Monday, September 22, 2008

புரோட்டன் மோதலுக்கு நடந்தது என்ன!


பொதுவாக திரவ நிலை நைதரசன் குளிருட்டும் ஊடகமாக பாவிக்கப்படுகிறது. இது அண்ணளவாக -200 செல்சியஸ். ஆனால் CERN இல் திரவ நிலை ஹீலியம் (-271 செல்சியஸ்) குளிருட்டும் ஊடகமாக பாவிக்கப்படுகிறது. இதற்கு இரு முக்கிய காரணங்கள் இருக்கின்றது. ஒன்று பூச்சியத்தடை கடத்தியை(super conductivity) உருவாக்குதல், மற்றையது பரிசோதனையில் உருவாக்கும் வெப்ப சக்தியை சமப்படுத்துதல்(வெப்ப நிலையை -271 செல்சியஸ் (அண்ணளவாக 1.7 கெல்வின்)) .



திரவ நிலை ஹீலியத்தில் ஏற்பட்ட ஒழுக்குதான் பிரச்சனைக்கு காரணம். அது பற்றி ஒரு செய்தி தான் இது.

ஜெனீவா: "Big Bang" மூலம் எப்படி நமது அண்டம் (யுனிவர்ஸ்) தோன்றியது என்பதைக் கண்டறியும் நம்பிக்கையோடும், இந்த சோதனையால் உலகமே அழிக்கப் போகிறது என்ற கூக்குரலுடனும் ஆரம்பிக்கப்பட்ட புரோட்டான் சிதைப்பு ஆராய்ச்சிக்கு பிரேக் விழுந்துவிட்டது.

புரோட்டான்களை சிதைக்கும் Large Hadron Collider (LHC) கருவில் பெரிய ரிப்பேர்.

ஜெனீவாவுக்கு அருகே 27 கி.மீ. சுற்றளவில் பூமிக்கு அடியே அமைக்கப்பட்டுள்ள இந்த மாபெரும் கருவியில் புரோட்டான்களை சிதறடிக்கும் சோதனைகள் இரு இடங்களில் நடக்கின்றன.

LHCல் 13.5 கி.மீ இடைவெளியில் அமைந்துள்ளன அட்லஸ், CMS என்ற இரு கருவிகள். LHCல் புரோட்டான்கள் எதிரெதியே பாய்ச்சப்பட்டு மோதி சிதறும்போது என்ன நடக்கிறது என்பதை ரிஜிஸ்டர் செய்யும் கருவிகள் தான் இவை.

கிட்டத்தட்ட 15 ஆண்டுகால கட்டுமானத்துக்குப் பின் கடந்த 10ம் தேதி இந்தக் கருவிகள் இயக்கப்பட்டன. முதல் கட்டமாக கடிகாரச் சுற்றில் புரோட்டான் கதிர்வீச்சுகள் செலுத்தப்பட்டன.

இந்த கதிர்வீச்சு ஒளியின் வேகத்தை எட்டிப் பிடித்தபின் எதிர் திசையில் இன்னொரு புரோட்டான் கதிர்வீச்சை செலுத்தி மோத வைக்க இருந்தனர்.

இந்த கதிர்வீச்சை செலுத்துவது, அதற்கு ஒளியின் வேகத்தைத் தருவது ஆகிய வேலைகளைச் செய்வது மாபெரும் மின் காந்தங்கள் (Super conducting electro magnets).

புரோட்டான்கள் மோதலின்போது பெரும் அளவில் வெப்பம் உருவாகும் என்பதால் இந்த 27 கி.மீ. தூரச் சுற்றளவிலும் எல்லா கருவிகளிலும் வெப்ப நிலையை மைனஸ் 271.30 டிகிரி செல்சியசுக்குக் கீழ் வைத்திருக்க வேண்டிய கட்டாயம். அந்த வேலையைச் செய்வது ஹீலியம்.

புரோட்டான் சோதனை ஆரம்பித்த ஒரு வாரத்தில் மின் காந்தங்களுக்கு இடையிலான மின் இணைப்பில் கோளாறு ஏற்பட்டுவிட்டது. இதனால் ஏற்பட்ட மின் பொறியால் ஹீலியம் வாயுவை கொண்டு செல்லும் பைப்புகள் சேதமடைந்துவிட்டன.

இதனால் ஹீலியம் வெளியேறி வெப்ப நிலை தாறுமாறாக அதிகரித்துவிட்டது. இந்த நிலையில் இந்தச் சோதனையைத் தொடர்வது ஆபத்து என்பதால் LHCன் செயல்பாடு முழுமையாக நிறுத்தப்பட்டுவிட்டது.

பைப்பில் அடைப்பை சரி செய்துவிட்டு திரும்பவும் LHCயை ஆன் செய்ய வேண்டியது தானே என்கிறீர்களா?. அது அவ்வளவு எளிதல்ல.

முதலில் இந்த 27 கி.மீ. சுற்றளவு கொண்ட LHCயை சுற்றுப்புற வெப்ப நிலைக்குக் கொண்டு வர வேண்டும். இந்த 27 கி.மீ. சுற்றளவிலும் வெப்ப நிலையை room temperatureக்கு கொண்டு வரவே சில வாரங்கள் பிடிக்குமாம்.

அதன் பின்னர் மின் காந்தங்களுக்கு இடையிலான மின் இணைப்புகளை சரி செய்து, ஹீலியம் குழாய்களை சரி செய்து, மீண்டும் ஹீலியத்தை குழாய்களில் அடைத்து LHCயை இயக்க 2 மாதங்களாவது ஆகும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

ஒவ்வொரு பொருளும் அணுவால் ஆனது. அந்த அணு நியூட்ரான், புரோட்டான், எலெக்ட்ரானால் ஆனது. இந்த புரோட்டானும், நியூட்ரானும், எலெக்ட்ரானும் குவார்க், பெர்மியான், குளுயான்ஸ், இத்யாதி.. இத்யாதியால் ஆனவை.

அப்போ குவார்க், பியான், பெர்மியான், குளுயான்ஸ், மற்றவை எல்லாம் எதனால் ஆனவை..?. Higgs Boson என்ற பார்ட்டிகிளால் ('கடவுளின் துகள்கள்') ஆனது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

இது தான் அணுவுக்கும் பொருட்களுக்கும் 'நிறை'யை (Mass) தருகிறது என்கிறார்கள். (ஒரு பொருளின் எடை மைனஸ் அதன் மீதான புவி ஈர்ப்பு சக்தி தான் அதன் நிறை)

மேலும் குவார்க், பியான், பெர்மியான், குளுயான்ஸ் எல்லாம் உருவாவதற்கு முன் என்ன இருந்திருக்கும்..?. அதை 'பிளாஸ்மா ஸ்டேஜ்' என்கிறார்கள். அதி வெப்ப வாயு நிலையில் அணுக்கள்... இது தான் பிளாஸ்மா.

ஏன் அந்த பிளாஸ்மா குவார்க், பியான், பெர்மியான், குளுயான்ஸ் ஆக மாறி.. புரோட்டானாகி.. அணுவாகி.. மூலக்கூறாகி 'எல்லாமுமாய்' ஆனது என்பதைத் தான் LHC மூலம் கண்டறிய முயல்கிறார்கள்.

இப்போது ஹீலியம் லீக் இந்த சோதனைகளுக்கு இடையூறாகியிருக்கிறது.. முதலில் இதை சிறிய பிரச்சனையாகத் தான் நினைத்தார்களாம். ஒரு வாரத்தில் மீ்ண்டும் LHC ஓட ஆரம்பிக்கும் என்றார்கள்.

ஆனால், உள்ளே நுழைந்து பார்த்த பின்னர் தான் பிரச்சனை 'யுனிவர்ஸ்' அளவுக்கு இல்லாவிட்டாலும் கொஞ்சம் பெரிதானது தான் என்பது தெரிந்ததாம்.


நன்றி http://thatstamil.oneindia.in/news/2008/09/22/world-small-accidents-mean-big-trouble-for-supercollider.html

Saturday, September 13, 2008

இன ஒடுக்கலும் போராட்டமும் அமெரிக்க அக்கறையும்

(சோஷலிஸ நாடுகளிலும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான நாடுகளிலும் நிகழ்ந்த அமெரிக்கக் குறுக்கீடுகள் பலவும் தேசிய இனங்களினதும் தேசங்களதும் விடுதலைப் போராட்டங்கட்கு ஆதரவு என்ற தோற்றத்தைப் பெற்றன. ஆனால் விடுதலைப் போராட்டங்கட்குக் குழிபறிப்பதற்கும் தேசிய சிறுபான்மையினங்கள் தூண்டிவிடப்பட்டன. தமிழர் மீதான இன ஒடுக்கலுக்கும் போருக்கும் உதவி வந்த அமெரிக்காவின் தேவை, இலங்கை மீதான பூரண ஆதிக்கம் மட்டுமே.)

