறவும், உரையாடலும் முக்கியத்துவம் பெறுகிறது. இவை அனைத்தையும் சாத்தியமாக்கப் பயில்நிலம் முனைய வேண்டும் என்பதே என் வேண்டுகோள்.
எல்லாவித அதிகாரங்களுக்கும் வாய்பேசா மௌனியாக இருந்துவிட்டு அதிகாரம் தமது இருப்பை அசைக்கின்றபோது கிணற்றுக்குள் இருந்து வெளியில் வந்த மனிதனைப் போல் சமூகத்தை எதிர்கொள்கிற மனநிலையிலிருந்து புதிய இளம் தலைமுறை வெளியேற வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் மாற்றங்களை வேண்டிப் பயணிக்கும் பயில்நிலம் தடைகளைக் கடந்து பயணிக்கும் என்ற நம்பிக்கையில்......
Friday, February 13, 2009
நேபாள மக்கள் போராட்டத்தின் 13வது ஆண்டு நிறைவு: நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள்
நேபாள மாஓவாதிகள் தங்களது மக்கள் போராட்டங்களை தொடங்கி இன்றுடன் 13 வருடங்கள் ( 1996 பெப்ரவரி 13) முடிவடைன்றன. நேபாள மக்களாலும் மாஓவாதிகளாலும் பத்து வருட இடைவிடாத மக்கள் போராட்டத்தின் விளைவாக மிகப் பெரிய மாற்றத்தை நேபாளத்தில் கொண்டு வர முடிந்து இருக்கிறது. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் இன்று ஒரு மிக முக்கியமான சந்தியில் நிற்கிறது. நேபாள மக்கள் போராட்டத்தின் 13வது ஆண்டு நிறைவின் நினைவாக இக் கட்டுரை எழுதப்படுகிறது.
நேபாளம் தென்னாசியாவின் மிகப் பின்தங்கிய நிலையில் உள்ள நாடாயிருப்பதற்கான காரணங்கள் பல. அவற்றுள் நிலவுடைமைச் சமூகத்திற்குப் பாதுகாவலாய் இருந்த முடியாட்சியினது பங்கு பெரியது. நேபாளத்தில் மன்னராட்சியின் வரலாறு முடிவுக்கு வந்தது மக்கள் போராட்டத்தின் விளைவாலேயே. அந்த முடியாட்சி ஒரு பயங்கரமான கொடுங்கோன்மையாக நடந்து கொண்டபோது கூட அதை ஆதரித்து வந்தவர்கள் இருக்கிறார்கள். மன்னராட்சினின்று நேபாளத்தின் விடுதலையின் பயனை மக்கள் அனுபவிக்காமல் தடுப்பதற்கு அமெரிக்காவும் இந்தியாவும் மும்முரமாயிருந்தன. அமெரிக்கா வெளிவெளியாகவே மன்னராட்சியை ஆதரித்தது. மன்னராட்சி தடுமாறித் தத்தளித்த நிலையில் றிச்சட் பௌச்சர் என்கிற அமெரிக்காவின் தென்னாசிய அலுவற் பொறுப்பாளர் நேபாள ராணுவத் தலைமையுடன் கலந்தாலோசனைகளை நடத்தினார். ஆனால் நேபாள மக்களின் போராட்டம் இதை எல்லாம் தாண்டி வெற்றி பெற்றது.
இந்தியா மன்னராட்சிக்கு மிகவும் உடந்தையாயிருந்தது. பழைய மன்னரது குடும்பத்தின் படுகொலையிலும் இந்தியாவின் பங்கு பற்றிப் பேசப்பட்டமை நினைவிலிருத்தத்தக்கது. முழு அதிகாரங்களையும் மன்னர் க்யானேந்திரர 1-2-2005 அன்று தனதாக்கிய பின்பும் இந்தியா அவருக்கு ஆதரவாயிருந்தது. மன்னராட்சிக்கு எதிரான வெகுசன இயக்கம் வலுவடைந்த பின்பும் மன்னராட்சியின் கீழான பாராளுமன்ற சனநாயகம் என்ற நிலைப்பாட்டையே இந்தியா ஆதரித்தது. மன்னராட்சி பாராளுமன்ற சனநாயகத்தை மீட்க மறுத்தால் மாஓவாதிகள் தலைமையிலான ஒரு மக்கள் குடியரசு உருவாகும் என்ற ஒரு சூழ்நிலையிலேயே இந்திய ஆளும் நிறுவனம் மாற்று வழிகளைத் தேடியது.
சீன, வியற்நாமிய, பிலிப்பினிய கம்யூனிஸ்றுக்கள் உட்பட்ட மாக்ஸிய லெனினியர்கள் யாவரும் எல்லாக் காலத்திலும் அமைதியான முறையில் நியாயமான தீர்வுகளைப் பேச்சுவார்த்தைகள் மூலம் பெற ஆயத்தமாகவே இருந்துள்ளனர். வீணான உயிரிழப்புக்களைத்
தவிர்ப்பதில் மிக அக்கறையுடன் இருந்து வந்துள்ளனர். போராட்டம் என்பதை அவர்கள் பல வேறு தளங்களிலும் நிகழ்த்துவதற்கு ஆயத்தமாயிருந்துள்ளனர். அமைதியாக வென்றெடுப்பதை எதிரி குழப்புவான் என்று அறிந்து எச்சரிக்கையுடன் செயற்படுவதும் குழப்புகிற சூழ்நிலையில் தேவைக்கேற்ப ஆயுதம் ஏந்தியோ ஏந்தாமலோ போரிடுவதும் தான் மாக்ஸிய லெனினிய போராட்ட அணுகுமுறை.
க்யானேந்திராவை எதிர்க்கத் திராணியில்லாது, 1-2-2005க்குப் பின்பும் மன்னருடன் சமரசம் செய்தவை தான் நேபாள பாராளுமன்றக் கட்சிகள். இதில் நேபாள ஐக்கிய மா. லெ கம்யூனிஸ்ற் கட்சியும் குற்றவாளியே. இப்படிப்பட்ட கட்சிகளால் எதுவுமே இயலாத நிலையில் மாஓவாதிகளது போராட்டம் நேபாள அரசாங்கத்தை விரும்பிய போது செயலற்றதாக்கக் கூடியதாக வலிமை பெற்று வந்தது. நம்பிக்கைத் துரோகியான க்யானேந்திராவை எதிர்த்து முறியடிக்கும் வலிமை பாராளுமன்றக் கட்சிகட்கு இருக்கவில்லை. ஏழுகட்சிகள் ஒரு கூட்டணி அமைத்துப் போராடினாலும் மன்னராட்சியை அவர்களால் எதுவும் செய்ய இயலவில்லை. 2005 நவெம்பர் மாதம் மாஓவாதிகளுடன் ஒரு உடன்படிக்கை செய்த பின்னரே அவர்களால் மன்னருக்கு எதிராகத் தைரியமாகப் போராட முடிந்தது.
இந்திய ஆளும் வர்க்கத்தில் ஒரு பகுதியினர் ஏழு கட்சிக்கூட்டணிக்கும் மாஓவாதிகட்குமிடையிலான உடன்படிக்கைக்கு ஒத்துழைத்தனர். அதன் மூலம் மாஓவாதிகளைச் 'சனநாயக நீரோட்டத்திற்கு" கொண்டுவரலாம் என்பதும் பாராளுமன்ற அரச அதிகாரத்தில் அவர்கள் பங்காளிகளான பின்பு அவர்களை வளைத்துப் போடலாம் என்பதும் ஒரு பகுதியினரது கணிப்பு. இன்னொரு பகுதியினர் மாஓவாதிகளைப் பாவித்து பாராளுமன்ற ஆட்சியை நிறுவிய பின்பு மாஓவாதிகளை ஓரங்கட்டலாம் என்பதாகும். அதைவிட ஏழுகட்சிக் கூட்டணி மாஓவாதிகளுடன் ஒத்துழைப்பதை இந்திய அரசாங்கம் விரும்பவில்லை. அந்த ஒத்துழைப்பை முறியடிக்கத் தமது கையாளான கொய்ராலாவைப் பாவித்தார்கள். எதிர்பார்த்ததை விட வேகமாகவே நேபாள அரசர் பின்வாங்க நேரிட்டது. அந்த நிலையில் அவர்கள் அடுத்த ஆண்டு தேர்தல்களை நடத்துவது, உடனேயே தேர்தல் என்று பேரம்பேசி எதுவும் எடுபடாமல் பழைய பாராளுமன்றத்தைக் கூட்டுவது என்று சொன்னவுடனேயே அதை ஏற்குமாறு கொய்ராலாவையும் ஏழுகட்சிக் கூட்டணியையும் இந்தியா வற்புறுத்தியது. அவர்கள் அதற்கு உடன்பட்டனர். அதையே இறுதித் தீர்வாக்கி, மன்னராட்சிக்குக் கீழ்ப்பட்ட பாராளுமன்ற சனநாயகத்தை நிறுவுவதற்கு இந்தியா சொன்னபடி நடக்க கொய்ராலா ஆயத்தமானார். இதற்கு எதிராக மாஓவாதிகள் எச்சரித்துக் கடுங் கண்டனம் தெரிவித்தனர்.
மாஓவாதிகள் 2005 யூன் மாதத் தொடக்கத்தில் இரண்டு லட்சம் மக்களை நேபாளத்தின் தலை நகரத்தில் அணிதிரட்டி ஒரு மாபெருங் ஆர்ப்பாட்டக் கூட்டத்தை நடாத்தினர். தமது
மாபெரும் மக்கள் பொதுக்கூட்டத்தின் மூலம் முடியாட்சியைப் படியிறங்கச் செய்தது யாருடைய வலிமை என்பதை மாஓவாதிகள் உலகிற்குத் தெளிவாக்கியுள்ளனர்.
புதிய அரசியல் யாப்பை வரையவும் மக்கள் தீர்ப்புக்கமைய ஒரு புதிய ஆட்சி முறையையும் பல கட்சிச் சனநாயகத்தையும் உருவாக்குவதற்கான அரசியல்யாப்பு அவை ஒன்றைத் தெரிவுசெய்து உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை அவர்கள் வற்புறுத்தினர். அதை ஏற்பதற்குத் தயங்குகிறவர்கள் மக்களை ஏமாற்றத் தயங்கமாட்டார்கள் என்று அறிந்த மாஓவாதிகள் 2005 யூன் மாதத் தொடக்கத்தில் இரண்டு லட்சம் மக்களை நேபாளத்தின் தலை நகரத்தில் அணிதிரட்டி ஒரு மாபெருங் ஆர்ப்பாட்டக் கூட்டத்தை நடாத்தினர். மன்னருக்கெதிரான போராட்டத்தின் எக் காலகட்டத்திலும் திரண்டதை விடப் பல மடங்கான மாபெரும் மக்கள் திரட்சியின் பின்பு ஏழு கட்சிகள் கூட்டணியினர் மாஓவாதிகளுடன் பேசி ஒரு புதிய அரசியல் யாப்புக்கான நடவடிக்கைகள் பற்றி உடன்பாடு கண்டுள்ளனர். மாஓவாதிகள் தமது மாபெரும் மக்கள் பொதுக்கூட்டத்தின் மூலம் முடியாட்சியைப் படியிறங்கச் செய்தது யாருடைய வலிமை என்பதை உலகிற்குத் தெளிவாக்கியுள்ளனர்.