ஏகாதிபத்தியத்துக்குத் தேசிய இனப்பிரச்சினை தொடர்பாக என்ன நிலைப்பாடு இருக்கிறது என்ற கேள்விக்குத், தேசங்களதும் தேசிய இனங்களதும் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான ஒரு விடை தேடுவது கடினம். ஏகாதிபத்தியம் தேசிய விடுதலைப் போராட்டங்களை ஆதரிக்கிறதா என்ற கேள்விக்கும் திட்டவட்டமான ஒரு விடை கிடையாது. கொலனிய யுகத்திலிருந்தே தேசங்கள் மீதான ஒடுக்குமுறை பற்றிய கேள்விக்கான திட்டவட்டமான ஒரு விடையை ஒடுக்கப்படுகிற தேசத்தின் நோக்கிலோ ஒடுக்குகிற தேசத்தின் நோக்கிலோ கூடப் பெற இயலாமலே இருந்தது.

ஒவ்வொரு ஏகாதிபத்திய நாட்டினதும் (உண்மையில் அந்த நாட்டின் உண்மையான எசமானர்களான ஏகபோக முதலாளிய நிறுவனங்களதும்) நலன்களை முன்வைத்தே அந்த நாட்டின் ஆட்சியாளர்கள் தமது உள்நாட்டு, அயல்நாட்டுக் கொள்கைகளை வகுக்கின்றனர்.

கொலனிய யுகத்தில் ஒரு கொலனிய வல்லரசு இன்னொரு கொலனிய வல்லரசின் கீழுள்ள நாட்டில் விடுதலைப் போராட்டங்களை ஆதரித்திருக்கிறது. ஆனால் அந்த ஆதரவுக்கு இரண்டு நோக்கங்கள் இருந்தன. ஒன்று தனக்குப் போட்டியாயிருக்கிற வல்லரசைப் பலவீனப்படுத்துவது. மற்றது கொலனி ஆட்சிக்குக் கீழ்ப்பட்ட நாட்டைத் தன் வசமாக்குவது. இவ்வாறான உலக ஆதிக்கத்திற்கான போட்டியே இரண்டு உலகப் போர்கட்குக் காரணமாயிருந்தது. இன்று ஏகாதிபத்தியங்களிடையே மேலாதிக்கத்திற்கான அப்படிப்பட்ட வெளிவெளியான மோதல் ஒன்றைக் காண முடியாது. ஏனெனில் அமெரிக்காவே உலகின் மிக வலிய மேலாதிக்க வல்லரசாக உள்ளது. நேரடியான கொலனி ஆட்சியின் இடத்தை நவகொலனியம் என்னும் பொருளியல் வழியிலான ஆதிக்கம் பிடித்துக் கொண்டுள்ளது. கொலனிய ஆட்சியாளரின் படைகள் செய்த காரியத்தை உள்ளுர் அரசின் படைகள் செய்கின்றன. நிலைமைகள் கட்டுக்கடங்காமற் போகும் போது, அதாவது ஏகாதிபத்திய மேலாதிக்கத்திற்கு எதிரான சவால்கள் வலுப்படும் போது, மட்டுமே ஏகாதிபத்தியம் தனது படைகளைப் பயன்படுத்துகிறது. முடிந்தால் அதையுங் கூட ஐ.நா. பாதுகாப்புச் சபையின் பேரில் செய்து கொள்கிறது.

இரண்டாம் உலகப் போரின் பின்பு மாறி மாறி எங்காவது பேரழிவு மிக்க போர்கள் நடைபெற்றுக் கொண்டே இருந்து வந்துள்ளன. கொலனிய மேலாதிக்கத்திற்கு எதிரான போர்களும் அந்நிய ஆக்கிரமிப்புக்கும் மேலாதிக்கத்திற்கும் எதிரான போர்களும் அவற்றில் முக்கியமான ஒரு பகுதியாவன. உள்நாட்டு யுத்தங்கள் அதேயளவுக்கு முக்கியமானவையாக இருந்து வந்துள்ளன. இவற்றியெல்லாம் ஏகாதிபத்தியம் குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியம் ஏதோ வகையில் ஒரு முக்கியமான பங்கு வகித்துள்ளது. சோவியத் யூனியன் வலிமையும் பின்னைக்காலத்தில் அமெரிக்க மேலாதிக்கத்திற்கு எதிரான ஒரு உலக வல்லரசாகத் தன்னை நிலைநிறுத்தும் முனைப்பில் சோவியத் யூனியன் மூன்றாம் உலகில் மேலாதிக்கப் போக்கில் நடந்து கொண்டதுவும் சோவியத் யூனியனுக்கு எதிரான அமெரிக்கக் குழிபறிப்பு வேலைகளைத் தீவிரப்படுத்தியது. அந்த நோக்கத்திற்காகவும் பொதுவாகவே சோஷலிஸ ஆட்சிகள் நிலவிய நாடுகளிலும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஆட்சிகள் இருந்த நாடுகளிலும் பலவாறான குறுக்கீடுகள் நிகழ்ந்தன. இவற்றுட் பல தேசிய இனங்களினதும் தேசங்களதும் விடுதலைக்கான போராட்டங்கட்கு ஆதரவு என்ற தோற்றத்தைப் பெற்றன. விடுதலைப் போராட்டங்கட்குக் குழிபறிப்பதற்குக் கூடத் தேசிய சிறுபான்மையினங்கள் தூண்டிவிடப் பட்டுள்ளன.

சோவியத் யூனியனின் ஆதிக்கத்திற்கு எதிராக நேரடியாகவோ மறைமுகமாகவோ அமெரிக்கா குறுக்கிட்ட மூன்று நிகழ்வுகளைப் பார்ப்போம். ஒன்று அங்கோலா. அங்கே விடுதலை இயக்கங்களாகத் தொடங்கிய இரண்டு அமைப்புக்களிடையிலான மோதல் விடுதலையின் பின்பு உள்நாட்டுப் போராக இருபது ஆண்டுகட்கு மேலாகத் தொடர்ந்தது. சோவியத் சார்பான அரசாங்கத்திற்கு எதிராக அமெரிக்காவினதும் நிறவாத தென்னாபிரிக்காவினதும் நேரடி ஆதரவுடன் யோனாஸ் சவிம்பியின் தலைமையில் தொடர்ந்த கிளர்ச்சியில் சோவியத் யூனியனுக்கு ஆதரவாகக் கியூபாவின் குறுக்கீடு அரசாங்கத்திற்கு மக்கள் ஆதரவை வென்றெடுத்ததால் அமெரிக்க நோக்கங்கள் நிறைவேறவில்லை. எதியோப்பியாவின் கொடுங்கோலனான மன்னன் ஹெய்லே சலாசியைத் தூக்கி எறிந்து மிரியம் மெங்கிற்சு தலைமையிலான ராணுவ ஆட்சி வெளியே இடதுசாரித் தோற்றங்காட்டினாலும் வேகமாகவே ஒரு அடக்குமுறை ஆட்சியாக மாறி கொலனிய ஆட்சியாளரால் எதியோப்பியாவுக்குள் சேர்க்கப்பட்ட எரித்திரியாவை கொடிய தேசிய இன ஒடுக்கலுக்கு உட்படுத்தியது. எரித்திரிய மக்களின் விடுதலைப் போராட்டத்துக்கு அமெரிக்கா வழங்கிய ஆதரவின் நோக்கம் வஞசகமானது. எதியோப்பியாவில் ஒரு ஆட்சிக் கவிழ்ப்பு நடந்த பின்பு, எரித்திய மக்களுக்கு ஆதரவு வழங்கிய அமெரிக்கா எரித்தியா மீது குண்டு வீசுவதற்கு எதியோப்பியாவுக்கு உதவியது. அமெரிக்காவின் ஆதரவுபெற்ற ஒரு விடுதலை இயக்கம் ஒரே நாளில் ஒரு பயங்கரவாதப் பிரிவினை இயக்கமாக உருமாறியது.

ஆஃப்கானிஸ்தானில் இருந்த நிலப்பிரபுத்துவக் கொடுங்கோலாட்சியைத் தூக்கி எறிந்து உருவான ஆட்சிக்கு அண்டை நாடான சோவியத் யூனியனின் ஆதரவு இருந்தது. ஆஃப்கானிஸ்தானின் பிற்போக்குச் சக்திகளைக் கொண்டு ஒரு ஆட்சிக் கவிழ்ப்பை நடத்த அமெரிக்கா இஸ்லாமிய மதவாத அரசியலை நாடியது. ஆஃப்கானிஸ்தானின் கேந்திர முக்கியத்துவங் காரணமாக அதன் மீது தனது செல்வாக்கைக் கைவிட விரும்பாத சோவியத் யூனியன் முதலில் ஆஃப்கானிய அரசாங்கத்திற்கு இராணுவ உதவி வழங்கியது. பின்பு நேரடியாகவே தனது படைகளை அங்கு அனுப்பியதன் மூலம் அமெரிக்காவும் இஸ்லாமிய தீவிரவாதிகளும் வைத்த பொறியிற் சிக்கிக் கொண்டது. ஆஃப்கானிஸ்தானில் சோவியத் குறுக்கீட்டின் விளைவாக ஏற்பட்ட ராணுவத் தோல்வி உள்நாட்டிலும் வெளியிலும் சோவியத் ஆட்சியாளர்கட்குக் கிடைத்த ஒரு பெரிய அடியாக அமைந்தது. சோவியத் யூனியனின் உடைவைத் துரிதப்படுத்திய ஒரு முக்கிய நிகழ்ச்சி ஆஃப்கானிஸ்தானின் உள்நாட்டுப் போர் எனலாம். அங்கு, தான் ஆட்சிக்கு வர உதவிய மதவாத ஆட்சியைத் தன்னாற் கட்டுப்படுத்த இயலாத நிலையில், தான் ஊட்டி வளர்ந்த தலிபானிகளை ஆட்சியிலிருந்து விரட்ட அமெரிக்கா எடுத்த முயற்சிகள் இன்று ஒரு போராகி அமெரிக்காவை அல்லற்படுத்துகின்றன.

இவை அமெரிக்கா விடுதலைப் போராட்டங்களுக்கு வழங்குகிற 'ஆதரவின்" உண்மையான வடிவத்தை விளக்கப் போதுமானவையல்ல என்று யாரும் நினைத்தால் யூகோஸ்லாவியாவைப் பிளவுபடுத்திச் சிதைத்துப் பிரித்துப் போடுவதில் அமெரிக்கா தேசியவாதத்தை எவ்வாறு பயன்படுத்தியது என்பதைக் கவனிக்கலாம். அங்கு அமெரிக்கா விரும்பாத ஆட்சி எஞ்சியிருந்த சேர்பியாவினுள் அல்பானிய தேசிய இனத்தவர் செறிவாக வாழும் கொசொவோவினுள் பிரிவினைவாதச் சக்திகளை சி.ஐ.ஏ. மூலம் அமெரிக்கா ஆயுதபாணிகளாக்கி ஒரு இன மோதலுக்கும் இனப் படுகொலைகட்கும் வழி செய்தது.

தேசிய இன ஒடுக்கலை மிகக் கொடிய முறையில் அனுபவிப்பவர்கள் குர்திய இனத்தவர். துருக்கியின் தெற்கிலும் ஈராக்கின் வடக்கிலும் ஈரானின் வடமேற்கிலும் மூன்று நாடுகளிடையே குர்திய பிரதேசம் பிரிவுண்டுள்ளது. ஒரு சிறு பகுதியினர் சிரியாவின் வடகிழக்கில் வாழுகின்றனர். சதாம் ஹ{ஸேன் குர்திய மக்களைக் கொடுமைப்படுத்தியது பற்றி நமக்கு நிறையவே சொல்லப்பட்டாலும் அமெரிக்காவின் மிக நெருங்கிய கூட்டாளி நாடான துருக்கியிலேயே குர்திய மக்களின் மீதான ஒடுக்குமுறை மிகக் கொடுமையானது. அங்கு தான் விடுதலைப் போராட்டம் மிக வலிமைபெற்றுக் காணப்பட்டது. துருக்கிய குர்திய விடுதலைப் போராட்டத்தை நசுக்க அமெரிக்காவும் இஸ்ரேலும் மிகவும் உதவியுள்ளன. அதே வேளை சதாம் ஹ{ஸேன் 1990க்குப் பின்பு அமெரிக்காவின் எதிரியாக உருமாறிய பின்பு அமெரிக்கா சதாம் ஹ{சேனுக்கு எதிராக ஈராக்கிய குர்திய தேசியவாதிகளைப் பயன்படுத்தியது. இன்று ஈராக்கில் அமெரிக்காவின் அதி நம்பகமான நட்புச்சக்தியாக குர்திய தேசியவாதிகள் இருக்கின்றனர். எனினும் ஒரு தனியான ஈராக்கிய குர்திஸ்தானோ ஒரு பூரண சுயாட்சியோ உருவாகுமானால் இது துருக்கியினுள் சிக்கல்களை உருவாக்கும். எனவே ஈராக்கில் அமெரிக்காவுக்கு முழு ஆதரவான ஒரு சூழ்நிலை இல்லாதளவில் குர்திய தேசியவாதிகளை அமெரிக்கா அரவணைக்கும். ஆனால் குர்திய அதிகாரம் துருக்கியின் குர்திய இன ஒடுக்கலுக்கு ஒரு சவாலாக அமையுமளவுக்கு வளர அமெரிக்கா அனுமதிக்க மாட்டாது.

இன்னொருபுறம் தனது சர்வதேசக் காய் நகர்த்தல்கட்கு வசதியாகவும் உலகமயமாதல் திட்டத்திற்கு உடன்பாடாகவும் அமைகிற ஒவ்வொரு சூழ்நிலையிலும் தேசிய இன ஒடுக்கலுக்கு அமெரிக்காவின் பூரண ஆசிகள் இருந்து வந்துள்ளன. ஆக மிஞ்சினால் மனித உரிமை மீறல்கள் பற்றிய மெலிதான கண்டனங்கள் அல்லது கவலை தெரிவிப்பதற்கு மேலாக எதையும் கேட்க இயலாது. முன்னைய இந்தோனீசிய ராணுவ ஆட்சி கிழக்கு திமோரிலும் அச்சே மாகாணத்திலும் நடத்திய வெறியாட்டங்கள் பற்றிய அமெரிக்க மௌனம் முதல் இலங்கையின் தேசிய இன ஒடுக்கல் வரையும் இதற்கான உதாரணங்கள் பல உள்ளன.

இன்று இலங்கையில் அதிகாரப்பரவலாகத்தையும் அமைதியான தீர்வையும் வற்புறுத்தி இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான சில விமர்சனங்கள் வெளிவெளியாக மேலை நாடுகளிலிருந்தும் சாடைமாடையாக அமெரிக்காவிலிருந்தும் வருவதையிட்டுத் தமிழ் மக்களிடையே புதிய எதிர்பார்ப்புக்களை உருவாக்குகிற ஒரு போக்கைத் தமிழ் ஊடகங்களிற் காண்கிறோம். எனினும் தமிழ் மக்கள் மிக மோசமான விமானக் குண்டுவீச்சுக்கும் எறிகணைத்தாக்குதல்கட்கும் உட்பட்ட ஒரு வருடக்காலத்தில் நடந்த இடப்பெயர்வுகளும் உயிரிழப்புக்களும் பற்றி அமெரிக்காவோ ஐரோப்பிய நாடுகளோ இந்தியாவோ ஏன் எதுவுமே செய்யவில்லை என்பதற்கான காரணங்களையும் நாம் ஆராய வேண்டும். ஆனால்; அமெரிக்க ராஜாங்க திணைக்களம் மனித உரிமை மீறல்கள் பற்றி வெளியிட்ட அறிக்கையில் இலங்கை பற்றி கடுந்தொனியில் குறிப்பிட்டுள்ளமை கூட மக்கள் சார்பு நிலைப்பாடு எனக் கொள்ள முடியாது. அமெரிக்காவின் ஆதிக்க நோக்கமே மனித உரிமை மீறல்களின் மீதான கண்டனத்திற்குப் பின்னால் படிந்து காணப்படுகின்றமை பிரிந்துப் பார்க்கப்பட வேண்டியவையாகும்.

அமெரிக்கா ஈழத் தமிழரின் சுயநிர்ணயத்தை எந்த நிலையிலும் ஆதரிக்கவில்லை. மாறாக, 25 ஆண்டுகளாகத் தமிழர் மீதான இன ஒடுக்கலுக்கும் போருக்கும் உதவிய அமெரிக்காவின் இறுதித் தேவை, இலங்கை மீதான பூரண ஆதிக்கம் மட்டுமே. அது உடனடியாக இயலாத போது இடைக்காலத்தில் இந்தியாவின் ஒத்துழைப்புடன் கூடிய மேலாதிக்கம் இயலுமாகலாம். விடுதலைப் புலிகள் ஒரு வலிய ஆயுதப் போராட்டச் சக்தியாகவும் அரசாங்கத்துக்குச் சவாலாகவும் இருப்பது அமெரிக்காவுக்கு உடன்பாடானதல்ல. இலங்கை அரசாங்கம் அமெரிக்காவுடன் முரண்டுபிடித்தால் அல்லது அதன் உலகமயமாதல் கொள்கைக்குக் கேடான முறையில் நடந்து கொண்டால் விடுதலைப் புலிகளைப் பற்றிச் சிறிது பரிவுடன் நடந்து கொள்ளுவது போல ஒரு தோற்றங் காட்டப்படும். அதற்கும் மேலாக அமெரிக்காவிடமிருந்தோ எந்த மேலாதிக்க வல்லரசிடமிருந்தோ தமிழ்த் தேசிய இனமோ அல்லது ஏனைய தேசிய இனங்களோ எதையும் எதிர்பார்க்க நியாயமில்லை.

Thursday, September 11, 2008

குறிப்புகளாய் சில உலக நடப்புக்கள்: பயங்கரவாதம், தற்கொலைகள், பொலிவியா

பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை

பிலிப்பைன்ஸில் தனிநாட்டுக்காக போராடி வரும் மின்தானாவோ (Mindanao) போராளிகளுக்கும் அப்பிரதேச மக்களுக்கும் எதிராக கொடூரமான தாக்குதல்கனை பிலிப்பீனிய இராணுவம் நடத்தி வருகிறது. பிலிப்பீனியப் பத்திரிகைகள் இந்தத் தாக்குதலில் அமெரிக்கப் படைகளும் பங்குகொண்டதாக தெரிவித்திருந்தன. இது குறித்து கருத்துத் தெரிவித்த பிலிப்பைன்ஸில் உள்ள அமெரிக்கத் தூதரகம் "பயங்கரவாதத்தை ஒழிப்பதுதான் எங்களின் இலக்கு" என்றும் "தற்பாதுகாப்புக்காக தாக்குவது பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை" என்றும் சொல்லியிருந்தது. இத்தாக்குதல்களில் மின்தானாவைச் சேர்ந்த அப்பாவி மக்களே இலக்கு வைக்கப்பட்டு கொல்லப்படுகின்றனர்.