இப்போது மாஓவாதிகளை மெச்சிப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துகிற முயற்சியில் பலர் இறங்கியுள்ளனர். மாஓவாதிகள் என்ன அடிப்படைகளின் கீழ் பாராளுமன்ற முறையை ஏற்க முன்வந்தனர் என்றோ அவர்கள் உருவாக்க முயலுகிற பாராளுமன்ற முறை எப்படியிருக்கும் என்றோ இதுவரை சாதித்த சமூக விடுதலைகளின் எதிர்காலம் என்ன என்றோ இவர்களுக்கு அக்கறையில்லை. ஆயுதப் போராட்டப் பாதையை மறுத்தால் அதுவே போதுமானது.
இதில் இன்னொரு விடயமும் முக்கியமானது. மாஓவாதிகள் வெறுமனே ஆயுதப் போராட்டம் மட்டும் நடத்தவில்லை. அவர்கள் காணிச் சீர்திருத்தம் பெண்ணுரிமை, சாதிய ஒழிப்பு, இன சமத்துவம் போன்ற பல வேறு நடவடிக்கைகளையும் மக்களின் கூட்டு முற்சியால் ஒரு நெடுஞ்சாலை உட்பட்ட நிர்மாண வேலைகளையும் முன்னெடுத்துள்ளனர். இவை பற்றிப் பேசாமல் விடுவதன் மூலம் மாஓவாதிகளது செல்வாக்கு அவர்களது கைகளிலிருக்கிற துப்பாக்கியிலேயே தங்கியுள்ளது என்ற பொய்யான பிரசாரம் வலுப்பெறுகிறது.
சீன, வியற்நாமிய, பிலிப்பினிய கம்யூனிஸ்றுக்கள் உட்பட்ட மாக்ஸிய லெனினியர்கள் யாவரும் எல்லாக் காலத்திலும் அமைதியான முறையில் நியாயமான தீர்வுகளைப் பேச்சுவார்த்தைகள் மூலம் பெற ஆயத்தமாகவே இருந்துள்ளனர். வீணான உயிரிழப்புக்களைத் தவிர்ப்பதில் மிக அக்கறையுடன் இருந்து வந்துள்ளனர். போராட்டம் என்பதை அவர்கள் பல வேறு தளங்களிலும் நிகழ்த்துவதற்கு ஆயத்தமாயிருந்துள்ளனர். அமைதியாக வென்றெடுப்பதை அமைதியாக வென்றெடுப்பதும் அதை எதிரி குழப்புவான் என்று அறிந்து எச்சரிக்கையுடன் செயற்படுவதும் குழப்புகிற சூழ்நிலையில் தேவைக்கேற்ப ஆயுதம் ஏந்தியோ ஏந்தாமலோ போரிடுவதும் தான் மாக்ஸிய லெனினிய போராட்ட அணுகுமுறை.
மாஓவாதிகள் வெறுமனே ஆயுதப் போராட்டம் மட்டும் நடத்தவில்லை. அவர்கள் காணிச் சீர்திருத்தம் பெண்ணுரிமை, சாதிய ஒழிப்பு, இன சமத்துவம் போன்ற பல வேறு நடவடிக்கைகளையும் மக்களின் கூட்டு முற்சியால் ஒரு நெடுஞ்சாலை உட்பட்ட நிர்மாண வேலைகளையும் முன்னெடுத்துள்ளனர். இவை பற்றிப் பேசாமல் விடுவதன் மூலம் மாஓவாதிகளது செல்வாக்கு அவர்களது கைகளிலிருக்கிற துப்பாக்கியிலேயே தங்கியுள்ளது என்ற பொய்யான பிரசாரம் வலுப்பெறுகிறது.மாஓவாதிகளின் ஆயுதங்களைக் கீழே போடச் சொல்லுகிற திரிபுவாதிகள் அவர்கள் எந்தச் சமூக நீதிக்காக ஆயுதம் ஏந்தினார்களோ அந்தச் சமூக நீதியை மக்களுக்குக் கிடைக்கச் செய்கிற சூழ்நிலை உண்டு என்று சொல்வார்களா? அதற்கான உத்தரவாதம் அவர்களிடம் உண்டா? திரிபுவாதிகள் பெரிதும் அஞ்சுவது மாஓவாதிகளது ஆயுதப் போராட்டத்துக்கல்ல. அவர்களது போராட்ட வெற்றிகள் மக்களை ஒரு மாபெரும் போராட்டச் சக்தியாக மாற்றிவிடும் என்பதையிட்டே அவர்கள் அஞ்சுகிறார்கள்.
2008 மார்ச் மாதம் 10ம் திகதி நேபாளத்தில் நடந்த பொதுத் தேர்தல் பாராளுமன்றத்திற்கான ஒன்று அல்ல. அரசியல் அமைப்பு ஒன்றினை வரைவதற்கான அரசியல் நிர்ணய சபையைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலாகும். இவ்வாறு ஒரு தேர்தல் இடம் பெறுவதை நேபாளத்தின் மன்னராட்சி ஆதரவாளர்களும் நிலப்பிரபுத்துவ முதலாளித்துவ பிற்போக்கு சக்திகளும் விரும்பவில்லை. அவ்வாறே இந்திய அமெரிக்க மேலாதிக்க சக்திகளும் தேர்தலை ஒத்திப் போடவே முயன்றன. ஏற்கனவே இரு தடவைகள் அவ்வாறு பின் போடப் பட்டது. ஆனால் மாஓவாத கம்யூனிஸ்ட் கட்சியினதும் ஏனைய ஜனநாயக சக்திகளதும் வெகுஜனப் போராட்ட வற்புறுத்தலின் விளைவாகவே தேர்தல் இடம் பெற்றது.
இத் தேர்தலில் மாஓவாத கம்யூனிஸ்ட் கட்சி தனிப் பலமுடைய கட்சியாக வெற்றி பெற்றிருக்கிறது. அது ஏனைய மாக்சிச, ஜனநாயக, தேசிய இனக் கட்சிகளுடன் இணைந்து அரசியல் நிர்ணய சபையின் பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் சுமார் இரண்டரை நூற்றாண்டு கால மன்னராட்சிக்கு முடிவு கட்டி விட வாய்ப்பு உருவாகி உள்ளது. மக்கள் ஜனநாயகம் தோற்றுவிக்கப்பட்டுப் புதிய ஜனநாயகத்தின் ஊடாக சோ~லிசத்தை நோக்கி வீறு நடைபோடக் கூடிய ஆரம்ப வெற்றி இத் தேர்தலில் மூலம் கிடைத்திருக்கிறது.
நேபாள மாஓவாத கம்யூனிஸ்ட் கட்சியின் வெற்றி குறுக்கு வழிகளில் பெறப்பட்ட ஒன்று அல்ல. பன்னிரண்டு ஆண்டுகளாக அக் கட்சி திட்டவட்டமான தொலை நோக்குத் தெளிவுடன் கூடிய கொள்கைத் திட்டத்தை முன் வைத்து நடாத்தி வந்த மக்கள் யுத்தப் பாதையிலான ஆயுதப் போராட்டத்தின் பின்பாகப் பெறப்பட்ட தேர்தல் வெற்றியாகும். அங்கு ஆயுதப் போராட்டம் என்பது வெறும் கண்மூடித்தனமான வழிகளில் முன்னெடுக்கப் படவில்லை. வர்க்கப் போராட்டப் பாதையில் வழிநடந்து விவசாயிகள், தொழிலாளர்கள், நிலமற்றோர், தாழ்த்தப்பட்டோர், பழங் குடியினர், ஒடுக்கப் படும் தேசிய இனத்தவர், பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், புத்திஜீவிகள், மற்றும் தேசப் பற்று மிக்கோர் எனப் பலதரப்பட்ட மக்களையும் கொள்கை வேலைத்திட்ட அடிப்படையில் அணி திரட்டிய போராட்டமாகவே முன்னெடுக்கப் பட்டது. கட்சியின் உறுதியான தலைமைத்துவத்தின் கீழ் வெகுஜன அமைப்புகள் மக்கள் மத்தியில் அர்ப்பணிப்பு மிக்க வேலை முறைகளை முன்னெடுத்தன. அதே வேளை மாஓசேதுங் சிந்தனை அடிப்படையில் மக்கள் படை தோற்றுவிக்கப் பட்டு மக்கள் யுத்தத்தின் பன்முகப் போர்த் தந்திரங்களும் பயன்படுத்தப் பட்டன. கிராமப்புறத் தளப் பிரதேசங்கள் தோற்றுவிக்கப் பட்டன. கெரில்லா யுத்த வழி முறைகள் பின்பற்றப்பட்டன.
நிலப் பிரபுத்துவத்தின் கீழ் ஒடுக்கப்பட்டிருந்த விவசாயிகள் போராட்டத்தில் முக்கிய பாத்திரம் வகித்தனர். ஏனைய ஒடுக்கப்பட்ட பிரிவு மக்களும் பெண்களும் இளந் தலைமுறையினரும் போராட்டக்களத்தில் முன்னின்றனர். ஒரு முழுமையான விடுதலைப் போராட்டமாக விருத்தி பெற்றுக் கொண்டமையைப் பொறுக்க முடியாத அமெரிக்கா, நேபாள மாஓவாத கம்யூனிஸ்ட் கட்சியை தனது பயங்கரவாதப் பட்டியலில் பதிவு செய்து கொண்டது.
இத்தகைய நேபாள மக்களின் போராட்டத்தால் பல பிரதேசங்கள் கட்சியினதும் படைகளினதும் கட்டுப்பாட்டின் கீழ் வந்தன. அவ்வாறு அமைந்த பிரதேசங்களில் நிலச் சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டு விவசாயிகளுக்கும் நிலமற்றோருக்கும் நிலம் பகிர்ந்தளிக்கப்பட்டது. விடுதலைப் பிரதேசங்களின் அபிவிருத்தி குறிப்பிட்டளவு ஏற்படுத்தப்பட்டதுடன் கல்வி சுகாதாரம் உட்பட சமூக பண்பாட்டு அம்சங்கள் திட்டமிட்ட புதிய வழிகளில் மேற்கொள்ளப் பட்டன. குறிப்பாக சாதிய ஏற்றத் தாழ்வுகள் நிராகரிக்கப்பட்டுச் சமத்துவ நிலை வலியுறுத்தப்பட்டது. தேசிய இனங்களின் தனித்துவங்கள் பேணப்பட்டன.