யாரும் எங்கும் எப்போதும் கொல்லப்படலாம், பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை என்பதன் பெயரால்.


தற்கொலைகள் சொல்லும் உண்மை

தற்கொலை செய்து கொள்ளும் அமெரிக்கப் படைவீரர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 15 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. தனது ஏகாதிபத்திய ஆசைகளுக்காக உலகின் ஏனைய நாடுகளை அடக்கியாள ஆசைப்படும் அமெரிக்க அரசின் பேராசைக்கான பரிசாகவே இதைக் கொள்ள முடியும். உலகெங்கும் "ஜனநாயகம்" பற்றிப் பேசும் அமெரிக்கா தனது படைவீரர்களுக்கு உரிய வசதிகளை செய்து கொடுப்பதில்லை. வெளியே தெரிகின்ற பகட்டான அமெரிக்காவிற்குள்ளே இருப்பதல்லாம் மனித உரிமை மீறல்களும் சித்திரவதைகளுமே. வாய்திறந்து எதையும் பேச முடியாத அமெரிக்க படைவீரர்களால் செய்யக் கூடியது தற்கொலை மட்டும்தானா? என்பது ஒருபுறமிருக்க இந்தத் தற்கொலைகளின் பின்னால் இருக்கின்ற ஏழ்மையும் இங்கே கவனிப்புக்குள்ளாக வேண்டியது. சொந்த நாட்டு மக்களின் நலனையே கவனிக்காத அமெரிக்க உலக மக்களின் நலனுக்காக உலகெங்கும் போர் செய்கிறது.


யாருடைய நாடு

பொலிவிய அரசாங்கம் தனது நாட்டுக்குள் வரவிரும்பும் அமெரிக்கப் பிரஜைகள் விசா அனுமதி பெற்ற பின்னரே தனது நாட்டுக்குள் வர முடியும் என்று ஒரு புதிய சட்ட மூலத்தை நிறைவேற்றியிருக்கிறது. இதுவரை காலமும் பொலிவியாவிற்குள் வருவதற்கு விசா அனுமதி தேவையில்லை. நாட்டின் பாதுகாப்புக் கருதியும் நலன் கருதியும் இப் புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டிருப்பதாக பொலிவிய அரசாங்கம் தெரிவிக்கிறது. இப்புதிய நடைமுறையை வன்மையாக கண்டிக்கும் அமெரிக்க அரசு இவ்வாறான செயற்பாடுகளால் அமெரிக்க - பொலிவிய இராஜதந்திர உறவுகளில் பாரிய விரிசலை ஏற்படுத்தக் கூடும் என எச்சரித்திருக்கிறது. ஒரு நாட்டுக்குள் இன்னொரு நாட்டுப் பிரஜை விசா பெற்றுப்போவது தான் நடைமுறையாக உள்ளது. விசா இல்லாமல் ஒரு நாட்டுப் பிரஜை இன்னொரு நாட்டிற்குள் நுழைவது சட்டவிரோதம். வழமையிலேயே சட்டவிரோதமான செயற்பாடுகளைச் செய்யும் அமெரிக்கா, பொலிவிய தனது மாநிலங்களில் ஒன்று என்று நினைத்துக் கொண்டிருக்கின்றதோ என்னமோ.

Wednesday, September 10, 2008

புரோட்டான் 'மோதல்' சோதனை ஆரம்பம்! கடவுளின் துணிக்கை ?

ஜெனீவா: உலகே மிக ஆர்வமாக எதிர்நோக்கியிருக்கும் புரோட்டான் மோதல் சோதனை இன்று தொடங்கியது.



27 கிலோ மீட்டர் சுரங்கப் பாதைக்குள் அமைக்கப்பட்டுள்ள டனலில் முதல் புரோட்டான் கதிர்வீச்சு இன்று சோதனைரீதியில் பாய்ச்சப்பட்டது.

ஜெனீவாவுக்கு அருகே உள்ள CERN அணு ஆராய்ச்சி மையத்தில் இந்த சோதனை தொடங்கியது.

இந்த சோதனையால் உலகமே அழியப் போகிறது என்று கூக்குரல்கள் ஒரு பக்கம் எதிரொலிக்க இந்த முயற்சி வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளது.



இந்த சோதனையால் எந்த ஆபத்தும் வராது என்று நம் காலத்திய மாபெரும் இயற்பியல் விஞ்ஞானியாகக் கருதப்படும் ஸ்டீபன் ஹாக்கின்ஸ் கூறியுள்ளார்.

ஸ்டீபன் ஹாக்கின்ஸ், ஒரு தலைசிறந்த எடுத்துக்காட்டான ஒரு பொளதிகவியளார்

இந்த புரோட்டான் கதிர்வீச்சு கட்டுப்படுத்த முடியாத அளவுக்குப் போனால், அதிகபட்சமாக அது 27 கிலோ மீட்டர் வட்டப் பாதையில் அமைந்துள்ள Large Hadron Collider ஆய்வுக் கருவியைத் தான் சிதறடிக்கும். மற்றபடி பிளாக் ஹோல் எல்லாம் ஏற்பட்டுவிடாது என்று கூறியிருக்கிறார்.



அதே நேரத்தில் இந்த சோதனை மூலம் 'Higgs Boson' என்ற சப்-அடாமிக் பார்ட்டிக்கிளை கண்டுபிடித்துவிட முடியும் என CERN விஞ்ஞானிகளின் முயற்சி எந்த அளவுக்கு பலனளிக்கும் என்று தெரியவில்லை. ஆனால், மானுடத்தின் அடுத்தகட்ட வளர்சிக்கு இந்த சோதனை மிக மிக அவசியம்.

எல்லோரையும் போலவே நானும் இந்த ஆய்வின் முடிவுகளை தெரிந்து கொள்ள ஆர்வமாய் காத்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

இன்று இந்த சோதனைகள் தொடங்கினாலும் கூட புரோட்டான்கள் முழு வேகம் பிடித்து ஒன்றோடு ஒன்று மோதிச் சிதற பல மாதங்கள் ஆகும். ஒரு வருடம் கூட ஆகலாம் என்கிறார்கள்.

இன்றைய சோதனையில் புரோட்டான் கதிர்வீச்சு கடிகார சுற்றுக்கு எதிர்சுற்றில் பாய்ச்சப்பட்டது. இந்த கதிர்வீச்சு 27 கி.மீ. நீள Large Hadron Collider-ல் சரியாக பயணித்தால், அடுத்ததாக எதிர் திசையில் இருந்து இன்னொரு புரோட்டான் கதிர் பாய்ச்சப்படும்.

இன்று நடப்பது வார்ம்-அப் சோதனை தான். முழுமையான சோதனை 6 வாரத்தில் தொடங்கும்.

அப்போது எதிரெதிர் திசையில் தலா 2,808 புரோட்டான் கதிர்கள் எதிரெதிரே பாய்ச்சப்படும். அதாவது பல பில்லியன் புரோட்டான்கள் ஒன்றுடன் ஒன்று ஒளியின் வேகத்தில் மோதிச் சிதறும்.

அதன் பின்னர் தான் பிளாக் ஹோல் வருகிறதா அல்லது Big Bang தியரிப்படி உலகம் எப்படித் தோன்றியது என்பதற்கான விடையும் கடவுளின் அணுத் துகள்கள் என்று சொல்லப்படும் 'Higgs Boson' தெரிகிறதா என்பதும் தெரியும்.

நன்றி தட்ஸ்தமிழ் ஆசிரியர்

Tuesday, September 9, 2008

உலகின் மிக ஆபத்தானதும் சவால் நிறைந்ததுமான பெரும் அறிவியல் சோதனை!


உலகின் மிக ரிஸ்கியான மாபெரும் அறிவியல் சோதனை ஒன்று நாளை துவங்கப் போகிறது. இந்த சோதனையை எதிர்த்து உலகெங்கும் நடுக்கக் குரல்கள்.. உலகம் அவ்வளவு தான்.. அம்பேல் என கதற ஆரம்பித்துள்ளனர் 'டூம்ஸ் டே' (Doom's day) ஆசாமிகள்.

பிரான்ஸ்-சுவிஸ் எல்லையில் ஜெனீவாவுக்கு கொஞ்சம் பக்கத்தில் இந்தச் சோதனை நடக்கப் போகிறது. ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகம் (CERN) இந்த சோதனையை நடத்துகிறது.

ரொம்ப 'பில்ட்-அப்- கொடுக்கிறீர்களே.. அது என்ன சோதனை என்கிறீர்களா?. பெரு வெடிப்புக் கொள்கை (Big bang theory) சொல்கிறபடி உலகம் எப்படி உருவானது என்பதை கொஞ்சம் நடைமுறையாக சோதனை செய்து பார்க்கப் போகிறார்கள் விஞ்ஞானிகள்.

அதாவது புரோட்டான்களையும்(Proton) நியூட்ரான்களையும்(Neutron) அதி பயங்கர வேகத்தில் மோதவிட்டு வேடிக்கை பார்க்கப் போகிறார்கள். இதற்காக கிட்டத்தட்ட 300 அடி ஆழத்தில் 27 கி.மீ. தூரத்துக்கு வட்டமான சுரங்கம் அமைத்து அதற்குள் அக அணுத் துகளக்ள் (Sub Atomic Particles) (Proton, Neutron) மோதிக் கொள்ளும் Large Hadron Collider-LHC என்ற வட்ட வடிவ குழாயை அதற்குள் அமைத்திருக்கிறார்கள். இதற்காக 5.8 பில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளன ஐரோப்பிய நாடுகள். கிட்டத்தட்ட 5,000 விஞ்ஞானிகளின் கூட்டு முயற்சி இது.

கனரக இரும்பினால் செய்யப்பட்டு வலிமைப்படுத்தப்பட்ட சீமெந்து மற்றும் ஏகப்பட்ட ரசாயன, அணு கதிர்வீச்சை தாக்குப்பிடிக்கும் பாதுகாப்பு பூச்சுக்கள் கொண்டது இந்த Collider.

இது அணுக்களை பிளக்க உதவும் வழக்கமான Cyclotron மாதிரி தான். ஆனால், இதில் விஷேசம் என்னவென்றால் இதன் வேகம். இதுவரை உலகில் கட்டப்பட்ட Cyclotronகளை விட இது 7 மடங்கு அதிக சக்தி கொண்டது.

1,800 'மீ கடத்து (Super Conducting)' காந்தங்கள் புரோட்டான்களை ஒளியின் வேகத்தில் இந்த 27 கி.மீ. வளையத்தில் சுற்றவிடவுள்ளன. LHC தன் முழு வேகத்தை அடைந்தவுடன் புரோட்டான்களையும் நியூட்ரான்களையும் வினாடிக்கு 600 மில்லியன் முறை நேருக்கு நேர் மோத விடப் போகிறார்கள்.

அப்போது புரோட்டான்களில் 7 டிரில்லியன் (Trillion) எலெக்ட்ரான் வோல்ட்ஸ் அளவுக்கு 'சக்தி' உருவாகும். அப்போது ஏற்படும் 'சப் அடாமிக் லெவல்' மாற்றங்களை இந்த 27 கி.மீ. வட்டத்தில் பொறுத்தப்பட்டு்ள்ள ஆயிரக்கணக்கான உணரிகள்(Sensors) கிரகித்து அந்த விவரங்களை சூப்பர் கம்ப்யூட்டர்களில் பதிவு செய்யவுள்ளன.

கிட்டத்தட்ட 15 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஒரு மாபெரும் வெடிப்பில் இருந்து தான் (Big Bang) பூமி உள்பட Universe தோன்றியது என கருதப்படுகிறது. அப்போது இருந்த சூழலை இந்த 27 கி.மீ. வட்டத்தில் உருவாக்கிப் பார்க்கப் போகிறார்கள்.

இந்த வளையத்தில் புரோட்டான்கள் என்ன வேகத்தில் சுற்றி வரப் போகின்றன என்பதை இப்படி ஈசியாக சொல்லாம்... ஒரு வினாடியில் இந்த 27 கி.மீ. தூரத்தை புரோட்டான் 11,245 முறை சுற்றி வரும்.

இந்த அளவுக்கு வேகம் பிடித்த புரோட்டான்களை அப்படியே நேருக்கு நேர் மோத விடப் போகிறார்கள். இப்போது புரிகிறதா.. உள்ளே என்ன நடக்கப் போகிறது என்பது.

புரோட்டான், நியூட்ரான், எலெக்ட்ரான் ஆகிய 'சப் அடாமிக்' கூறுகளைக் கொண்டது தான் ஒரு அணு. குவார்க், பெர்மியான், குளுயான்ஸ் ஆகியவற்றால் ஆனது தான் ஒரு புரோட்டான்.

ஆக, LHCல் வைத்து அதிவேகத்தில் புரோட்டான்களை 'கொத்து புரோட்டோ' போடும்போது குவார்க், பெர்மியான், குளுயான்ஸ், மின் காந்த கதிர்வீச்சு, வெப்பம் என புரோட்டான்கள் சிதறும்.

மேலும் Higgs Boson என்று ஒரு சமாச்சாரம். இப்படி ஒரு சப்-அடாமிக் பார்ட்டிகிள் இருப்பதாக தியரியில் சொல்கிறார்கள். ஆனால், அதை யாரும் நிரூபித்ததில்லை. இதனால் இதை விஞ்ஞானிகள் 'கடவுளின் அணுத் துகள்' (God's particle) என்கிறார்கள். அப்படி ஒன்று இருந்தால் இந்தச் சோதனை வெளியில் கொண்டு வரலாம் என்கிறார்கள்.

ஆனால், இது மிக ஆபாயகரமான ஆராய்ச்சி என உலகம் முழுவதும் கடும் எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன. உலகத்தின் கதையே முடியப் போகிறது என்று கூட சிலர் கிளப்பிவிட்டுள்ளனர்.

இவ்வளவு வேகத்தில் சப் அடாமிக் அணுத் துகள்களை மோதச் செய்யும்போது கருந்துளை (Black Hole) கூட உருவாகிவிடலாம் என்கிறார்கள். Black Hole என்பது நம் அரசியல்வாதிகளின் வாய் மாதிரி. உள்ளே போனால் போனது தான் எதுவுமே வெளியே வராது.. ஒளி-ஒலி உள்பட. (கருந்துளை நேரத்தையும் கூட விழுங்கிவிடும்.. இது அதீதமான டெக்னிக்கல் சமாச்சாரம். மண்டையை ரொம்பவே குழப்பிக் கொள்ள வேண்டாம். மிகவும் ஆர்வம் இருந்தால் ஸ்டீபன் ஹாக்கிங்ஸ்சின் 'The brief history of Time' வாங்கிப் படியுங்கள்)

நமது அண்டத்தில் (Universe) ஏராளமான மண்டலங்கள், அதாவது கேலக்ஸிகள் (Galaxies) உள்ளன. நமது சூரியன், பூமி, கோள்கள் உள்ளிட்ட சூரிய குடும்பம் இருக்கும் மண்டலத்தின் பெயர் Milky way Galaxy (பால்வெளி மண்டலம்).

பல பில்லியன் சூரிய குடும்பங்கள் சேர்ந்தது ஒரு கேலக்சி. பல பில்லியன் கேலக்சிகள் சேர்ந்தது தான் யுனிவர்ஸ். இந்த யுனிவர்ஸ் தொடர்ந்து விரிவடைந்து கொண்டே போகிறது என்பது தான் மிக இன்ட்ரஸ்டிங்கான விஷயம்.

ஒரு சிறிய நிலக்கடலை சைசில் இருந்த யுனிவர்ஸ், Big bangல் வெடித்துச் சிதறி விரிவடைய ஆரம்பித்தது.. விரிவடையும்போது அதற்குள் உருவானவை தான் பூமி, கோள்கள், நிலாக்கள், எரிகற்கள், சூரியன்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய கேலக்சிகள்.

இன்னும் விரிந்து கொண்டே இருக்கும் அண்டத்தில் மேலும் மேலும் ஏராளமான கேலக்சிகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. கூடவே கருந்துளைகளும்.

இந்த கருந்துளைகள் ஒளி-ஒலியை மட்டுமல்ல, சூரியன்களைக் கூட விழுங்கி ஏப்பம் விடும் சக்தி கொண்டவை.

இதனால் தான் இந்த அதிவேக அக அணுப் பிளப்பு சோதனை ஆபத்தானது... இதனால் கருந்துளை உருவாகப் போகிறது.. அப்படி உருவானால் அது பூமியையே விழுங்கலாம் என அச்சம் கிளப்பியிருக்கிறார்கள்.

ஆனால், அப்படியெல்லாம் ஏதும் நடந்துவிடாது என்கிறார்கள் இந்த ஆராய்ச்சியை நடத்தும் CERN மையத்தின் விஞ்ஞானிகள்.

அப்போ, என்ன தான் நடக்கப் போகிறது என்று கேட்டால் பதில் வருகிறது..

'தெரியாது'

Higgs Boson! கடவுளே!

(கட்டுரையாளர் தட்ஸ்தமிழ் ஆசிரியர்)

நன்றி http://thatstamil.oneindia.in/news/2008/09/10/world-atom-smasher-starts-operation-to-probe-universes.html

Thursday, September 4, 2008

கடவுள் என்பது கற்பனையா, உண்மையா? - பரிசோதனை முடிவுகள்

புத்த மதம் சொல்கின்றது மற்ற மதங்கள் சொல்கின்ற கடவுள் என்ற விடயம் இல்லை என்று, அது ஒரு கற்பனை விடயம் என்று.

இந்து மதமும், ஏனைய மதங்களும் கடவுள் என்று பலவாறாக சொல்கின்றன. சரி விஞ்ஞான முறையில் இப்பிரச்சினையை அணுகினால் என்ன. அதற்கு ஒரே வழி பரிசோதனை செய்து பார்த்தால் தான் உண்டு.