மேலும் பெண்கள் மீதான அடக்கு முறைகள் பல நிலைகளிலும் ஒழிக்கப் படுவதற்கான முன் முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டன. பெண் விடுதலைக்கான ஆரம்பச் செயற்பாடுகள் திட்டமிட்டுச் செயல் வடிவம் பெற்றன. இவை யாவும் சுமார் பத்தாண்டுக் கால விடுதலைப் போராட்டச் சூழலில் மேற்கொள்ளப்பட்டவையாகும். ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான விடுதலைப் போராட்டத்தில் பின் பற்ற வேண்டிய வழிமுறைகள் யாவும் நேபாளத்தின் விசேட நிலைமைகளுக்கு ஏற்றவாறு முன்னெடுக்கப்பட்டன. மன்னராட்சியை வீழ்த்தி ஒழிப்பது என்பது குறிக்கோளாக்கப்பட்டு அதற்கான ஆயுதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட அதே வேளை நிலப் பிரபுத்துவத்தின் சகல பழைமைவாதப் பிற்போக்குக் கருத்தியல்களும் சிந்தனை செயல் முறைகளும் மக்களுக்கு எடுத்து விளக்கி நிராகரிக்க வைக்கப்பட்டன. ஆயுதங்களைக் காட்டி அச்சுறுத்தி பயத்தின் காரணமாகக் காரியங்கள் முன்னெடுக்கப்படுவது தவிர்க்கப்பட்டு அறிவியல் பூர்வமாகவும் அரசியல் ரீதியாகவும் மக்கள் அறிவூட்டப்பட்னர். இதனை வெகுஜன அரசியல் மயப்படுத்தல் மூலமே சாத்தியமாக்கினர். ஒரு நிலவுடைமை மன்னராட்சியில் இந்து ராச்சியம் என்ற பெயரில் நிலவுடைமைக் காலக் கருத்தியல் சிந்தனை இறுக்கத்தின் கீழ் நேபாளக் கம்யூனிஸ்ட்டுக்களின் வேலை முறையானது மக்களை வென்றெடுக்கத்தக்க வகையில் கடுமையான வேலை முறைகளினால் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். அவர்களது வேலை முறை தென்னாசியச் சூழலில் உள்ள நாடுகளின் போராட்ட சக்திகளால் படிக்கப்பட வேண்டியதாகும்.
ஆயுதங்களைக் காட்டி அச்சுறுத்தி பயத்தின் காரணமாகக் காரியங்கள் முன்னெடுக்கப்படுவது தவிர்க்கப்பட்டு அறிவியல் பூர்வமாகவும் அரசியல் ரீதியாகவும் மக்கள் அறிவூட்டப்பட்னர். இதனை வெகுஜன அரசியல் மயப்படுத்தல் மூலமே சாத்தியமாக்கினர். ஒரு நிலவுடைமை மன்னராட்சியில் இந்து ராச்சியம் என்ற பெயரில் நிலவுடைமைக் காலக்கருத்தியல் சிந்தனை இறுக்கத்தின் கீழ் நேபாளக் கம்யூனிஸ்ட்டுக்களின் வேலை முறையானது மக்களை வென்றெடுக்கத்தக்க வகையில் கடுமையான வேலை முறைகளினால் அமைந்திருந்தமை
குறிப்பிடத்தக்கதாகும்.
அதே வேளை மன்னராட்சியையும் நேபாள முதலாளித்துவ பிற்போக்கு சக்திகளையும் பாதுகாத்து நிலை நிறுத்த இந்திய அமெரிக்க ஆளும் வர்க்கங்கள் சதா முயன்று வந்துள்ளன. அமெரிக்காவின் 'சி.ஐ.ஏ." இந்தியாவின் 'றோ" போன்ற உளவு அமைப்புகள் நேபாளத்தில் தமது கைவரிசைகளைக் காட்டியே வருகின்றன. அவற்றை எல்லாம் முறியடிக்கும் வகையில் கம்யூனிஸ்ட்டுக்களின் தலைமையிலான வெகுஜன அரசியல் மார்க்கம் உறுதியானதாக இருந்து வருகின்றது.
இவை அனைத்தினதும் ஒட்டுமொத்த வெற்றியைத் தான் அண்மைய தேர்தல் வெற்றி எடுத்துக் காட்டுகிறது. அமெரிக்க மேற்குலகு சாராது இந்தியாவின் ஆதரவு இன்றி சீனாவின் அரவணைப்புப் பெறாது முற்றிலும் நேபாள மக்களின் மீது நம்பிக்கை வைத்தே அங்கு விடுதலைப் போராட்டம் முன்னெடுக்கப் பட்டது. சோவியத் யூனியனிலும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் சோசலிசம் வீழ்ச்சி கண்ட சூழலில், சீனாவில் சோ~லிசப் பாதையில் விலகல் ஏற்பட்ட நிலையில், மாக்சிசமும் சோ~லிசமும் மரித்துவிட்டதாக ஊடகங்கள் ஊளையிட்டு வந்த சூழலிலேயே இமயமலை உச்சியில் செங்கொடி பட்டொளி வீசிப் பறக்க விடப் பட்டுள்ளது. தென்னாசியக் கம்யூனிஸ்டுக்களும் புரட்சிகர மக்களும் விடுதலைக்காக முயன்று வரும் மக்களும் நேபாளத்தின் செங்கொடிகளால் உற்சாகமும் உறுதியும் பெற்று நிற்கின்றனர். பல ஆயிரம் கம்யூனிஸ்ட்டுக்களாலும் போராடிய மக்களாலும் அர்ப்பணிக்கப்பட்ட உயிர்த் தியாகத்தால் அங்கு செங்கொடிகள் உயர்ந்து நிற்கின்றன. நேபாளத்தின் விடுதலைப் போராட்டம் சமகால விடுதலைப் போராட்டங்களுக்கு முன்னுதாரணம் காட்டி நிற்கின்றது. இருபத்தியோராம் நூற்றாண்டிற்கான புதிய ஜனநாயகத்திற்கும் சோசலிசத்திற்குமான போராட்டப் பாதையில் நேபாளத்திலிருந்து படிக்க நிறையவே உண்டு.
இருப்பினும் இதுவரையான நேபாள மாஓவாத கம்யூனிஸ்ட் கட்சியின் வெற்றிகரமான புரட்சிகரப் பாதையைத் திசை திருப்பிக் கொள்ள உள் நாட்டிலும் உலக அளவிலும் பல்வேறு பிற்போக்கு சக்திகள் கடும் முயற்சிகள் மேற்கொள்வார்கள். அதே வேளை பல்வேறு சவால்கள் சோதனைகள் தடைகள் என்பனவற்றை எதிர் கொண்டு சரியான புரட்சிகர நிலைப்பாட்டில் நேபாள மாஓவாத கம்யூனிஸ்ட் கட்சி வீறு நடைபோட வேண்டும் என்பதே உலக மக்கள் அனைவரினதும் பெரு விருப்பாகும்.
நேபாள மாஓவாத கம்யூனிஸ்ட் கட்சியானது நேபாளத்தின் விசேட நிலைமைகளுக்கு ஏற்பவும் மாக்சிச லெனினிசக் கோட்பாட்டு நிலையிலும் கொள்கைகளை முன்னெடுக்கும் வழிமுறைகளிலும் பயணிக்க வேண்டிய இமாலயப் பொறுப்பைச் சுமந்து நிற்கிறது. ஏனெனில் வீழ்த்தப்படும் நிலப்பிரபுத்துவ முதலாளித்துவ சக்திகள் அமெரிக்க இந்திய ஆளும் வர்க்க சக்திகளுடன் இணைந்து சும்மா இருக்கப் போவதில்லை. இந்திய மக்கள் உள்ளிட்ட தென்னாசிய மக்களும் உலக மக்களும் நேபாளத்தின் வென்றெடுக்கப்பட்டு வரும் மக்கள் சக்திக்கு உறுதுணையாக இருப்பது அவசியமாகிறது.
இந்த இடத்தில் நேபாள மாஓவாதி மையக் குழு உறுப்பினர் தோழர் கஜுரேல் சொல்லிய ஒரு விடயத்தை இங்கு நினைவூட்டல் பொருத்தம்.
"எங்களுடைய மக்கள் விடுதலை இராணுவம் 20,000 வீரர்களைக் கொண்டிருக்கிற வலிமையான இராணுவம். ஐ.நா. படைகளை விட இரு மடங்கு பெரிய இராணுவம். இதைக் கண்டு அமெரிக்க ஏகாதிபத்தியமே அஞ்சக் கூடிய நிலை இங்கிருக்கிறது. அந்த இராணுவம் முகாம்களிலே அடைக்கப் பட்டிருக்கிறது. எங்களுடைய ஆயுதங்கள் பெட்டகங்களிலே வைத்து பூட்டப் பட்டிருக்கின்றன. சில புரட்சியாளர்கள் நாங்கள் எங்களுடைய ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு விட்டோம். ஆயுதங்களைக் கையளித்து விட்டோம் என்று கருதிக் கொண்டு குழப்பம் அடைந்திருக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல.
பத்தாண்டுக் காலம் நடந்து வந்திருக்கிற மக்கள் போர் அங்கே இன்றைக்கு இருக்கிற அரசியல் சூழலைத் தோற்றுவித்து இருக்கிறது. அந்த ஆயுதப் போராட்டம் தோற்றுவித்த அரசியல் சூழல் எத்தகையது என்றால் ஆயுதமேந்தி நாங்கள் அடையக் கூடிய நோக்கத்தை அமைதியான முறையிலே அடைகிற வாய்ப்பை அது ஏற்படுத்தி இக்கிறது. எனவே தான் நாங்கள் ஆயுதப் போராட்டத்தை நிறுத்தி வைத்திருக்கிறோம். தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறோமே தவிர ஆயுதப் போராட்டத்தை ஒரேயடியாக கைவிட்டு விடவில்லை என்பதைத் தெளிவாக்க விரும்புகிறேன்.
எங்களுடைய நண்பர்களும் தோழர்களும் கவலைப் படுகிறார்கள். எங்களுடைய மக்கள் விடுதலைப் படை பாசறைகளுக்குள்ளே அடைபட்டு இருக்கிறனவே ஆயுதங்கள் பெட்டகங்களிலே பூட்டி வைக்கப்பட்டு இருக்கின்றனவே என்று அவர்கள் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். நான் அவர்களுக்குச் சொல்கிறேன். கவலைப்பட வேண்டாம். பெட்டகங்களைப் பூட்டி அதனுடைய சாவி எங்களுடைய படைத் தளபதியின் கையிலேதான் இருக்கிறது. எப்போது தேவை என்றாலும் திறந்து எடுத்துக் கொள்ள முடியும் என்று தெரியப்படுத்த விரும்புகிறேன்.
மறு தரப்பிலேயே வேறு சிலர் இருக்கிறார்கள். ஊதாரணமாக, அமெரிக்க ஏகாதிபத்தியம் மாஓவாதிகள் மாறிவிட வில்லை என்று சொல்கிறது. மாஓவாதிகள் தங்கள் கருத்தை மாற்றிக் கொள்ளவில்லை என்று பிற்போக்காளர்கள் சொல்கிறார்கள். மாஓவாதிகள் மாறாவில்லை. அவர்களை மாற்ற வேண்டும் என்று இந்திய அரசும் அப்படித்தான் சொல்கிறது. நேபாளத்திலே இருக்கிற பிற்போக்கு அமைப்புகள் சொல்கின்றன. நேபாள காங்கிரஸ் நேபாள (ஐக்கிய மார்க்சிய-லெனினிய) கம்யூனிஸ்ட் கட்சி போன்ற அமைப்புகளெல்லாம் சொல்கிறார்கள். மாஓவாதிகள் மாறவில்லை என்று நான் அவர்களுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் நாங்கள் வந்திருப்பது எங்களை மாற்றிக் கொள்வதற்காக அல்ல. உங்கள் மாற்றுவதற்காகவே நாங்கள் வந்திருக்கிறோம்.