மிக மிக அண்மைய பரிசோதனையொன்றின் முடிவுகள் இங்கே. (பதிவின் இறுதியில் முடிவுகள்)

கொழும்பு இந்து ஆலயம் மீது பௌத்த பிக்கு தலைமையிலான காடைக்கும்பல் தாக்குதல்

[வியாழக்கிழமை, 04 செப்ரெம்பர் 2008, 04:55 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்]
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு கிராண்ட்பாசில் உள்ள சிறீ முத்துமாரி அம்மன் ஆலயத்தை பௌத்த பிக்கு ஒருவர் தலைமையிலான காடைக்கும்பல் தாக்கி சேதமாக்கிள்ளது. இதில் ஆலயத்தின் முன்பக்க கோபுரமும் உட்பக்கத்தில் உள்ள விக்கிரகங்களும் சேதமடைந்துள்ளன.

இந்த இந்து ஆலயம் புனருத்தாரணம் செய்யப்பட்டு நேற்று புதன்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.
இந்நிலையில் இன்று அதிகாலை 2:00 மணியளவில் ஆலயத்துக்குச்சென்ற பௌத்த பிக்கு தலைமையிலான காடைக்கும்பல் ஆயலத்தை அடித்து நொருக்கி சேதமாக்கியுள்ளது.


இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய கிராண்ட்பாஸ் காவல்துறையினர் தாக்குதல் நடத்திய பௌத்த பிக்குவையும் மேலும் மூவரையும் கைது செய்துள்ளனர்.
கிராண்ட்பாஸ் கெமல் மாவத்தையில் அமைந்துள்ள சிறீ முத்துமாரி அம்மன் ஆலயப்பகுதியில் பெரும்பான்மையான தமிழ் மக்களே வாழ்ந்து வருகின்றனர்.


இந்த ஆலயத்துக்கு அருகில் பௌத்த கோவில் ஒன்றும் உள்ளது. இந்த பௌத்த கோவிலைச் சேர்ந்த பௌத்த பிக்குவே சிறீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பௌத்த பிக்கு சிறீ முத்துமாரி அம்மன் ஆயலத்தைச் சூழவுள்ள தமிழ் மக்களை அச்சுறுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பௌத்த பிக்கு பாலியல் வல்லுறவு உட்பட்ட வேறு பல குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக காவல்துறையினரால் விசாரணை செய்யப்பட்டு வந்ததாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

##################################################################################

எப்படியிருக்கின்றது. நாங்களெல்லாம் (என்னையும் சேர்த்துத்தான், நானும் ஒரு இந்து தான்) கடவுள் இருக்கு என்று நம்பி சிலையெல்லாம் செய்து, கோயில் கட்டி கும்பிடுறம், ஆனால் ஆருக்கு உண்மையான உண்மை தெரிஞ்சிருக்கு எண்டு பாருங்கோ. புத்த பிக்குவுக்கு தானே உண்மை தெரிஞ்சிருக்கு. ஏனெண்டால் புத்தர் அப்பிடி தானே சொல்லியிருக்கிறார். அதாலை தானே புத்த பிக்குவும், காடையர் கூட்டமும் ஒரு பயமும் இல்லாமல் வந்து உடைச்செறிஞ்சிருக்கினம்.

நாங்கள் கடவுள் உண்மை எண்டு நம்பிக்கொண்டு, அதுகளுக்கெல்லாம் எவ்வளவு பயப்பிடுறம், எவ்வளவு பணம், பொருளை அநியாயம் செய்யுறம். எவ்வளவு நேரத்தை வீணாக்கிறம்.

கடவுள் எண்டது கற்பனை எண்டதாலை தானே, சிவலிங்கம் இரண்டு துண்டாக போகும்வரைக்கும், முத்துமாரியம்மனின்ரை முகத்தை உடைக்கும் வரைக்கும், ஏன் அந்த புத்த பிக்கு பாலியல் வல்லுறவுகள் புரியும்வரைக்கும் ஒண்டுமே நடக்கேல்லை.

அதுக்குள்ளை வேற அதைத்தாறதுக்கு, இதைத்தாறதுக்கு என்டு அண்மையிலை பால்குட பவனியெல்லாம் எடுத்தவை. எங்கடை சனங்கள் எப்பதான் இப்பிடியான சம்பவங்களையெல்லாம் (மடுமாதா சொரூபம் உட்பட) தங்கடை நம்பிக்கைகளோடை தொடர்புபடுத்தி சிந்திக்கப்போகுதுகளோ!

அதுக்காக, நடந்த சம்பவம் சரியெண்டு நான் சொல்லவரவில்லை. புத்த மதத்தவர்கள் இந்து மதத்தவர்கள் மீது வெறுப்புக்கொண்டது, இந்தமாதிரி தாக்கினது பிழை. ஒருத்தரை ஒருத்தர் வெறுக்கவைக்கிறதிலை மதங்கள் பெரும் பங்காற்றுகின்றன. மதநூல்களே மற்ற மதத்தவரை 'விடாதே, பிடி, கொல்' என்று தானே சொல்கின்றன. சமூகத்தை பிளவுபடுத்துகின்றவேலைகளையும் இந்த மதங்கள் செய்கின்றன. ஆனால், இந்த மேற்படி சம்பவத்துக்கு, மதமல்லாமல், சிங்களவர்களுக்கு, இயல்பாகவே தமிழர்கள் மீதுள்ள வெறுப்பும் காரணமாகவிருக்கலாம். இனம் என்ற பரிமாணத்திலும் வைத்து சிந்திக்கவேண்டிய விடயம் இது. என்னவிருந்தாலும் கடவுள் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்காது தானே. பரிசோதனை முடிவு விளங்கினால் சரி.

உதவி:
புதினம்.

Monday, September 1, 2008

பாலியல் வன்புணர்வு, இயற்கையானது தானே!

இன்னும் பல புதிய (தேடியறிந்த) விடயங்களை உள்வாங்கி, இக்கட்டுரை மேலும், ஆதாரங்களுடன் செம்மைப்படுத்தப்படவுள்ளது. எனினும், ஒரு பொதுவான கருத்துருவைப்பெற்றுக்கொள்ள, இக்கட்டுரையை தொடர்ந்து நீங்கள் வாசிக்கலாம்.

பெரும்பாலும் பாலியல் வன்புணர்வு என்று வரும்போது, வன்புணர்வுக்கு உள்ளாகுபவர்கள் பெண்களாகவும், வன்புணர்வை மேற்கொள்பவர்கள் ஆண்களாகவும் இருப்பதை காணலாம். அதற்காக, ஒரேயடியாக, பாலியல் வன்புணர்வால் பாதிக்கப்படுபடுவது பெண்களே என்று சொல்லமுடியாது, ஏனென்றால் ஆண்களும் பெண்களால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படும் சம்பவங்களும் இடம்பெறுகின்றன, சிறிய அளவில், பெரும்பாலும் மேலை நாடுகளில். என்றாலும், பாலியல் வன்புணர்வுக்கு அதிகம் இரையாகுபவர்கள் பெண்களே.

ஒப்பீட்டளவில், பலியல் வன்புணர்வுக்கு பெண்கள் அதிகளவில் இரையாக்கபடுவதற்கு முக்கிய காரணம், ஒரு ஆணினால் ஒரு பெண்ணின்மீது நிகழ்த்தப்படும் வன்புணர்வில் கூட, அந்த பெண்ணினால் ஆணை உடல்ரீதியாக எதிர்த்துப்போரிட முடியாமையாகும். ஒரு ஆணையே எதிர்த்துப்போரிட முடியாத நிலை நிலவும்போது, ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்கள் பாலியல் வன்புணர்வில் ஈடுபடும்போது, பெண்ணொருத்தி ஒன்றுமே செய்யமுடியாதவளாகின்றாள்.

அத்துடன், சமூகரீதியாக, ஆண்களோடு ஒப்பிடுகையில், போரிடும் திறன்குறைந்தவர்களாகவும், கபடபுத்தி குறைந்தவர்களாகவும் வளர்க்கப்படுவதும் இன்னொரு காரணம். ஏனெனில் அநேக வன்புணர்வுகளில், ஆண்களால் பெண்கள் கபடத்தனமாக ஏமாற்றப்பட்டே வன்புணர்விற்கு உள்ளாக்கப்படுகின்றார்கள். அத்துடன், உயிரியல் பரிணாம (Biological Evolution) மாற்றத்தில் (இயற்கைத்தேர்வு - Natural Selection மூலம்) அடைந்துகொண்ட ஆண்பெண் உடல்ரீதியான வேறுபாடுகள் (இயல்பாக ஆணின் உடலமைப்பு, பெண்ணைவிட பலம்பொருந்தியதாக இருத்தல், உடலுறவில் பெண்கள் பெற்றுக்கொள்ளும் அந்தத்தில் (Receiving End) இருத்தல், பாலுறுப்புக்களின் அமைப்பு என்பன) ஆணினால் பெண்மீதான வன்புணர்வுகளை அதிகமாக்கியிருகின்றது.

சரி, இத்தகைய, பாரிய சமூககுற்றமாக கருதப்படுகின்ற, பாதிக்கப்படுபவருக்கு உடல்ரீதியாகவும், உளரீதியாகவும் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்ற, குற்றம் புரிந்தவரை சிறைக்குள் தள்ளக்கூடிய இந்த பாலியல் வன்புணர்வு என்ற நடத்தை இயற்கையானதா, அல்லது மனிதனால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்ற ஒரு நடவடிக்கையா?