எங்கெல்லாம் தேசிய ஒடுக்குமுறை நிலவினாலும் அதை எதிர்த்து விடுதலைக்காகப் போராடுகிற உரிமை மக்களுக்கு உண்டு. நேபாளத்திலேயே சின்னஞ சிறு தேசிய இனங்கள் சில இருக்கின்றன. அந்த தேசிய இனங்கள் தங்கள் விடுதலைக்காகப் போராடுகின்றன. ஏனென்றால் அவை தேசிய ஒடுக்கு முறைக்கு உள்ளாகியிருக்கின்றன. அந்த தேசிய இனங்களின் போராட்டத்தை எங்கள் கட்சி தான் தலைமை ஏற்று நடத்துகிறது. தேசிய விடுதலைக்காக நாங்கள் போராடுகிறோம். உலகெங்கும் தேசிய விடுதலை இயக்கங்களை நாங்கள் ஆதரிக்கிறோம்."
நேபாள மக்கள் போராட்டம் நமக்கு சொல்லும் பாடங்கள் பல. வெறுமனே ராணுவப் பதிலடிகள் மூலம் தமிழ் மக்களின் இருப்பைப் பாதுகாக்க இயலாது. இது இன்று வரையிலான போராட்ட அனுபவம். மக்களின் பாதுகாப்பையும் நலன்களையும் முதன்மைப்படுத்துகிற விதமாகக் காரியங்கள் மேற்கொள்ளப்பட்ட காலங்கள் இருந்துள்ளன. ஆனாலும் அவை மக்களை முதன்மைப்படுத்துகிற முறையில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூற இயலாது. தமிழ்; மக்களுக்குத் துரோகமாக நடக்கிறவர்கள் எனக் கருதப்படும் எல்லாரையும் அழித்தும் விடுதலையை வெல்ல இயலாது. மனிதர்களது தவறுகளை அவர்களது சூழ்நிலைகளில் வைத்துப் பார்ப்பதும் அவர்களை விடுதலைப் போராட்டத்தின் தரப்பிற்கு வென்றெடுப்பதும் ஒரு விடுதலைப் போராட்டத்தின் முக்கியமான தேவை. இவ் விடயத்தில் தமிழ் மக்களின் நலனும் பாதுகாப்பும் பற்றி அக்கறையுள்ள அனைவருமே கவனங் காட்டவேண்டும். தவறினாற் போரை யார் வென்றாலும் வெல்லாவிட்டாலும் மிக அதிகம் இழப்போர் தமிழ் மக்களாகவே இருப்பர்.
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் இன்று தவிர்க்க இயலாத ஒரு வரலாற்றுத் தேவை. ஆனால் அது ஆயுதம் தாங்கிய போர் என்ற ஒற்றைப் பரிமாணத்திலிருந்து விடுபட வேண்டும். அதைப் பரந்துபட்ட மக்கள் போராட்டங்களாகவும் மக்கள் யுத்தமாகவும் வெகுசன அரசியல் இயக்கமாகவும் விரிவுபடுத்துவதற்கான வழிகள் தேடப்பட வேண்டும். அதன் மூலமே தமிழ்மக்களிடையே அதிக பட்ச போராட்ட ஒற்றுமையையும் பங்குபற்றலையும் பெற இயலும்.
இலங்கையின் பொருளாதாரம் பூரணமாகவே சீரழிந்தாலும் பரவாயில்லை, இலங்கை முழுவதும் அந்நியரது ஆதிக்கத்துக்குட்பட்டுப் போனாலும் பரவாயில்லை, ஒரு தேசிய இனமாகத் தமிழ் மக்களின் இருப்பையும் அவர்களது சமத்துவத்தையும் அடிப்படை உரிமைகளையும் ஏற்க மாட்டோம் என்ற நோக்குடனேயே இன்று ஆட்சியிலுள்ள பேரினவாதிகள் செயற்படுகின்றனர். எதிர்க் கட்சிப் பேரினவாதிகளிற் சிலருக்கு அது போதாததாயுள்ளது. வேறு சிலருக்கு அது பற்றிய அக்கறை இல்லை. இதை விடத் திறமையாகப் போரை நடத்தக் கூடியவர்களையே யூ.என்.பி. தேடுகிறது. பேரினவாதப் பாராளுமன்றக் கட்சிகளையும் தலைவர்களையும் பாராளுமன்ற அரசியலையும் நம்பி ஏமாற இனியும் இயலாது.
ஏகாதிபத்திய 'சர்வதேச சமூகத்தின்" ஆசிகளுடன் பேரினவாதம் தமிழ் மக்களை ஒடுக்குகிற காரியத்தில் முனைப்பாக இயங்குகிறது. எனவே அதில் எப் பகுதியினதும் நல்லெண்ணத்தை நம்பித் தமிழ் மக்கள் ஏமாற இயலாது. ஆனால் தனது அடக்குமுறையைத் தமிழ் மக்களுடன் நிறுத்திக் கொள்ள இயலாமல் பேரினவாத அதிகார பீடம் தடுமாறுகிறது. சிங்கள மக்கள் எதிர் நோக்குகிற பொருளாதாரப் பிரச்சனைகள் புதிய எதிர்ப்புச் சக்திகளைக் கிளறிவிடுகிற அபாயம் பற்றி அது அறியும். எனவே சிங்களப் புலிகள், தொழிற்சங்கப் புலிகள், ஊடகப் புலிகள் என்று முத்திரை குத்தி அந்த எதிர்ப்பின் விதைகளை முளை விடாமலே சாகடிக்க முயல்கிறது. இதைத் தமிழ்த் தலைமைகள் என்றுமே உணருமா என்பது பற்றி மிகுந்த ஐயத்துக்கு இடமுண்டு.
எனவே தான், மூன்றாவது சக்தி ஒன்று எழுச்சி பெறுவதற்கான தேவையை மட்டுமில்லாமல் அதற்கான வாய்ப்பையுங் கொண்டதாக இன்றைய காலகட்டம் அமைந்துள்ளது. இடதுசாரித் தோழர்களும், சமூக அக்கறையும் துணிவுமுள்ள பத்திரிகையாளர்களும் தொழிற்சங்கவாதிகளும் கடத்தப்படுவது பொது எதிரியின் வலிமையின் அடையாளமல்ல. அவை எதிரியின் இயலாமையின் வெளிப்பாடுகள். அதைக் கண்டு நாட்டின் சனநாயக முற்போக்கு இடதுசாரிகள் தயங்கி நின்றால் நாடு ஃபாஸிஸத்தை நோக்கித் தள்ளப்படும். மாறாக அவற்றை எதிர்த்து நிற்கப் புதிய தந்திரோபாயங்களையும் புதிய வகையிலான வெகுசனப் போராட்டங்களையும் வகுத்து முன்னேற முயல்வார்களாயின் பொது எதிரியின் பலவீனங்கள் வேகமாகவே அம்பலமாகி நாட்டின் மக்கள் புது நம்பிக்கை பெறுவர்.
இது சோதனை மிகுந்த காலமாகத் தோன்றலாம். ஆனால் இதுவே எதிர்காலத்தின் வெற்றிகட்கான உறுதியான அத்திவாரங்களை இடுவதற்கான காலமுமாகும். நேபாள மக்கள் போராட்டம் சொல்லும் முக்கியமான செய்தியும் அதுதான்.
Monday, October 6, 2008
நேபாளம்: பெண்களின் போராட்டப் பங்களிப்பும் அரசியல் பிரதிநிதித்துவமும்
அண்மையில் நேபாளத்தில் இடம் பெற்ற அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தலில் சிறுபான்மை இனத்தவர் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பின்தங்கிய மக்கள் பிரிவினரின் பிரதிநிதிகள் பலர் வெற்றி பெற்றனர். குறிப்பாகப் பெண்களுக்குரிய பிரதிநிதித்துவம் மேற்படி சபையில் 33.21 வீதமாக உள்ளது. அதாவது 575 உறுப்பினர்கள் கொண்ட அரசியல் நிர்ணய சபையில் 191 பேர் பெண் பிரதிநிதிகளாவார். இவர்களில் 30 பேர் நேரடித் தேர்தல் மூலமும் மிகுதி 161 பேர் விகிதாசாரத் தேர்தல் அடிப்படையிலும் தெரிவாகியுள்ளனர். ஆனால் 1999ம் ஆண்டு பழைய பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பெண்கள் வெறும் 6 சதவீதம் மட்டுமே அதாவது 205 உறுப்பினர்கொண்ட பாராளுமன்றத்தில் 12 பேர் மட்டுமே பெண்களாக இருந்தனர்.
ஆனால் அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தலில் மாஓவாத கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்களாக 74 பேர் போட்டிக்கு நின்றனர். 39 பெண்கள் நேபாளக் காங்கிரஸிலும் 36 பேர் ஐக்கிய மாக்ஸிஸ லெனினிஸக் கம்யூனிஸ்ட் கட்சியிலும் 13 பெண்கள் மாதேசிக் கட்சியிலும் வேட்பாளர்களாக இருந்தனர். இத்தகைய பெண் வேட்பாளர்கள் பல முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தோற்கடித்து வெற்றி பெற்றனர். இவ்வாறு வெற்றி பெற்ற பெண் வேட்பாளர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் மாஓவாதக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களாவர்.
அவர்களில் ஒருவர் ஹகாற்றி மாகர் என்பவர். அவரது கணவர் முடியாட்சியை எதிர்த்த மாஓவாதிகள் நடாத்திய போராட்டத்தில் தியாகியானார். தனது கணவனது இறப்பிற்கு பின்பும் கைக் குழந்தையுடன் நேபாளத்தின் பல பிரதேசங்களிலும் சென்று மக்கள் யுத்தப் போராட்டப் பணிபுரிந்த ஒரு போராளியாவார். அவரைப் போன்ற பெண்களின் பிரதிநிதிகள் நேபாளத்தின் 12.5 மில்லியன் பெண்களுடைய உரிமைகளுக்கான பிரதிநிதிகளாக உள்ளனர். அவர் கூறுகையில் 33 வீதத்துடன் நின்றுவிடாது எதிர்காலத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் 50 வீதமாக உயர வேண்டும் என்றார்.
பெண்கள் பிரதிநிதித்துவம் என்பது வெறும் பதவிப் பிரச்சினை அல்ல. நடப்பில் இருக்கும் சமூக அமைப்பில் உள்ள பெண்கள் மீதான ஒடுக்கு முறைகள் உட்பட அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் எதிராகப் போராடும் கொள்கையையும் நடைமுறைகளையும் கொண்டிருக்க வேண்டும் என்பதே பிரதானமானதாகும்.
மேற்படி பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை இலங்கை, இந்திய நாடுகளுடன் ஒப்பிட்டுப்பார்த்தால் அது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு போன்றதாகும். குறிப்பாக இந்தியாவில் இதுவரை பெண்களுக்கான 33 சதவீத ஒதுக்கீடு சட்டமாக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ஜனாதிபதி என்ற பொம்மைப் பதவிக்கு ஒருவரை நியமித்துவிட்டுத் தம்பட்டம் அடிக்கும் பிற்போக்கு நிலைதான் அங்கு காணப்படுகிறது. இங்கும் சிறிமாவோ, சந்திரிகாவைக் காட்டி பெண்களுக்கு அந்தஸ்து கிடைத்ததாகப் பெருமை பேசுவோர் உள்ளனர். ஆனால் நேபாளத்தின் பத்து வருட ஆயுதப் போராட்டமும் கிளர்ந்தெழுந்த ஐந்து பிரதான வெகுஜன எழுச்சிப் போராட்டங்களும் பெண்களின் பங்களிப்பைச் சாத்தியமாக்கிக் கொண்டன.