இலகுவாக சொல்லப்போனால், மனிதனை மறந்துவிட்டு மற்ற விலங்கினங்களை அவதானித்துப்பருங்கள். பெரும்பாலும் அவை பாலியல் வன்புணர்விலேயே ஈடுபடுகின்றன. அதாவது ஆண்விலங்கு, பெண்விலங்கை வலிந்தே உடலுறவு கொள்கின்றது. உதாரணத்துக்கு, நாம் அன்றாடம் அவதானிக்கக்கூடிய, நாய்கள், கோழிகள், மாடுகள், ஆடுகள், பூனைகள் போன்ற விலங்குகளை பார்த்தீர்களானால், வன்புணர்வே இடம்பெறுவதை அவதானிக்கலாம். அங்கே பெண்விலங்கு முடிந்தவரை உடலுறவை தவிர்க்கவே முயற்சிக்கும், ஆனாலும் ஆண்விலங்கின் ஆதிக்கத்தால் இறுதியில் வன்புணர்வுக்கு உள்ளாகின்றது. ஆடு, மாடு, நாய், கோழி, பூனை போன்ற விலங்குகள் மட்டுமல்ல, அநேகமாக எல்லாவிலங்குகளிலுமே இந்த உடலுறவுக்கு முந்திய போராட்டம் நிகழ்வதை காணலாம்.

கலாச்சார மாற்றத்தில், சொத்துடைமை என்ற கண்ணோட்டத்தில், ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற வரையறையை மனிதன் என்ற விலங்கு ஏற்படுதிக்கொண்டது. ஆனால் இந்நிலைமை மற்ற விலங்கினங்களில் காணப்படுவதில்லை. பெரும்பாலும் ஒரு பெண்விலங்குடன் எந்த ஆண்விலங்கு உடலுறவு கொள்வதென்பதில், ஆண்விலங்குகளிற்கிடையில் ஒரு பெரும் போட்டியே (சண்டையே) இடம்பெறும். நாய்களிலும், பூனைகளிலும் இந்த போட்டி உச்சக்கட்டமாக இருக்கும். அந்த போட்டியில் முன்னிற்கும் ஆண்விலங்கு, பின்னர் பெண்விலங்கை அடக்கி வன்புணர்வை மேற்கொள்ளும். ஆனாலும் எல்லாநேரத்திலும் ஆண்விலங்கே உடலுறவை தீர்மானிப்பதில்லை. ஆகக்குறைந்தது எந்த ஆண்விலங்குகளுடன் உடலுறவு கொள்ளக்கூடாது என்பதை பெண்விலங்குகளும் தீர்மானிக்கின்றன தான். அதாவது, பாலியல் உறவுக்கான ஜோடியை தெரிவுசெய்தல் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானதாகவே இருக்கின்றது. ஏனென்றால், பெண்நாய்கள், சில ஆண்நாய்களை முற்றுமுழுதாக எதிர்ப்பதையும், சில ஆண்நாய்களுக்கு ஓரளவு இடம்விட்டுக்கொடுப்பதையும், சில ஆண்நாய்களுக்கு எந்தவித எதிர்ப்பை காட்டாதிருப்பதையும் அவதானித்தால், இந்நிலைமை புலப்படும்.

அதிலும், சில சமூக விலங்குகளில் (Social Animals) நிலைமை கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். கூட்டம் கூட்டமாக அவை வாழ்வதால், பெரும்பாலும் வலிமையுள்ள ஒரு ஆண்விலங்கு கூட்டத்துக்கு தலைமை தாங்குவதை காணலாம். கூட்டத்திலுள்ள பெரும்பாலான பெண்விலங்குகளுடன் உடலுறவு கொள்வது இந்த தலைமை தாங்கும் ஆணாகத்தான் இருக்கும். அதுவும் வன்புணர்வாக தான் இருக்கும். ஏனைய ஆண்விலங்குகள், பெரும்பாலும் அந்த கூட்டத்துக்கு பணிபுரிபவையாகவே இருக்கும். இந்த சமூக கட்டமைப்புகளுக்கிடையில் சிறிது சிறிது மாற்றங்கள் காணப்படலாம். எவ்வாறாக இருந்தாலும், இறுதியாக பெண்விலங்கு மீது புரியப்படுவது, வன்புணர்வாகவே இருக்கும். இந்த சமூக கட்டமைப்புக்களை பல்வேறு குரங்கு வகைகள், சிங்கம், புலி போன்ற விலங்குகளில் அவதானிக்கலாம்.

மனித இனத்தின் ஆரம்பகட்ட வளர்ச்சியில்கூட (உதாரணத்துக்கு எமது மூதாதை மனித இனங்கள்) இந்த மேற்படி அடிப்படை சமூகக்கட்டமைப்பே காணப்பட்டது. அப்போதும் ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற முறை இருக்கவில்லை. வலிமையுள்ள ஆண், தனக்கு பிடித்த பெண்ணுடன் உடலுறவு கொள்ளும் நிலைமையே காணப்பட்டது. அந்த உடலுறவை தீர்மானிப்பது ஆணாகவே பெரும்பாலும் இருக்கும். அதாவது ஒரு வன்புணர்வு நிலையே காணப்பட்டது.

மனிதனைப்போலன்றி ஏனைய விலங்குகளில், பாலியல் வேட்கையென்பது சிந்தித்து வருவதல்ல, முற்றுமுழுதாக ஓமோன்களில் (Hormones) ஆதிக்கத்தாலேயே அவ்விலங்குகளில் பாலியல் நடத்தை என்பது கட்டுப்படுத்தப்படுகின்றது. காலநிலை மாற்றங்கள் போல, ஆண்டின் சில பகுதிகளிலேயே விலங்குகள் பெரும்பாலும் உடலுறவு கொள்கின்றன. ஆண்விலங்கும், பெண்விலங்கும் இனப்பெருக்க உடலுறவில் ஈடுபடுவதற்கான ஒரு காலப்பகுதி இருக்கும், அக்காலப்பகுதியில் அவற்றில் உடல்ரீதியான(அக, புற) மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஆணிற்கு வேட்கையேற்படும்போது, பெண்விலங்குமீது வன்புணர்விலீடுபடுகின்றது. ஏனென்றால் அவ்விலங்குகள், சிந்தித்து, ஒன்றையொன்று புரிந்து, புரிந்துணர்வினடிப்படையில் புணர்ச்சியிலீடுபடுவதில்லை. உடலுறவை, மனிதனைபோல (டொல்பினயும் சேர்த்து) கிளர்ச்சியூட்டம் விடயமாக அவை புரிவதில்லை. மாறாக அவற்றின் உடலுறவு நடத்தை ஓமோன்களாலேயே கட்டுப்படுத்தப்படுகின்றன.

மனிதனிலோ, நினைத்தவுடன் உடலுறவு கொள்ளக்கூடிய தன்மை காணபடும். பகுத்தறிவு, சிந்தித்து செயலாற்றல் என்ற பண்புகளால் இது சாத்தியமாகின்றது. அதை பெரும் கிளர்ச்சியூட்டும் விடயமாகவும் மனிதன் பார்க்கின்றான். டொல்பின்களும் இவ்வாறே நடந்துகொள்கின்றன என்று ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன.

விலங்கு இராச்சியத்தை பார்த்தால், ஆணாதிக்க நிலைமையையே எங்கும் காணலாம். அதனால் தான், மனித இனத்தில் கூட, அண்மைக்காலம்வரை, ஆணாதிக்கம் அதிகமாகவே காணபட்டது. இற்றைக்கு இருநூறு முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு, பெண்கள் எவ்வளவுக்கு ஆண்களால் அடக்கியொடுக்கபட்டார்கள், எவ்வளவுக்கு உரிமைகள் மறுக்கபட்டார்கள் என்பது வரலாற்று நிகழ்வுகளையும், நூல்களையும் அறிந்தவர்களுக்கு புரியும். விலங்குகளில் காணப்படும் இந்த ஆணாதிக்கநிலைமை கூட, பரிணாம வளர்ச்சியில் பெற்றுக்கொண்ட ஒரு நடத்தையோ என்று எண்ணத்தோன்றுகின்றது.

ஏனென்றால், பரிணாம வளர்ச்சிக்கு உடலுறவு என்பதே அடிப்படை. ஆண் பெண் உடலுறவினூடாகவே பரிணாமம் என்ற மாற்றம் நிகழ்ந்துகொண்டிருக்கின்றது. நான், நீங்கள், நாய், பூனை, மரம், செடி என்பனவெல்லாம் இந்த ஆண்-பெண் உறவின்மூலமே உருவாகியிருக்கின்றன. ஆகவே இந்த ஆண்-பெண் உடலுறவை நிச்சயப்படுத்திகொள்ள, ஒருசாரார் (ஆண்) ஆதிக்கசக்தியாக உருப்பெறவேண்டிய தேவையேற்பட்டிருக்கின்றது. அதாவது ஒரு செயல் நடைபெறுவதை உறுதிப்படுத்திக்கொள்ள ஆதிக்கம் ஒரு ஆயுதமாக பாவிக்கப்பட்டிருக்கின்றது. ஏனென்றால், சிந்தித்து செயலாற்றல், பகுத்தறிவு என்பவையெல்லாம், பரிணாமத்தின் மிக மிக பிற்பட்ட காலப்பகுதியிலேயே ஏற்பட்டவை. அதனால் தான், மனித இனத்துக்கு மட்டும் இந்த ஆதிக்கம் (ஆணாதிக்கம்) இறுதியில் ஒரு பெரும் பிரச்சினையாகிவிட்டது.