நேபாளத்தில் மாஓவாதக் கட்சியின் பெண்கள் இயக்கம் சகல நிலைகளிலும் ஒடுக்கப்பட்டு வந்த பெண்கள் மத்தியில் சமூக மாற்றம் நோக்கிய வெகுஜன அரசியல் வேலைகளை முன்னெடுத்து வந்ததன் விளைவே அங்கு பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்க காரணமாகும்.
Thursday, September 4, 2008
கடவுள் என்பது கற்பனையா, உண்மையா? - பரிசோதனை முடிவுகள்
புத்த மதம் சொல்கின்றது மற்ற மதங்கள் சொல்கின்ற கடவுள் என்ற விடயம் இல்லை என்று, அது ஒரு கற்பனை விடயம் என்று.
இந்து மதமும், ஏனைய மதங்களும் கடவுள் என்று பலவாறாக சொல்கின்றன. சரி விஞ்ஞான முறையில் இப்பிரச்சினையை அணுகினால் என்ன. அதற்கு ஒரே வழி பரிசோதனை செய்து பார்த்தால் தான் உண்டு.
மிக மிக அண்மைய பரிசோதனையொன்றின் முடிவுகள் இங்கே. (பதிவின் இறுதியில் முடிவுகள்)
கொழும்பு இந்து ஆலயம் மீது பௌத்த பிக்கு தலைமையிலான காடைக்கும்பல் தாக்குதல்
| [வியாழக்கிழமை, 04 செப்ரெம்பர் 2008, 04:55 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] |
இந்த இந்து ஆலயம் புனருத்தாரணம் செய்யப்பட்டு நேற்று புதன்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது. இந்நிலையில் இன்று அதிகாலை 2:00 மணியளவில் ஆலயத்துக்குச்சென்ற பௌத்த பிக்கு தலைமையிலான காடைக்கும்பல் ஆயலத்தை அடித்து நொருக்கி சேதமாக்கியுள்ளது.இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய கிராண்ட்பாஸ் காவல்துறையினர் தாக்குதல் நடத்திய பௌத்த பிக்குவையும் மேலும் மூவரையும் கைது செய்துள்ளனர். கிராண்ட்பாஸ் கெமல் மாவத்தையில் அமைந்துள்ள சிறீ முத்துமாரி அம்மன் ஆலயப்பகுதியில் பெரும்பான்மையான தமிழ் மக்களே வாழ்ந்து வருகின்றனர்.இந்த ஆலயத்துக்கு அருகில் பௌத்த கோவில் ஒன்றும் உள்ளது. இந்த பௌத்த கோவிலைச் சேர்ந்த பௌத்த பிக்குவே சிறீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பௌத்த பிக்கு சிறீ முத்துமாரி அம்மன் ஆயலத்தைச் சூழவுள்ள தமிழ் மக்களை அச்சுறுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பௌத்த பிக்கு பாலியல் வல்லுறவு உட்பட்ட வேறு பல குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக காவல்துறையினரால் விசாரணை செய்யப்பட்டு வந்ததாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். |
##################################################################################
எப்படியிருக்கின்றது. நாங்களெல்லாம் (என்னையும் சேர்த்துத்தான், நானும் ஒரு இந்து தான்) கடவுள் இருக்கு என்று நம்பி சிலையெல்லாம் செய்து, கோயில் கட்டி கும்பிடுறம், ஆனால் ஆருக்கு உண்மையான உண்மை தெரிஞ்சிருக்கு எண்டு பாருங்கோ. புத்த பிக்குவுக்கு தானே உண்மை தெரிஞ்சிருக்கு. ஏனெண்டால் புத்தர் அப்பிடி தானே சொல்லியிருக்கிறார். அதாலை தானே புத்த பிக்குவும், காடையர் கூட்டமும் ஒரு பயமும் இல்லாமல் வந்து உடைச்செறிஞ்சிருக்கினம்.
நாங்கள் கடவுள் உண்மை எண்டு நம்பிக்கொண்டு, அதுகளுக்கெல்லாம் எவ்வளவு பயப்பிடுறம், எவ்வளவு பணம், பொருளை அநியாயம் செய்யுறம். எவ்வளவு நேரத்தை வீணாக்கிறம்.
கடவுள் எண்டது கற்பனை எண்டதாலை தானே, சிவலிங்கம் இரண்டு துண்டாக போகும்வரைக்கும், முத்துமாரியம்மனின்ரை முகத்தை உடைக்கும் வரைக்கும், ஏன் அந்த புத்த பிக்கு பாலியல் வல்லுறவுகள் புரியும்வரைக்கும் ஒண்டுமே நடக்கேல்லை.
அதுக்குள்ளை வேற அதைத்தாறதுக்கு, இதைத்தாறதுக்கு என்டு அண்மையிலை பால்குட பவனியெல்லாம் எடுத்தவை. எங்கடை சனங்கள் எப்பதான் இப்பிடியான சம்பவங்களையெல்லாம் (மடுமாதா சொரூபம் உட்பட) தங்கடை நம்பிக்கைகளோடை தொடர்புபடுத்தி சிந்திக்கப்போகுதுகளோ!
அதுக்காக, நடந்த சம்பவம் சரியெண்டு நான் சொல்லவரவில்லை. புத்த மதத்தவர்கள் இந்து மதத்தவர்கள் மீது வெறுப்புக்கொண்டது, இந்தமாதிரி தாக்கினது பிழை. ஒருத்தரை ஒருத்தர் வெறுக்கவைக்கிறதிலை மதங்கள் பெரும் பங்காற்றுகின்றன. மதநூல்களே மற்ற மதத்தவரை 'விடாதே, பிடி, கொல்' என்று தானே சொல்கின்றன. சமூகத்தை பிளவுபடுத்துகின்றவேலைகளையும் இந்த மதங்கள் செய்கின்றன. ஆனால், இந்த மேற்படி சம்பவத்துக்கு, மதமல்லாமல், சிங்களவர்களுக்கு, இயல்பாகவே தமிழர்கள் மீதுள்ள வெறுப்பும் காரணமாகவிருக்கலாம். இனம் என்ற பரிமாணத்திலும் வைத்து சிந்திக்கவேண்டிய விடயம் இது. என்னவிருந்தாலும் கடவுள் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்காது தானே. பரிசோதனை முடிவு விளங்கினால் சரி.
உதவி:
புதினம்.
Monday, September 1, 2008
பாலியல் வன்புணர்வு, இயற்கையானது தானே!
பெரும்பாலும் பாலியல் வன்புணர்வு என்று வரும்போது, வன்புணர்வுக்கு உள்ளாகுபவர்கள் பெண்களாகவும், வன்புணர்வை மேற்கொள்பவர்கள் ஆண்களாகவும் இருப்பதை காணலாம். அதற்காக, ஒரேயடியாக, பாலியல் வன்புணர்வால் பாதிக்கப்படுபடுவது பெண்களே என்று சொல்லமுடியாது, ஏனென்றால் ஆண்களும் பெண்களால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படும் சம்பவங்களும் இடம்பெறுகின்றன, சிறிய அளவில், பெரும்பாலும் மேலை நாடுகளில். என்றாலும், பாலியல் வன்புணர்வுக்கு அதிகம் இரையாகுபவர்கள் பெண்களே.
ஒப்பீட்டளவில், பலியல் வன்புணர்வுக்கு பெண்கள் அதிகளவில் இரையாக்கபடுவதற்கு முக்கிய காரணம், ஒரு ஆணினால் ஒரு பெண்ணின்மீது நிகழ்த்தப்படும் வன்புணர்வில் கூட, அந்த பெண்ணினால் ஆணை உடல்ரீதியாக எதிர்த்துப்போரிட முடியாமையாகும். ஒரு ஆணையே எதிர்த்துப்போரிட முடியாத நிலை நிலவும்போது, ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்கள் பாலியல் வன்புணர்வில் ஈடுபடும்போது, பெண்ணொருத்தி ஒன்றுமே செய்யமுடியாதவளாகின்றாள்.
அத்துடன், சமூகரீதியாக, ஆண்களோடு ஒப்பிடுகையில், போரிடும் திறன்குறைந்தவர்களாகவும், கபடபுத்தி குறைந்தவர்களாகவும் வளர்க்கப்படுவதும் இன்னொரு காரணம். ஏனெனில் அநேக வன்புணர்வுகளில், ஆண்களால் பெண்கள் கபடத்தனமாக ஏமாற்றப்பட்டே வன்புணர்விற்கு உள்ளாக்கப்படுகின்றார்கள். அத்துடன், உயிரியல் பரிணாம (Biological Evolution) மாற்றத்தில் (இயற்கைத்தேர்வு - Natural Selection மூலம்) அடைந்துகொண்ட ஆண்பெண் உடல்ரீதியான வேறுபாடுகள் (இயல்பாக ஆணின் உடலமைப்பு, பெண்ணைவிட பலம்பொருந்தியதாக இருத்தல், உடலுறவில் பெண்கள் பெற்றுக்கொள்ளும் அந்தத்தில் (Receiving End) இருத்தல், பாலுறுப்புக்களின் அமைப்பு என்பன) ஆணினால் பெண்மீதான வன்புணர்வுகளை அதிகமாக்கியிருகின்றது.
சரி, இத்தகைய, பாரிய சமூககுற்றமாக கருதப்படுகின்ற, பாதிக்கப்படுபவருக்கு உடல்ரீதியாகவும், உளரீதியாகவும் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்ற, குற்றம் புரிந்தவரை சிறைக்குள் தள்ளக்கூடிய இந்த பாலியல் வன்புணர்வு என்ற நடத்தை இயற்கையானதா, அல்லது மனிதனால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்ற ஒரு நடவடிக்கையா?
இலகுவாக சொல்லப்போனால், மனிதனை மறந்துவிட்டு மற்ற விலங்கினங்களை அவதானித்துப்பருங்கள். பெரும்பாலும் அவை பாலியல் வன்புணர்விலேயே ஈடுபடுகின்றன. அதாவது ஆண்விலங்கு, பெண்விலங்கை வலிந்தே உடலுறவு கொள்கின்றது. உதாரணத்துக்கு, நாம் அன்றாடம் அவதானிக்கக்கூடிய, நாய்கள், கோழிகள், மாடுகள், ஆடுகள், பூனைகள் போன்ற விலங்குகளை பார்த்தீர்களானால், வன்புணர்வே இடம்பெறுவதை அவதானிக்கலாம். அங்கே பெண்விலங்கு முடிந்தவரை உடலுறவை தவிர்க்கவே முயற்சிக்கும், ஆனாலும் ஆண்விலங்கின் ஆதிக்கத்தால் இறுதியில் வன்புணர்வுக்கு உள்ளாகின்றது. ஆடு, மாடு, நாய், கோழி, பூனை போன்ற விலங்குகள் மட்டுமல்ல, அநேகமாக எல்லாவிலங்குகளிலுமே இந்த உடலுறவுக்கு முந்திய போராட்டம் நிகழ்வதை காணலாம்.
கலாச்சார மாற்றத்தில், சொத்துடைமை என்ற கண்ணோட்டத்தில், ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற வரையறையை மனிதன் என்ற விலங்கு ஏற்படுதிக்கொண்டது. ஆனால் இந்நிலைமை மற்ற விலங்கினங்களில் காணப்படுவதில்லை. பெரும்பாலும் ஒரு பெண்விலங்குடன் எந்த ஆண்விலங்கு உடலுறவு கொள்வதென்பதில், ஆண்விலங்குகளிற்கிடையில் ஒரு பெரும் போட்டியே (சண்டையே) இடம்பெறும். நாய்களிலும், பூனைகளிலும் இந்த போட்டி உச்சக்கட்டமாக இருக்கும். அந்த போட்டியில் முன்னிற்கும் ஆண்விலங்கு, பின்னர் பெண்விலங்கை அடக்கி வன்புணர்வை மேற்கொள்ளும். ஆனாலும் எல்லாநேரத்திலும் ஆண்விலங்கே உடலுறவை தீர்மானிப்பதில்லை. ஆகக்குறைந்தது எந்த ஆண்விலங்குகளுடன் உடலுறவு கொள்ளக்கூடாது என்பதை பெண்விலங்குகளும் தீர்மானிக்கின்றன தான். அதாவது, பாலியல் உறவுக்கான ஜோடியை தெரிவுசெய்தல் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானதாகவே இருக்கின்றது. ஏனென்றால், பெண்நாய்கள், சில ஆண்நாய்களை முற்றுமுழுதாக எதிர்ப்பதையும், சில ஆண்நாய்களுக்கு ஓரளவு இடம்விட்டுக்கொடுப்பதையும், சில ஆண்நாய்களுக்கு எந்தவித எதிர்ப்பை காட்டாதிருப்பதையும் அவதானித்தால், இந்நிலைமை புலப்படும்.
அதிலும், சில சமூக விலங்குகளில் (Social Animals) நிலைமை கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். கூட்டம் கூட்டமாக அவை வாழ்வதால், பெரும்பாலும் வலிமையுள்ள ஒரு ஆண்விலங்கு கூட்டத்துக்கு தலைமை தாங்குவதை காணலாம். கூட்டத்திலுள்ள பெரும்பாலான பெண்விலங்குகளுடன் உடலுறவு கொள்வது இந்த தலைமை தாங்கும் ஆணாகத்தான் இருக்கும். அதுவும் வன்புணர்வாக தான் இருக்கும். ஏனைய ஆண்விலங்குகள், பெரும்பாலும் அந்த கூட்டத்துக்கு பணிபுரிபவையாகவே இருக்கும். இந்த சமூக கட்டமைப்புகளுக்கிடையில் சிறிது சிறிது மாற்றங்கள் காணப்படலாம். எவ்வாறாக இருந்தாலும், இறுதியாக பெண்விலங்கு மீது புரியப்படுவது, வன்புணர்வாகவே இருக்கும். இந்த சமூக கட்டமைப்புக்களை பல்வேறு குரங்கு வகைகள், சிங்கம், புலி போன்ற விலங்குகளில் அவதானிக்கலாம்.
மனித இனத்தின் ஆரம்பகட்ட வளர்ச்சியில்கூட (உதாரணத்துக்கு எமது மூதாதை மனித இனங்கள்) இந்த மேற்படி அடிப்படை சமூகக்கட்டமைப்பே காணப்பட்டது. அப்போதும் ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற முறை இருக்கவில்லை. வலிமையுள்ள ஆண், தனக்கு பிடித்த பெண்ணுடன் உடலுறவு கொள்ளும் நிலைமையே காணப்பட்டது. அந்த உடலுறவை தீர்மானிப்பது ஆணாகவே பெரும்பாலும் இருக்கும். அதாவது ஒரு வன்புணர்வு நிலையே காணப்பட்டது.
மனிதனைப்போலன்றி ஏனைய விலங்குகளில், பாலியல் வேட்கையென்பது சிந்தித்து வருவதல்ல, முற்றுமுழுதாக ஓமோன்களில் (Hormones) ஆதிக்கத்தாலேயே அவ்விலங்குகளில் பாலியல் நடத்தை என்பது கட்டுப்படுத்தப்படுகின்றது. காலநிலை மாற்றங்கள் போல, ஆண்டின் சில பகுதிகளிலேயே விலங்குகள் பெரும்பாலும் உடலுறவு கொள்கின்றன. ஆண்விலங்கும், பெண்விலங்கும் இனப்பெருக்க உடலுறவில் ஈடுபடுவதற்கான ஒரு காலப்பகுதி இருக்கும், அக்காலப்பகுதியில் அவற்றில் உடல்ரீதியான(அக, புற) மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஆணிற்கு வேட்கையேற்படும்போது, பெண்விலங்குமீது வன்புணர்விலீடுபடுகின்றது. ஏனென்றால் அவ்விலங்குகள், சிந்தித்து, ஒன்றையொன்று புரிந்து, புரிந்துணர்வினடிப்படையில் புணர்ச்சியிலீடுபடுவதில்லை. உடலுறவை, மனிதனைபோல (டொல்பினயும் சேர்த்து) கிளர்ச்சியூட்டம் விடயமாக அவை புரிவதில்லை. மாறாக அவற்றின் உடலுறவு நடத்தை ஓமோன்களாலேயே கட்டுப்படுத்தப்படுகின்றன.
மனிதனிலோ, நினைத்தவுடன் உடலுறவு கொள்ளக்கூடிய தன்மை காணபடும். பகுத்தறிவு, சிந்தித்து செயலாற்றல் என்ற பண்புகளால் இது சாத்தியமாகின்றது. அதை பெரும் கிளர்ச்சியூட்டும் விடயமாகவும் மனிதன் பார்க்கின்றான். டொல்பின்களும் இவ்வாறே நடந்துகொள்கின்றன என்று ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன.
விலங்கு இராச்சியத்தை பார்த்தால், ஆணாதிக்க நிலைமையையே எங்கும் காணலாம். அதனால் தான், மனித இனத்தில் கூட, அண்மைக்காலம்வரை, ஆணாதிக்கம் அதிகமாகவே காணபட்டது. இற்றைக்கு இருநூறு முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு, பெண்கள் எவ்வளவுக்கு ஆண்களால் அடக்கியொடுக்கபட்டார்கள், எவ்வளவுக்கு உரிமைகள் மறுக்கபட்டார்கள் என்பது வரலாற்று நிகழ்வுகளையும், நூல்களையும் அறிந்தவர்களுக்கு புரியும். விலங்குகளில் காணப்படும் இந்த ஆணாதிக்கநிலைமை கூட, பரிணாம வளர்ச்சியில் பெற்றுக்கொண்ட ஒரு நடத்தையோ என்று எண்ணத்தோன்றுகின்றது.
ஏனென்றால், பரிணாம வளர்ச்சிக்கு உடலுறவு என்பதே அடிப்படை. ஆண் பெண் உடலுறவினூடாகவே பரிணாமம் என்ற மாற்றம் நிகழ்ந்துகொண்டிருக்கின்றது. நான், நீங்கள், நாய், பூனை, மரம், செடி என்பனவெல்லாம் இந்த ஆண்-பெண் உறவின்மூலமே உருவாகியிருக்கின்றன. ஆகவே இந்த ஆண்-பெண் உடலுறவை நிச்சயப்படுத்திகொள்ள, ஒருசாரார் (ஆண்) ஆதிக்கசக்தியாக உருப்பெறவேண்டிய தேவையேற்பட்டிருக்கின்றது. அதாவது ஒரு செயல் நடைபெறுவதை உறுதிப்படுத்திக்கொள்ள ஆதிக்கம் ஒரு ஆயுதமாக பாவிக்கப்பட்டிருக்கின்றது. ஏனென்றால், சிந்தித்து செயலாற்றல், பகுத்தறிவு என்பவையெல்லாம், பரிணாமத்தின் மிக மிக பிற்பட்ட காலப்பகுதியிலேயே ஏற்பட்டவை. அதனால் தான், மனித இனத்துக்கு மட்டும் இந்த ஆதிக்கம் (ஆணாதிக்கம்) இறுதியில் ஒரு பெரும் பிரச்சினையாகிவிட்டது.
ஆதிக்கம் செலுத்தி, வன்புணர்வில் ஈடுபடக்கூடிய ஆண்விலங்கே, தன்னுடைய சந்ததியை உருவாக்கிக்கொள்ள அதிக சாத்தியக்கூறுகள் காணப்பட்டது. அடுத்து உருவாகும் சந்ததிகூட ஆதிக்கம்செலுத்திய ஆண்விலங்கினதும், அடங்கிப்போன பெண்விலங்கினதும் இயல்புகளைக்கொண்டதாகவே இருக்கும். அவ்வகையில் அடுத்து வரும் சந்ததியிலுள்ள ஆண்விலங்குகள், இன்னும் ஆதிக்க தன்மையுடையவைகளாக இருக்கும். இவ்வாறே ஆண்விலங்குகள், ஆதிக்கத்துக்கான உடற்கூறுகளை பெற்றுகொண்டன என்று எண்ணத்தோன்றுகின்றது. பரிணாமத்தின் அடிப்படையான ‘தக்கன பிழைத்தல், இயற்கை தேர்வு' என்பது இந்த ஆண்பெண் வேறுபாடுகளுக்கு வழிசமைத்தது.
ஆகவே பாலியல் வன்புணர்வு என்பது, அடிப்படையில் மிக மிக இயற்கையான ஒரு நடத்தை. விலங்கினங்களின் பரிணாம வளர்ச்சிப்பாதையில் இந்நடத்தை ஒரு அவசியமான நடத்தையாகவும் இருக்கின்றது. பாலியல் வன்புணர்வு, மனிதனை தவிர ஏனைய விலங்கினங்களில் ஒரு குற்றமாகவோ, பிரச்சினையாகவோ நோக்கப்படுவதில்லை. அவைக்கு அது ஒரு பிரச்சினையான விடயமுமல்ல.
நாகரிகத்தில் வளர்ச்சியடைந்துவிட்ட மனிதர்கள் நாம், பாலியல் வன்புணர்வை ஒரு பாரிய குற்றமாகவே சடடப்புத்தகங்களில் கூட எழுதிவைத்துவிட்டோம். ஆண்-பெண் சம்த்துவம் என்பது நாகரிக நிலையில் நல்ல நிலையை அடைந்துகொண்டே வந்திருக்கின்றது. இன்னும் முழுமையான ஆண்-பெண் சமத்துவத்தை காண்முடியவில்லை தான். ஆண்-பெண் சமத்துவம் மிக மோசமாக உள்ள நாடுகளில், பெண்களுக்கெதிரான பாலியல் வன்புணர்வு அதிக அளவில் இடம்பெறுவதை அவதானிக்கலாம். அதாவது ஆணாதிக்கம் அதிகமாகவுள்ள சமுதாயங்களில் பெண்களுக்கெதிரான பாலியல் வன்புணர்வுகள் அதிகமாக இருக்கும்.
ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற முறைமைகள் ஏற்படுத்தப்பட்டு, திருமண முறைகளை ஏற்படுத்திய பின்பு, சந்ததியை பெருக்க்கிக்கொள்ள பாலியல் வன்புணர்வு என்ற நடத்தைக்குரிய தேவை இல்லாமலேயே போய்விட்டது. மனித இனத்தில், புரிந்துணர்வினடிப்படையிலான உறவுமுறைகள் என்றானபின்பு, வன்புணர்வுக்கு வேலையில்லாமல் போய்விட்டது தான். ஆனாலும் அடிமனதிலுள்ள வன்புணர்வு என்னும் அபரிமித இச்சை இன்னும் பலரை விட்டு போய்விடவில்லை.
சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம், பெண்களுக்கெதிரான பாலியல் வன்புணர்வுகள் இடம்பெற்றுகொண்டிருக்கின்றன. முக்கியமாக, பாதுகாப்பற்ற சூழ்நிலைகளில் பெண்கள் அகப்படும்போது ஆண்களால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள். அத்த்துடன், உலகெங்கும் மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைகளில், பெண்களுக்கெதிரான ஒரு வன்முறை ஆயுதமாக, ஒரு இன அழிப்பு ஆயுதமாக இராணுவ வீரர்களால் பெண்கள்மீது பாலியல் வல்லுறவுகள் நிகழ்த்தப்படுகின்றன. இத்தகையதொரு நிலைமையை இலங்கையிலும் காணலாம். இலங்கையில் நடைபெறும் பாலியல் வல்லுறவுக்குற்றங்களில் அதிகமானவை ஆயுதம் தாங்கியவர்களாலேயே (இராணுவம், பொலிஸ், ஆயுதக்குழுக்கள்) நிகழ்த்தப்படுகின்றன.
அறிமுகமில்லாதா ஆணினாலோ/ஆண்களினாலோ பெண்களின்மீது புரியப்படும் உடலுறவு மட்டுமல்ல பாலியல் வன்புணர்வு. கட்டிய கணவனால் கூட எத்தனையோ மனைவிகள் (பெண்கள்) பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள். அதாவது, கணவன் மனைவியாக இருந்தால் கூட, பெண்ணின் விருப்பத்திற்கெதிராக ஆண் உடலுறவிலீடுபடுவானாயின் அதுவும் பெண்ணின்மீது புரியப்படும் பாலியல் வல்லுறவு தான், குற்றம்தான். இத்தகைய குற்றங்களுக்கும் நீதிபெற்றுக்கொள்ள சட்டத்தில் இடமிருக்கின்றது.
மனித சமுதாயம் இன்னுமே ஆணாதிக்க சமூகக்கட்டமைப்பிலிருந்து விடுபடுவதாயில்லை. அதனால் தான், இன்று எண்ணுக்கணக்கற்ற பெண்கள், தங்கள் கட்டிய கணவனாலேயே வல்லுறவுக்குட்படுத்தப்படுகின்றார்கள். இன்று எத்தனை ஆண்கள், தங்களுடைய மனைவிக்கு, கட்டிலிலாவது சமபங்கு வகிக்கும் உரிமையை வழங்கக்கூடிய புரிந்துணர்விலிருக்கின்றார்கள். அல்லது அத்தகை உரிமையை எடுத்துக்கொள்ள எத்தனை பெண்கள் துணிவுடன் தயாராயிருக்கின்றார்கள். கட்டிலிலும் ஆணாதிக்கத்தின் அரசாட்சி தான். ஆணாதிக்க சமுதாயத்தில் வாழ்ந்து பழகிவிட்ட ஆண்களும், அதே சமுதாயத்தில் வாழ்ந்து பழகிவிட்ட பெண்களுமே இந்நிலைமைகளுக்கு காரணம். ஆகக்குறைந்தது கட்டிய கணவனால் பெண்கள் வல்லுறவுக்குள்ளாக்கப்படுவதேனும் இல்லாமல் செய்யப்படலாமே.
பரிணாம வளர்ச்சியில் மனித இனம் தோன்றாதவரை [சிந்தித்து செயலாற்றும் தன்மை (Rationality, Setting up goals and working towards them) அமையப்பெறாதவரை], பாலியல் வன்புணர்வு ஒரு இயற்கையான, அவசியமான நடத்தை தான். இருப்புக்கு இன்றியமையாததொன்றாக அது இருந்தது, ஆனால், இன்று மனித இனத்துக்கு அது தேவையில்லாததொன்று, பிரச்சினையானதொன்று. ஆண்-பெண் சமத்துவம் பேணப்படவேண்டிய தேவையிருக்கின்றது. பெண்ணினதும், ஆணினதும் உரிமைகள், உணர்வுகள் சமமாக மதிக்கப்படவேண்டிய தேவையிருக்கின்றது. பெண்ணை ஆணின் அரைவாசியென்றும், தரம் குறைந்தவளென்றும், ஆணிற்கு அடங்கிநடக்கவேண்டுமென்றும், பெண்களின் குரல்வளையை நசுக்கிய மதநூல்களை ஒருபுறம் தூக்கிப்போட்டுவிட்டு, எது நீதி, எது சரி என்று ஆராய்ந்தொழுகவேண்டிய காலமிது. பாலியல் வன்புணர்வின்மூலம் இனத்தை பெருக்கவேண்டிய தேவை மனித இனத்துக்கு என்றோ இல்லாமல் போய்விட்டது. அதற்கான உரிய சமூகக்கட்டமைப்புக்களை நாங்கள் வளர்த்தெடுத்துவிட்டோம். பாலியல் வன்புணர்வு, மனித இனத்தில் அடக்குமுறையின் சின்னமாக மாறிவிட்டது. வெட்கக்கேடான விடயமாக மாறிவிட்டது. ஆகவே இந்த பாலியல் வன்புணர்வு என்ற துர்நடத்தையை, குற்றத்தை மனித இனத்திலிருந்து முற்றுமுழுதாக அகற்றுவதற்கு, ஆண், பெண் வேறுபாடின்றி அனைவருமே பாடுபடவேண்டிய தேவையிருக்கின்றது.
Sunday, August 17, 2008
எனது சமூகத்தின் ஒரு கோரப்பக்கம்
உலக மதங்களில் இந்து மதம் மட்டுமே வலியுறுத்துகின்ற சமத்துவமின்மையை வெளிச்சம் போட்டுக்காட்டுகின்ற ஆவணப்படம் இது. இந்து மதத்தின் சாதி முறைமையின் (சதுர் வர்ணம்) கோரமுகத்தை வெளிப்படுத்துகின்ற படம். இதை இந்து மதத்தின் ஒரு கோரப்பக்கம் என்றே சொல்லவேண்டியிருக்கின்றது ஏனென்றால், இந்த சாதியமைப்பு முறையென்பது, நாளாந்தம் (முக்கியமாக இந்தியாவில்) பல கோர சம்பவங்களுக்கு முற்றுமுழுதான காரணமாக அமைகின்றது.
இதை எனது சமூகத்தின் ஒரு கோரப்பக்கம் என்று தலைப்பிடவேண்டியதாயிற்று. ஏனென்றால், நான் பிறந்து வளர்ந்த மதமும் இந்த மதம் தான். என்னுடைய, பெற்றோர், சகோதரர்கள், நண்பர்கள், உறவினர்கள் பலர் பின்பற்றும் மதமும் இதுதான்.
வெறும் மூடநம்பிக்கைகள், ஒரு கூட்டத்தார் இன்னொரு கூட்டத்தாரை அடக்கியாள உருவாக்கப்பட்ட வரைமுறைகள், எவ்வளவு கோரத்தாண்டவமாடுகின்றது என்பதற்கு இப்படம் சாட்சி.
நானறிந்தவரையில், வேறு எந்தமதமும் சமமின்மையை வலியுறுத்திச்செல்லவில்லை. வேறு எந்த மதமும், பிறப்பால் ஒரு கூட்டத்தாரை உயர்ந்தவர்களென்றும், இன்னொரு கூட்டத்தாரை தாழ்ந்தவர்களென்றும் சொல்லுவதை காணமுடியவில்லை.
கடவுள் இல்லை என்பதற்கு உள்ள ஏனைய ஆதாரங்களுடன், கடவுளின் மதம் என்று சொல்லப்படுகின்ற இந்த இந்து மதத்திலுள்ள கேவலம் இன்னொரு உறுதியான ஆதாரமாகும். இன்னும் தன்னை ஒரு இந்து என்று சொல்லிக்கொள்கின்ற ஒவ்வொருவனும் வெட்கப்படவேண்டும்.
அடிமைக்குணமும், அறியாமையாலும் ஆட்கொள்ளப்பட்டிருக்கின்ற நம்மவர்களில் பலர், இன்னும் இந்து மதம், உயரிய பண்புகளை வலியுறுத்துகின்றமதம், உலகின் தலை சிறந்த மதம் என்று பெருமையடித்துக்கொள்வதில் ஒன்றும் ஆச்சரியமில்லை தான்.
பாரபட்சமும், கொடுமைகளும், பாலியல் வக்கிரங்களும், ஏமாற்று வித்தைகளும் நிறையப்பெற்றதே இந்த இந்து மதம். இன்றைக்கும், பல பிழைக்கவழியில்லாத மனிதர்கள் (சாயி பாபா, அம்மா, கல்கி பகவான், மேல்மருவத்தூர் அம்மா, அமிர்தானந்த மயி, இன்னும் பலர்) பலர், பல ஏமாற்று வித்தைகளை புரிந்து, மக்களை மயக்கி, தம்மை கடவுள்கள் என்று சொல்லி, ஏமாற்றுகின்றார்களென்றால், அதுவும் இந்து மதத்தில் காணக்கூடிய ஒரு சிறப்பே.
உதவி.
http://sinnakuddy1.blogspot.com/2008/07/blog-post_9318.html
Saturday, August 16, 2008
எனக்குள் எழும் கேள்விகள்
என்னுடைய பிரார்த்தனையும் எல்லோரும் சுகமாக இருக்க வேணுமென்றுதான். சுகம் விசாரிக்கின்ற இவன் யாரென்று நீங்கள் கேட்டீர்கள் என்றால், என்னுடைய அனுமானமும் சரியாகவே இருக்கின்றது என்று அர்த்தம் பாருங்கோ...
நான் ஒன்றும் வெளியூர்க்காரனல்ல. இப்ப எல்லாம் போறாங்களே சந்திரன், செவ்வாய், வியாழனென்று... அங்க இருந்து வரவில்லை. ஏன் அமெரிக்கா என்ன நிறமென்று கூட எனக்கு சத்தியமாக தெரியாது பாருங்கோ. உங்களில் ஒருத்தனாக உங்களில் இருந்தே வருகின்றேன்.
எனக்கு சில விசயங்களை நீங்கள் 'கிளியர்' பண்ண வேண்டும். இல்லாட்டில் தலை வெடித்துவிடும் போல இருக்கு. அதுதான் நீங்கள் மணித்தியாலக்கணக்காக தூங்கிக் கொண்டிருக்கும் தொ(ல்)லைக்காட்சி நாடகங்களில் வந்து கேட்பம் என்றால், என்னுடைய முகத்துக்கு அது 'கொஞ்சம்' ஓவராம்! அதுதான் இந்த புளொக்கில தரிசனம் தாறன்.
சரி, என்ர டவுட்டுக்களை சொல்லிறன். தெரிஞ்சால் 'கொமென்ட்' அடிச்சு பதில் தாங்கோ... அதி கூடின smsகளை அனுப்பி அதிபெறுமதியான பரிசில்களை வெல்லுங்கள். மன்னிக்கவும்... வானொலி கேட்கிற பழக்கம் தன்னாலே வந்திட்டுது...