ஆதிக்கம் செலுத்தி, வன்புணர்வில் ஈடுபடக்கூடிய ஆண்விலங்கே, தன்னுடைய சந்ததியை உருவாக்கிக்கொள்ள அதிக சாத்தியக்கூறுகள் காணப்பட்டது. அடுத்து உருவாகும் சந்ததிகூட ஆதிக்கம்செலுத்திய ஆண்விலங்கினதும், அடங்கிப்போன பெண்விலங்கினதும் இயல்புகளைக்கொண்டதாகவே இருக்கும். அவ்வகையில் அடுத்து வரும் சந்ததியிலுள்ள ஆண்விலங்குகள், இன்னும் ஆதிக்க தன்மையுடையவைகளாக இருக்கும். இவ்வாறே ஆண்விலங்குகள், ஆதிக்கத்துக்கான உடற்கூறுகளை பெற்றுகொண்டன என்று எண்ணத்தோன்றுகின்றது. பரிணாமத்தின் அடிப்படையான ‘தக்கன பிழைத்தல், இயற்கை தேர்வு' என்பது இந்த ஆண்பெண் வேறுபாடுகளுக்கு வழிசமைத்தது.

ஆகவே பாலியல் வன்புணர்வு என்பது, அடிப்படையில் மிக மிக இயற்கையான ஒரு நடத்தை. விலங்கினங்களின் பரிணாம வளர்ச்சிப்பாதையில் இந்நடத்தை ஒரு அவசியமான நடத்தையாகவும் இருக்கின்றது. பாலியல் வன்புணர்வு, மனிதனை தவிர ஏனைய விலங்கினங்களில் ஒரு குற்றமாகவோ, பிரச்சினையாகவோ நோக்கப்படுவதில்லை. அவைக்கு அது ஒரு பிரச்சினையான விடயமுமல்ல.

நாகரிகத்தில் வளர்ச்சியடைந்துவிட்ட மனிதர்கள் நாம், பாலியல் வன்புணர்வை ஒரு பாரிய குற்றமாகவே சடடப்புத்தகங்களில் கூட எழுதிவைத்துவிட்டோம். ஆண்-பெண் சம்த்துவம் என்பது நாகரிக நிலையில் நல்ல நிலையை அடைந்துகொண்டே வந்திருக்கின்றது. இன்னும் முழுமையான ஆண்-பெண் சமத்துவத்தை காண்முடியவில்லை தான். ஆண்-பெண் சமத்துவம் மிக மோசமாக உள்ள நாடுகளில், பெண்களுக்கெதிரான பாலியல் வன்புணர்வு அதிக அளவில் இடம்பெறுவதை அவதானிக்கலாம். அதாவது ஆணாதிக்கம் அதிகமாகவுள்ள சமுதாயங்களில் பெண்களுக்கெதிரான பாலியல் வன்புணர்வுகள் அதிகமாக இருக்கும்.

ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற முறைமைகள் ஏற்படுத்தப்பட்டு, திருமண முறைகளை ஏற்படுத்திய பின்பு, சந்ததியை பெருக்க்கிக்கொள்ள பாலியல் வன்புணர்வு என்ற நடத்தைக்குரிய தேவை இல்லாமலேயே போய்விட்டது. மனித இனத்தில், புரிந்துணர்வினடிப்படையிலான உறவுமுறைகள் என்றானபின்பு, வன்புணர்வுக்கு வேலையில்லாமல் போய்விட்டது தான். ஆனாலும் அடிமனதிலுள்ள வன்புணர்வு என்னும் அபரிமித இச்சை இன்னும் பலரை விட்டு போய்விடவில்லை.

சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம், பெண்களுக்கெதிரான பாலியல் வன்புணர்வுகள் இடம்பெற்றுகொண்டிருக்கின்றன. முக்கியமாக, பாதுகாப்பற்ற சூழ்நிலைகளில் பெண்கள் அகப்படும்போது ஆண்களால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள். அத்த்துடன், உலகெங்கும் மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைகளில், பெண்களுக்கெதிரான ஒரு வன்முறை ஆயுதமாக, ஒரு இன அழிப்பு ஆயுதமாக இராணுவ வீரர்களால் பெண்கள்மீது பாலியல் வல்லுறவுகள் நிகழ்த்தப்படுகின்றன. இத்தகையதொரு நிலைமையை இலங்கையிலும் காணலாம். இலங்கையில் நடைபெறும் பாலியல் வல்லுறவுக்குற்றங்களில் அதிகமானவை ஆயுதம் தாங்கியவர்களாலேயே (இராணுவம், பொலிஸ், ஆயுதக்குழுக்கள்) நிகழ்த்தப்படுகின்றன.

அறிமுகமில்லாதா ஆணினாலோ/ஆண்களினாலோ பெண்களின்மீது புரியப்படும் உடலுறவு மட்டுமல்ல பாலியல் வன்புணர்வு. கட்டிய கணவனால் கூட எத்தனையோ மனைவிகள் (பெண்கள்) பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள். அதாவது, கணவன் மனைவியாக இருந்தால் கூட, பெண்ணின் விருப்பத்திற்கெதிராக ஆண் உடலுறவிலீடுபடுவானாயின் அதுவும் பெண்ணின்மீது புரியப்படும் பாலியல் வல்லுறவு தான், குற்றம்தான். இத்தகைய குற்றங்களுக்கும் நீதிபெற்றுக்கொள்ள சட்டத்தில் இடமிருக்கின்றது.

மனித சமுதாயம் இன்னுமே ஆணாதிக்க சமூகக்கட்டமைப்பிலிருந்து விடுபடுவதாயில்லை. அதனால் தான், இன்று எண்ணுக்கணக்கற்ற பெண்கள், தங்கள் கட்டிய கணவனாலேயே வல்லுறவுக்குட்படுத்தப்படுகின்றார்கள். இன்று எத்தனை ஆண்கள், தங்களுடைய மனைவிக்கு, கட்டிலிலாவது சமபங்கு வகிக்கும் உரிமையை வழங்கக்கூடிய புரிந்துணர்விலிருக்கின்றார்கள். அல்லது அத்தகை உரிமையை எடுத்துக்கொள்ள எத்தனை பெண்கள் துணிவுடன் தயாராயிருக்கின்றார்கள். கட்டிலிலும் ஆணாதிக்கத்தின் அரசாட்சி தான். ஆணாதிக்க சமுதாயத்தில் வாழ்ந்து பழகிவிட்ட ஆண்களும், அதே சமுதாயத்தில் வாழ்ந்து பழகிவிட்ட பெண்களுமே இந்நிலைமைகளுக்கு காரணம். ஆகக்குறைந்தது கட்டிய கணவனால் பெண்கள் வல்லுறவுக்குள்ளாக்கப்படுவதேனும் இல்லாமல் செய்யப்படலாமே.

பரிணாம வளர்ச்சியில் மனித இனம் தோன்றாதவரை [சிந்தித்து செயலாற்றும் தன்மை (Rationality, Setting up goals and working towards them) அமையப்பெறாதவரை], பாலியல் வன்புணர்வு ஒரு இயற்கையான, அவசியமான நடத்தை தான். இருப்புக்கு இன்றியமையாததொன்றாக அது இருந்தது, ஆனால், இன்று மனித இனத்துக்கு அது தேவையில்லாததொன்று, பிரச்சினையானதொன்று. ஆண்-பெண் சமத்துவம் பேணப்படவேண்டிய தேவையிருக்கின்றது. பெண்ணினதும், ஆணினதும் உரிமைகள், உணர்வுகள் சமமாக மதிக்கப்படவேண்டிய தேவையிருக்கின்றது. பெண்ணை ஆணின் அரைவாசியென்றும், தரம் குறைந்தவளென்றும், ஆணிற்கு அடங்கிநடக்கவேண்டுமென்றும், பெண்களின் குரல்வளையை நசுக்கிய மதநூல்களை ஒருபுறம் தூக்கிப்போட்டுவிட்டு, எது நீதி, எது சரி என்று ஆராய்ந்தொழுகவேண்டிய காலமிது. பாலியல் வன்புணர்வின்மூலம் இனத்தை பெருக்கவேண்டிய தேவை மனித இனத்துக்கு என்றோ இல்லாமல் போய்விட்டது. அதற்கான உரிய சமூகக்கட்டமைப்புக்களை நாங்கள் வளர்த்தெடுத்துவிட்டோம். பாலியல் வன்புணர்வு, மனித இனத்தில் அடக்குமுறையின் சின்னமாக மாறிவிட்டது. வெட்கக்கேடான விடயமாக மாறிவிட்டது. ஆகவே இந்த பாலியல் வன்புணர்வு என்ற துர்நடத்தையை, குற்றத்தை மனித இனத்திலிருந்து முற்றுமுழுதாக அகற்றுவதற்கு, ஆண், பெண் வேறுபாடின்றி அனைவருமே பாடுபடவேண்டிய தேவையிருக்கின்றது.