மைக்கல் பெல்ப்ஸ், இவரை உங்கள் எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கும் என்று நம்புறன். அதுதான் அவருடைய நண்பரே அவருக்கு 'உன்னுடைய கேவலமான முகத்தை எத்தனை தடவையடா ரி.வியில பார்க்கிறது' என்று sms அனுப்பியும் திருந்தாத ஜென்மம். அவர் இன்றைக்கு எத்தனை தங்கத்துக்கு சொந்தம் சொல்லுங்கோ. ஒன்று..? இரண்டு..? இல்லை எட்டுக்கு குறி வைத்திருக்கிறார். நல்லதுதான். வாழ்த்துக்கள். ஆனால், எங்கட பள்ளிக்கூடத்தில படிக்கும்போது ஒருத்தர் மூன்று போட்டிக்கு மேல் பங்குபற்றமுடியாது என்று எழுதப்படாத சட்டமொன்று இருக்கல்லோ..? அப்படியிருக்கும்போது, ஒலிம்பிக்கில் எப்படி ஒருத்தரால் இத்தனை போட்டிகளில் பங்குபற்ற முடியும்? அமெரிக்க ஜனநாயகப் பத்திரிகைகளே... சீனாவின் ஒலிம்பிக்கில் நடைபெறும் இந்த தில்லுமுல்லுகளையும் வெளிக்கொணர்வீர்களாக. ஓ... மறந்திட்டேனே.... மைக்கல் பெல்ப்ஸ் அமெரிக்கனா..? அதுதானே மெளனம்!
அடுத்த டவுட்டு என்னென்றால், அந்த நாரதரைப்பற்றினது. விளங்கியிருக்கும் என்று நினைக்கின்றேன். நடந்து வந்த பாதை தன்னை திரும்பியும் பார்க்காதவர்... ஆயிரக்கணக்கில் பாதுகாப்புக்கு வருவம் என்டினம்... கடலில் பீரங்கிக்கப்பல் நிற்கும் என்டினம்... மாநாட்டுக்கு முதல் வந்து பாதுகாப்பை ஒழுங்கு பண்ணினவரே காற்று வாங்க ஒய்யாரமாக நடக்கும் போது...................
போன வெள்ளிக்கிழமை இந்தியாவின் சுதந்திர தினமாம். ஒருத்தர் சொன்னார் இந்தியாவையும் அகிம்சையையும் பிரிக்க முடியாதாம். எனக்கு ஏனென்று இன்னும் விளங்கவில்லை. நான் நினைக்கின்ற இந்தியாவும் அவர் சொன்ன இந்தியாவும் வேறுவேறாக இருக்குமோ? எங்களிட்ட சாப்பாட்டுப் பொட்டலங்களுடன் வந்து... பிறகு தில்லுமுல்லு செய்து... நல்லூரில் நடந்த நீராகாரமின்றிய உண்ணாநோன்புப் போராட்டத்திலேயும், மட்டு-மாமாங்கத்தில் நடந்த அகிம்சைப் போராட்டத்திலேயும் தோற்று... பின்னர் கந்தகப் பலப்பரீட்சையில் சொந்த நாடு திரும்பின இந்தியாவைத்தான் நான் நினைக்கின்றேன். அவர் யாரை நினைக்கின்றார்..?
உங்களில் யாருக்கும் தமிழ்நாட்டுடன் 'கனெக்சன்' இருக்கா? இருந்தால் தயவுசெய்து இப்ப தமிழ் பேப்பரில வருகுதே... வன்னியில் எங்கட பிஞ்சுகள் பசிக்கொடுமையால் துடிக்கிற படங்கள்... அதைக் கத்தரிச்சு நெடுமாறன் ஐயாவுக்கும் மாண்புமிகு முதல்வர் கருணாநிதி ஐயாவுக்கும் அனுப்பிவையுங்கோ. முதலாமவர் உணவு சேகரிப்பார்... இரண்டாமவர் அதை தடுத்து விட்டு நல்லதொரு கவிதை சமைப்பார்....
அப்ப நான் போய் வரட்டா..........................?
Friday, August 8, 2008
சுத்தமான குடிதண்ணீர், தாகம்தீர்க்க மட்டும்தானா?
இப்போதெல்லாம் குடிப்பதற்கான தண்ணீர், சுத்தமாக, கிருமிகளற்று இருக்கவேண்டுமென்பதில் பரவலான விழிப்புணர்வு இருப்பது மனதுக்கு ஆறுதலளிக்கும் விடயம். குடிக்கின்ற தண்ணீரில் கவனமெடுப்பதன்மூலம், எத்தனையோவிதமான நோய்களின் தொற்றுக்களுக்கு ஆளாவதிலிருந்து எம்மை தவிர்த்துக்கொள்ளலாம். ஆனால் நான் இங்கு சொல்லவருவது என்னவென்றால், சுத்தமான குடிநீரை, குடிப்பதற்கு மட்டுமே பாவிப்பது சரியா என்பது பற்றி.
குடிக்கின்ற தண்ணீர் சுத்தமாக இருக்கவேண்டுமென்பதற்காக, குழாய் நீரை, கிணற்று நீரையோ கொதித்தாறிய நீராகவோ, இன்னும் வடிகட்டும் சாதனங்கள்மூலம் வடிகட்டியோ பருகுவதுண்டு. அதைவிடவும் இப்போது, பரவலாக போத்தல்களில் அடைத்துவிற்கப்படும் நீரை வாங்கி குடிப்பதற்கு பாவிக்கும் வழக்கமும் உண்டு. எதை செய்வதென்பது, அவரவர் பொருளாதார நிலையை பொறுத்தது. இன்னுமே குழாய்நீரையோ, கிணற்று நீரையோ அப்படியே குடிதண்ணீராக அருந்துபவர்களும் உண்டு. கிணற்று நீரையோ, குழாய் நீரையோ, அல்லது இயற்கையில் எவ்வழியிலாவது கிடைக்கும் நீரை அப்படியே அருந்தும்போது நோய்க்கிருமிகளின் தொற்றுக்களுக்கு ஆளாகநேரிடுவதோடு, அசுத்தநீரினால் மேலும்பல பிரச்சினைகள் ஏற்பட வழியுண்டு.
சரி, சுத்தமான, கிருமிகளற்ற குடிநீரை அருந்துகின்றோமென்றால், அதில் எங்கள் நோக்கம், நாங்கள் உள்ளெடுக்கும் நீருடன் அசுத்தப் பொருட்களோ, நோய்க்கிருமிகளோ உடலினுட்சென்று, நோயேற்படக்கூடாது என்பதுவே. அருந்தும் நீரில் மட்டுமல்ல, உண்ணும் எத்தகைய உணவிலும் இந்தக் கவனம் இருக்கவேண்டிய தேவையிருக்கின்றது.
ஆனால், சிலவிடயங்களில் எவ்வளவுதான் நாம் கவனமாக இருந்தாலும், மேலும் சிலவிடயங்களில் முட்டாள்தனமாக நடந்துகொள்வதால், முன்னையதுகூட பயனற்றுப்போய்விடுகின்றது.
தாகத்துக்கு குடிப்பதற்கு சுத்தமான தண்ணீரருந்தும் நாம், வாய் கொப்பளிப்பதற்கு, உணவு உண்ணமுன் வாய்கழுவுவதற்கு சுத்தமான குடிநீரை பாவிக்கின்றோமா? கைகளால் உணவுண்ணுபவர்கள் உணவுண்ணமுன் கைகளை கழுவுவதற்கு சுத்தமான குடிநீரை பாவித்து கைகழுவுகின்றார்களா? அல்லது உணவுண்ணும் பாத்திரங்களை கழுவும்போதுதான் சுத்தமான குடிநீரை பாவிக்கின்றோமா? இன்னும், அப்பிள், திராட்சை போன்ற பழங்களை உண்ணமுன் சுத்தமான நீரில் கழுவுகின்றோமா?இல்லை.
குடிப்பதற்கு உகந்ததல்ல என்று நீங்கள் ஒதுக்கிய குழாய்வழிவரும் நீரில்தானே மேற்படி வேலைகளையெல்லாம் செய்கின்றீர்கள். வாய்கொப்பளித்தபின்பு உங்கள் வாய்க்குள் இருக்கப்போவது சுத்தமற்ற குழாய்வழி தண்ணீர்தானே. கைகளை கழுவிவிட்டு உணவுண்ணுகின்றீர்களென்றால், கைகளிலிருந்து உங்கள் உணவுடன் சேரப்போவதும் அதே அசுத்த குழாய்நீர்தானே. அப்பிள், திராட்சை பழங்களை கழுவிவிட்டு உண்ணும்போது, அதே குழாய் நீரைத்தானே உள்ளெடுக்கின்றீர்கள்.
உங்களையே கேட்டுப்பாருங்கள். இவையனைத்தையும், எப்போதாவது நீங்கள் நினைத்துப்பார்த்ததுண்டா? இவைகளிலும் கவனமாக இருப்பதன்மூலம், இன்னும் உங்களுக்கு ஏற்படக்கூடிய, நீர்மூலம் பரம்பலடையக்கூடிய தைபோயிட்டு, கொலரா போன்ற இன்னும் பல நோய்களையும் தடுக்கலாமல்லவா.
குடிப்பதற்கே, சுத்தமான தண்ணிரை பெற்றுக்கொள்வதற்கு படாதபாடுபடும்போது, கைகழுவுவதற்கும், பாத்திரம் கழுவுவதற்கும், பழங்களை கழுவுவதற்கும் சுட்டாறிய, வடிகட்டிய தண்ணீருக்கு எங்கேயையா போவது, என்று நீங்கள் கேள்வியெழுப்பக்கூடும். ஏற்றுக்கொள்கின்றேன், நடைமுறைச்சிக்கல்கள் நிறைய இருக்கின்றன தான். ஆனாலும், வசதியுடையவர்கள், வீட்டிலிருப்பவர்கள், முடிந்தவரை முயற்சிக்கலாமே. ஆகக்குறைந்தது வாய் கொப்பளிப்பதற்கு, வய்கழுவுவதற்கேனும் சுத்தமான குடிதண்ணீரையே பாவியுங்கள். ஆகக்குறைந்தது வாய்வரையாவது சுத்தத்தை பேணலாமே. அதனால் உங்களுக்கு விளையப்போவது நன்மை தானே!
பிற்குறிப்பு: மூன்றாமுலக நாடுகளுக்கு பயணம்செய்யும் மேற்குலகநாட்டவருக்கு வழங்கப்படும் பயண அறிவுரைகளில் முக்கியமான ஒன்று, இந்த அருந்தும் நீரின் சுத்தம் பற்றி. போத்தலில் அடைக்கப்பட்ட அல்லது கொதித்தாறிய நீரையே அருந்தும்படி அவர்கள் கேட்கப்படுகின்றார்கள்.
அத்துடன், வாய்கொப்பளிப்பதற்கும், கைகழுவுவதற்கும் அதே நீரையே பயன்படுத்துமாறும் கேட்கப்படுகின்றார்கள். ஏனென்றால், இத்தகைய மூன்றாமுலக நாடுகளில், நீர்மூலம் தொற்றுநோய்கள் பரவக்கூடிய சாத்தியப்பாடுகள் அதிகம்.






